Showing posts with label சொந்த கதை. Show all posts
Showing posts with label சொந்த கதை. Show all posts

Wednesday, May 28, 2008

இம்சை அரசி திருமணம், எனது பயணம், ஒரு மலையாளக் கவிதை

16 மே 2008 வெள்ளிக்கிழமை

சுந்தரா ட்ராவல்ஸ் பதிவுக்கு பிறகு நான் ஊருக்கு கிளம்பினாலே ‘என்ன சுந்தரா ட்ராவல்ஸ்லயா?’ என்று அலுவலகத்தில் நண்பர்கள் கலாய்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.அதனால் இம்முறை முன்பதிவு செய்துவிட வேண்டுமென்று முடிவு செய்திருந்தேன். ஆனால் வழக்கம்போல் எனது பொறுமை, சோம்பேறித்தனமெனும் எல்லையைத் தொட்டுவிட்டதால் பயண நாள் வரை முன்பதிவு செய்யவில்லை.

மதியம் மணி 2:00 :

மதியம் உண்ட மயக்கத்தில் உறக்கம் தள்ள, அலுவலகத்துக்குள்ளேயே இருக்கும் விடுதியில் தங்கியிருந்த நண்பனிடம் அறை சாவியை வாங்கிக்கொண்டு அவன் அறைக்கு சென்றுவிட்டேன். ‘தூங்கக்கூடாது, கொஞ்ச நேரம் கண்ணை மூடி படுத்திருந்துவிட்டு எழுந்துவிடலாம்’ எனும் தெளிவான முடிவோடு படுக்கையில் சாய்ந்துவிட்டு எழுந்தபோது மணி 3:00.

மதியம் மணி 3:00 :

அலறியடித்து வண்டியைக் கிளப்பிக்கொண்டு வீட்டிற்குப் பறந்தேன். 6 மணிக்கு மகாத்மா காந்தி பேருந்து நிலையத்தில் பெங்களூர் செல்லும் கர்நாடகா அரசுப்பேருந்தை பிடித்துவிட திட்டம். அதற்கு லிங்கம்பள்ளியில் 5 மணிக்கு மின்ரயிலைப் பிடிக்கவேண்டும். 4:30 மணிக்காவது வீட்டிலிருந்து கிளம்பவேண்டும். வீட்டிற்கு 4 மணிக்கு போய்விட்டால் போதும். இன்னும் நேரமிருக்கிறது என்ற கெத்தில் வீட்டிற்கு அருகில் வந்ததும் அழகியதமிழ்மகனில்(ATM) பணமெடுத்துக்கொண்டு கடையில் சில பொருட்களை வாங்கிக்கொண்டு கரும்புச்சாறு கடைக்கு வந்தேன். இரண்டு கப் குடித்துவிட்டு பையிலிருந்து பணத்தையெடுக்கும்போது கையோடு வந்த நண்பனின் விடுதியறை சாவி என்னைப்பார்த்து எகத்தாளமாக சிரித்தது.

மதியம் மணி 3:45 :

‘மச்சான், நாந்தாண்டா பேசறேன். உங்கிட்ட இன்னொரு ரூம் சாவி இருக்கா’
‘இல்லடா.. என் ரூம்மேட் ஊருக்கு போயிட்டான். ஒரு சாவிதான் இருக்கு. ஏண்டா?’
‘ஒன்னுமில்ல. நீ ஆஃபிஸ் கேட்டுக்கு வா. நான் சாவிய எடுத்துட்டு வர்றேன்’
வந்த வழியே திரும்பி போய் அவனிடம் சாவியைக் கொடுத்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தபோது மணி 5

மாலை மணி 5 :

இனிமேல் அந்த கர்நாடகா பேருந்தைப்பிடிக்க வாய்ப்பில்லாததால் 8 மணிக்கு கிளம்பும் ஆந்திரா பேருந்தை பிடிக்க பொறுமையாக கிளம்பலாமென்று பைக்குள் எல்லாவற்றையும் திணித்துவிட்டு ஒரு குளியலைப் போட்டேன். தலைக்கு குளித்ததும் தூக்கம் வருகிற மாதிரி இருந்தது. ‘தூங்கக்கூடாது, கொஞ்ச நேரம் கண்ணை மூடி படுத்திருந்துவிட்டு எழுந்துவிடலாம்’ எனும் அதே தெளிவான முடிவோடு படுக்கையில் சாய்ந்துவிட்டு எழுந்தபோது மணி 6:30.

மாலை மணி 6:30 :

ஆட்டோவுக்கு காத்திருந்து சலித்து, நடந்து, பின் லிஃப்ட் கேட்டு ஒருவழியாக ரயில் நிலையம் சென்றபோது மணி 6:45. நாம்பள்ளி செல்லும் அடுத்த ரயில் 6:55 க்கு கிளம்ப தயாராக நின்று கொண்டிருந்தது. கவுண்டரில் பயணச்சீட்டு வாங்க எனக்கு முன்னால் இன்னும் மூன்றே பேர் இருந்த போது அந்த ரியலும் ‘கூ’ என்று (எனக்கு சங்கு) ஊதியபடி கிளம்பிப் போய்விட்டது. அடுத்து செக்கந்தராபாத் செல்லும் ரயிலில் பேகம்பேட் வரை சென்றுவிட்டு அங்கிருந்து ஆட்டோ பிடித்து பேருந்து நிலையம் போகலாமென்று அதி உன்னத முடிவெடுத்து பேகம்பேட்டுக்கே சீட்டு வாங்கினேன். 7:20 க்கு அந்த ரயில் கிளம்பியது.

