Saturday, December 30, 2006

"பிறந்த நாள் வாழ்த்து!"


உன் பிறந்தநாளன்று மட்டும்,
என் டைரி வெறுமையாய் இருப்பது பார்த்து கோபிக்கிறாய்.
அது டைரியில் குறிக்க வேண்டிய நாளில்லையடி
என் உயிரில் பொறிக்க வேண்டிய நாள்!


உன் பிறந்தநாளன்று முதலாளாய் 12 மணிக்கே
வாழ்த்தவில்லையென சண்டைக்கு வருகிறாய்.
நீ பிறந்த நேரத்தில் வாழ்த்துவதற்காய் நான் காத்திருந்ததை
எப்படி சொல்லிப் புரிய வைப்பது?


ஒருநாளுக்காக ஓராண்டு காத்திருக்க முடியவில்லையடி.
உன் பிறந்தநாளை மாதம்தோறும்…
இல்லையில்லை,நீ பிறந்தகிழமையென்று
வாரம் தோறும் கொண்டாடுவோமா?


நீ பிறந்த மருத்துவஅறைக்கு ராசிகூடிவிட்டதாம்.
அழகுக்குழந்தை பிறக்க அங்குதான்
பிரசவம் பார்க்கவேண்டுமென
அடம்பிடிக்கிறார்களாம் கர்ப்பிணி பெண்கள்.


உன் பெயரில் நடக்கும்
பிறந்தநாள் அர்ச்சனையை ஏற்றுக்கொள்ள
தவம் கிடக்கின்றன…
எல்லாத் தெய்வங்களும்!


பிறக்கும்போது 3 கிலோ இருந்தாயாம்.
பத்து மாதமாய் உன் அம்மாவால்,
3 கிலோ அழகுதான் சேர்க்க முடிந்ததா?


உன் பிறந்த நாளை
தேவதைகள் தினமாய்க் கொண்டாட
தேவதைகளே தீர்மானித்திருப்பது
உனக்குத் தெரியுமா?


மழைக் காலம், கார்காலமெல்லாம்,
எந்த மாதமென்று எனக்குத் தெரியாது…
நீ பிறந்த மாதம் அழகுக்காலம்!


கால எந்திரம் கிடைத்தால் நீ பிறந்தபொழுது,
நான் என்ன செய்து கொண்டிருந்தேன்?
எனப் பார்க்க ஆசை!


பிறந்தநாளை எப்போதும்
ஆங்கிலத் தேதியில் கொண்டாடுகிறாய்…
என்ன பாவம் செய்தது, தமிழ் தேதி?


தன் சாதனைப் பட்டியலில்
உன் பிறப்பை முதன்மையாய்க்
குறித்து வைத்திருப்பான் பிரம்மன்!


பிறந்தநாளுக்கு
எத்தனை ஆடைகள் நீ எடுத்தாலும்
உன் ‘பிறந்தநாள் ஆடை’? போல் வருமா? ;)


ஒருமுறைதான் பிறந்தாய்
உன்னைப் பார்க்கும்
ஒவ்வொரு முறையும் பிறக்கிறேன்!


நீ பிறந்த பிறகுதான்
உன் அப்பாவுக்கே பெயர் வைத்தார்களா?
அழகப்பன் என்று!


உன் பிறந்த நாளன்று
உன்னை வாழ்த்துவதா?
நீ பிறந்த நாளை வாழ்த்துவதா?


ஒவ்வொரு பிறந்த நாளிலும்
வயதோடு, அழகையும்
ஏற்றிக் கொள்கிறாய்!


உன் பிறப்பு
உன் தாய்க்குத் தாய்மையையும்,
எனக்கு வாழ்வையும் தந்தது!


நீ பிறந்தாய்…
பூமிக்கு இரண்டாம் நிலவு
கண்டுபிடிக்கப் பட்டது!


உன் பிறப்பில் தான்
கண்டுகொண்டேன்…
கவிதைக்கும் உயிருண்டென!


என் காதல் தேசத்தில்
உன் பிறந்த நாள்
தேசிய விடுமுறை.


உன் தாய்க்குப் பிறந்தாய்.
என் தாய்க்குப் பின் என் தாய்.


அழுகையோடு பிறந்தாயா?
அழகோடு பிறந்தாயா?


