Tuesday, June 27, 2006

கவிதை "ஆறு"

என்னையும் இந்த ஆறு விளையாட்டுக்கு அழைத்த நவீன் பிரகாஷ் க்கு நன்றி! நான் இரசித்த, இரசிக்கும் கதை, கவிதை, இசை, திரைப்படம், மறக்க முடியாத நிகழ்வுகள், மனிதர்கள் என்று எவ்வளவோ எழுதத் தோன்றினாலும் இப்போதைக்கு இந்த ஆறு கவிதைகளை (வாக்கியங்களை மடக்கிப் போட்டு, வியப்புக் குறியெல்லாம் போட்டிருக்கிறேன் – நம்புங்க , கவிதைதான்! ) மட்டும் எழுதி விட்டுப் போகிறேன். பின்னொரு நாளில் தனித் தனிப் பதிவுகளாய் அவற்றைப் பதித்து விட எண்ணம்.

என்னுள் நீ
மெதுவாய்த் தான்
நுழைந்தாய்.
மண்ணுள் நுழையும்
வேரைப் போல,
ஆழமாய்!

முதலில் யார் உனக்கு
வணக்கம் சொல்வதென
தினமும் காலையில் சண்டை
எனக்கும், சூரியனுக்கும்!

"என்னைத்
தொட்டுப் பேசாதே!"
என்று சொல்லிவிட்டு
நீ மட்டும்
என் உள்ளங்கையைக்
கிள்ளுகிறாயே
இது என்னடி நியாயம்?

அதிக நேரம்
கண்ணாடி முன் நிற்காதே!
நீ அதைத்தான் ரசிக்கிறாய்
என நினைத்துக்
கொள்ளப் போகிறது!

நீ வரைந்த கோலம்
அழகு என்கிறார்கள்!
நீ கோலம் வரைவது
அழகு என்கிறேன்!

நீ பிறந்த பிறகுதான்
உன் அப்பாவுக்கேப்
பெயர் வைத்தார்களா?
'அழகப்பன்' என்று!

"ஆறு" பதிய யாரையும் நான் குறிப்பிட்டு அழைக்கவில்லை. இங்கு பின்னூட்டமிடுபவர்கள் யாரேனும் இன்னும் "ஆறு" பதிய வில்லையென்றால் தொடரலாம்.

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Monday, June 26, 2006

கண்களால் காதல் செய்!

நான் :

உன்
விழி பேசியதை
மொழி பெயர்த்தால்
கவிதை என்கிறார்கள்.


இதயத்தில் நிறைந்து
விழி வழியே
வழிகிறது
நம் காதல்!


பார்த்து பார்த்து
செய்த கண்கள் உனக்கு!
அதைப் பார்த்துக்
கொண்டிருப்பதற்காகவே
செய்த கண்கள் எனக்கு!


தினமும்
உன் வருகைக்காகக்
காத்திருக்கின்றன..
பகலில் என் கண்களும்..
இரவில் என் கனவும்..


உனக்குத் தெரியுமா?
நம் கண்களும் கூடக்
காதலிக்கின்றன!
தொட்டுக் கொள்ளாமல்
அவை ஆயிரம்
க(வி)தைகளைப் பேசுவதைப் பார்!
நம்மைப் போல…


திறந்தே இருப்பதால்தான்
என்செவியில் உன்வார்த்தைகள்
ஒலிக்கிறதென்றால்,
இமைகள் மூடிய பின்னும்
என் விழியில் உன் பிம்பம் விழுகிறதே…
அது எப்படி?


என் கண்களுக்கு ஏனிந்தப் பேராசை?
எல்லாக் கணமும் உன் கண்களைப்
பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமாம்!
உன் கண்கள் இமைக்கும் பொழுது மட்டுமே
என் கண்களும் இமைப்பதைப் பார்!

அவள் :

போதும்…போதும்…
கவிதைகள் கொஞ்சம்
ஓய்வெடுக்கட்டும்!
நீ கண்களால் மட்டும்
காதல் செய்!

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

ஒரு காதல் பயணம் - 4

காதல் பயணம் பகுதி ஒன்று இரண்டு மூன்று

உனக்குக் கல் நெஞ்சு என்று
எனக்குத் தெரியுமடி!
அதனால்தான் அதில்
காதல் சிற்பம் வடிக்க
கவிதை உளி கொண்டு
செதுக்குகிறேன் தினமும்!


ஒரு மாலைப்பொழுதில் நீ வரச் சொன்ன அந்த மரத்தடியில் உனக்காகக் காத்திருக்கிறேன்.
காத்திருக்கும் நேரத்தின் அவஸ்தை எல்லாம் பரவசமாக மாறும் அந்த கணத்தில் நீ வருகிறாய்.