இரவு மணி 8 :

பேகம்பேட் ரயில்நிலையத்துக்கு வெளியே வந்து ஆட்டோ பிடித்து பேரம் பேசி ஏறியமர்ந்தபோது பத்து நிமிடம் கழிந்திருந்தது.
‘அண்ணா கொஞ்சம் சீக்கிரம் போங்க. பஸ்ச புடிக்கனும்’
‘பஸ் எத்தன மணிக்கு?’
‘8 மணிக்கு’
‘மணி என்ன இப்போ?’
‘8:10’
என்னை முறைத்துவிட்டு முறுக்கினார் ஒரு இருட்டு சந்துக்குள். ஒரு கிலோ மீட்டர் போனதும் அங்கு ஒரு கடமை தவறாத கண்ணியமான காவல்துறை அகராதி ‘இது ஒன் வே. திரும்பிப் போ…போஓஓஓஓஓ’ என்று ஜெயம் சதா மாதிரி (ஆனால் தொப்பை இருந்தது) கை நீட்ட, வந்த வழியே ஆட்டோ திரும்பியது. நான் எங்காவது தனியாக கிளம்பினால் எனக்கு கம்பெனி கொடுக்க சனியனும் சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பிவிடும்போல! உருண்டு புரண்டு ஆட்டோ பேருந்து நிலையம் வந்தபோது மணி 8:45.

இரவு மணி 9 :

பெங்களூர் செல்லும் கடைசி அரசுப்பேருந்து கிளம்பிக்கொண்டிருந்தது. சீட்டிருக்கிறதா என்று நடத்துனரைக்கேட்டால் ஒன்றே ஒன்றுதான் இருப்பதாக பாவமாக சொன்னார். எனக்கு அரை டிக்கட் இருந்தாலே போதுமென்று சொல்லி ஏறிக்கொண்டேன். இருக்கையில் சாய்ந்து, ‘தூங்கலாமா? கண்ணை மட்டும் மூடிப் படுத்திருக்கலாமா?’ என்று யோசித்துக்கொண்டே தூங்கி விட்டேன்

17 மே 2008 சனிக்கிழமை

காலை மணி 9:00 :

மெஜஸ்டிக்கில் இறங்கியதும் நண்பனுக்கு தொலைபேசி, அலுவலகம் செல்ல இருந்தவனை வீட்டிலிருக்க சொல்லி, 171 பிடித்து கோரமங்களா போய் அவன் வீட்டைக்கண்டுபிடித்தபோது மணி 10 ஆகியிருந்தது. இரண்டு சமையலறை அளவுக்கு இருந்த அந்த வீட்டின் வாடகை 7500 ரூபாய்! குளித்து முடித்து சமைத்து வைக்கப்பட்டிருந்த சப்பாத்தி, வெண்டைக்காயையும், நண்பன் சூடாக்கிக்கொடுத்த தேநீரையும் பருகிய பிறகு உலகம் அழகாக தெரிந்தது.(எரிக் , நீ நல்லாருப்படா!) அப்பொழுதே கிளம்பி இரவுக்குள் நாமக்கல் செல்லலாமா அல்லது இரவு கிளம்பி காலை நேராக திருமணத்துக்கு போய்விடலாமா என்று குழப்பமாக இருந்ததால், இம்சையரசிக்கே தொலைபேசினேன். நள்ளிரவு 3:30 மணிக்கு (காலையில் என்று பொய் சொன்னார்) திருமணமென்பதால் இரவு தங்கிக்கொள்ள வசதி செய்திருப்பதாக சொல்லவும், உடனே கிளம்ப முடிவெடுத்தேன்.

காலை மணி 11 :

கோரமங்களா வாட்டர் டேங்க் அருகே ஓசூருக்கு பேருந்தேறினேன். ஊர்ந்து ஊர்ந்து சென்றது. மடிவாலா – எலக்ட்ரானிக்ஸ் சிட்டி மேம்பாலப்பணிகள் இன்னும் முடிவடையவில்லை. பல இடங்களில் மரங்களை வெட்டிப்போட்டிருந்தார்கள். ஆனாலும் பெங்களூருக்கே உரிய அந்த ‘பசுமை’ மாற வில்லை ;) 12:30 மணிக்கு ஒசூரை அடைந்தேன்.

மதியம் மணி 1 :

சேலம் செல்லும் அரசு விரைவுப்பேருந்திலேறி படுத்ததுதான் தெரியும். எப்பொழுது சேலம் வந்ததென்றே தெரியவில்லை. 6 மணிக்கு சேலத்திலிறங்கி கடைவீதிக்கு சென்று பரிசுப்பொருள் வாங்கிக்கொண்டு திரும்பினேன். அன்று/அடுத்தநாள் வீரபாண்டி ஆறுமுகத்தின் பேத்திக்கு திருமணமென்பதால் சேலமே ஒளிமயமாக இருந்தது. அடுத்த பேருந்தைப்பிடித்து நாமக்கல்லை அடைந்தபோது மணி 8.

இரவு மணி 8 :

‘ஹலோ’
‘சொல்லுங்க’
‘sam பேசறேன்’
‘யாரு?’
‘சாம்ராஜ் பேசறேன்’
‘ ’
‘அருட்பெருங்கோ பேசறேங்க’
‘அவ தூங்கறா. நான் அவ ஃப்ரெண்ட் பேசறேன். ஒரு நிமிசம் இருங்க அவ தம்பிக்கிட்ட கொடுக்கறேன்’
‘சரிங்க’
‘அண்ணா நீங்க இப்போ எங்க இருக்கீங்க?’
‘பஸ்டாண்ட்லதான்ப்பா’
‘பஸ் எல்லாம் வெளிய வர்ற இடத்துல வெயிட் பண்ணுங்க. நான் வந்துடறேன்’
‘ஓக்கே’

‘ஹலோ…அண்ணா எங்க நிக்கறீங்க?’
‘நீ சொன்ன எடத்துலதாம்ப்பா’
‘நானும் பஸ் வெளிய வர்ற இடத்துலதான் நிக்கறேன்’
‘பக்கத்துல ஒரு டைட்டன் வாட்ச் கடை இருக்கு’
‘நானும் அங்கதான் நிக்கறேன்’
‘தம்பி கொஞ்சம் பின்னாடி திரும்பு’
‘ஹை’
‘ஹை’

இரவு மணி 9 :

