Monday, July 30, 2007

ஒரு காதல் பயணம் - இறுதிப்பகுதி

ஓரு காதல் பயணம் - முதல் பகுதி

தனது பெற்றோரின் நிச்சயத்திற்கும் திருமணத்திற்கும் இடையில் நடந்தவையெல்லாம் ரசனையோடு பதிவு செய்யப்பட்டிருந்த அந்த டைரியைப் படித்துக் கொண்டிருந்தாள், அடுத்த நாள் தனது இருபத்தியோராவது பிறந்தநாளைகொண்டாட தனது அம்மாச்சி வீட்டுக்கு வந்திருக்கும் தமிழ். ஆனால் அந்த டைரியின் அடுத்தடுத்தப் பக்கங்களைப் புரட்ட புரட்ட எல்லாமே வெறுமையாய் இருந்தன. ஆர்வத்தோடு அந்தப் பழைய அலமாரியை அலசினாள். வேறு டைரிகள் எதுவும் இல்லாவிட்டாலும் ஒரு பழைய ஃபைல் கிடைத்தது. “Ilavarasi – Medical Reports” என்று மேலட்டையில் எழுதப்பட்டிருந்த அந்த ஃபைலை படிக்க ஆரம்பித்தாள். அவளுடைய அம்மா இளவரசியின் கர்ப்ப கால மருத்துவப் பரிசோதனைகளின் விவரம் அடங்கிய ஃபைல் அது.

A SINGLE INTRAUTERINE FETUS OF ABOUT 18 WEEKS SIZE. HEART PULSATIONS NORMAL. LIQUOR ADEQUATE. NO ANOMALIES.

என்று ஆரம்பித்து, மாதாந்திரப் பரிசோதனைகள், இடையில் எடுக்கப் பட்ட இரண்டு ஸ்கேன், இன்னும் பல விவரங்களோடு போய்க்கொண்டிருந்த அதில் இறுதியாக இருந்தது பிரசவத்தின் குறிப்பு. அதில்
DEATH DUE TO POST PARTUM HEMORRHAGE.. என்ற வரியைப் படித்ததும் லேசாக மயக்கம் வருவது போலிருந்தது தமிழுக்கு.முழுவதுமாய்ப் படித்து முடிக்கும்போது கடைசிப் பக்கத்தில் தமிழில் எதோ எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தாள்.
உன் இழப்புஎனக்கு பேரிழப்பல்ல…உயிரிழப்பு!
*
நீ பிறந்ததில்எனக்கும் மறுஜென்மம்.
என்று இரண்டு குறிப்புகள் எழுதப்பட்டிருந்தன.
ஒன்று இறந்துபோன தன் அம்மாவைப் பற்றியும், மற்றொன்று அன்று பிறந்த தனக்காகவும், தன் அப்பாவால் எழுதப்பட்டது என்பது அவளுக்குப் புரிந்தது. படித்ததும் அழுகை அழுகையாய் வரக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே “அம்மாச்சி” என்று அலறினாள்.

“என்ன பாப்பா” கேட்டுக்கொண்டே அந்த அறைக்குள் நுழைந்தார் அவளுடைய தாய்வழிப் பாட்டி.

“அம்மா எப்படி எறந்தாங்கன்னு உண்மைய சொல்லுங்கம்மாச்சி…”

சோகமாய் இருக்கும் பேத்தியைப் பார்த்ததும் கலக்கமானவர், சுதாரித்துக் கொண்டு சொன்னார்.
“என்ன பாப்பா இவ்வளவு நாள் கழிச்சு இப்போ திடீர்னு கேட்கற? உங்கிட்ட தான் சொல்லிருக்கேனே நீ ரெண்டு வயசுக் குழந்தையா இருந்தப்ப நாம எல்லாரும் ஊட்டிப் போகும்போது கார் ஆக்சிடெண்ட் ஆகி…”

“போதும்ம்மாச்சி எல்லாரும் சேர்ந்து இத்தன வருசமா என்கிட்ட பொய் சொல்லி வச்சது போதும்….ஐயோ இத்தன வருசமும் எங்கம்மா இறந்த நாளன்னைக்கா சந்தோசமா பிறந்தநாள்னு கொண்டாடிட்டு இருந்திருக்கேன்?” சொல்லிக்கொண்டிருக்கும்போதே அழ ஆரம்பித்துவிட்டாள்.

அவள் அம்மாச்சிக்கும் கண்ணீர் தானாக வழிய ஆரம்பித்தது. அழுகையின் போது அமைதியாக இருப்பதே உத்தமமென்று அமைதியாக இருந்தார் அவர்.

அவளே கேட்டாள் “ஏம்மாச்சி எங்கிட்ட மறச்சாங்க? அப்பாவும் எங்கிட்ட பொய் சொல்லிட்டாங்கல்ல”

“இல்லமா எல்லார் மாதிரியும் உன் பிறந்த நாள் அன்னைக்கு நீயும் சந்தோசமா இருக்கனும்னுதான் உங்கப்பா…”

“என்னம்மாச்சி…பிறந்தநாளன்னைக்கு நான் மட்டும்தான சந்தோசமா இருப்பேன்… நீங்க எல்லாரும் எப்படி இருந்திருப்பீங்க…ஐயோ என்னோட ஒவ்வொரு பிறந்த நாள் அன்னைக்கும் அப்பாவுக்கு எப்படி இருந்திருக்கும்?” மறுபடியும் அழுதாள்.

அவள் அம்மாச்சியோ எதுவும் பேசமுடியாமல் சோகமாய் உட்கார்ந்திருந்தார்.

“ஹாஸ்பிடல்ல தான அம்மாச்சி பிரசவமாச்சு…அப்புறம் எப்படி அம்மா எறந்தாங்க?”

“என்னத்த சொல்றது, அவ கல்யாணத்துல இருந்து எல்லாமே நல்லாதான் நடந்துச்சு…ரெண்டு பேரும் நல்லாதான் இருந்தாங்க… யார் கண்ணு பட்டுச்சோ… இப்படி அல்பாயுசுலப் போயிட்டா”

பேசிக்கொண்டே இருந்ததில் நெடுநாள் பேசாமலிருந்த கதையெல்லாம் ஆரம்பத்தில் இருந்து சொல்ல ஆரம்பித்தார்.

“உங்க அம்மாவப் பொண்ணுப் பார்க்க வந்த அன்னைக்கே உங்கப்பா பேசினதுல எங்க எல்லாருக்கும் அவர பிடிச்சுப் போயிடுச்சு… பொண்ணப் பிடிச்சிருக்கானு கேட்டதுக்கும் பொண்ணுக்குப் புடிச்சிருந்தா எனக்கும் சம்மதம்னு உங்கப்பா ஒரே வரியில சொல்லவும் உங்கம்மா அப்பவே புடிச்சிருக்குனு சொல்லிட்டா… அப்புறமென்ன அன்னைக்கே தாம்பூலமும் மாத்தியாச்சு…கல்யாணத் தேதியும் குறிச்சு பத்திரிக்கையும் அடிக்கப் போறப்ப உங்கப்பா வந்து கல்யாணத்த ஒரு வாரம் முன்னாடி வச்சிக்கலாம்னு பிடிவாதம் பிடிக்கிறார்… உங்கம்மாவோட பொறந்தநாளன்னைக்கே கல்யாணத்த வச்சிக்கனும்னு அவர் ஆசப்பட்டதெல்லாம் உங்கம்மா சொன்ன பிற்பாடுதான் எங்களுக்குத் தெரியும்…எல்லாருக்கும் உங்கப்பா மேல ரொம்ப நல்ல அபிப்ராயம் இருந்ததுனாலதான் ஐயரில்லாமத் தாலி கட்றதுக்குகூட உங்க தாத்தா ஒத்துக்கிட்டாங்க”

இந்தக் கதையெல்லாம் டைரி ஏற்கனவே அவளுக்கு சொல்லியிருந்தது.

“பொண்ண வெளியூர்ல கட்டிக் கொடுத்தா நாளுங்கெழமையும் போய்ப் பார்க்க செரமமா இருக்கும்னுதான் உள்ளூர்லையேக் கொடுத்தோம்…அப்ப உங்கப்பா வேலைக்கு தெனமும் ட்ரெயின்ல திருச்சிக்குப் போயிட்டு வந்துட்டு இருந்தார்…கல்யாணமான ரெண்டு மாசத்துலையே அவருக்கு மெட்ராசுக்கு மாத்தலாயிடுச்சு…அப்புறம் அவங்கள மெட்ராசுக்குப் போய் குடிவச்சிட்டு வந்தோம்…உங்கம்மா முழுகாம இருந்தப்ப, நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடலாம்னு அஞ்சாவது மாசம் நானும் உங்கத் தாத்தாவும் போறோம்… புருசன விட்டுட்டு வர முடியாதுங்கறா… அப்புறம் ஏழாவது மாசம் நாங்க போய்ப்பேசினா எங்கள அங்க இருந்துக்க சொல்றாளேயொழிய உங்கப்பாவ விட்டுட்டு வர மாட்டேனுட்டா, அப்புறம் உங்கப்பாவும் உங்கம்மாகிட்ட கெஞ்சிதான் அனுப்பி வச்சாங்க…ஹ்ம்ம்ம்… உங்கப்பா அப்படி பாத்துக்கிட்டாரு உங்கம்மாவ…” பெருமூச்சு விட்டுக்கொண்டார் அவள் அம்மாச்சி.