“.....”


( உன் வயதுக்கு ஒரு கவிதை கேட்டாய். ஒன்றே ஒன்று குறைகிறதடி. சரி உன் பெயரெழுதி நிரப்பிக்கொள்!)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Friday, December 22, 2006

நா செஞ்ச குத்தமென்ன?

கல்மனசு உனக்குன்னு கவிதையில உளிசெஞ்சு,
கண்ணாடி செலயப் போல பக்குவமா நா செதுக்க…
கல்லுக்குள்ள உம்மனசோ பூக்காதப் பூப்போல!
தானாப் பூக்குமுன்னு நாம்பாத்துபாத்து நீரூத்த,
பூக்கும்போதே வாடிப்போச்சே, நா செஞ்ச குத்தமென்ன?

நெஞ்சுக்குள்ள ஒன்னவச்சா பாக்கவு முடியாதுன்னு
கண்ணுக்குள்ள ஒன்னவச்சி கண்ணாடிலப் பாத்துக்கிட்டேன்…
நாங்கண்ணொறங்கும் நேரத்துல இமையாலப் போத்திவிட்டு
ஒன்னையுந்தான் தூங்கவச்சேன், ஒன்னாவேக் கனாக்காண!
காணும்போதே கலஞ்சுபோச்சே, நா செஞ்ச குத்தமென்ன?

ஒன்னுமில்லாத என்னெஞ்சும் ஒன்னப்பத்தி நெனச்சதால
பூத்துத்தான் குலுங்குச்சே பூக்காடா மணந்துச்சே
பூவாசம் அத்தனையிலும் உன்வாசம் தேடித்தான
அலையா நானும் அலஞ்சுதான் திரியயில
காடெல்லாம் கருகிப்போச்சே, நா செஞ்ச குத்தமென்ன?

யெ(ன்)உசுருக்கொரு உருவமிருந்தா ஒன்னப்போல இருக்குமின்னு
மங்காத ஒ(ன்) உருவத்த மனசுக்குள்ள மடிச்சுவச்சேன்
நீயே போனபின்ன மனசெதுக்கு? உசுரெதுக்கு?
மூச்சையும் நிறுத்திப் பாத்தா மூச்சுக்குள்ளும் நீயிருக்க,
உசுருந்தான் போகலையே, நா செஞ்ச குத்தமென்ன?

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

( கண்ணீரில் குளித்தக் கவிதை இது!
காதலில் குளித்த கவிதைகள் -> இங்கே! )

Wednesday, December 20, 2006

ஒரு காதல் பயணம் - 7 (தேன்கூடு போட்டிக்கும்)

முதல் பாகத்திலிருந்து வாசிக்க இடுகையின் தலைப்பின் மீது சொடுக்கவும்.
"காதல் குறும்பு" என்ற கருத்தில் இப்பாகம் மட்டும் தேன்கூடு போட்டிக்கு இணைக்கப்பட்டுள்ளது.

நான் உன்னையும் , நீ என்னையும்,
தேடிக் கொண்டிருப்பதால்,
நம்மை இணைக்க
முடியாமல் தடுமாறுகிறது
நம் காதல்!


காதலுக்கென்றே படைக்கப்பட்ட மாலைப்பொழுதொன்றில்,
யாருமற்ற அந்த வாய்க்காலின் படித்துறையில் நாமிருவர் மட்டுமே அமர்ந்திருக்கிறோம்.
குளிப்பவர், துவைப்பவர் எவரும் இன்றி அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிற வாய்க்கால் நீர்,
உள்ளே நீந்திக் கொண்டிருக்கும் மீன்களெல்லாம் தெளிவாகத் தெரியும்படி தெளிந்து இருக்கிறது.