விடுதிக்கு சென்று மீண்டுமொரு குளியலைப்போட்டேன். அறையில் கட்டில் ஒரு மூலையிலும் தொ.கா.பெட்டி இன்னொரு மூலையிலும் இருந்தது. அதில் நமீதாவே த்ரிஷா மாதிரிதான் தெரிந்தார். சின்னத்திரையை விட்டு பெரிய திரைக்கு போக முடிவெடுத்து வெளியே வந்தேன். நடக்கும் தூரத்தில் இருந்த KS திரையரங்கில் யாரடி நீ மோகினி ஓடிக்கொண்டிருந்தது. கூட்டம் அதிகமில்லை. பக்கத்திலேயே ஒரு பரோட்டா கடையில் சாப்பிட்டுவிட்டு (வெகுநாட்களுக்கு பிறகு நிறைவாக சாப்பிட்ட திருப்தி) திரையரங்கிற்குள் நுழைந்தேன். வலைப்பதிவில் வேண்டிய அளவுக்கு இதன் விமர்சனங்களைப் படித்துவிட்டதால் சில காட்சிகள் தவிர மீதிப்படம் சப்பென்று இருந்தது.
நயன் அழகாக இருந்தார். அவர் தங்கையாக வந்த மலையாளக் கவிதை அழ்ழகாக இருந்தார்.

இரவு மணி 1:30 :

விடுதியறைக்கு திரும்பி ‘தூங்கலாமா, கொஞ்ச நேரம் கண்ணை மூடி படுத்திருக்கலாமா’ என்று யோசித்ததில், இரண்டில் எதைச் செய்தாலும் திருமணத்துக்கு போக முடியாதென்று அனுபவ அறிவு சொல்லவும் விழித்தபடியே ஒரு லோக்கல் சேனலில் இளையராஜாவை ரசித்துக்கொண்டிருந்தேன்.

இரவு மணி 2:30 :

‘ஹலோ..ஜெயந்தி பேசறேன்’
‘சொல்லுங்க முழிச்சுட்டுதான் இருக்கேன்’
‘3 மணிக்கு அங்க பஸ் வரும். கிளம்பி ரெடியா இருங்க’
‘நான் கிளம்பிக்கறேன். நீங்கதான் கல்யாணப்பொண்ணு நீங்க மொதல்ல கெளம்புங்க’
‘நானும் கிளம்பி ரெடியா இருக்கேன். சும்மாதான உட்காந்திருக்கேன்னு எல்லாரையும் எழுப்பி விட்ற வேலைய எனக்கு கொடுத்துட்டாங்க’
‘சரி நீங்க அடுத்த ஆள எழுப்புங்க. நான் போய் கெளம்புறேன்’

இரவு மணி 3:00 :

குளித்து முடித்து கிளம்பி பேருந்துக்காக காத்திருந்தபோது அறைக்குள் புயல் மாதிரி ஒருவர் நுழைந்தார்.
‘ஹாய்.. ஐ யாம் பாலா’
என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு கேட்டேன், ‘ஜெயந்தி ஃப்ரெண்டா?’
‘ம்ம்ம் ப்ளாக் மூலமா தெரியும்’
‘ஓ.. நீங்களும் ப்ளாக் எழுதுவீங்களா?’
‘இல்ல இல்ல படிக்கறதோட சரி. உங்களுக்கு எப்படி ஜெயந்திய தெரியும்?’
‘எனக்கும் ப்ளாக் மூலமாதான். அப்பறம் ஒரே கம்பனிலதான வேலை செய்யறோம்’
‘நீங்களும் ப்ளாக் எழுதறீங்களா?’
‘ம்ம்ம் ஆமாங்க’
‘என்ன பேர்ல?’
‘அருட்பெருங்கோ ங்கற பேர்ல எழுதறேன்’
‘நீங்க தான் அருட்பெருங்கோவா?’ நம்பிக்கையே இல்லாமல் கேட்டார். இது எப்பொழுதும் நடப்பதுதான். என்னை நேரில் பார்க்கும் யாருமே நான்தான் அருட்பெருங்கோ என்று சொன்னால் நம்ப தயங்குகிறார்கள் :)

18 மே 2008 ஞாயிற்றுக்கிழமை

அதிகாலை மணி 4:00 :

நாமக்கல் அருகே இருக்கும் வள்ளிபுரம் சிவன் கோவில் களை கட்டியிருந்தது.உறவினர், நண்பர்கள் புடை சூழ சரியாக 4:42 மணிக்கு மோகன் பிரபு கைது செய்யப்பட்டார். கைது செய்த ஜெயந்திக்கு பரிசு கொடுத்து வாழ்த்தலாமென்றால் அம்மணியை பிடிக்க முடியவில்லை. மாப்பிள்ளை வீட்டு அழைப்பு என்று மாயமாக மறைந்துவிட்டார். ஒருவழியாக காத்திருந்து அவர்களிருவரும் சாப்பிடப்போன நேரம் தட்டைப்பிடுங்கிவிட்டு பரிசைக்கொடுத்துவிட்டு கிளம்பினோம்.

காலை மணி 8 :

நானும் பாலாவும் அறைக்குத் திரும்பி பைகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்தோம். கோவையிலிருந்து சென்னை செல்லும் வெஸ்ட்கோஸ்ட் ரயிலை சேலத்தில் 10 மணிக்கு பிடித்துவிட திட்டம். எந்த பேருந்தும் அந்த இடத்தில் நிறுத்தாததால் ஆட்டோ பிடித்து பேருந்துநிலையம் சென்று, காத்திருந்து, பேருந்து வந்ததும் அடித்து பிடித்து ஏறி நிற்பதற்கு இடம் பிடித்தபோது மணி 8:45. ஒரு மணி நேரத்தில் சேலத்துக்கு சென்று ரயிலை பிடிப்போமா என்று சந்தேகமாகத்தான் இருந்தது. அம்மா, அப்பா, அக்கா எல்லோரும் அந்த ரயிலில்தான் திருப்பூரிலிருந்து சென்னைக்கு சென்றுகொண்டிருந்தார்கள். அவர்களோடு சேர்ந்து கொள்ளலாமென்றுதான் அடுத்தநாள் வரவேற்புக்கு செல்லாமல் முதல்நாள் திருமணத்துக்கு சென்றிருந்தேன். 9:55 க்கு பைபாஸ் சாலையில் இறங்கியதுமே, ‘ரயில், சேலம் சந்திப்பில் நின்று கொண்டிருப்பதாக’ அக்கா தொலைபேசினார். அவசரமாக ஆட்டோ பிடித்து ஜங்சனை அடைந்து வரிசையில் நின்று டிக்கட் வாங்கி முதலாம் பிளாட்பாரத்திற்கு நாங்கள் போவதற்குள்…. ரயில் போய்விடவில்லை :) நிதானமாக ஏறி, ஜனனியோடு விளையாடி, பின் நன்றாக தூங்கிக்கொண்டே சென்னை சென்று சேர்ந்தேன்.

