Monday, July 31, 2006

என்னுடையக் குழந்தை!

அந்த ஆண்டு மழைக்காலத்தின் ஒரு மாலைவேளையில்,
மலைப் பாதையொன்றில் நான் போய்க் கொண்டிருக்கிறேன்.

விழிகளை மூடி மழையை செவிக்குள் சேமித்தவாறு செல்கிறேன்.
மழையையும் மீறி மனசைத் தொடுகிறது ஒரு மழலைக் குரல்.

பிஞ்சுக் கை ஒன்று மெல்ல என் பாதம் தொடுகிறது.
குனிந்து பார்த்தால் காலடியில் அழகானதொரு குழந்தை.

தூக்கலாமா என நான் யோசித்துக் கொண்டிருக்கும்போதே,
என் கால்களைப் பற்றி என்னை நோக்கிக் கை நீட்டுகிறது.

மூளை யோசிப்பதற்கு முன்னே மனதைத் தூண்டி,
வசீகரிப்பதில் குழந்தைக்கு நிகர் குழந்தைதான்!

குழந்தைக்கு என்னைப் பிடித்துப் போனதோ…
எனக்குக் குழந்தையைப் பிடித்ததோத் தெரியவில்லை.
ஆனால் அன்று முதல் நாங்கள் ஒன்றாகவேத் திரிகிறோம்.

மொழியுமில்லாத மௌனமுமில்லாத அதன் மழலைக் குரல் எதேதோ சொல்கிறது!
அதன் குறும்பும் சிரிப்பும் தவிப்பும் என்னைக் கொல்லாமல் கொல்கிறது!

என் கவிதைகளைத் தின்று நன்றாய் வளர்கிறது குழந்தை!
வளர வளர அதன் சுமை என்னை முழுதாய் அழுத்துகிறது!

அன்றென் பாதையில் குழந்தையைத் தவழ விட்டுப் போனவள் யாரோ?
குழந்தையைக் கொஞ்சியபடி அவளைத் தேடியலைகிறேன் நான்...

நம்
முதல் குழந்தைக்கு
என்னப் பெயர்
சூட்டலாமெனக் கேட்கிறாய்!
அடிப்பாவி!
நமக்கு(ள்) முதலில் பிறந்தது
காதல் குழந்தைதானே?


( சொல்ல மறந்து விட்டேனே!
உருவமில்லாத அந்தக் குழந்தைக்கு நான் வைத்த பெயர் – காதல்! )

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ!

Friday, July 28, 2006

என்றேனும் ஒருநாள்...

ஒவ்வொரு நாள்
காலையிலும்
உனக்கு யார்
வணக்கம் சொல்வதென
சண்டை
ஆரம்பித்து விடுகிறது!

உனக்காக
நான் எழுதி,
சேமித்து வைத்திருக்கும்
என் கவிதைகளுக்கிடையே!

சண்டையிடும்
கவிதைகளுக்குள்
உன்னைப்போல
எளிமையும், அழகுமான
ஒன்றை எடுத்து உனக்கு
அனுப்பி வைக்கிறேன் தினமும்!

இன்று காலையும் இப்படித்தான்
அடம்பிடித்த அத்தனையையும் ஒதுக்கி விட்டு
இந்தக் கவிதையைத் தேர்ந்தெடுத்தேன் உனக்கனுப்ப!


நம்
மகிழ்ச்சியையும்
துயரத்தையும்
பகிர்ந்து கொள்ளலாம்
என்கிறாய்!
வேண்டாமடி!
என் மகிழ்ச்சியையும்
உன் துயரத்தையும்
பரிமாறிக் கொள்வோம்!


ஆனால்,
ஏனோ அனுப்பப்படாமல்
என் மின்மடலிலேயேத்
தேங்கிக்கிடக்கிறது…
உன்னிடம் சொல்லப்படாமல்
மனதுக்குள் தேங்கிக்கிடக்கும்
என் காதலைப் போல…

கவிதைகளிடம் இருந்து என்னைக் காப்பாற்று!
அல்லது காதலோடு என் கைப் பற்று!

இரண்டில் ஒன்று செய்!

இன்றே அல்ல!

என்றேனும் ஒருநாள்…

ஆனால் அந்த ஒன்று…
இரண்டாவதாகவே இருக்கட்டும்!