நாம் அமர்வதற்காக தனது வேர்களை இருக்கைகளாக்கி இருக்கிறது, அந்த மரம்.
எதிர் எதிரில் அமர்கிறோம் நாம்.
இரு கைகளாலும் அணைக்கிறது மரம்.

எப்போதுமில்லாத என் மௌனத்தில் கலவரமடைந்து, “ம்..சொல்லுங்க” என மௌனக் குளத்தில் வார்த்தைக் கல் வீசுகிறாய்.
“இன்றைக்கு சொல்லப் போவதெல்லாம் நீ தான்; கேட்டுக்கொண்டிருக்கப் போவது மட்டும்தான் நான்” என்கிறேன்.

“நான் என்ன சொல்ல வேண்டும்?” புரியாமல் கேட்கிறாய் நீ.
“உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என நீ வரிசையாய் சொல்ல வேண்டும்; எல்லாவற்றுக்கும் நான் ‘உம்’ கொட்ட வேண்டும்
– இது தான் இன்றைக்கு காதல் நமக்குக் கொடுத்திருக்கிற வீட்டுப்பாடம்” என்கிறேன்.

“எனக்காக நீங்க என்ன வேணா செய்வீங்க இல்ல?”
“முதலில் அந்த “நீங்க”-வில் இருந்து “ங்க”-வை எடுத்துட்டுக் கேள், சொல்றேன்!”
“சரி…சரி…எனக்காக நீ என்ன வேணா செய்வதான?”
“இன்னைக்கு உன்னோட வீட்டுப் பாடத்தத் தவிர மத்தது எல்லாம் செய்வேன்!”
இதை நீயும் எதிர் பார்த்திருப்பாய்; சிரித்து விட்டு ஆரம்பிக்கிறாய்.

“அம்மா மடியில் படுத்துக் கிடக்க…
அப்பா சட்டையைப் போட்டுப் பார்க்க…
தங்கையோடு சண்டை பிடிக்க…”

“ம்”

“அப்புறம்…
ஜன்னலுக்கு வெளியே மழை…கையில் சூடாகத் தேநீர்…
மழை முடிந்த மண்வாசம்…அந்த ஈரக் காற்று…
வானவில்…
இளஞ்சூடான மாலை வெயில்…
அந்தி வானம்…
பௌர்ணமி நிலா…
கூட்டமாய் நட்சத்திரம்…
புதிதாய்ப் பூத்தப் பூ…
இப்படி இயற்கை தரும் எல்லாம்…

அப்புறம்…
தோழிகளோடு மொட்டை மாடி அரட்டை…
சன்னலோர ரயில் பயணம் – கையில் கவிதைப் புத்தகம்…
அதிகாலை உறக்கம்…மெல்லிய சத்தத்தில் சுப்ரபாதம்…
வீட்டில் எப்போதும் இழையும் இளையராஜா…
குழந்தைகளின் கொஞ்சல்…
மலைப் பாதையில் நடை…
மார்கழி மாதக் கோலம்…
எங்க ஊர்த் திருவிழா…
வாய்க்கால் நீச்சல்…
அருவிக் குளியல்…
மரத்தடி ஊஞ்சல்…

இப்படிப் போய்க்கிட்டே இருக்கும்….”

வாய்ப்பாடு ஒப்பிக்கும் பள்ளிக்கூட சிறுமி போல,
மூச்சு விடாமல் சொல்லி முடிக்கிறாய்.

“ஆமாம் உனக்கு என்னப் பிடிக்கும்?”, என்னைப் பார்த்துக் கேட்கிறாய்.
“அதான் நீயே சொல்லிட்டியே!”, மெதுவாக சொல்கிறேன் நான்.

“ஓ! எனக்குப் பிடிச்சதெல்லாம் உனக்கும் பிடிக்குமா?”
“நான் அத சொல்லல…நீ என்னக் கேட்டனு திரும்பவும் கேளு!”

“உனக்கு என்னப் பிடிக்கும்னு கேட்டேன்”
“நானும் அதையேதான் சொல்றேன் – எனக்கு உன்னப் பிடிக்கும்னு”

“இப்படியேப் பேசுனா சீக்கிரமே உனக்கு பைத்தியம் தான் பிடிக்கும்!”
“அது இன்னும் எனக்குப் பிடிக்கலன்னு நினைக்கிறியா?”

“ஐய்யோக் கடவுளே! நான் சீரியஸா கேட்கிறேன், சொல்லு உனக்கு என்னப் பிடிக்கும்?”