கவிதைப் பிரியர்களுக்காக அந்த மலையாளக் கவிதை :
[slideshow id=1 w=320 h=400]

Monday, January 28, 2008

பாடல்களும், நினைவுகளும்!

பாடத் தெரியாது என்பதனைவிட எனக்குப் பாடல்களை முணுமுணுக்கக் கூடத் தெரியாது என்று சொல்லுவது பொருத்தமாக இருக்கும். ஆனாலும் பாடல்களை கேட்பது எப்போதும் பிடித்தமான ஒன்று. பாடல்களைக் கேட்கும்போது எனக்கு பாடல்வரிகள் கோர்வையையாய் மனதில் ஏறுவதில்லை; மாறாக அந்த பாடலைக் கேட்கும் சூழலும் அந்தப் பாடலின் இசையோடு சேர்ந்து மனதில் எங்கோப் போய் தங்கிவிடுகிறது. எல்லோருக்கும் இப்படித்தானா என்று தெரியவில்லை. காலங்கள் கடந்து அந்தப் பாடலைக் கேட்கும்போது இசையோடு சேர்ந்து முதன் முதலில் அந்த பாடல் கேட்ட சுழலின் நினைவுகளும் கேடவே எழுந்து வருகின்றன. கண்களை மூடிக்கொண்டால் அந்த கடந்த காலத்துக்குப் போய் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு வந்ததான உணர்வு வரும். அதிலும் குறிப்பாக ஒரே சூழலில் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்ட பாடல்களை கேட்கும்போது அந்த உணர்வு அழுத்தமாய்ப் பதிகிறது. என்னை முழுக்க முழுக்க பழைய சூழலில் தள்ளிவிடுகிற சில பாடல்களைப் பற்றி மட்டும் இங்கு.

எல். ஆர் ஈசுவரியின் மாரியம்மன் பாடல்களை எப்பொழுது கேட்டாலும் நினைவுக்கு வருவது என் அம்மாவின் ஊரில் நடக்கும் மாரியம்மன் திருவிழாக்கள். அது நினைவுக்கு வருகிறது என்பதனைவிடவும் என்னை அழைத்துச் செல்கிறது என்று சொன்னால் சரியாயிருக்கும். பள்ளியில் படித்த காலத்தில் எந்த விடுமுறையென்றாலும் அம்மாவின் ஊருக்குதான் செல்வோம். மாரியம்மன் திருவிழாவின் போது ஊரில் இருக்கும் எல்லோருடைய உறவினர்களும் வெளியூர்களிலிருந்து வந்து ஊரே புதிதாய் இருக்கும். மாவிளக்குப் படையலில் வரிசையில் இருக்கும் மாவிளக்குத் தட்டுகளைப் பார்த்திருக்கிறீர்களா? ஒவ்வொன்றும் ஒவ்வொரு தினுசில் இருக்கும். சர்க்கரைப்பாகில் பிடிக்கப்பட்டு வெள்ளையாய், வெல்லப்பாகில் செய்து பொன்னிறத்தில், எள், பொட்டுக்கடலை எல்லாம் போட்டு புள்ளிப்புள்ளியாய், இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். சரியான பதத்தில் செய்வதும் ஒரு கலைதான். பாகு குறைந்து போயிருந்தால் மறுநாளே கட்டடத்தை இடிக்கிற மாதிரி இடித்து எடுக்க வேண்டிய அளவுக்கு இறுகிப் போயிருக்கும். பாகு அதிகம் கலந்துவிட்டாலோ, படைப்பதற்குப் போகும்போது நிற்க வைத்த மாவு, திரும்பி வருவதற்குள் படுத்துப் போன மாதிரி இளகிப் போயிருக்கும். அதன் மேலே செருகிக் கொள்ள வண்ண வண்ண விசிறிகள். கோவிலுக்கு முன்னே முன்னூறுக்கும் மேலே மாவிளக்குத் தட்டுடன் நின்றுகொண்டிருப்பார்கள்.பார்ப்பதற்கே அழகாயிருக்கும். வள்ளித்திருமணமோ, அல்லது ஏதேனும் சமூக நாடகமோ, அப்புறம் கரகாட்டம், பொன்னர்-சங்கர் கதை, திரைப்படம் (முதலில் ஒரு பக்திப்படம், ரெண்டாவது ஒரு எம்ஜியார் படம் (பெரும்பாலும் எங்க வீட்டுப் பிள்ளை), மூன்றாவதாக ஒரு ரஜினி படம் என்ற வரிசையில் போடுவார்கள், எப்பொழுதும் இரண்டாவது படத்தின் பாதியிலேயே தூங்கி விடுவேன்) என ஒரு வாரத்திற்கும் மேலான இரவுகள் விழித்தபடியே கழியும். அங்கேயே அடுப்பு மூட்டி சுக்குக்காப்பி போட்டு ஒரு ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருப்பார் ஒருவர். சாக்கோ, பாயோ எடுத்துக்கொண்டு போய்விடுவோம். தூக்கம் வருகிற வரை பார்த்துவிட்டு அங்கேயேத் தூங்கி, எல்லாம் முடிந்தபின் தூக்கத்திலேயே தலையில் பாய்/போர்வைகளை சுமந்து வீட்டிற்கு வந்து காலையில் விழித்துப் பார்த்தால் எப்பொழுது வந்தோம் எனப் புரியாது. சில நாட்களில் விழித்துப் பார்த்தால் நாடகக்கொட்டாய் முன்னாலேயே பாயில் கிடப்போம். இன்னும் சொல்வதற்கு ஏராளம் இருக்கின்றன. அத்தனை நிகழ்வுகளையும் மீண்டுமொருமுறை அனுபவிக்கும் சுகம் தருபவை அந்தப் பாடல்கள். திருவிழாவுக்குக் கம்பம் சாட்டிய நாளிலிருந்தே குழாய் ஒலிபெருக்கிகளில் மரத்துக்கு மரம் முழங்க ஆரம்பித்துவிடுவார் எல்.ஆர் ஈசுவரி. முக்கியமாக “மாரியம்மா…எங்கள் மாரியம்மா”, “கற்பூர நாயகியே கனகவள்ளி”, “அங்காளம்மா எங்கள் செங்காலம்மா மங்கலம் பொங்கிட மனதினில் வந்திடும் மாரியம்மா”, “ஈசுவரியே மகமாயி மாரியம்மா…” முத்து மாரி அம்மனுக்கு திருநாளாம்” கேட்க கேட்க மனதெங்கும் திருவிழாஞாபகங்கள்!