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Thursday, July 27, 2006

ஒரு காதல் பயணம் - 5

( முன்குறிப்பு : இந்தப் பதிவில் உள்ளப் பெயர்கள் அனைத்தும் கற்பனையே! )

நீ வெட்டும் போதெல்லாம்,
உன்னை விட்டுப் பிரிகிற சோகத்தில்
உன் நகம் அழுகிறதே,
உனக்கது கேட்பதில்லையா?


அடுத்த நாள், உன் குடும்பத்துக்கும், என் குடும்பத்துக்கும் பொதுவான நண்பர் ஒருவர் வீட்டு நிகழ்ச்சியில் எதிர்பார்த்தே சந்திக்கிறோம்.
பச்சைப் பட்டு சுடிதாரில், எல்லோருக்கும் வரம் கொடுக்கும் தேவதையாக உலா வருகிறாய்.
என்னைப் பார்த்ததும், யாரும் உன்னைப் பார்க்கிறார்களா? என சுற்றியும் பார்க்கிறாய்.

பின் மெல்ல அருகில் வந்து “இந்த ட்ரெஸ்ல நான் எப்படி இருக்கேன்?” எனக் கேட்கிறாய்.
“அப்படியே, மதுரை மீனாட்சி அம்மன் மாதிரியே இருக்க,
என்ன தலைல கிளிக்குப் பதிலா ரோஜா இருக்கு! அவ்வளவுதான்” என்கிறேன்.
“ஆஹா…எந்த ஊர்ல மீனாட்சி அம்மன் சுடிதார் போடுதாம்?” சிரித்துக் கொண்டே கேட்கிறாய்.
நான், “நம்மூர்ல மட்டும் தானாம்…. எல்லாரும் பேசிக்கிறாங்க” என்று சிரிக்காமல் சொல்கிறேன்.

“ம்…ஐஸ் வைத்தது போதும்”
“ஏன் உனக்கு ஐஸ் வைத்தால் என்னாகும்?”
“எனக்கு தான் ஜலதோஷம் பிடிக்கும்!”
“அடப் பைத்தியக்காரி! உன் குளிர்ச்சி தாங்காமல் ஐஸுக்கு தான் ஜலதோஷம் பிடிக்கும்!”
“ஹச்” எனத் தும்மி விட்டு சிரிக்கிறாய்.

“எனக்கேத் தெரியாமல் உனக்கு நான் ஏதாவது சொக்குப் பொடி போட்டுட்டேனா?” என சந்தேகமாய்க் கேட்கிறாய்.
“சொக்குப் பொடியெல்லாம் சாதாரணப் பெண்களின் வசிய மருந்து!
உன்னை மாதிரி அம்மன்கள் எல்லாம் அப்பப்போ வந்து இப்படி தரிசனம் தந்தாலே போதும்!
நாங்களாகவே சொக்கிப் போயிடுவோம்” என சொக்குகிறேன் நான்.

“’நாங்களாகவே’ன்னா வேற எந்த அம்மன்கிட்ட வேற யாராவது சொக்கிப் போயிருக்காங்களா என்ன?”
“அந்த மதுரை மீனாட்சிகிட்ட சொக்கிப் போனதுனாலதான் அழகருக்கே ‘சொக்கன்’ன்னு ஒரு பேரு வச்சாங்க?”
“ச்சூ… சாமிய அப்படியெல்லாம் கிண்டல் பண்ணக் கூடாது!”
“சாமியேக் காதலர்களுக்கு மட்டும் அதில் விதிவிலக்குக் கொடுத்திருப்பது உனக்குத் தெரியுமா?”

“உங்கிட்டப் பதில் பேச முடியாதுப்பா! பாரு, நீ பேசறதக் கேட்டுட்டு
இருந்துட்டு நான் கேட்க வந்ததையே மறந்துட்டேன்!”
“நீ என்னக் கேட்கப் போற?”
“இங்க வேணாம், கொஞ்சம் என் பின்னாடி வா”, என்று சொல்லி விட்டு
அந்த மொட்டை மாடிக்கு என்னை இழுத்துச் செல்கிறாய்.
சாய்ந்து வளர்ந்த அந்த தென்னை மர நிழலில், சுவர்த் திட்டின் மீது அமருகிறோம்.