“ம்ம்ம்…அப்புறம்”

“அப்புறம் ஒரு மாசத்துலையே கொழந்தப் பொறக்கறதுக்கு ஆசுபத்திரில தேதிலாம் குறிச்சுக் கொடுத்துட்டாங்க… இருந்தாலும் பத்திருவது நாள் முன்னக்கூடி வந்துடலாம்னு சொன்னாங்க… அத கேட்டு உங்கப்பாவும் ஒரு மாசம் ரீவு போட்டு நம்ம வீட்டுக்கே வந்துட்டார்… எப்ப வலி வந்தாலும் ஆசுபத்திரி கூட்டிட்டுப் போறதுக்கு கார கொண்டாந்து வாசல்லையே நிப்பாட்டிக்கிட்டார்…அன்னைக்கு ஒங்கப்பாவுக்கு பொறந்தநாளு…காலையில 9 மணி இருக்கும்… உங்கம்மா லேசா வலிக்குதுனு சொன்னா… ஒடனே ஆசுபத்திரிக்கும் கூட்டிட்டுப் போயிட்டோம்… போகும்போதே சொல்லிக்கிட்டு வந்தா “நான் சொன்னமாதிரியே உங்க பிறந்தநாளன்னைக்கே நமக்கு கொழந்த பொறக்க போகுது”ன்னு… உங்கப்பாவுக்கும் சந்தோசம்தான்… அங்க பிரசவத்தப்பவும் உங்கம்மாகிட்டயேதான் உங்கப்பா இருந்தார்… அவர் கையதான் கெட்டியாப் புடிச்சிகிட்டு இருந்தாளாம் உங்கம்மா…தலப்பிரசவங்கறதால நாங்க உசுரக் கையிலப் புடிச்சிக்கிட்டு வெளிய நிக்குறோம்… நாங் கொலதெய்வத்த எல்லாம் வேண்டிகிட்டு இருக்கேன்… ஹும்… ஆனா ஒரு சாமிக்கும் கண்ணில்லாமப் போச்சே…” என்று சொல்லிக்கொண்டே அழ ஆரம்பித்தார்.
அவர் அழுவதைப் பார்த்து அவள் அழ, அவர் முந்தானையில் முகத்தைத் துடைத்தபடி அழுகையை நிறுத்திவிட்டு ஆரம்பித்தார்.
“உங்க அப்பாதான் பாவம்… பொண்டாட்டி மயக்கமாதான் இருக்கானு நெனச்சு குளிப்பாட்டின பிள்ளைய எங்ககிட்ட வெளிய வந்து காட்டிட்டு இருக்கும்போதே டாக்டருங்க கூப்பிட்டு ஏதோ சொல்லவும் இடிஞ்சுபோன மனுசனா உள்ள போனவர்தான்…அதிகம் ரத்தம்போனதால உங்கம்மா உசுர் போச்சுன்றதெல்லாம் எங்களுக்கு பிற்பாடுதான் தெரியும்… அப்புறம் உங்கப்பா வேலைய திருச்சிக்கே மாத்திகிட்டு வந்துட்டாரு... உங்க அப்பாயியும், நானுந்தான் மொத ரெண்டு வருசம் உன்னப் பாத்துக்கிட்டதெல்லாம்…அப்புறம் உன்னையும் கூட்டிட்டு உங்கப்பா மெட்ராசுக்கேப் போயிட்டார்… உங்க சித்திய அவருக்கு ரெண்டாந்தாரமா கட்டிக்கொடுக்கலாம்னு உங்க சித்தியயையும் கேட்டுட்டு அவர்கிட்ட சொல்லும்போது இளவரசிக்குத் தங்கச்சின்னா எனக்கும் தங்கச்சி மாதிரிதான்னு சொல்லி மறுத்துட்டார்… அதுவுமில்லாம வேற கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லனும் சொன்னதுக்கப்புறம் அவர யாரும் கட்டாயப்படுத்தல… எல்லாமே நேத்து நடந்த மாதிரிதான் இருக்கு…ஆச்சு இருவத்தி ரெண்டு வருசம்”

கொஞ்ச நேரம் இருவருமே அமைதியாக இருந்தார்கள்.

அவள் அம்மாச்சியே மறுபடியும் ஆரம்பித்தாள், “நாளைக்கு உனக்கு மட்டும் பொறந்தநாள் இல்லமா…உங்கப்பாவுக்கும்தான்… ஆனா உங்க அம்மாசெத்த நாளும் இதான்னு உங்கிட்ட மறச்சுட்டு, ஊர்ல வந்து உம்பொறந்த நாள கொண்டாட்றதெல்லாம் அதத்தெரிஞ்சு நீயும் இந்த நாள்ல வெசனப்படக்கூடாதுனுதான்… நீ சந்தோசமா இருக்கிறதப் பாத்துதான் அவரும் ஏதோ இருக்கார்… மெட்ராசுல இருந்து மதியம் கிளம்பிட்டேன்னு போன் பண்ணுனாரில்ல… ராத்திரிக்குள்ள எப்படியும் வந்துடுவார்…அவருகிட்ட நீ எதுவும் கேட்டுடாதம்மா…எப்பவும் போலவே நடந்துக்க…”

அடுத்த நாள் குடும்பத்தினர் எல்லோரின் வாழ்த்துக்கள்+முத்தங்களோடு தன் இருபத்தியோராவது பிறந்தநாளைக் கொண்டாடினாள் தமிழ்.
எல்லோரும் போன பிறகு அன்று மாலையில் தனிமையில் அவள் அப்பாவிடம் கேட்டாள்.

“ஏம்ப்பா நான் பிறந்தப்போதான் அம்மா எறந்தாங்கன்றத எங்கிட்ட மறச்சுட்டீங்க?”

அதிர்ச்சியோடு அவளைப் பார்த்தார் அருள்.

“இன்னைக்கு தான் உங்கப் பிறந்தநாளும்னும் எனக்குத் தெரியும்ப்பா. அம்மாவோட நினைவுநாளும் இன்னைக்குதான்னும் எனக்குத் தெரியும். நான் கஷ்டப் படக்கூடாதுன்னுதான் இத எங்கிட்ட இருந்து மறச்சிருக்கீங்கன்னாலும் இத தெரிஞ்சபின்னாடி எனக்கு எவ்வளவு வேதனையா இருக்கு தெரியுமா? நாம/நம்மள நேசிக்கிறவங்க சந்தோசமா இருக்கனும்ங்கறதுக்காக நம்ம கஷ்டத்த மறச்சுக்கறது நல்லதுதான். ஆனா என்னால இந்த ஒருநாளே முடியல…நீங்க எப்படி இத்தன வருசமா இருக்கீங்கனு எனக்குப் புரியலப்பா… உங்க கஷ்டம் இந்த வருசத்தோடப் போகட்டும். அடுத்த வருசம் இதே நாள் என்னோடப் பொறந்த நாளா இருக்க வேணாம். அம்மாவோட நினைவுநாளாதான் இருக்கனும்”

“நினைவு நாள்னு தனியா நெனச்சுக்க என்னமா இருக்கு? எல்லா நாளுமே…”

“ம்ம்ம்…இவ்வளவு நாளா நீங்க வேற கல்யாணம் பண்ணிக்காம இருக்கும்போதே அது தெரியுதுப்பா. ஆனா நான் சொல்றதுதான் இனிமே! இனிமே அம்மாவோடப் பிறந்தநாள் அன்னைக்கே நாமளும் பிறந்த நாள் கொண்டாடிக்கலாம். அம்மாவோட நினைவு நாள் அன்னைக்கு வேணாம். அவ்வளவுதான்!”
கொஞ்சம் பாரம் குறைந்தவராயானார் அருள்.

“இந்தாங்க உங்களுக்கு என்னோட பிறந்தநாள் பரிசு” என்று சொல்லி அந்த டைரியையும் கொடுத்துவிட்டுப் போனாள்.
பிரசவத்துக்கு இளவரசி வரும்போது எடுத்துவந்து தொலைந்துபோன அந்த டைரி மீண்டும் கிடைத்ததும் ஆர்வமான்வராய் அதன் பக்கங்களைப் புரட்டியதில் மெல்லியப் புன்னகையுடன் பழைய நினைவுகளில் மூழ்க ஆரம்பித்தார் அருள்.

நினைவுகள் இருக்கும்வரை துயரங்கள் ஏதுமில்லை.

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

(மருத்துவக் குறிப்புகள் கொடுத்துதவிய delphine மேடத்திற்கு நன்றிகள் )

விளம்பரம் 1 :
விளம்பரம் 2 :

நான் இரசிக்கும் படல்களின் தொகுப்பு இனி கரையோரத் தென்றல் எனும் புதிய வலைப்பதிவில் வரும்.

Wednesday, July 25, 2007

மரணத்தின் நிழல்

ஓர் இடம்
ஒரு சொல்
ஒரு காட்சி
ஒரு பாடல்
ஒரு கனவு

என ஏதேனும் ஒன்றின் சலனத்தில்
விருட்சமென வளர்கிறது உன் நினைவு.
இதயமெங்கும் படர்கிறது
மரணத்தின் நிழல்!

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Monday, July 23, 2007

ஒரு காதல் பயணம் - 13

ஒரு காதல் பயணம் - முதல் பகுதி

உன் வருகை தோறும்...
மலருமென் மனமொரு,
நிலவுகாந்தி!


திருமணத்திற்கு முந்தைய நாள் மாலைப்பொழுது.
திருமண மண்டபத்தில் உங்களுக்கென ஒதுக்கப்பட்ட அறைகள் எல்லாம் உன் உறவினர்கள்/தோழிகளால் நிறைந்திருக்கின்றன.
உன்முகம் தேடியெடுத்துவர ரகசியமாய் என் பார்வைகளை அனுப்பி வைக்கிறேன்.
என்னைப் போல என் பார்வையும் நிலைகொள்ளாமல் அலைந்து உன் சாயலில் இருந்த உன் தங்கையை இழுத்து வருகிறது.
அருகே வந்தவள் மேல்நோக்கி கைகாட்டிவிட்டு மறைந்துபோனாள்.
நானும் மேல் தளத்துக்கு வருகிறேன்.
தோழிகளின் பின்னணிச் சிரிப்போடு அந்த அறையிலிருந்து மெல்ல வெளிப்படுகிறாய், மேகமவிழ்க்கும் நிலவாய்.

துலக்கி வைத்த பொன்மஞ்சள் நிறமுகம்.
அது மச்சமா? பொட்டா? எனத் தெரியாதபடி நெற்றி மையத்தில் கருந்சாத்துப்பொட்டில் சிறுபுள்ளி.
உன் ஒவ்வோர் அசைவுக்கும் வெவ்வேறு லாவகத்தில் உன் காதோடு ஊஞ்சலாடியபடி சின்னதாய் ஒரு ஜோடி தோடு ஜிமிக்கி.
எப்போதும் உன் பல்லில் கடிபட்டபடி இருக்கும் மெல்லிய செயின் அப்போது மட்டும் சமர்த்தாய் உன் மார்பில் சாய்ந்திருந்தது.
நகைகளைப் போல நகையும் குறுநகையாகவேப் பூத்திருந்தது. காரணம் நானா? நாணமா? தெரியவில்லை.
இரண்டு கைகளையும் பின்னால் கட்டியபடி உன்நடை நடந்து நெருங்குகிறாய்.
சுடிதாரில் கொள்ளையடிக்கும் உன் அழகு, சேலையிலோ கொலையே செய்கிறது.

"இப்போவும் பழையமாதிரி டயலாக் அடிக்காம உண்மைய சொல்லு புடவைல எப்படி இருக்கேன்?"

"பாரதிராஜா கிட்டதான் சொல்லனும்"

"என்ன உளர்ற?"

"தேவதைகளோட காஸ்ட்யூம இனிமே வெள்ளைல இருந்து உன்னோட இந்த காஸ்ட்யூமுக்கு மாத்த சொல்லதான்..."

"ம்ம்ம்...அப்புறம்?"