“எல்லா மீனும் எவ்வளவு சந்தோசமா நீந்திக்கிட்டு இருக்கில்ல?” என்று மெதுவாக நீ பேச்செடுக்கும் போது,
ஒரு மீன் மட்டும் நீர்ப்பரப்புக்கு மேல் வருவதும் பின் உள் செல்வதுமாய் இருக்கிறது.
அந்த மீனைக் காட்டி, என்னிடம் கேட்கிறாய்,”அது மட்டும் ஏன் மேலே வந்து, வந்து போகுது?”
“அத சொல்றதுக்கு முன்னாடி, அது ஆண் மீனா, இல்லப் பெண் மீனான்னு கண்டுபிடி” - இது நான்.
“அது எப்படிக் கண்டு பிடிக்கிறது? எனக்கு தெரியாதே!” - உதடு சுழிக்கிறாய் நீ.
“ஆனா, எனக்குத் தெரியும்! அது ஆண் மீன் தான்”
“எப்படிடாக் கண்டு பிடிச்ச?”
“வாய்க்கால்ல இருக்கும் பெண் மீன்கள் எல்லாத்த விடவும் இந்த ரெண்டு மீனும் அழகா இருக்கேன்னு,
மேல வந்து, வந்து உன்னோட ரெண்டு கண்ணையும் பார்த்துக் கண்ணடிச்சுட்டுப் போகுதே!
அப்பவேத் தெரியலையா அது ஆண் மீனாதான் இருக்கும்னு?”
வள்ளுவர் காலத்து உவமையைத் தான் சொன்னேன், ஆனாலும் வெட்கப்பட்டாய் நீ.

“இன்னொரு முற அது மேல வரட்டும், அதப் பிடிச்சுப் பொரிச்சுட வேண்டியதுதான்!” கோபப்பட்டேன் நான்.
“அப்போ நீ அசைவமா?” என சந்தேகப் படுகிறாய்.
“அப்போ, உனக்கு மீன் கறிப் பிடிக்காதா?” - என் பங்குக்கு நானும்!
“மீன் கறி பிடிக்காது, ஆனா மீன் கடி பிடிக்கும்!”
“அதென்ன மீன் கடி?”

“இப்போ வாய்க்காலுக்குள்ள எறங்கிக் கொஞ்ச நேரம் ஆடாம,
அசையாம அப்படியே நின்னோம்னா, சின்ன சின்ன மீனெல்லாம் வந்து நம்மக் கால வலிக்காமக் கடிக்க ஆரம்பிக்கும்,
அது எவ்வளவு சொகமா இருக்கும் தெரியுமா?”
என்று சொல்லிக் கொண்டே படித்துறையின் கடைசிப் படிக்கட்டுக்குப் போய்விட்டாய்.
பாவாடையை முழங்கால் வரை சுருட்டிக் கொண்டவள், என்னை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு,
உடனே வாய்க்காலுக்குள் இறங்கினாய்.

நீ சொன்னது போலவே கொஞ்ச நேரத்தில் உன் காலைக் கடிக்க ஓடி வந்தன மீன்கள் எல்லாம்.
அந்த சுகத்தில், பால் கொடுக்கும் தாயைப்போல் பரவசமாய் உன் முகம்.
உன்னைக் கடித்துக் கொண்டிருக்கும் மீன்களையேப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் நான்.

“என்னடா அப்படிப் பார்க்கற?” என முறைக்கிறாய்!
“இல்ல, உன்னக் கடிக்கிறதெல்லாம் ஆண் மீனா, இல்லப் பெண் மீனான்னுப் பார்த்துட்டு இருக்கேன்”
“திரும்பவும் ஆரம்பிச்சுட்டியா, உன்னோட ஆராய்ச்சிய! சரி அதையும் சொல்லேன் கேட்போம்!”

“மீன் கடிக்கிறது உனக்கு வலிக்குதா? இல்லையா?”
“வலிக்கல, சுகமாத்தான் இருக்கு!”
“அப்படின்னாக் கடிக்கிறதெல்லாம் பெண் மீனாதான் இருக்கும்”
எதையோ நினைத்து சிரித்துக் கொள்கிறாய் நீ.

“நீயும் எறங்கி நில்லேன்” என என்னையும் அழைக்கிறாய்.
வேட்டியை மடித்து விட்டு வாய்க்காலுக்குள் இறங்கிய வேகத்தில் ஏறுகிறேன் நான்.
“ஏன் என்னாச்சு?”
“மீனெல்லாம் இப்படி வலிக்கிற மாதிரிக் கடிக்குது! நீ என்னமோ சுகமா இருக்குன்னு சொல்ற?”
சிரித்துக் கொண்டே,“அப்போ உங்களக் கடிச்ச மீனெல்லாம் ஒருவேளை ஆம்பள மீனோ?”
“ஆமாமா, எல்லா ஆம்பள மீனும் சேர்ந்து, உனக்குப் போய் இப்படி ஒரு தேவதையாடான்னுப் பொறாமையில் கடிச்சிருக்கும்!”
“சரி, சரி போதும்” என சொல்லிக்கொண்டே மேலே வருகிறாய்.