“எனக்கு ஒன்னே ஒன்னு தான் பிடிக்கும். என்னோடக் காதலிக்கு பிடிச்சதையெல்லாம்
அவள் வாயாலேயே சொல்ல சொல்லக் கேட்டுக் கொண்டிருக்கப் பிடிக்கும்!”

வெட்கத்தைக் கொஞ்ச நேரம் தள்ளிவைத்துவிட்டு என்னை அப்படியேக் கட்டிக் கொள்கிறாய்,
ஒரு குழந்தையைப் போல.

கரைந்து போகிறேன் நான்.
அந்த மரத்தில் இருந்து கொஞ்சம் பூக்கள் நம்மீது விழுந்ததே - அது இயல்பாய் நடந்தது தானா?

(காதல் பயணம் தொடரும்...)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Friday, June 23, 2006

கவிதைகள் ஏமாற்றுவதில்லை

என் காதலை
உன்னிடம் சொல்ல
நான் யாரைத் தூதனுப்ப?

உன் தோழியை…
உன் மேலுள்ளப் பொறாமையில்
அவள் மறுத்து விட்டால்?

அந்த மேகத்தை…
உன்னைச் சேருமுன்னே அது
மழையாய்க் கரைந்து விட்டால்?

இந்தப் பூக்களை…
உன்னை வந்தடையுமுன்னே
அவை வாடி விட்டால்?

அதனால்தான்
என் கவிதைகளை
அனுப்பி வைக்கிறேன்!
அவை கண்டிப்பாய்
உனக்குப் புரிய வைக்கும்…
நான் உன்னைத்தான்
காதலிக்கிறேன் என்பதை!!

ஏனென்றால்
கவிதைகள் ஏமாற்றுவதில்லை!
அவை - உன்னைப் போல!!

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Thursday, June 22, 2006

ஒரு காதல் பயணம் - 3

காதல் பயணம் பகுதி ஒன்று இரண்டு


நம்முடையக் காதல் பள்ளியில்
முதல் நாளே
நடந்தது
ஒரு
மனம் நடும் விழா!

அதற்கு மறுநாள், வரிசையாக பூக்கடைகள் இருக்கும் அந்தக் கோயில் தெருவுக்குள் நீயும் உன் தங்கையும் வருகிறீர்கள்.
பூ வாங்க யாரும் வந்தால் வழக்கமாக கூவிக் கூவி அழைக்கும் கடைக்காரர்கள் எல்லாம் உன்னைப் பார்த்து விட்டு ,
கோவிலில் இருந்த ஒரு சிலைதான் வெளியே உலா வருகிறது என வாயடைத்து இருக்கிறார்கள், என்னைப் போல.

கடையில் இருக்கும் பூக்களோ, “என்னை எடுத்துக்கோ”, “என்னை எடுத்துக்கோ” என உன்னிடம் கூப்பாடு போடுகின்றன.
மகாராணி போல எல்லாப்பூக்களையும் ஒரு பார்வை பார்த்து விட்டு,
பனித்துளிகள் விலகாமல், ரோஜா நிறத்தில் இருக்கும் ஒரு ரோஜாவை நீ எடுக்கிறாய்.
அது மற்றப் பூக்களையெல்லாம் திமிருடன் ஒரு பார்வை பார்த்து விட்டு ஒய்யாரமாய் உன் கூந்தல் ஏறி அமர்கிறது.

நீ வரும் வரை தெரு முனையில் காத்திருக்கிறோம், நானும், நம் காதலும்.
எங்களைப் பார்த்ததும் “இங்கேயும் வந்தாச்சா?” என பதட்டப்படுகிறாய்.
“எல்லாப் பக்கமும் நீக்கமற நிறைந்திருப்பது கடவுள் மட்டுமல்ல , நானும்தான்” என சொல்கிறது காதல்.
“உன்னைப் பிறகு பார்த்துக் கொள்கிறேன்” என காதலை முறைத்து விட்டு நீ என் பக்கம் திரும்புகிறாய்.

“இன்னைக்கு என்னவெல்லாம் புலம்பப் போறீங்க?” எனக் கிண்டலாகக் கேட்கிறாய்.
“புலம்பல் எல்லாம் எதுவும் இல்லை, ஒரு புகார் மனு தான் வாசிக்கனும்” என்கிறேன் நான்.
“புகாரா? நான் என்ன தப்பு பண்ணேன்?” என மெய்யாகவேப் பயப்படுகிறாய்.