"உண்மைய சொல்லனும்னா, இப்படியே தாலிகட்டிடலாம் போல அவ்வளவு அம்சமா இருக்க!!!"

"அப்போ நாளைக்கு கல்யாணத்துக்கும் இப்படியே வந்துடவா?"

"ம்ம்ம்...எனக்கெதுவும் பிரச்சினையில்ல...தாராளமா வா...உங்கப்பாதான் பாவம் ஃபீல் பண்ணுவார்... அது சரி என்னது அது பின்னாடி என்னமோ மறச்சு வச்சிருக்க?"

"வெட்கம்"

"வெட்கமா?"

"ஆமா நீயென்ன வெட்கப்பட வைக்கும்போதெல்லாம் முகத்தப் பொத்தி பொத்தி , முகத்துல இருந்த சிவப்பெல்லாம் கைல ஒட்டிக்கிச்சு"

"அடிப்பாவி, எப்போல இருந்து நீயும் இப்படியெல்லாம் பேச ஆரம்பிச்ச?"

வெட்கப்பட்டுக்கொண்டே மருதாணியில் சிவந்த கைகளை விரிக்கிறாய்.
மார்கழி மாத அதிகாலை வாசலாய்க் கோலமிடப்பட்டிருந்தன உன் உள்ளங்கைகள்.

"எவ்வளவு சிவந்திருக்குனு சொல்லு"

"உன் வெட்கத்த விட அதிகமாவே சிவந்திருக்கு"

"நெஜமாவா?"

"அதிலென்ன சந்தேகம்?"

"இல்ல... மருதாணிக்கை எந்தளவுக்கு சிவக்குதோ, அந்தளவுக்கு நல்லப் புருசனா கிடைப்பாங்கன்னு எங்க சித்தி சொன்னாங்க...அதான் கேட்டேன்"

"ஓஹோ...உங்க தோழிங்ககிட்ட எல்லாம் காட்டியிருப்பியே, அவங்க என்ன சொன்னாங்க?"

"உன்னப் பார்த்தா நல்லவன் மாதிரி தெரியலையாம்...அதனால இத நம்ப மாட்டாங்களாம்"

"சரி விடு அவங்க எல்லோருக்கும் நல்லவனா என்னாலயும் இருக்க முடியாது. உனக்கு மட்டும் நல்லவனா இருக்கேன்"

"ஓ அந்த ஆசைகூட இருக்கா ஐயாவுக்கு? நாளைல இருந்துதான் இருக்கு உனக்கு"

"நாளைல இருந்து எனக்கு என்ன இருக்கு?" என்று நான் மீண்டும் மீண்டும் கேட்க முகம்பொத்தியபடி ஓடினாய்.
கையில் இருந்த சிவப்பெல்லாம் மீண்டும் முகத்தில் ஒட்டிக்கொண்டது.

***

முந்தின நாள் சடங்கெல்லாம் முடிந்த இரவுப்பொழுது.
நீ வெளிப்படுவாயா என்று நோட்டமிட்டபடி,
உன் அறைக்கதவின் அசைவுக்கெல்லாம் மலர்ந்து சாய்கின்றன என் விழிகள்.
உறக்கம் எங்கோ தொலைந்துவிட்ட அந்த இரவுப்பொழுதில் சூரியனைத் தேக்கியபடி என் விழிகள் மட்டும் விழித்திருக்கின்றன.
நாளை நீ பிறந்து 25 ம் ஆண்டு.
உனக்கான பிறந்த நாள் வாழ்த்துக்களோடு 12 மணி வரை காத்திருக்கிறேன்.
மெல்லப் பிரியும் இமையைப் போல ஓசையின்றி உன்கதவு திறக்கப்படுகிறது.
இரவின் ஒளியாய் நீ வர நிலவுகாந்தியாய் நான் மலர்கிறேன்.
எதிர்பார்த்தவள் போல என்னிடமிருந்து வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டு கண்களால் நன்றி சொல்லிவிடைபெற பார்க்கிறாய்.
நன்றி மட்டும்தானா? என ஏக்கத்தை நான் பார்வையில் தேக்க...
என் உள்ளங்கையில் அழுத்தமாய் ஒரு முத்தமிட்டு விலகினாய்.
உன் உதட்டின் ஸ்பரிசம் தாங்காமல் என் உடல் சிலிர்க்க இயங்க மறுத்து நின்று போயின என் விழிகள்.
நீ முத்தமிட்டுத் திரும்பிய பிம்பமே மனதில் நிலையாயிருக்க, சந்தேகத்தோடு மீண்டுமொருமுறை என் பக்கம் திரும்பியவள்,
என் உள்ளங்கையை எடுத்து என் கன்னத்தில் வைத்துவிட்டுப் போனாய்.
உள்ளங்கையில் நீ நட்டு வைத்த முத்தம் என் கன்னத்தில் வந்து பூத்தது.
முதல் முத்தம் கொடுத்த/வாங்கிய சிலிர்ப்போடு அறைதிரும்பினோம்.
விடிந்தால் திருமணம். நானோ "கன்னத்தில் கைவத்தபடி" உறங்கிப்போனேன்.

***

நம் திருமணத்திற்கு வாழ்த்து சொல்ல முதல் ஆளாய் காலையிலேயே வந்து சேர்ந்தது சூரியன்.
காற்றில் கூட திருமணக் களை கலந்திருந்த அன்று மலர்ந்த மலர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை அது ஒரு பொன்னாளின் தொடக்கமென்று.
நினைவெல்லாம் எங்கோ மிதந்துகொண்டே இருக்க, காலையில் எழுந்ததும் குளித்துக் கிளம்பியதும் என எல்லாமே கனவாய் மட்டுமே நினைவில் இருக்க,
மணமகன் கோலத்தில் உனக்காக மணமேடையில் அமர்ந்திருக்கிறேன்.
வெகுநேரக் காத்திருப்பிற்குப் பிறகு பொற்சிலையென நீ வருகிறாய்.
அருகில் வந்து நீ அமர்ந்ததும், மண்டபம் கீழிருக்க மணமேடை மட்டும் வானில் உயர்வதாக எனக்குள் பிரமை.
சரியாக நீ பிறந்த கணத்தில் நம் பெற்றோர் தாலியெடுத்துக் கொடுக்க, மலர்தூவி, "மணமக்கள் வாழ்க" வாழ்த்தொலியோடு
தமிழ் முறைப்படி எளிமையாக நடந்து முடிந்தது நம் திருமணம்.
மூன்று முடிச்சுகளையும் முடிந்துவிட்டு உனக்கு மட்டும் தெரியும்படி என் உள்ளங்கை விரிக்கிறேன்.

"திங்களுக்கு வெள்ளி விழா.
கொஞ்சம் சிரி
எங்களுக்கு வெள்ளி விழும்."

எழுதப்பட்டிருந்த அந்த வரிகளை வாசித்ததும் புன்னகைப் பூக்கிறாய். கூடவே சிந்துகின்றன சில கண்ணீர்த்துளிகள்.

பதறியவனாய், "ஹே, கேமராவெல்லாம் இருக்கு...அழாத" கிசுகிசுக்கிறேன்.

"அட லூசு... நான் சிரிச்சுட்டுதான் இருக்கேன்...ஆனா கண்ணுலயும் தண்ணி வருது"

கண்ணீரோடு நீ சிந்திய புன்னகை, பனித்துளியோடு இருக்கும் அதிகாலை ரோஜாவாய் மலர்ந்திருக்க, அழகாய் ஆரம்பமானது ஒரு வசந்தகாலத்துக்கான முதல் நொடி!


(இப்படியே சுபம் போட்டு முடிச்சிடலாம்னுதான் எனக்கும் ஆசை. ஆனால் அடுத்த திங்கட்கிழமைதான் "கதை முடிகிறது" )

கதை முடிந்தது இங்கே

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Sunday, July 22, 2007

உலகிலேயே மிகப்பெரிய சிறுகதை :)

...உலகத்துல எத்தனையோ கண்டம் இருக்கு. அதுல ரொம்பப் பெருசு நம்ம ஆசியாக்கண்டம்தான் அப்படிங்கறதும் சில அறிவுஜீவிகளுக்குத் தெரிஞ்சிருக்கும். அந்தப் பெரிய கண்டத்துல பல நாடுக இருந்தாலும் இந்தியாவ மட்டும்தான் துணைக்கண்டம்னு சொல்லுவாங்களாம். அதுல பல மொழிகள் பேசப்பட்டாலும் ரொம்பப் பழமையான மொழிகள்ல இந்தத் தமிழும் ஒன்னு. பழசா இருக்கிற அளவுக்கு அது புதுசாவும் இருக்குனு சொல்லுவாங்க.(பதிவு சரியான மொக்கையா இருக்கேன்னு இதோட நீங்கப் போயிட்டா அதுவும் இந்தப் பதிவோட வெற்றி தான்;)) புதுசாவும் இருக்கிறதுக்கு கணினி உலகத்துலயும் அது கோலோச்சிக்கிட்டு இருக்கிறதுதான் காரணம். அதுலயும் இந்த வலைப்பதிவுகள்லயும் அது புகுந்து விளளயாடிட்டு இருக்கு. வெளியூர் வந்து பொட்டி தட்டுற நெறைய தமிழ் ஆளுங்க பொழுதுபோக்கா இல்ல பொழப்பாவே வலைப்பதிவுகள் எழுதுறாங்களாம். அப்படியிருக்கிற தமிழ்வலைப்பதிவுகள்ல பல அறிவிக்கப்படாத சங்கம் / அறிவிக்கப்பட்ட சங்கம் எல்லாம் இருந்தாலும் இந்த வ.வா.சங்கம்னு ஒன்னு எல்லாரையும் சிரிக்க வச்சிட்டு இருக்கு. அதுல வேலையில்லாத வெவசாயி ஒருத்தர் மொக்கைப் பதிவு எழுதறதுக்குஒரு போட்டி வச்சிருக்கார். அதுல மொக்கைப் போட்றதயே முழுநேரத் தொழிலா நடத்திட்டு இருக்கிற செந்தழல் ரவி, நாமக்கல் சிபி மாதிரியான ஆட்கள் எல்லாம் களத்துல இருக்கும்போது அப்பப்போ கவிதைங்கற பேர்ல மொக்கைப் போட்டுட்டு இருக்கிற அருட்பெருங்கோங்கற ஆசாமிக்கும் ஒரு மொக்கைக் கதை எழுதனும்னு ஆசை வந்து எழுதியும் போட்டுட்டார். அவர் எழுதினக் கதை இதுதான் : "பரந்து விரிந்த இந்த ...."