கரகாட்டக்காரன்,சின்னத் தம்பி, தளபதி - இந்தப் படங்களில் உள்ளப் பாடல்கள் ஆத்தூரில் கழிந்த எனது பால்யங்களை கண்முன்னே நிறுத்தும். அப்போது எங்கள் தெருவில் தொலைக்காட்சி என்பது ஆடம்பரம். பக்கத்து வீட்டில் புதிதாக பிலிப்ஸ் டேப் ரிக்கார்டர் வாங்கியிருந்தார்கள். கூடவே கரகாட்டக்காரன் கேசட்டும் வாங்கியிருந்தார்கள். பாடல் கேட்பதற்காக அவர்கள் வீட்டுக்குப் போய் டேப் ரிக்கார்டர் முன்னால் காதை வைத்துப் படுத்துக்கொண்டு சங்கீதம் தெரிந்தவர்களைப் போல் தலையாட்டிக்கொண்டு பாடல் கேட்டதை நினைத்துப் பார்த்தால் இப்பொழுதும் சிரிப்பு வருகிறது. சின்னத்தம்பிப் படப்பாடல்கள் தேய்ந்து போகிற அளவுக்கு அப்போது எல்லா விசேசங்களிலும் ஒலித்துத் தள்ளினார்கள். பள்ளிக்கூடம் முடிந்துவந்தால் இரவு வரை அந்த செம்மண் புழுதியில் போட்ட ஆட்டங்கள் அத்தனையும் சின்னத்தம்பியோடு இணைந்திருந்தது. கில்லி, பம்பரம், ஆபியம், கோலி, என ஆட்டம் முடிந்துவருகையில் முழங்காலுக்குக் கீழே மண்ணால் ஒர் ஆடை படிந்திருக்கும். இரவெல்லாம் வாசலில் உட்கார்ந்து கதை பேசும் அம்மாக்களோடு அப்படியே கதை கேட்டுக் கொண்டே தூங்கியிருக்கிறோம். ராக்கம்மா கையத்தட்டு பாடல் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த சமயம் அது. ஒவ்வொரு படத்தின் பாடலுடன் நாங்கள் அங்கு குடியிருந்த ஒவ்வொரு வீட்டின் ஞாபகங்கள் கலந்திருந்தன. அப்போது கேப்டன் பிரபாகரன் படத்தில் வந்த ஆட்டமா சதிராட்டமா பாடலுக்கு நடனம் இல்லாமல் எந்தப் பள்ளிக்கூட ஆண்டுவிழாவும் நடந்ததில்லை. இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் ஆண்டுவிழாவில் வழக்கமாக நடனமாடும் ஒரு பெண்தான் நினைவுக்கு வருகிறார், முகம் நினைவில்லாத போதும்!

பம்பாய் படத்தின் பாடல்கள் திரும்ப திரும்ப ஒலித்த காலகட்டங்களில் நாங்கள் சேலத்துக்கு குடிபோயிருந்தோம். எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலும் ஒரு முசுலீம் குடும்பம் இருந்தது, என் வயதில் உள்ள ஒருப் பெண்ணோடு ;) அதுவரை அரைடிராயர் அணிந்துகொண்டிருந்த நான் இனி லுங்கிதான் அணிவேன் என அடம்பிடித்து லுங்கிக் கட்ட ஆரம்பித்தப் பருவம். பள்ளியில் தேசிய மாணவர் படையில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் தேர்வாகி ஃபேர்லேண்ட்ஸ் பகுதியில் இருக்கும் இராணுவக் கிடங்கில் அடுத்தகட்ட பயிற்சிக்காக தினமும் மாலையில் போய்க்கொண்டிருந்தேன். என் பள்ளியில் இருந்து அங்கு செல்வதற்கு அந்தப் பக்கத்து வீட்டுப் பெண் படிக்கும் பெண்கள் பள்ளி வழியாகதான் போக வேண்டும். முதல் நாள் ஓர் ஆர்வக்கோளாறில் அந்த பள்ளிமுடிகிற நேரம் பார்த்து போன போதுதான் புரிந்தது, நூறு இருநூறு பெண்கள் ஒன்றாக எதிரில் வரும்போது நண்பர்கள் இல்லாமல் தனியாக போவது ஒரு மாதிரி அவஸ்தையாகத்தான் இருக்குமென்று :) ஆனாலும் மனசுக்குள் அந்த அரபிக்கடலோரம் அவள் அழகைக் கண்டேனே என்று இசையடிக்கும். முத்து படத்தின் தில்லானா தில்லானா பாடல் கேட்டாலும் சேலம் ஞாபகம் தான்!