“மீனப் பத்தி இவ்வளவு ஆராய்ச்சி பண்றியே, என்னை ஏன் ஒரு ஆண் மீனும் கடிக்கல?”
“உன்னை யார் முதல்ல வந்து தொடுறதுன்னு சண்டை போடவே, அதுக்கெல்லாம் நேரம் சரியாப் போயிருக்கும்!”
ஈரப் பாவாடையைப் பிழிந்து கொண்டே “அப்போ, உன்ன ஏன் ஒரு பெண் மீனும் தொட வரல?” எனக் கேட்கிறாய் நீ.
“இதென்னக் கேள்வி? கோவிலுக்குப் போனா நீ அம்மனக் கும்பிடுவியா? பூசாரியக் கும்பிடுவியா?”

“சரிங்க பூசாரி, இப்போ அம்மன் வீட்டுக்குக் கெளம்பப் போகுது, நாளைக்குப் பார்க்கலாம்” என ஆயத்தமாகிறாய் நீ.
“கல்யாணத்துக்கப்புறம், இந்த மீன் கடிக்காக நீ வாய்க்காலுக்கெல்லாம் வரவேண்டியதில்ல,
அதெல்லாம் வீட்டிலேயே வச்சுக்கலாம்” என்கிறேன் நான்.

“ச்சீப் போடா…” என்று வெட்கத்தில் முகத்தைத் திருப்பிக்கொண்டு செல்கிறாய் நீ.

“அட! வீட்டிலேயே கொஞ்சம் மீன் வளர்க்கலாம்னு சொல்ல வந்தேன்” என விளக்கிவிட்டு,
உன்னிடம் முதல் “ச்சீப் போடா” வாங்கிய சந்தோஷத்தில் நானும் கிளம்புகிறேன்.

அப்போது வாய்க்காலில், என்னைக் கடித்த மீன்களெல்லாம்,
உன்னைக் கடித்த மீன்களைத் துரத்திக் கொண்டு நீந்துகின்றன.

காதல் குறும்பு எங்கும் இருக்கிறது!

அடுத்தப் பகுதி

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Sunday, December 03, 2006

அழுது வழியும் கவிதை

நான் - வானம்…
நீ - நிலம்…
என் காதல் - மழை!
குடை விரித்தது யார்?

--------------------------------------------------------

முன்பு
உன்னையேத் தாங்கியபோது
காற்றைப் போல லேசாக…
பிரிந்த பின்னோ
உன் நினைவைத் தாங்கவே
பூமியைப் போல பாரமாக…
என் இதயம்!

--------------------------------------------------------

ஒரு விழி நான்
மறு விழி நீ
சேர்ந்தே கனவு கண்டாலும்
சேரத்தான் முடியவில்லை.
சேர்ந்தே நனைகிறோம்!

--------------------------------------------------------

பிரிந்து விடு என்றாய்.
பிரிய முடியும்.
விட?

--------------------------------------------------------

உனக்கு எழுதி அனுப்பியக் கவிதையெல்லாம்
என்னைப் பார்த்து அழுகிறது.
எழுதியும் உனக்கு அனுப்பாதக் கவிதையோ
என்னைப் பார்த்து சிரிக்கிறது.

--------------------------------------------------------

எப்போதும் என்னைத் தனிமைப் படுத்துகிறாய்.
காதலிக்கும்போது மற்றவரிடமிருந்து
பிரியும்போது என்னிடமிருந்து!

--------------------------------------------------------

காதலியின் சுகம்
காதல் கவிதையில்…
என் காதலின் சோகம்
இந்தக் காயக் கவிதையில்!

--------------------------------------------------------

அழுதுவழியும் இந்தக் கவிதைகளை
நீ ஒதுக்கிவிடுவாய் என்றெனக்குத் தெரியும்.
அழுகிற போது மட்டும் என் கவிதைகள்
அழகாயிருப்பதில்லை.
நீயும்தான்…!