(கதையின் தொடர்ச்சிக்கு மறுபடியும் இந்தப் பதிவின் முதல் வரிக்கு செல்லவும் )




இது வ.வா.சங்கம் அறிவித்திருக்கும் மொக்கைப் பதிவுகள் போட்டிக்கு எழுதப்பட்டது. உண்மையிலேயே சிறுகதை எதிர்பார்த்து வந்தவர்கள் மன்னிக்கவும் ;)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Friday, July 20, 2007

நான் ரசிக்கும் பாடல்கள் - 4

பாடல் : தேவதையக் கண்டேன்
படம் : காதல் கொண்டேன்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
குரல் : ஹரிஷ் ராகவேந்தர்
வரிகள் : நா. முத்துக்குமார்

தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன்
என் உயிருடன் கலந்துவிட்டாள்.
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள்
என் முகவரி மாற்றி வைத்தாள்.

ஒரு வண்ணத்துப்பூச்சி எந்தன் வழிதேடி வந்தது
அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது.
தீக்குள்ளே விரல் வைத்தேன்தனித்தீவில் கடைவைத்தேன்
மணல்வீடு கட்டிவைத்தேன்.

(தேவதையை)


தேவதை தேவதை தேவதை தேவதை அவளொரு தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை அவளொரு தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை

விழி ஓரமாய் ஒரு நீர்த்துளி வழியுதே என் காதலி
அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் போதும் போதும்
அழியாமலே ஒரு ஞாபகம் அலைபாயுதே என்ன காரணம்
அருகாமையில் உன் வாசம் வீசினால் சுவாசம் சூடேறிடும்
கல்லறை மேலே பூக்கும் பூக்கள்
கூந்தலைப் போய்த்தான் சேராது
எத்தனை காதல் எத்தனை ஆசை
தடுமாறுதே தடம் மாறுதே
அடி பூமி கனவில் உடைந்து போகுதே

(தேவதையை)

தோழியே ஒரு நேரத்தில் தோளிலே நீ சாய்கையில்
பாவியாய் மனம் பாழாய்ப் போகும் போகும் போகும்
சோழியாய் என்னை சுழற்றினாய் சூழ்நிலை திசை மாற்றினாய்
கானலாய் ஒரு காதல் கண்டேன் கண்ணை குருடாக்கினாய்
காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம்
காற்றிடம் கோபம் கிடையாது
உன்னிடம் கோபம் இங்கு நான் கொண்டால்
எங்கு போவது என்ன ஆவது
என் வாழ்வும் தாழ்வும் உன்னைச் சேர்வது.

(தேவதையை)

(ஒரு வண்ணத்துப்பூச்சி)

பாடலைக் கேட்க :


Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க

Wednesday, July 18, 2007

நிந்திக்கும் நிழல்கள்

***

நம் சந்திப்புகள்

இரவில் வேண்டாமென நிந்திக்கின்றன…
நம் நிழல்கள்!

***

கதை சொல்கிறேனென சொல்லி
நீ சொல்வதெல்லாம் கதை.
செய்வதெல்லாமோ கவிதை!

***

முகம் துடைத்த
கைக்குட்டையைத் துவைக்காதே.
அழுக்கு படிந்ததைத் துவைக்கலாம்…
அழகு படிந்ததை?

***

பிடித்துவிட எத்தனிக்கையில்
மறைந்து விடுகிறது வானவில்.
கூடவே என் வானமும்.

***

என் காதல் கேள்விகளுக்கு நீயே விடை என்றிருந்தேன்.
நீயோ கேள்விகள் எதுவுமின்றி என்னிடமிருந்து,
‘விடைபெற்றாய்’!

***

களிமண்ணை சிற்பம் ஆக்கினாய்.
பிறகு ஏனோ உடைத்துப் பார்த்தாய்.
மண்ணாகவே இருந்திருக்கலாம்!

***

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Monday, July 16, 2007

ஆத்தா நான் Physics ல பாசாகிட்டேன்!!!

எந்த மடையனாவது திங்கட்கிழமை Physics lab exam வச்சிட்டு முந்தின சனி, ஞாயிறு எல்லாம் Industrial Visit ங்கற பேர்ல ஊர் சுத்தப் போவானா? நான் போனேங்க. என்னங்க பண்றது, அப்போ collegeல மொத வருசம் படிச்சுட்டு இருந்தோம். கிளாசுக்கு நாந்தான் ரெப்பு. (கண்டுக்காதீங்க) Industrial Visit க்கு பெங்களூர் போலாம்னு ஏற்பாடு பண்ணும்போது எந்த வாரம் போறதுன்னு ஒரு சிக்கல். அது வருசக்கடைசிங்கறதால தேர்வெல்லாம் நெருங்கிட்டு இருந்த சமயம். நாங்க போலாம்னு முடிவு பண்ணியிருந்ததுக்கு அடுத்த திங்கட்கிழமை எங்க க்ளாஸ்ல (என்னையும் சேர்த்து) ஒரு 5 பேருக்கு Physics lab final exam இருந்துது. சரி எப்படியாவது professor கிட்ட சொல்லி அத வேற நாளுக்கு மாத்திடலாம்னு முடிவு பண்ணி அவர்கிட்டவும் பேசினேன். சரி உங்க 5 பேருக்கு பதிலா வேற க்ளாஸ்ல இருந்து வேற 5 பேர செய்ய சொல்லிட்டு அவங்க செய்ய வேண்டிய அன்னைக்கு நீங்க வந்து செஞ்சுடுங்கனு சொல்லிட்டாரு. நானும் இன்னொரு க்ளாஸ் ரெப்புகிட்ட பேசி ஓக்கே வாங்கிட்டு பெங்களூர் கிளம்பிட்டோம். ஆனா பாருங்க அன்னைக்கு அந்த கிளாஸ் ரெப்பு மப்புல இருந்திருப்பான் போல…சொன்னத மறந்துட்டான்.

பெங்களூரெல்லாம் சுத்தி முடிச்சுட்டு அந்த திங்கட்கிழமை காலைல கோயம்புத்தூர் வந்து எறங்கும்போது மணி 7:30. ஹாஸ்டல் போகும்போதே மணி 8:30 நெருங்கிடுச்சு. எல்லாரும் அரக்கப் பரக்க கிளம்பி க்ளாஸுக்கு ஓட்றாங்க. யாராவது எனக்கு ப்ராக்ஸி போடுங்கடானு சொல்லிட்டு நான் ரூம்ல மல்லாக்கப் படுத்து தூங்க ஆரம்பிச்சுட்டேன். மணி ஒரு 11 இருக்கும். “ரூம் நம்பர் 111 – சிவசாம்ராஜ் – போன் “ அப்படினு மெஸ் சூப்பர்வைசர் சத்தம் போட்றார். (எனக்கு அமைஞ்ச ரூம் நம்பர் பாத்தீங்களா) எனக்கு அது வரைக்கும் போனே வந்ததில்ல. அதிசயமா இது யாரா இருக்கும்னு யோசிச்சுட்டே போய் போன எடுத்தேன்

“டேய் sam , ஹாஸ்டல்ல என்னடாப் பண்ணிட்டு இருக்க. உங்க batchக்கு இப்போ physics lab exam நடந்துட்டு இருக்கு. Professor உன்னக் கேட்டுட்டு இருக்கார். சீக்கிரம் lab க்கு போடா” – அப்படினு என்னோட பாசக்கார நண்பன் சொல்லிட்டு இருக்கும்போதே எனக்கு மண்டைக்குள்ள யாரோ ட்ரம்ஸ் வாசிக்கிற மாதிரி இருந்துது.

“மத்த நாலு பேரு போய்ட்டாங்களா” – என்ன இருந்தாலும் நாம க்ளாஸ் ரெப்பு இல்லையா.

“அவங்கலாம் பாதி experiment பண்ணிட்டாங்க, நீ மொதல்ல labக்குப் போடா” னு சொல்லி வச்சிட்டான். என்னத் தவிர எல்லாரும் வெவரமாதான் இருக்காங்க.

அவசர அவசரமா record நோட்டையும் , observation நோட்டையும் தேடியெடுத்துட்டு lab க்கு ஓடினேன்.
உள்ள நுழையும்போதே professor என்ன ஒரு மாதிரியா பார்க்க, நானும் மறுபடி என்ன ஒரு தடவ பார்த்துக்கிட்டேன்.
அப்போதான் தெரிஞ்சது மத்த எல்லாரும் காக்கி யூனிபார்ம்ல ஷூ போட்டு டக் இன் பண்ணி lab uniform ல இருக்க நான் செருப்புக்காலோட, கலர் சட்டைல நின்னுக்கிட்டு இருந்தேன். அவர்கிட்ட கொஞ்சம் பழைய வரலாறெல்லாம் சொல்லி லேட்டா வந்ததுக்கு மன்னிப்பெல்லாம் கேட்டு (அப்பவே நானெல்லாம் பெரிய மனுசனாக்கும்) எப்படியோ experiment செய்ய வேண்டிய எடத்துக்குப் போய்ட்டேன்.
அது என்னமோ காந்தத்த இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் திருப்பி வச்சு எதோப் பண்ணுவாங்களே அந்த experiment தான் எனக்கு வந்திருக்கு. இந்த experiment இதுக்கு முன்னாடி பண்ணியிருக்கேனா இல்ல data மட்டும் மத்தவன்கிட்ட வாங்கி fill பண்ணி எஸ்கேப் ஆகியிருக்கேனானு எனக்குதெரியல. அதாவது இந்த experiment எனக்கு செய்யத் தெரியாதா இல்ல மறந்துபோயிடுச்சா அப்படிங்கறதும் எனக்குப் புரியல. சரினு பக்கத்துல இருக்கவன நோட்டம் விட்டா அவன் பாவம் ட்ரெயின்ல வரும்போது பல்லு வெளக்கிட்டு எச்சித் துப்பும்போது போட்டிருந்த கண்ணாடியையும் சேர்த்துத் துப்பிட்டான். அவனுக்கு வந்த experimentல burette ல தண்ணிய ஊத்தி என்னமோ பண்ண சொல்லியிருக்காங்க. கண்ணாடியில்லாம பாவம் தண்ணிய கீழ ஊத்திட்டு burette ல இல்லாத water levelல தேடிக்கிட்டு இருந்தான். பாவம் வெந்த கண்ல வேலப் பாய்ச்ச வேணாம்னு இன்னொரு பக்கம் திரும்பினேன்.
நான் எப்போடா திரும்புவேன்னுப் பாத்துட்டே இருந்திருப்பா போல அவ. எங்கிட்டே எதோ கேட்கத் தயங்கறாப்ல இருந்துது. இது என்னடா நமக்கு வந்த சோதனை. எதாவது சந்தேகம் கேட்டு நம்மளக் கேவலப் படுத்தப்போகுதோன்னு நெனச்சுட்டு இருந்தா பக்கத்துல professor table ல இருந்த அவளோட observation நோட்டத் தூக்கிப் போட சொல்றா. அவளுக்கு யார்கிட்ட என்னக் கேட்கனும்னு தெரிஞ்சிருக்கு…professor table பக்கமாத் திரும்பினா நான் உள்ள நுழஞ்சதுல இருந்தே என்ன ஒரு தீவிரவாதியப் பாக்குற மாதிரியே அந்த professor பாத்துட்டு இருந்திருக்கார். அவருக்கு இன்னைக்கு நல்லாப் பொழுது போகப் போகுதுனு மட்டும் எனக்கு கன்பார்ம் ஆச்சு.