“உன் மேல் புகார் சொன்னால், காதல் என்னைக் கைவிட்டுடாதா! புகார் எல்லாம் என் இதயத்தின் மீது தான்! என் இதயத்தில் குடியேறி விட்டதாக நேற்று நீ சொன்னாலும் சொன்னாய். அதிலிருந்து என் இதயத்திற்கு தலை கால் புரிய வில்லை. ஒரே மமதையுடன்தான் சுற்றுகிறது” எனப் புலம்ப ஆரம்பிக்கிறேன், நான்.

“அது செய்யும் அட்டூழியங்களை நீயேக் கேள் :
நேற்று இரவு நான் தூங்கப் போன போது இது என்ன சொல்லியது தெரியுமா?
உன் தேவதை இப்போது தூங்கிக் கொண்டு இருக்கிறாள்.அவளுக்கு கனவு வரும் நேரம் இது.
அவள் கனவில் நீ தானே இருக்க வேண்டும்! அதனால் ஓடு, ஓடு, என என்னை உன் கனவுக்குத் துரத்தியது.
உன் கனவுக்குள் நுழையும் ஆசையில் நானும் அதைச் செய்தேன்.
பிறகு ஒரு வழியாக நான் தூங்கிய போது கூட என் கனவுக்கு வந்த எல்லாரையும் காக்க வைத்து விட்டு,
உன்னை மட்டுமே உள்ளே அனுமதித்தது!
இப்படி நேற்று இரவு மட்டும் அது எத்தனை அட்டூழியங்களை செய்தது தெரியுமா?” என நான் சோக கீதம் வாசிக்கிறேன்.

எல்லாவற்றையும் கேட்டு விட்டு இன்றைக்குப் புலம்பல் நீளும் போலிருக்கே என்று நினைத்துக் கொண்டு
“வாங்க, இங்க உட்கார்ந்து பேசுவோம்” என கோயிலின் வெளி சுற்றுத் திண்ணையில் அமர்கிறாய்.
கன்னத்தில் கை வைத்துக்கொண்டு “ ம்…அப்புறம்?” என அதன் அடுத்த அட்டூழியத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறாய்.

“குளிக்கப் போனால், தேவதை குளிக்கிறாள்! நீ இரு!” என என்னைத் தடுக்கிறது.
“சாப்பிடும்போது கூட , தேவதைக்குப் போதுமாம்! நீ எழு!” என என்னைப் பாதியிலேயே எழுப்புகிறது.
இப்படிக் கொஞ்ச நாள் முன்பு வரை என் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த என் இதயம்,
இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் உன் புராணம்தான் பாடுகிறது.
நான் என்ன சொன்னாலும், தேவதை சொல்வதைத்தான் நான் கேட்பேன் என அடம்பிடிக்கிறது.
அதனால்தான் என் இதயத்தை உன்னிடம் இழுத்து வந்து விட்டேன்.
அதனிடம் நீயேக் கேள்” என முழுதாய்க் கொட்டித் தீர்த்தேன்.

இதழோரம் ஒரு குறுநகையுடன் என் இதயத்தில் உன் காது வைக்க வருகிறாய்.
“ஏய்…ஏய்…என்ன செய்ற?”
“நீங்க தான “கேட்க” சொன்னீங்க…அதான் கேட்கிறேன்”
“நான் அதுகிட்ட, என்னன்னு கேள்வி கேட்க சொன்னா…நீ அது சொல்றத காது கொடுத்துக் கேட்கப் போறியே?
கடைசியில நீங்க ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்துட்டீங்கப் பாத்தீங்களா” என நான் அப்பாவியானேன்.

“இல்லங்க…மொதல்ல அது என்ன சொல்லுதுன்னுக் கேட்டுக்கலாம், அப்புறமா அத நாலு வார்த்த நறுக்குன்னு நானேக் கேட்கிறேன்”
மறுபடியும் இதயத்தில் காது வைக்கிறாய்.

என் இதயமோ, “ பொய் சொல்றான், பொய் சொல்றான், நம்பாத…எல்லாத்தையும் அவனே செஞ்சுட்டுப் பழிய எம்மேலப் போடப் பார்க்கிறான்” என உனக்கு மட்டும் கேட்கும் குரலில் சன்னமாக கிசுகிசுக்கிறது.

இதயத்தில் இருந்து காதை எடுத்த நீ, ஓரக் கண்ணில் என்னைப் பார்த்து விட்டு,
என் இதயத்தை நோக்கி, “ இதோ பார் இதயமே, நான் உன்னில் வசிக்க வந்ததற்குக் காரணமே அவர்தான்.
அவர் சொல்வதை நீ கேட்காவிட்டால் அப்புறம், உன்னை விட்டே நான் விலகி விடுவேன்”
என்று அதைக்கொஞ்சம் மிரட்டிவிட்டு, பாசாங்கு தான் என, அதைப் பார்த்துக் கண்ணடிக்கிறாய்.