“நேத்து எங்கிட்ட எனக்கு என்னவெல்லாம் பிடிக்கும்னு நீ கேட்டப்ப நான் எல்லாமே சொன்னேன் இல்ல!
அது மாதிரி நான் இப்போ கேட்கப் போற கேள்விக்கு நீயும் கண்டிப்பா பதில் சொல்லனும்!” பெரிதாய் ஒரு பீடிகை போட்டு விட்டுத் தொடர்கிறாய், “ எல்லாருக்குமே தனக்கு வரப்போற மனைவி/கணவன் கிட்ட சில எதிர் பார்ப்புகள் இருக்கும் தான?, நீ எதிர்பார்த்த மாதிரி நான் இருக்கேனான்னு எனக்குத் தெரியனும்!”

“இவ்வளவு தானா! நான் என்னமோன்னு நெனச்சிட்டேன்.
நான் எந்த விஷயத்துலேயும் பெரிசா எதையும் எதிர்பார்க்கிறதில்ல…”
நான் சொல்லி முடிப்பதற்குள், கோபப்படுகிறாய்,
“ இல்ல நீ சமாளிக்கப் பார்க்கிற, ப்ளீஸ் எனக்குக் கஷ்டமா இருக்கு, சொல்லுப்பா” உன் குரல் மாறுகிறது.

“நான் உண்மையத்தான் சொல்றேன்! எல்லாரும் வரப்போறவ எப்படி இருக்கனும்னு கனவு கண்ட வயசுல,
வரப்போறவகிட்ட நான் எப்படி இருக்கனும்னு தான் என்னால யோசிக்க முடிஞ்சது.
அதிகபட்சமா நான் எதிர்பார்த்தது ரெண்டே ரெண்டு விஷயம்தான்!”
“என்ன?” கண்களில் ஆர்வம் தெரியக் கேட்கிறாய் நீ.

“எனக்கு ஒரு அண்ணனும், அக்காவும் இருக்காங்க. அந்தப் பாசத்த அனுபவிச்சாச்சு.
அதனால எனக்கு வரப்போற மனைவிக்கு ஒரு தம்பியும், தங்கையும் இருக்கனும்னு எதிர்பார்த்தேன்.
இப்போ எனக்கு அதுல பாதி நிறைவேறிடுச்சு!”
“பாதி இல்ல ரெண்டு மடங்கு நிறைவேறிடுச்சுனு சொல்லு,
எந்தங்கச்சி ஒருத்தியே ரெண்டு பொண்ணு, ரெண்டு பையனுக்கு சமம்…
சரி அந்த இன்னொன்னு என்ன?”

“என்னோட மாமனாருக்கும் என்னமாதிரி “சி” –யில தான் பேர் ஆரம்பிக்கனும்னு எதிர் பார்த்தேன்.
ஆனா உங்க அப்பாப் பேரு சுந்தரமாப் போச்சு!”
“எனக்கொன்னும் புரியல! தெளிவா சொல்லுங்க!”

“இல்லமா, இவ்வளவு நாளா நீ, சு.இளவரசின்னு தான் கையெழுத்துப் போட்டுட்டு இருந்திருப்ப…..
கல்யாணத்துக்கப்புறமா முதல் தடவ சி.இளவரசி னு கையெழுத்துப் போடறப்போ ,
உங்கப்பாகிட்ட இருந்து விலகி வந்த மாதிரி உனக்குத் தோணாதா?
அதனாலதான் அவர் பேரும் ஒரு சின்னசாமியாவோ, சிதம்பரமாவோ இருந்திருக்கக் கூடாதான்னு யோசிக்கிறேன்.”
கொஞ்ச நேரம் கலங்கியக் கண்களோடு என்னையேப் பார்த்திருக்கிறாய்.

பின், என் கையை எடுத்து உன் மடியில் வைத்துக் கொண்டு சொல்கிறாய்,
“ நானும் உன்ன மாதிரி தமிழ்ல கையெழுத்துப் போடுவேன்னு நெனச்சியா?
இதுவரைக்கும் S.Ilavarasi னு தான் கையெழுத்துப்போட்டேன்….இனிமேலும் S.Ilavarasi னுதானே போடப்போறேன்,
எனக்கொன்னும் வருத்தமில்ல – நீ சொன்ன மாதிரி எங்கப்பா பேர் Chinnasamy யாவோ, Chidambaram மாவோ இருதிருந்தாதான் C.Ilavarasi னு மாத்திப் போட வேண்டியிருந்திருக்கும்.” என சொல்லி விட்டு சிரிக்கிறாய்.