சரினு பேப்பர எடுத்து எழுத ஆரம்பிப்போம்னு ஆரம்பிச்சேன். மொதல்ல Aim னு ஒன்னு எழுதனும். அது ஒன்னும் பெரிய கஷ்டமில்லனு வையுங்க. அவங்க கொடுத்த question க்கு முன்னாடி ஒரு to போட்டு எழுதிடலாம். (Find the density அப்படினு கேள்வி இருந்தா To find the density அப்படின்னு Aim எழுதனும். பாருங்க நானெல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சிருக்கேன்னு L) ஒருவழியா கஷ்டப்பட்டு aim எழுதி முடிச்சதும் அப்புறம் என்னப் பண்றதுனு தெரியல. Apparatus Required அப்படினு ஒன்னு எழுதுவோம். அதாவது சமையல் குறிப்புல “தேவையான பொருட்கள்” மாதிரி. அது கிட்டத்துல காந்தம், பேனா, பென்சில், ஸ்கேல் எல்லாத்தையும் எழுதி வச்சிட்டேன். அப்புறம் Formula னு ஒன்னு எப்பவும் எழுதுவோம். அதுதான் மறந்துடுச்சு…இல்ல தெரியலன்னு நெனைக்கிறேன். Lab ல ஆரம்பத்துல இருந்தே இன்னொரு வயசான professor என்னையவே வாட்ச் பண்ணிட்டு இருந்தார். நான் திருதிருனு முழிச்சிட்டு இருந்ததப் பாத்துட்டு என் பக்கத்துல வந்தவரு என்ன formula மறந்துடுச்சானு கேட்டாரு…”ம்ம்ம்” னு வடிவேலு மாதிரி தலையாட்டுனேன். அவருக்கு என் மேல என்னப் பாசமோ பேப்பர வாங்கி formula வ அவரே எழுதுனாரு. என்ன இருந்தாலும் வயசான ஆட்களுக்கு நல்ல மனசுதான்னு நான் நெனச்சுட்டு இருக்கும்போதே படுபாவி மார்ஜின்ல “ – 5 ” னு போட்டுட்டுப் போயிட்டார். ஏற்கனவே internal la 40 க்கு என்னோட மார்க் 18 தான். நான் பாசாகனும்னா இந்த lab examல 60 க்கு 32 க்கு மேல எடுத்தாகனும் L அதுல ஒரு 5 மார்க்குக்கு அசால்ட்டா ஆப்படிச்சுட்டுப் போயிட்டார். எழுதுன aim க்கு ஒரு ரெண்டு மார்க்கு வச்சுக்கிட்டாலும் மீதி இருக்கிற 55 ல இன்னும் 30 க்கு எதாவது வழி பண்னியாகனும்.
Formula வுக்கு அடுத்தது tabular column னு ஒன்னு போட்டு அதுல கொஞ்சம் data எல்லாம் ரொப்பனும். அத experiment செஞ்சு(?) கண்டுபிடிக்கலாமா இல்ல தூரத்துல இருக்குற observation note ல இருந்து காப்பியடிச்சு எழுதிடலாமாங்கறது அடுத்த விசயம். ஆனா tabular column க்கு எத்தன column போடனும்னு தெரியாம எனக்கு விழி பிதுங்குது. அப்படியே labல இருந்த ஒவ்வொருத்தரா experiment எல்லாம் முடிச்சுட்டு viva voce (கேள்வி பதில்) section க்கு professor கிட்டப் போக ஆரம்பிச்சுட்டாங்க. சரி குத்துமதிப்பா ஒரு tabular column போட்டு வைப்போம்னு ஒரு 5 column போட்டுட்டு மொத column க்கு serial no. அப்படினு heading எல்லாம் கொடுத்தேன். ஆனா அதுக்கப்புறம் என்னப் பண்றதுன்னுத் தெரியாம நின்னுக்கிட்டு இருக்கும்போது மறுபடியும் அதே professor வந்தார். Tabular column வெறும் கோடுகளா இருக்கிறதப் பாத்ததும் அவரும் கொஞ்சம் கடுப்பாகிட்டார்னுதான் சொல்லனும். “ஏப்பா மேலதான் formula எழுதிருக்கேனே அதுல இருக்கிற parameters தான் இங்க tabular columnல வரணும்னு கூடத் தெரியாதா?” அப்படினு தலைல அடிச்சுக்கிட்டே அவரே அதையும் fill பண்ணிட்டு இருக்கும்போதே எனக்கு சந்தேகம்! போகும்போது மறக்காம மார்ஜின்ல “ – 10” னு போட்டுட்டுப் போயிட்டார். இப்போ என்னோட நெலமை ரொம்ப மோசமாச்சு மீதி இருக்கிறது 45! அதுல நான் 30 எடுத்தாகனும். இதுக்குமேலயும் கம்முனு இருந்தா அவரே வந்து experiment –ம் பண்ணிட்டு “ – 45 “ ம் போட்டுட்டுப் போயிடுவாரோனு ஒரு பயம். ரெண்டு professor -ம் viva voce ல கொஞ்சம் பிசியா இருந்த சமயத்துல observation note la இருந்து இந்த experiment க்கு உரிய data, result எல்லாத்தையும் test paper க்கு migrate பண்ணினப்பதான் எனக்கு கொஞ்சம் நிம்மதியாச்சு. (இந்த data migration-ன யாராவது copy னு சொல்லி கேவலப்படுத்தினா அதக் கண்டுக்காதீங்க)

அப்புறம் கொஞ்சம் நேரம் experiment செய்ற மாதிரி , கணக்குப் போடுற மாதிரி, சிந்திக்கிற மாதிரினு பல கோணங்கள்ல என்னோட நடிப்பக் காட்டிட்டு கெத்தாகப் போய் test paper நீட்டினேன். வாங்கிப் பார்த்தவர் சம்பந்தமே இல்லாமல் ஒரு கேள்வி கேட்டார் “நீ மட்டும் சட்டை போட்டிருக்கியே உன் record noteக்கு ஒன்னு வாங்கிப் போடனும்னு தோணுச்சா?” டேபிள் மேல பாத்தா என்னோட record note (ச)அட்டையில்லாம இருந்துது. “Record note க்கு cover பண்ணிட்டு வந்தாதான் உனக்கு viva voce “அப்படினு சொல்லிட்டார். என்னோட record note எடுக்கும்போது கூடவே இன்னொரு நோட்டும் அட்டையில்லாம இருந்தது. யாருதுனு பாத்தா நம்ம burette ல water level தேடிட்டு இருந்தவனோடதுதான். அவனப் பார்த்தா இன்னுமும் தேடிட்டே இருந்தான். சரி அவன் நோட்டுக்கும் அட்டையப் போட்டுடுவோம்னு அவனோடதையும் சேர்த்து எடுத்துட்டு வெளிய வந்தப்ப experiment முடிச்சுட்டு வந்து நம்ம க்ளாஸ் பொண்ணு ஒருத்தி உட்காந்திருந்தா. சரி resusability பத்தி எவ்வளவு படிச்சிருக்கோம் அதப் பயன்படுத்துவோம்னு அவளோட record அட்டைய வாங்கி அந்தப் பையன் நோட்டுக்குப் போட்டுட்டு அவளோட observation noteக்கு போட்டிருந்த அட்டைய எடுத்து என்னோட record note க்குப் போட்டேன். அவ வேற ரொம்பப் பொறுப்பா லேபில் எல்லாம் ஒட்டி பேர் எழுதியிருந்ததால வெளிப்பக்கம் உள்ள இருக்கிற மாதிரி அட்டையத் திருப்பிப் போட வேண்டியதப் போச்சு. இந்த record note –ட விட observation note கொஞ்சம் சிறுசா இருக்கும். அதனால observation note அட்டைப் போட்டதுக்கு அப்புறம்தான் என்னோட record note கொஞ்சம் கேவலமா இருந்த மாதிரி இருந்துது. இருந்தாலும் professor ஆசப்பட்டுட்டாரேனு அப்படியேக் கொண்டு போய் நீட்டினேன். அவர் வாங்கும்போதே நோட்டு தனியா அட்டை தனியாப் போயிடுச்சு. அட்டைல இருந்த லேபிள படிச்சுப் பாத்தவரு, பொண்ணுப் பேர பாத்துட்டு இன்னும் கொஞ்சம் கடுப்பாகிட்டாரு. “நீ போட்டிருக்கிறதாவது உன்னோட சட்டைதானா?” னு அவர் சீற , சீரியசாக் கேக்குறாரா நக்கலுக்கு கேக்குறாரானு அனக்குத் தெரியல. ஆனா நான் அப்போ போட்டிருந்தது ரூம்மேட்டோட சட்டைதாங்கற உண்மைய அப்போ சொன்னா அது அவர இன்னும் கடுப்பேத்துமேன்னு அந்த உண்மையக் கஷ்டப்பட்டு மறச்சுட்டேன். “இப்பவே புதுசா ஒரு கவர் வாங்கிப் போட்டு இன்னும் 15 நிமிசத்துலக் கொண்டு வந்துகொடுத்தா உனக்கு evaluation நடக்கும் இல்லனா இப்பவே ரிசல்ட் தெரிஞ்சிடும்” னு எச்சரிக்கை இல்ல இல்ல கட்டளைப் போட்டுட்டுப் போயிட்டார்.