“என் இதயம் முதலில் உன்னிடம் ஏதோ சொல்லியதே, என்ன சொன்னது?” என ஆர்வமாகிறேன் நான்.
“அது உங்கள் மேல் ஒரு புகார் சொல்லியது” என்கிறாய்.
“என் மேலா? என்னப் புகார் சொல்லியது?”
“ஆமாம், நான் மட்டும் தான், முதல் நாளே உங்கள் இதயத்தில் குடியேறினேன்.
ஆனால் நீங்கள் இன்னும் என் இதயத்துக்குள் நுழையவில்லை இல்லையா,
அதைத்தான் குத்திக் காட்டுகிறது” என உனது புகாரை என் இதயம் சொன்னதாக சொல்கிறாய்.
உன் நடிப்பைப் பார்த்து என் இதயம் கூட ஒரு நொடி துடிப்பை நிறுத்தியது.

“அதுதானா? நீயே மென்மையானவள். உன் இதயமோ உன்னையும் விட மென்மையானது.
அதில் வசித்துக் கொண்டு நான் என்னுடைய முரட்டுக் காதல் ஆர்ப்பாட்டங்களை எல்லாம் செய்ய முடியாது
– அதை உன் இதயமும் தாங்காது.
அதனால்தான் என் காதலை முழுவதுமாக உன் இதயத்துக்குப் பழக்கப் படுத்திவிட்டு,
‘காதல்’ குறித்துக் கொடுக்கும் ஒரு நல்ல நாளில் என் இதயப்பிரவேசம் நிகழும்” என சொல்கிறேன் நான்.

நான் பேசி முடித்தப் பின்னும் கண்ணிமைக்காமல் என்னையேப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்.

ஆனால் பேந்த பேந்த விழித்துக் கொண்டிருந்த உன் தங்கை,
உன்னிடம் மெதுவாக சொல்கிறாள் : “அக்கா! இந்த லூசு மாமா உனக்கு வேணாங்க்கா!”
உன் தங்கையிடம் சத்தமாக நீ சொல்கிறாய் :
“ உன்னோட லூசு அக்காவுக்கு இந்த மாமாவ விட்டா, வேற எந்த நல்ல லூசுடி கிடைப்பாங்க?”

“ஐய்யோக் கடவுளே! இந்த ரெண்டு லூசுங்க கிட்ட இருந்தும் என்னக் காப்பாத்தேன்”
எனக் கத்திக் கொண்டு கோயிலுக்குள் ஓடுகிறாள் உன் தங்கை.
அதைப் பார்த்து லூசு மாதிரி சிரித்துக் கொண்டிருந்தார் அந்தக் கடவுள்.

( காதல் பயணம் தொடரும் )


அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Wednesday, June 21, 2006

சுகமானப் பயணம்!

ஜன்னலுக்கு வெளியே பசுமையான வயல்வெளி
தூரத்தில் சிரித்துக் கொண்டேக் கையசைக்கும் சிறுவர்கள்
கையில் மனதுக்குப் பிடித்தக் கவிதைப் புத்தகம்
தாலாட்டும் ஓசையோடு ரயில் பயணம்


கவலை மறந்த கல்லூரிக் காலம்
கேலி கிண்டல் நிறைந்த அரட்டை
ஆனந்தத்தில் பாடியபடி ஆட்டம்
நட்போடு போன சுற்றுலாப் பேருந்து பயணம்


அழகாய் வளைந்து செல்லும் மலைப்பாதை
பார்வையின் தூரம் வரை தேயிலைத் தோட்டங்கள்
குளிரைக் கூட்டும் சாரல் மழை
நனைந்த படி போன மிதிவண்டி பயணம்


தூரத்து ஊரின் கோவில் திருவிழா
கூடிய சொந்தங்களின் பாசப்பேச்சு
தொடர்ந்து கேட்கும் வேட்டு சத்தம்
நிலவொளியில் மாட்டுவண்டி பயணம்


என் வாழ்நாளின்
சுகமானப் பயணங்கள்
இவை தாமென்று
சொல்லிக் கொண்டிருந்தேன்
முதன் முறையாய்
உன்னோடுக்
கை கோர்த்தபடி
கொஞ்ச தூரம்
நடந்து செல்லும் வரை!


அழியாக் காதலுடன்,
அருட்பெருங்கோ