கரூர் வந்து பத்தாம் வகுப்பில் சேர்ந்தபோதுதான் பாடலின் தாக்கம் அதிகமானது. இரண்டு பக்கத்திலும் ஒட்டியபடியிருக்கும் வாடகை வீடுகள். இரண்டு வீட்டிலும் இரண்டு ஸ்பீக்கர் பெட்டிகள் வைத்த பெரிய டக்காய் செட்டுகள் இருந்தன. ஒரு வீட்டில் எப்போதும் மெலடிப் பாடல்கள் தான். இன்னொரு வீட்டில் குத்துப்பாடல்கள்/நாட்டுப்புறப்பாடல்கள் பட்டையைக் கிளப்பும். நான் படித்துக் கொண்டிருக்கும்போதெல்லாம் ஒரு பக்கம் ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ என்றோ, என்னைத் தாலாட்ட வருவாளோ என்றோ ஹரிஹரண் உருகிக் கொண்டே இருப்பார். மற்றொரு பக்கம் எட்டுப் பட்டி ராசா, என் ஆச ராசாவே, வீரத்தாலாட்டு என முழங்கிக் கொண்டிருக்கும். என் அம்மா இரண்டு பேரிடமும், ‘பையன் படிச்சிட்டிருக்கான் கொஞ்சம் சத்தம் கம்மியா வையுங்க’ என்று சொல்லிக்கொண்டே இருப்பார். அந்த சூழலில் நான் வெகுவாய் ரசித்த என் வீட்டு ஜன்னலெட்டி ஏன் பாக்குற?, இளவேனிற்காலப் பஞ்சமி, தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் போல இன்னும் சிலப் பாடல்களைப் பற்றி கரையோரத்தென்றலில் தனிப்பதிவாகப் போடுகிறேன்.

கோவையில் கல்லூரியில் சேர்ந்த பிறகு விடுதியில் தங்கியிருந்ததால் ஆண்டுக்கொருமுறை அறைமாறுவோம். நான் இரண்டாமாண்டே விடுதியை விட்டு வெளியேறிவிட்டாலும் (உண்மையைச் சொன்னால் வெளியேற்றி விட்டார்கள் :) ) நண்பர்களோடு எப்பொழுதும் உள்ளேதான் தங்கியிருந்தேன். ஒவ்வோர் ஆண்டும் வந்தப் படங்களில் சில பாடல்கள் அந்தந்த ஆண்டின் நினைவுகளை மீட்டும். சிநேகிதியே/தெனாலி தான் கல்லூரி வந்தபிறகு பார்த்த முதல் படம். ராதை மனது ராதை மனது பாடல் இன்னுமும் கல்லூரியின் முதல் சில வாரங்களின் நினைவுகளையேத் தந்துகொண்டிருக்கிறது. டும் டும் டும், துள்ளுவதோ இளமை பாடல் கேட்கும்போதெல்லாம், தேநீர் குடிக்கும்போது வந்து மொய்க்கிற ஈக்களுக்காக தனியே கொஞ்சம் தேநீர் ஊற்றி வைத்த புத்திசாலி/இரக்கமுள்ள சீனியர், அத்தான் வருவாக பாடலுக்கு தமிழ் புரியாத ஒருவனுக்கு நான் சொன்ன இல்லாத அர்த்தங்கள் எல்லாம் நினைவுக்கு வருகின்றன. இப்படி ஒவ்வோராண்டுக்கும் கொஞ்சம் பாடல்கள். சொன்னால் தீராதவை :)

கடைசியாக இந்த மாதிரி காலங்களை மீட்டு வரும் மாதிரியான பாடல்களாக எனக்கு அமைந்தவை ‘ பார்த்த முதல்நாளே’, ‘முன்பே வா அன்பே வா ‘ – இரண்டு பாடல்களும். கடந்த ஆண்டு பெங்களூரில் இருந்த அழகான நாட்கள் அவை. அதிகம் வேலையிருக்காது. அந்த குளிரை ரசித்தபடி வலையில் எதாவது வாசித்துக் கொண்டே இருக்கலாம். பின்னணியில் இந்த இரண்டு பாடல்களும் இசைந்து கொண்டிருக்கும். கடந்த வருடம் எழுதிய பல காதல் கவிதைகளை இந்தப் பாடல்களைக் கேட்டுக் கொண்டேதான் எழுதினேன். பெங்களூரில் இருந்தவரை ‘பார்த்த முதல் நாளே’ தான் என் மொபைலின் காலர் ட்யூனும் கூட. அதன் பிறகு மும்பையில் இருந்த கொஞ்ச காலத்தையும் கண் முன்னே நிறுத்தும் இந்தப் பாடல் அட்னன் சாமி பாடியது!

என்னவளே படத்தில் ஒரு பாடல் வரும். “ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கும் நெஞ்சே” என்று…எனக்கு அது ரொம்பவேப் பொருந்தும். உங்களுக்கு எப்படி?

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

Saturday, January 26, 2008

ஒரு வாரம் பின்தொடரப் போகும் மொக்கையின் குரல் :)

“கோ, உன்னதான் இந்த வாரம் தமிழ்மணத்துல நட்சத்திரமா தேர்ந்தெடுத்திருக்காங்களாமே. என்ன சொல்லப் போற?”

“என்னத்தங்க சொல்றது. இது எனக்கு வந்த சோதனையா? இல்ல படிக்கிறவங்களுக்கு வந்த சோதனையானு யோசிச்சுட்டு இருக்கேன்!”