அவசர அவசரமா college வெளிய வந்து அந்தக்கடைக்கு அட்டை வாங்கலாம்னு போகும்போதுதான் பாக்கெட்ட பாத்தேன். பர்ஸ் இல்ல. பர்ஸ் இருந்திருந்தாலும் அதுல காசு இருந்திருக்குமாங்கறதும் சந்தேகம் தான். அது லஞ்ச் டைம் ஆனதுனால எவனும் காலேஜ் உள்ள இருக்க வாய்ப்பில்ல. சரி இனிமே ஹாஸ்டல் போய் காசெடுத்துட்டு வந்து அட்டை போட்டு கொடுக்க முடியுமான்னு யோசிக்கும்போதே எனக்கு ரிசல்ட் கொஞ்சம் தெரியற மாதிரி இருந்துது. அப்போ நல்லவேளையா நம்ம நண்பன் ஒருத்தன் எதிர்ல வர அவன் பாக்கெட்ல ஒரு பத்து ரூபாய சுட்டு அட்டைய வாங்கிட்டு lab கு ஓடினேன். Lab வெளிய நின்னு அழகா அட்டையெல்லாம் போட்டு நோட்ட எடுக்கும்போது கை தவறி அது கீழ விழுந்தது. நான் நின்னுட்டு இருந்தது first floor னு நெனைக்கிறேன். Ground floor ல எலக்ட்ரிக் lab க்குள்ளப் போய் அது விழுந்துடுச்சு. கீழப் போய் அத எடுக்கும்போது அங்க ஒரு professor , தானும் ஒரு professor னு நிரூபிக்கிறதுக்கு ஒரு வாய்ப்புக் கிடைச்ச சந்தோசத்துல, நின்னுக்கிட்டு இருந்தார். அவரோட அறிவுரை எல்லாத்தையும் கவனமா கா(த்)துல ஏத்திட்டு மறுபடி மேல வந்தேன். நான் வருவேன்ற நம்பிக்கை இல்லாம இருந்த professorக்கு நான் வந்ததுல ஆச்சர்யம். நோட்ட வாங்கி கவனமா அட்டையோட உள்பக்கமெல்லாம் எடுத்துப் பாத்துட்டு சரி viva voce இப்போ வச்சிக்கலாமா 2 o clock க்கு மேல வச்சிக்கலாமான்னார். தெரியாது ன்றத இப்போ சொன்னா என்ன. மதியம் ரெண்டு மணிக்கு சொன்னா என்னனு இப்பவே வச்சிக்கலாம்னு நான் சொல்லவும் 5 கேள்வி கேட்டார். “நாம வாயத்தொறந்து முட்டாள்னு நிரூபிக்கிறத விட வாய மூடிட்டே அத செய்யலாம்”ங்கற பொன்மொழி எனக்கு ரொம்பப் புடிக்கும். கேட்ட கேள்விக்கெல்லாம் மௌனமா தலையசைச்சு தெரியாதுன்னு சொன்னேன். காலைல இருந்து என்னோட நடவடிக்கையப் பாத்துட்டு இருந்தவருக்கு இது ஒன்னும் ஆச்சர்யத்தக் கொடுத்திருக்காதுதான். “ok you can go” னு சொல்லி அனுப்பிட்டார். அவசர அவசரமா ஹாஸ்டல் வந்து சாப்பிட்டுட்டு பாதியில விட்ட தூக்கத்தக் கண்டினியு பண்ண ப்போயிட்டேன். சாயுங்காலம் வந்து பசங்க எழுப்பும்போதுகூட இதெல்லாம் கனவுல நடந்த மாதிரிதான் இருந்துச்சு. அப்புறம் ஒரு டீயக் குடிச்சு தெளிவானப்பதான் நடந்ததெல்லாம் உண்மைதான்னு தோணுச்சு. ஒருத்தன் கேட்டான் “என்ன மச்சான் ரிசல்ட் வர்றதுக்கு முன்னாடியே கப்பு கன்ஃபார்மா?” எனக்கும் கிட்டத்தட்ட அப்படிதான் தோணுச்சு.

ஆனா ரிசல்ட் வந்தன்னைக்கு browsing centre ல ரிசல்ட்டப் பாத்ததும் நான் கத்தினதுதான் இந்தப் பதிவோட தலைப்பு!

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Friday, July 13, 2007

மின்னல்சரம்

இருள் கவிந்த ஒரு மாலைநேரம்.
உன் வருகையை
ஊருக்கே சொல்லிக்கொண்டு
மணக்கிறது உன் கூந்தலின் மல்லிகை.

என்ன மல்லிகையோ…
உன் புன்னகையைப் போல
ஒளிரத்தெரியவில்லை.

மணக்கும் மல்லிகை
கூடவே கொஞ்சம் ஒளிர்ந்தால்
எப்படி இருக்குமென
உனக்கொரு ஏக்கம்.

அதற்காகவே,
ஒரு மழைக்காலம் முழுவதுமாய் சேகரித்த
மின்னல்களை ஒடித்து
மல்லிகையோடு மல்லிகையாய்
சரம் தொடுத்தேன்.

மீண்டும் ஒரு மாலைநேரத்தில்
உன் கூந்தலில் சூடிக்கொள்ள
உன் கண்களைப் பொத்திவிட்டு
மின்னல்சரத்தை நான் நீட்ட…
நீ கண் திறந்தாய்.

உன் கண்களை
நேர்கொண்டு பார்க்க முடியாமல்
சரசரவென சரிந்து விழுந்தன…
சரமாய்த் தொடுத்திருந்த
அத்தனை மின்னல்களும்!

“ம்ஹும்… இப்போ எதுக்கு வழவழனு அளந்துட்டு இருக்க… சின்னதா சொல்லத் தெரியாதா?”

“ம்ம்ம்…சரி”

உன் பார்வை பட்டதில்
குருடாகிப் போனது
மின்னல்!

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Thursday, July 12, 2007

ஆயுற்காலிகம்

நம் நட்பு தூங்கிக் கொண்டு
நான் விழித்திருந்த
ஒரு கனவுப் பொழுதில்
எனக்குள் விழுந்தாய்.

எனக்கானவள் யாரெனத் தேடி
உனக்கானவன் நானென்ற முடிவில்
எனக்குள் விழுந்தது காதல்.

என் காதல்
உன் நட்பை உரசிய
கனமான கணத்தில்
நானும் உனக்குள் விழுந்தேன்.

கற்பனையில் கருவாகி
கவிதையில் உருவாகி
உனக்குள்ளும் விழுந்தது காதல்.

நீ,
நான்,
நம் காதல்
சந்தித்தப் புள்ளியில்
கோலமிட ஆரம்பித்தது காலம்.

கோலத்தில் சிக்கி
சிக்கலாகிப் போனது
நம் காதல் வாழ்வு.

பிரிவும் துயரும்
தற்காலிகம் என்றிருந்தேன்.
நினைவுகளைப் போல
அவையும் ஆயுற்காலிகம் என்றபடி
தொடர்பறுத்து விலகினாய்.

ம்ம்ம்.. இருவருமே சுயநலவாதிகள் தாம்.
என் சுயமாக எப்போதும் நீ.
உன் சுயமாகவும் நீயே!

(அண்மையில் வாசித்த காதல் நினைவுகள் குறித்த இரண்டு இடுகைகளின் பாதிப்பில்...
ஒன்று, ஓர் ஆணின் பார்வையில், கவிதை வடிவில் ப்ரியன் அவர்களுடையது.
மற்றொன்று, ஒரு பெண்ணின் பார்வையில் கட்டுரை வடிவில் சந்திரவதனா அவர்களுடையது)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Wednesday, July 11, 2007

ஓரு காதல் பயணம் - 12

காதல் பயணம் - முதல் பகுதி

என்னை அடிக்க நீ கை ஓங்கும் போதெல்லாம்
கண்களை மூடிக்கொண்டு சுகிக்கதான் நினைக்கிறேன்.

ஆனால் நீ அடிக்க வரும் அழகைக் கண்டதும்

இமைக்காமல் நிற்கின்றன என் கண்கள்.


என்னை எதிர்பார்த்து அந்த வாய்க்கால் படித்துறையில் அமர்ந்திருக்கிறாய் நீ.
நீர் பருக வந்த மயில் ஒன்று படியிலேயே அமர்ந்துவிட்டதென மீன்களெல்லாம் உன்னையேப் பார்க்கின்றன.

அப்போது உனக்குத் தெரியாமல் உனக்குப் பின்னால் மெல்ல நடந்து வருகிறேன் .
உன் கண்களை மெல்ல மூட நான் கைகளைக் கொண்டு வர, "ஏன் இவ்வளவு நேரம்" எனத் திரும்பிப் பார்க்காமல் நீ கேட்கிறாய்.
உன்னை ஏமாற்றலாம் என்று முயற்சியில் மீண்டும் ஒரு முறை தோற்றுப் போகிறேன் .
அதனால் என்ன? காதலியிடம் தோற்றுப்போவதை விட வேறென்ன சுகம் இருக்கிறது?

வெகு நேரம் எனக்காக அமர்ந்த நிலையில் காத்திருந்தாய் போல!
நான் வந்தததும் எழுந்து அந்த வாய்க்காலை ஒட்டி நடக்க ஆரம்பிக்கிறாய்.
உன்னோடு மனம் கோர்த்து நானும் நடக்க ஆரம்பிக்கிறேன்.

"கேட்டாதான் சொல்லுவியா? எனக்கு என்னப் பரிசு தரப் போறனு இன்னைக்கு சொல்றதா சொன்னியே, சொல்லு!"
"சொல்லல! காட்டறேன்! இந்தா" எனக் கையில் இருந்ததை உன்னிடம் நீட்டுகிறேன்.

வாங்கிப் படிக்கிறாய்.

மாதிரி திருமண அழைப்பிதழ். மணநாள் உன் பிறந்தநாளுக்கு மாற்றப்பட்டிருப்பதையும், முகூர்த்த நேரம் நீ பிறந்த நேரத்தில் இருப்பதையும் பார்த்துப் பரவசமாகிறாய்.

படித்து விட்டு அதை மடித்து வைத்துக் கொள்கிறாய் உன் இதயத்துக்கருகில்.
அங்கே என் இதயத்தை அது நலம் விசாரித்திருக்கக் கூடும்.

பேச்சில்லாத மௌன உரையாடலினூடே என் கை தேடுகிறது உன் கை.
என் தோள் சாய்கிறது உன் தலை.
எங்கேயோப் பார்த்துக்கொண்டு மெதுவாய்க் கேட்கிறாய்,"எனக்காக என்ன வேணா செய்வியோ?"
"கண்டிப்பா!"

"ஏன்?"

"காரணம் சொன்னாப் பெனாத்தறேன்னு சொல்லுவ"

"பரவால்லப் பெனாத்து"

நீ சீண்டியதும், என் இதயம் வழக்கம்போல பெனாத்த ஆரம்பிக்கிறது.

"ஹ்ம்ம்ம்...நீ நடந்து வருகிறாய் எனத் தெரிந்ததும் அவசரமாக இந்த மரங்களிடம் கடன் வாங்கி
தன்னைப் பூக்களால் போர்த்திக் கொள்கிறது இந்த நிலம்.

நீ வருவதற்கு முன் பேரிரைச்சைலோடு ஓடிக்கொண்டிருந்த இந்த வாய்க்கால் நீர்,
நீ வந்து அங்கு அமர்ந்த பிறகு சத்தமில்லாமல் அமைதியாய் ஓடத் தொடங்குகிறது!