பிறகும் நீயேத் தொடர்கிறாய்,“ஆனா நீ சொன்னதுக்கப்புறம் எனக்கொரு ஆசை,
என் பேரும் “ம”-வுல ஆரம்பிக்கிற மாதிரி இருந்தா,
நானும் உன்னோட initial-ல்ல இருந்திருப்பேன் இல்ல?” ஏக்கமாய்க் கேட்கிறாய்.
“அதுக்கென்ன, எங்கப்பாவுக்கு எதாவது இனியன், இளங்குமரன் அப்பிடின்னு பேர மாத்திட்டாப் போச்சு”

“உனக்குக் கொழுப்புடா!” என்று சொல்லிவிட்டு எழப் பார்க்கிறாய்.
“எங்க ஓடப் பார்க்கிற!” உன் கையைப் பிடித்து இழுத்து நிறுத்தி,
“எங்கிட்ட மட்டும் நைஸாப் பேசி விஷயத்தத் தெரிஞ்சிக்கிட்ட இல்ல,
நீ எங்கிட்ட என்னல்லாம் எதிர்பார்த்தனு சொல்லாமயேப் போறியே!” என்கிறேன் நான்.

“ரொம்பக் கவலைப் படாத! நான் எதிர்பார்த்தது எல்லாம் நூறு மடங்காவே உங்கிட்ட இருக்கு!”
“அதுதான் என்னனு சொல்லேன்!” விடாப்பிடியாய்க் கேட்கிறேன் நான்.
“என் கையை விடு சொல்றேன்”
மெல்ல உன் கையை நீயாகவே இழுத்துக் கொள்கிறாய்.
“எனக்கு வரப்போறவன் எப்பவும் என்ன சிரிக்க வச்சிட்டே இருக்கனும்,
அப்பப்ப என்ன வெட்கப் படவைக்கனும் – இது ரெண்டும்தான் நான் எதிர்ப்பார்த்தது!”
சொல்லிவிட்டு என் பதிலுக்குக் காத்திராமல் ஓடிப் போனாய்.
ஆனால் அதை நீ சொல்லியபோது, உன் முகம் வெட்கத்தில் சிவந்ததைப் பார்த்து அந்தத் தென்னை மரத்தின் இளநீரெல்லாம்,
செவ்விளநீராய் மாறிப் போனது உனக்குத் தெரியுமா?

(காதல் பயணம் தொடரும்...)

அடுத்தப் பகுதி

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Wednesday, July 26, 2006

யதார்த்தமானது...காதல்!

உனக்காக நான் தவமும் இருக்கவில்லை…
எனக்காக நீ வரமும் தந்துவிடவில்லை…

நாம் ஈருடல் ஓருயிரல்ல!
நம் உடலும் இரண்டுதான்!
உயிரும் இரண்டுதான்!
உணர்வுகளும் அதைப் போலவே!

நம் நான்கு கண்களும்
ஒரேக் கனவைக் காணுவதில்லை!
உன் கண்ணில் உன் கனவுகள்..
என் கண்ணில் என் கனவுகள்..

நான்/நீ நினைப்பதை உ/எ ன்னால்
கண்டு பிடிக்கவும் முடியவில்லை!
மௌனத்தின் அர்த்தம் புரிந்து கொள்ள
நாம் ஒன்றும் ஞானிகளுமல்ல!

நம் ரசனைகளும் ஒன்றாகவே இல்லை!
எனக்குப் பிடித்தது எல்லாமே உனக்குப் பிடிக்கவில்லை!
உனக்குப் பிடித்தது எல்லாமே எனக்கும் பிடிக்கவில்லை!

நிறத்தில் மட்டுமல்ல
கருத்திலும் நாம் ஒரே மாதிரியில்லை!

என்னைப் போல நீ இல்லை!
நிஜமாய்,
என்னைப் போல நீ இல்லவே இல்லை!!

ஆனாலும் உன்னை நான் காதலிக்கிறேன்! …காதலிப்பேன்!

என்னை என் குறைகளோடு சேர்த்தே நேசிப்பவள் நீ !
அதற்காகவே உன்னை அதிகமாய்க் காதலிப்பேனடி….
அதற்காகவே உன்னை அதிகமாய்க் காதலிப்பேன் நான்!

புனிதமாக
வாழ்த்தி வணங்க
நம் காதல் ஒன்றும்
தெய்வீகமானது அல்ல!


இயல்பாக வாழ்ந்து மகிழ,
அது யதார்த்தமானது…
மிக மிக யதார்த்தமானது!

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.