“என்னப்பா? உன்ன மதிச்சு நட்சத்திரமாக்கியிருக்காங்க. நீ இப்படி சொல்ற”

“அய்யயோ. நான் தப்பா எதுவும் சொல்லலங்க. எப்பவும் நான் பாட்டுக்கு ஒரு ஓரமா கண்ணே, மணியே னு கவுஜ மட்டும் எழுதிகிட்டு இருந்தேன். அத மட்டும் படிக்கிறவங்கப் படிச்சுட்டுப் போயிடுவாங்க. நட்சத்திரமாகிட்டா இன்னும் கொஞ்சம் அதிகமா வந்து வாசிப்பாங்களே. இந்த வாரமும் எப்பவும் போல அன்பே, ஆருயிரே னு எழுதினா புதுசா படிக்க வர்றவங்களுக்கும் ஏமாற்றம்தான். வேற எதாவது எழுதலாம்னு பார்த்தா எனக்கு ஓரளவுக்குத் தெரிஞ்சதே அது மட்டும்தான். அதான் அப்படி சொன்னேன்”

“இந்தப் பதிவுக்கு மட்டும் “நட்சத்திர வாழ்த்துகள்” அப்படினு அதிகமா கொஞ்சம் பின்னூட்டம் வரும். அதுக்கு இத்தன பில்டப்பா? சரி அத விடு… நீ(யெல்லாம்) எதுக்கு வலைப்பதிவ ஆரம்பிச்ச?”

“இணையத்துல இலவசமா கிடைக்குதுன்னு சொன்னாங்க. சரினு ஒன்ன ஆரம்பிச்சுட்டேன் ;-) அது வந்துங்க, என்னோட கல்லூரி காலத்துல எப்பவுமே படிக்கிறதுக்கு ஏதோ ஒரு புத்தகம் (ஓசில தான்) கெடச்சுடும். படிக்க, கும்மியடிக்க னு என்ன மாதிரியே உருப்படாததுங்க எல்லாம் ஒன்னாவே சுத்துவோம். பொழுதும் போச்சு. கல்லூரி முடிச்சுட்டு வேலைல சேர்ந்தபின்னாடி ஒரு நாலு மாசம் பயிற்சின்னு சொல்லி மைசூர்ல சக்கையாப் பிழிஞ்சாங்க. அடுத்த நாலு மாசம் வேலையே கொடுக்காம கொல்ட்டி தேசத்துல சும்மா உட்கார வச்சிட்டாங்க. படிக்கிறதுக்கும் ஒன்னும் கிடைக்கல. கூடவும் நம்ம கூட்டாளிப் பயலுக ஒருத்தனும் இல்ல. சும்மா இருந்த நேரத்துல இணையத்துல மேஞ்சப்பதான் தமிழ்மணம், இ-கலப்பை எல்லாம் அறிமுகமாச்சு. ஒரு பக்கம் பதிவுகளுக்கு வாசகனா இருந்துகிட்டே, இன்னொரு பக்கம் +2 காதல், காதல் பயணம் னு கதைகள எழுதி நம்ம கூட்டாளிகளுக்கு மட்டும் மடல்ல அனுப்பிக்கிட்டு இருந்தேன். அதுல ஒரு ரணம்விரும்பி, இதையெல்லாம் வலைப்பதிவுல போட்றா மச்சான்னு உசுப்பேத்த (அவனத்தான் தேடிட்டு இருக்கீங்களா? கூட்டாளிய காட்டிக் கொடுக்கமாட்டோம்ல ;-) ) ஒரு சுபயோக சுபதினத்துல நானும் வலைப்பதிய ஆரம்பிச்சு ரெண்டு வருசம் ஓடிப்போச்சு. இதுதாங்க நான் வலைப்பதிய ஆரம்பிச்சதோட வரலாறு, புவியியல் எல்லாம்”

“அது சரி. ஒரே விசயத்த மட்டும் திரும்ப திரும்ப எழுதறயே. உனக்கே சலிக்கல?”

“என்னப் பண்றது வேற எதுவும் எழுதத் தெரியலையே :( ”

“ப்ரொஃபைல்ல உன்னோடப் படத்தப் போடாம, காதல் னு எழுதி வச்சிருக்கியே நீயென்னா லூசா?”

“கி..கி..கி… நான் வலைப்பதிவ ஆரம்பிச்சப்போ கருப்பு நிறத்துலதான் பின்னணி நிறம் வச்சிருந்தேன். அதுல என்னோட புகைப்படத்தயே போட்டிருந்தா கண்டிப்பா என் முகம் தெரிஞ்சிருக்காதுங்க. அதனாலதான் அப்போதைக்கு கருப்பு பின்னணியில வெள்ளைல எழுதியிருந்தது பிடிச்சிருந்ததால அத வச்சேன். அப்புறம் தமிழ்மணத்துல வரும்போது புகைப்படமும் தெரியுமாம்ல. சரி ‘காதல்’ னு இருந்தா நெறைய பேர் வாசிப்பாங்கனு பாத்தா அந்த வார்த்தைய பார்த்ததும் தெறிச்சு ஓடினதுதான் நெறைய பேர்னு நெனைக்கிறேன். ஆனா அந்தப் படத்துனால என்ன காதல் கவுஜன் னு கொஞ்சம் பேர் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. அது வேற விசயம் ;-) ”

“இப்போ மட்டும் எதுக்கு உன்னோட புகைப்படத்த போட்டுட்டியாம்?”

“இந்த வாரம் நீ நட்சத்திரமாகிட்டதால உன்னோட வலைப்பதிவுக்கு நெறைய திருஷ்டி வர வாய்ப்பிருக்கு. அதப் போக்கனும்னா வலைப்பதிவோட மூலைல ஒரு திருஷ்டி பொம்மைய தொங்கவிடுன்னு சிவல்புரி சிங்காரம் தனி மடல்ல கேட்டுகிட்டாரு. அதான் :-) ”

“சரி சரி இந்த வாரமாவது வழக்கமாப் போட்ற மொக்க கவுஜைய விட்டுட்டு உருப்படியா எதாவது எழுது”

“உருப்படியா எழுத முயற்சி பண்றேன். ஆனா கவுஜ எழுதலன்னா எனக்கு மனசு நடுங்குமே”

“உன்னையெல்லாம் திருத்த முடியாதுடா”

“கி..கி..கி…நீங்க யாருன்னு சொல்லவேயில்லையே”

“கண்ணாடியப் போயிப் பாரு”


----


ஆரம்பமே படு மொக்கையா இருக்கா? அப்படின்னா இதப் பாருங்க!