கொஞ்ச நேரம் முன்பு வரை உக்கிரமாய் தன் கதிர்களை வீசிக் கொண்டிருந்த கதிரவன்
உன்னைப் பார்த்ததும் மேகத்துக்குப் பின்னே போய் மறைந்து கொள்கிறான்!

சற்றுமுன் வரை வேகமாக வீசிக்கொண்டிருந்த காற்று உன்னைப் பார்த்ததும்
உன் தேகம் வலிக்காமல் மெல்லியத் தென்றலாய் வீச ஆரம்பிக்கிறது!

இப்படிக் கொஞ்ச நேரம் உன்னை மகிழ்ச்சியாய் வைத்துக் கொள்வதற்கு இந்த இயற்கையே இத்தனை செய்யும்போது,
உன்னை எப்போதும் மகிழச்சியாய் வைத்துக் கொள்ள நான் என்னென்ன செய்ய வேண்டும்?"

முழுவதுமாய் பெனாத்தி முடிக்கிறேன் நான்.
சட்டென உன் ஒருதுளி கண்ணீர் என் இதயம் நனைக்கிறது.

"ஏய்! இப்ப நான் என்னப் பெருசா நடந்துடுச்சு? கல்யாணத்த ஒரு வாரம் முன்னாடி வச்சிருக்கோம்...அவ்வளவுதான?"

"நான் கண்டிப்பா இந்த வருஷம் பிறந்த நாள வாழ்நாள் பூரா மறக்கவே மாட்டேன்"

"சரி சரி ரொம்ப உருகாத...நேரமாச்சுக் கிளம்பலாம்!"

"..."

"என்ன யோசனை?"

"இதே மாதிரி உனக்கும் உன்னோடப் பிறந்த நாளுக்கு எந்தக் காதலியும் இதுவரைக்கும் கொடுக்காதப் பரிசா கொடுக்கணும்!
என்னக் கொடுக்கலாம்னு யோசிக்கிறேன்!"

"பரிசு கொடுத்துதான் நீயென்ன மகிழ்ச்சிப் படுத்தனும்னு இல்ல. என்னோடப் பரிசுகள நீ ஏத்துக்கறதே எனக்கு மிகப் பெரிய பரிசுதான?"

"ஓ! நீங்க மட்டும்தான் எங்களக் காதலிக்கனும், நாங்க உங்களக் காதலிக்கக் கூடாதோ?"

"அட நல்லப் பரிசாக் கிடைக்கலையேன்னு நீ வருத்தப்படக் கூடாதில்ல அதுக்காக தான் சொன்னேன்!
என்னோடப் பிறந்த நாளுக்கு இன்னும் 9 மாசம் இருக்கு, நீ பொறுமையாக்கூட யோசிச்சுக்கலாம், சரியா? இப்ப வா போகலாம்"

என்னிடம் இருந்து கொஞ்சமாய் விலகியவள், "இல்ல உனக்கு என்னப் பரிசு கொடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்!
அதுவும் எந்தக் காதலியும் தன்னோடக் காதலனுக்கு இதுவரைக்கும் கொடுக்காதப் பிறந்தநாள் பரிசு!"

"என்ன? என் பிறந்தநாளன்னைக்கு இன்னொரு தடவை கல்யாணம் பண்ணிக்கலாமா?"

"அறுபதாம் கல்யாணத்த வேணும்னா உன் பிறந்த நாளன்னைக்கு வச்சிக்கலாம்...ஆனா இத அடுத்தப் பிறந்த நாளன்னைக்கேக் கொடுக்கனும்"

என்னைப் போலவே நீயும் புதிர் போடுகிறாய்.

"உனக்கு நம்மக் கல்யாணம் வரைக்கும் டைம் தர்றேன், முடிஞ்சா கண்டு பிடிச்சு சொல்லு பார்ப்போம்!" என சொல்லிவிட்டு சிரிக்கிறாய்.
நீ என்ன யோசிப்பாய் எனத் தெரியாத அளவுக்கு நான் என்ன வெளியிலா வாழ்கிறேன்?

"அது எனக்கு நீ கொடுக்கிறப் பரிசில்லையே! நம்மக் காதலுக்கு நாமக் கொடுக்கப் போறப் பரிசுதான!"
என்று சொல்லிவிட்டு உன்னைப் பிடிக்கப் பார்க்கிறேன்.

அதைக் கேட்டதும், "ச்சே! உனக்குத் தெரியாம என்னால எதையும் நெனைக்கக் கூட முடியாது போலிருக்குடா!
உங்கிட்ட இருந்து நான் என்னத்ததான் மறைக்கிறது" என்று சிணுங்கிக்கொண்டு ஓடுகிறாய்.

"ஆமாமா! நீ கல்யாணம் வரைக்கும் மறைச்சு வச்சிருக்கிற கொஞ்ச நஞ்சமும் கல்யாணத்துக்கப்புறம் மறைக்க முடியாது"
கொஞ்சம் சத்தமாகவேக் கத்துகிறேன் நான்.

"ச்சீப் போடா..." என் மீது ஒரு பூவையெடுத்து எறிந்து விட்டுப் போகிறாய்
வார்த்தை வந்து சேர்வதற்குள் என் பார்வையில் இருந்து மறைகிறது உன் பிம்பம்.
நானும் மெதுவாய் எனக்கு நீ தரப் போகும் பரிசை எண்ணிக்கொண்டு நடக்க ஆரம்பிக்கிறேன்.
"குழந்தை"யைப்போல கை தட்டி ஆரவாரிக்கிறது வானம்.

(காதல் பயணம் தொடரும்)
அடுத்த பகுதி
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Friday, July 06, 2007

நொடிக் கவிதைகள் - 4

ஓரு நொடிக்கவிதைகள் - 1

ஓரு நொடிக்கவிதைகள் - 2

ஓரு நொடிக்கவிதைகள் - 3



அகத்தின் அழகு முகத்திலாம்.
கண்ணாடியில் முகம் பார்த்தால்…
நீ!



பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்.
உன் கூந்தல் சேர்ந்த
பூவும்…



உன் பெயர்
தென்பட்ட இடமெல்லாம்
தேன்பட்ட இடம்.



நீ பேசும்போது மட்டும்
என் செல்பேசி
செல்சிணுங்கி.



மழை வந்தால்
மழலையாகிறாய்.
நான் மழையாகிறேன்.



செல்லமாய் உன்னிடம் கோபிக்கலாமென்றால்
செல்லத்தை மட்டும் அனுப்பி விட்டு,
கோபம் திரும்பி விடுகிறது.



உன் உதட்டோரம் ஒட்டியிருக்கும்
ஒரு பருக்கைப் போதும்.
என் காதல் பசியாற!



வெட்கத்தோடு
நீ பேசுகையில் புரிகிறது…
தமிழ் செம்மொழிதான்!



உனைக்கண்டதும் தென்றலாய் வருடி,
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்கிறது,
காற்று!



உன்னோடுப் பேசிக் கொண்டிருக்கிறேன்.
இடையில் வந்து போகிறது…
பகல், இரவு, உறக்கம், கனவு எல்லாம்!

நொடிக்கவிதைகள் - 5

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Thursday, July 05, 2007

ஒரு காதல் பயணம் - 11

ஒரு காதல் பயணம் - முதல் பகுதி

என் ஆயுள் முழுவதுக்குமான

சந்தோசம்,
உன் அரை நொடிச் சிரிப்பில்
இருக்கிறது!
திருமண அழைப்பிதழ் அச்சடிக்க உங்கள் குடும்ப விவரம் வாங்கி வருவதற்காக உங்கள் வீட்டுக்கு வருகிறேன் நான்.
வரவேற்பறையில் நான் அமர்ந்திருக்க என்னோடுப் பேசிக்கொண்டிருக்கிறார் உன் அப்பா.
சகஜமாய் நான் உன்னைப் பார்க்க, நீயோ
பெண்பார்க்க வந்தபோது இருந்த நாணத்தை தேடிப்பிடித்து முகத்தில் பொய்யாகப் பூசிக்கொண்டு நிற்கிறாய்.
உதடு உன் அப்பாவோடு பேசிக் கொண்டிருக்க விழி உன்னோடுப் பேசப்பார்க்கிறது.
மறுமொழி பேச வேண்டிய உன் விழியோ குடையில் விழுந்த மழையாய் நழுவிக்கொண்டே போகிறது.

அழைப்பிதழின் மாதிரியை எழுதித் தந்த உன் அப்பா என்னை சரி பார்க்க சொல்லிவிட்டு உள்ளே செல்கிறார்.
என் மனதைப் போலவே உன் வீடும் ஏதோ பரபரப்பில் இருப்பதாக தோன்றுகிறது எனக்கு.
உங்கள் கிராமத்தில் உள்ள அம்மன் கோவில் திருவிழாவிற்கு நீங்கள் எல்லோரும்
கிளம்பிக் கொண்டிருப்பதை எனக்கு மட்டும் ஒலிபரப்புகிறாள் உன் தங்கை.

‘சரி, இன்றைக்கு உன்னோடு பேசும் பாக்கியம் இல்லை போல’ என்று நான் யோசித்துக் கொண்டிருக்க,
என்னைப் பார்த்து ஏதோ சைகை செய்கிறாய் .
குழப்பமாய் நான் விழிக்க, உன் அப்பாவிடம் ஏதோ பேசுகிறாய்.

வெளியில் வந்தவர், “நம்ம ஊர்க்கோவில்ல திருவிழாங்க..அதான் எல்லாரும் கிளம்பிட்டிருக்கோம்” என சிரிக்கிறார்.
சரி இதற்கு மேலும் அங்கு இருப்பது நல்லதல்ல என்று,
“அப்போ நானும் கிளம்புறேங்க!” என விடை பெறுகிறேன் நான்.
“அட நானும் அதான் சொல்லவந்தேன், நீங்களும் கிளம்புங்க திருவிழாவுக்குப் போயிட்டு சாயுங்காலம் வந்துடுவோம்…
நம்ம ஊரையும் சுத்திப் பாத்த மாதிரியிருக்குமில்ல” என சிரிக்கிறார் உன் அப்பா!
நான் உன்னைப் பார்க்கிறேன்.
“அட என் பொண்ணுதாங்க கூப்பிட சொன்னா!” என மறுபடியும் சொல்லிவிட்டு செல்கிறார் அவர்.
எல்லோரும் கிளம்பி வெளியில் வருகிறோம்.

என்னருகில் வந்து மெல்ல கேட்கிறாய்,”புடவைல நான் எப்படி இருக்கேன்”
ஒவ்வொரு ஆடையிலும் நீ ஒவ்வொரு மாதிரியிருப்பதாக உனக்கொரு நினைப்பு.
ஆனால் எல்லா ஆடையும் உன்னிடம் வந்தால் ஒரே மாதிரி அழகாக ஆகி விடுவதை எப்படி சொல்ல?

“உன்னக் கட்டியிருக்கதால புடவை ஏதோ அழகாதான் இருக்கு, ஆனா எனக்குப் பிடிக்கல”
சட்டென ,”ஏன்?” என்ற ஒற்றைக் கேள்வியைக் கேட்டுவிட்டு அங்கேயே நிற்கிறாய்.

“உனக்கு எது அழகா இருக்கும்னு நான் யோசிக்கலடா,
ஏன்னா எல்லாத்திலயும் நீ அழகாதான் இருக்கப் போற…
புடவை கட்டினா எத்தன எடத்துல அது உன்ன இறுக்கும், நிமிஷத்துக்கு ஒரு முறை அத நீயும் சரி பண்ணனுமில்ல…
பொதுவாவே அதனாலதான் எனக்குப் புடவையப் பிடிக்காது…
சுடிதார்னா இவ்வளவு பிரச்சினையில்லல்ல…
அதான் அப்படி சொல்லிட்டேன்… மன்னிச்சுக்கோ!”

எல்லோரும் காருக்குள் ஏறப் போக, உன் அம்மாவிடம் இருந்து சாவியை வாங்கிக்கொண்டு வீட்டுக்குள் ஓடியவள்,
ஒரு பச்சை சுடிதாரில் திரும்பி வருகிறாய்.
எதுவும் பேசாமல் காரில் ஏறி அமர்கிறோம்.
எனக்கும் உனக்கும் இடையில் அமர்கிறாள் உன் தங்கை.

பேச்சுப் பிரச்சினையாகும்போது எழுத்து கை கொடுக்குமென மண்டைக்கு உறைக்கிறது.
உன் தங்கையின் உள்ளங்கையை எடுத்து அதில் எழுதுகிறேன் “sorry” என்று.
என்ன செய்ய வேண்டும் என புரிந்து கொண்டவள் அதை உன்னிடம் காட்டுகிறாள்.
Sorry க்கு முன் I hate என எழுதி விட்டு அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டாய்.
பிறகு திரும்பவும் அவள் கையை இழுத்து sorry யை அடித்து விட்டு saree என எழுதுகிறாய்.

நான் I -ஐ அடித்து விட்டு why do you என எழுதுகிறேன்.
நீ why do வை அடித்து விட்டு because என எழுதுகிறாய்.
எல்லாவற்றையும் அழித்து விட்டு I am happy when u r comfortable…that’s why I said so..
என எழுதுகிறேன் நான்.
Happy-ஐயும் comfortable-ஐயும் இடம் மாற்றிப் போட்டு விட்டு said-ஐ அடித்து விட்டு did போடுகிறாய் நீ.
இப்படி அடித்துத் திருத்தி எழுதி முடித்ததில் தீர்ந்து போயின நம் ஊடலும், உன் தங்கையின் உள்ளங்கையில் இடமும்.

அதற்கு மேல் அவள் கையைத் தர மறுக்க, நீ உன் வலது கையை நீட்டினாய்.
உன் விரல்களை மெல்லப் பிடித்துக்கொண்டு ஒவ்வொரு விரலிலும் உன் பெயரின் ஒவ்வொரு எழுத்தையும் எழுதுகிறேன்.
ஒவ்வொரு எழுத்துக்கும் உன் கைவிரல்கள் நெளிவதும், உன் உள்ளங்கை நழுவுவதுமாய் இருக்கப் போராடிதான் எழுதி முடித்தேன்.
விரல்களுக்கு முத்தமிட்டாய். ் உயிருக்குள் எதிரொலித்தது.

என் உள்ளங்கையில் நீ உதடு வரைய ஆரம்பிக்க, அதுவரை பொறுத்துக் கொண்டிருந்த உன் தங்கை “அப்பா” என அலறி விட்டாள்.
“என்னம்மா?” - உன் அப்பாவின் குரல்.
“இங்க பின்னாடி ரொம்ப சூடா இருக்குப்பா, நான் முன்னாடி வர்றேன்”
“ஊர் கிட்ட வந்துடுச்சு, கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ”
நாம் பொறுத்துக் கொள்கிறோம்.
நீ உன் தங்கையைக் கிள்ள அவள் மறுபடி கத்துகிறாள் “ அப்பா ”
“நீ இப்ப அடி வாங்கப் போற”
“அடச்சே, எங்க வீட்ல எல்லாருமே லூசுங்க” அலுத்துக் கொள்கிறாள் உன் தங்கை.

ஊர் வந்து சேர்கிறோம்.
நீங்கள் எல்லோரும் கோவிலில் இருக்க ஒரு மரத்தடியில் காத்திருக்கிறேன் நான்.
என்னிடம் வந்த உன் தங்கை,
“ ஏன் மாமா! உங்களுக்குக் கொஞ்சம் கூட அறிவில்லையா?
அந்தப் புடவைய எங்கக்காப் பிறந்த நாளுக்காக எடுத்தது!
அதுவும் உங்களுக்குப் பிடிச்ச பச்சைக் கலர் தான் வேணும்னு தேடிப் பிடிச்சு எடுத்தா!
நீங்க பாட்டுக்குப் பிடிக்கலன்னு சாதரணமா சொல்லிட்டீங்களே!”

அப்போது அங்கு வருகிற நீ அவளை அதட்டி அனுப்புகிறாய்.
உன்னை நேராய்ப் பார்க்காமல் நிற்கிறேன் நான்.

“ஹலோ சார், என்ன சோகமாயிட்டீங்க?”
“இல்ல… அது உன் பிறந்த நாளுக்கு எடுத்ததுனு ஏன் சொல்லல? உனக்குப் பிடிச்சுதான எடுத்த? அப்புறம் ஏன் சுடிதாருக்கு மாறின?”

“ஹலோ நீங்க மட்டும் என்ன? உங்களுக்கு பிடிச்சுதான ஒரு வருஷமா முடி வளர்த்திருந்தீங்க!
நான் அத நல்லால்லனு சொன்னவுடனே எதுக்கு வெட்டினீங்க?”
“அது….நானே தான் வெட்டனும்னு நெனச்சேன்… “

“சமாளிச்சது போதும்….இந்த மாதிரி நமக்குப் பிடிச்ச சின்ன சின்ன விஷயத்துல விட்டுக் கொடுக்கிறது ஒன்னும் தப்பில்ல….
சொல்லப் போனா இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்கள்ல தான் சந்தோஷமே இருக்கு..”
“அப்புறம்…மேடம்”

“அதுக்காக உனக்குப் பிடிச்ச எல்லாமே நான் பண்ணுவேன்னு எதிர்பார்க்காத…
உனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லங்கறதுக்காக நான் சாமி கும்பிடாம இருக்க முடியாது”
“நான் அப்படி எதுவும் சொல்லவேயில்லையே”

“……..”
“சரி அட்வைஸ் பண்ணதெல்லாம் போதும், உன்னோடப் பிறந்த நாள் எப்போன்னே நீ சொல்லலையே!”

“அடப்பாவி, அதுவே தெரியாதா… என்னோட ஜாதகத்துல தான் அது இருக்குமே.. பார்க்கலையா நீ”
“ஜாதகமெல்லாம் அப்பா, அம்மாவுக்காக தான், சரி நீ சொல்லு..எப்போ உன் பிறந்த நாள்?”

“அடுத்த வாரம்…புதன் கிழமை ”
“அடுத்த வாரமா?”

“ஆமா..அதுக்கு அடுத்த வாரம் உனக்கு கல்யாணம்…என்னதான் கல்யாணம் பண்ணிக்கப் போற…
அதாவது தெரியுமா? இல்ல அதுவும் தெரியாதா?”
“…….”

“நான் பேசிட்டே இருக்கேன்…நீ எதுவும் சொல்லாம இருக்க?”
“உனக்கு என்னப் பிறந்த நாள் பரிசு தர்றதுனு யோசிச்சுட்டு இருக்கேன்”

“என்னப் பெருசா தரப் போற…..காசுக்கு செலவில்லாம ஒரு கவிதை எழுதித் தரப்போற…அவ்வளவுதான”
“அவ்வளவு சின்னப் பரிசு கொடுத்தா அப்புறம், காதல் என்னக் கோவிச்சுக்காதா?
உன்னோட ஆயுசுக்கும் நீ மறக்காத மாதிரி.
இதுவரைக்கும் உலகத்தில எந்தக் காதலனும் தன்னோடக் காதலிக்குக் கொடுக்காதப் பரிசு ஒன்னுக் கொடுக்கப் போறேன்”

“டேய் சஸ்பென்ஸ் வைக்காம சொல்லுடா…ப்ளீஸ்”
“என்னப் பரிசுனு நாளைக்கு சொல்றேன், முடிஞ்சா நீயேக் கண்டுபிடி பார்க்கலாம்”

“சரி, ஏதாவது க்ளூ கொடேன்”
“அது ஒரு பொருள் கிடையாது…அவ்வளவுதான் சொல்ல முடியும்”

திருவிழா முடிந்து திரும்பிக் கொண்டிருக்கிறோம்.
காலையில் கிறுக்கியிருந்தக் கையை சுத்தமாகத் கழுவியிருந்த உன் தங்கை நம்மிடம் ஆளுக்கொரு கையை நீட்டுகிறாள்.
இருவருமே ஆளுக்கொரு ஜோடி உதடுகளை வரைகிறோம்.
வரையப்பட்ட இரண்டு ஜோடி உதடுகளையும் ஒட்ட வைத்து விட்டு நம்மைப் பார்த்து சிரிக்கிறாள் உன் தங்கை.
உனக்கந்த “இச்” சத்தம் கேட்டதா என்ன?

அடுத்தப் பகுதி

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Monday, July 02, 2007

சாயாமல் நடக்கிறேன்

துயரங்களால் துவண்டு கிடக்கிறேன்.
சாய்ந்து கொள்ள ஒரு தோள் நோக்கி,
என் தேடல் தொடங்குகிறது.

அம்மா வருகிறாள்.
அவளுக்கே இதயம் பலவீனம்.
சாய்ந்து கொள்ள மனமில்லாமல் நடக்கிறேன்.

நண்பன் வருகிறான்.
மணமான மகிழ்ச்சியோடு.
சாயாமல் நடக்கிறேன்.

காதலி வருகிறாள்.
கையில் திருமண அழைப்பிதழோடு.
விழுந்து விடாமல் நடக்கிறேன்.

வழக்கம்போல
தூரத்தில் எனக்கானத் தோள்களோடு
காத்துக் கொண்டிருக்கிறது
தனிமை.

(முந்தைய பதிவின் தாக்கத்தில்)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.