அடுத்த நட்சத்திரப் பதிவு மாலை நான்கு மணிக்கு ;-)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Monday, January 07, 2008

கதையெழுதிய கதை

பிப்ரவரி மாதப் பதிவுகளுக்காக மல்லாக்கப் படுத்து விட்டத்தை வெறித்தபடி சில காதல் கவிதைகளை யோசித்துக் கொண்டிருந்த போது

கோபித்துக் கொண்டு
என்னோடு நீ பேசுவதில்லையென
முருகனிடம் முறையிடப்
போனால்
அவனோ,
இரண்டு நாட்களாய்
வள்ளி தன்னிடம்
பேசுவதில்லையென
மயிலிடம் புலம்பிக் கொண்டிருக்கிறான்.

இப்படி ஒரு கவுஜையை எழுதி அறைத் தோழனிடம் காட்டிய போது ‘நல்லாதான் இருக்கு. ஆனா இது கவிதை எழுத வேண்டிய சரக்கு இல்ல. இதையே வச்சி ஒரு கதை எழுது’ என்று சொன்னபொழுது அதை எப்படி கதையாக்குவது என்ற யோசனை துவங்கியது. அப்போதுதான் சர்வேசனின் நச்சுனு ஒரு கதை போட்டி அறிவிப்பும் வந்திருந்தது. அவசரமாக, காதலனுக்கும் காதலிக்கும் ஊடல் போலவும் அதனைத் தீர்க்க காதலன் கோவிலுக்கு போகும்போது அங்கே முருகனும் இதே மாதிரி புலம்பி கொண்டிருப்பதைப் போல ( ஒருவரியில சொல்லும்போதே சிரிப்பு வருதா? விடுங்க ;-) ) வும் எழுதி அறைத் தோழனுக்கு மட்டும் அனுப்பினேன். ‘ரொம்ப கேவலமா இருக்கு’ என்று சொல்லக் கூச்சப் பட்டுக்கொண்டு நான்கைந்து வாக்கியங்களில் அதனையே மென்மையாக சொல்லியிருந்தான். மீண்டும் அதேக் கதையை முருகனே சொல்லுவதுபோல (ஆனால் சொல்லுவது கடவுள் முருகன் தான் என்பது கடைசியில் தெரிவது போல) ஊடல் என்ற பெயரில் கதையாக எழுதி சில நண்பர்களுக்கு மட்டும் அனுப்பியிருந்தேன். கொஞ்சம் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனாலும் ‘திருப்பம் இருக்கிறது. ஆனால் கதையில் ஏதோ குறைவது போல இருக்கிறது’ என்று நண்பர் நந்தா சொன்னது உண்மை போல இருந்தது. மீண்டும் ஒருமுறை அதனை வாசித்துப் பார்த்தால் முதன் முறை இருந்த அந்த ஆர்வம் இல்லை. என் கல்லூரி நண்பர்களும் ‘இது நல்லாதான் இருக்கு. ஆனா உங்கிட்ட இருந்து இதவிட இன்னும் நல்ல கதைய எதிர்பாக்குறோம்’ என்று உசுப்பேத்த, அந்தக் கதையை வலைப்பதிவில் இட்டிருந்தாலும் சர்வேசன் போட்டிக்கு அதனை இணைக்கவில்லை.

அதன் பிறகு ‘அஞ்சலி’ என்றொரு கதையை எழுதி சில நண்பர்களுக்கு மட்டும் மடலில் அனுப்பியிருந்தேன். பாதி பேர் நன்றாக இருந்தது என்றும் பாதி பேர் மொக்கை என்றும் சொல்லவும் அனுப்பலாமா வேண்டாமா என்று குழப்பமாக இருந்தது. முன்பு உசுப்பேத்திய நண்பர்களுள் ஒருவன், ‘இது மாதிரி ஒரு மொக்க கதைய உங்கிட்ட இருந்து எதிர்பார்க்கல’ என்று சொல்லவும், ‘பழைய காலத்து வார இதழ்களில் வரும் கதை போல இருக்கிறது’ என்று பிரேமும் சொல்லவும் அந்தக் கதை மடலோடு மடிந்துபோனது. வலைப்பதிவேறவில்லை.

இறுதியாக ஒரு தொடர்கதையாக எழுத வைத்திருந்த கருவை முடிந்தளவுக்கு சுருக்கி சென்னைக் காதலும் திருச்சிக் காதலும் என்ற பெயரில் எழுதி நண்பர்கள் சிலருக்கும், பண்புடன் குழுமத்திற்கும் அனுப்பியிருந்தேன். கதையில் இருந்த சில குறைகளை பண்புடன் நண்பர்கள் அபுல்ஃபாசல் அவர்களும், பிரேம் அவர்களும் சுட்டிக் காட்ட அவற்றை சரி செய்து மீண்டும் பதிவிட்டேன். போன கதையை மொக்கையென்ற நண்பனும் கூட இதனைப் பாராட்டியிருந்தான். முடிவை இன்னும் கொஞ்சம் சுருக்க சொல்லியிருந்தான். ஆனால் செய்யாமல் விட்டு விட்டேன். கதை மிகவும் நீளமாக இருந்தது என்பதையே பலரும் குறையாக சொல்லியிருந்தார்கள். வலைப்பதிவில், பதிவின் நீளத்தைப் பார்த்து படிக்கத் துவங்கும் ரகம் தான் நானும் :) மக்கள் வாசிப்பார்களா என்பதே சந்தேகமாகத் தான் இருந்தது. சர்வேசனும் கூட போட்டி விதிகளுள் கதை “சிறு”கதையாக இருக்க வேண்டுமென்று சொல்லியிருக்கவும் அவரிடமே கேட்டிருந்தேன் இதனை சேர்க்கலாமா? என்று. ‘நச்’க்காக கண்டிப்பாக சேர்க்கலாம் என்று சொல்லி அவரும் இணைத்துக் கொண்டார்.

போட்டியில் இணைக்கப் பட்டிருந்த எல்லாக் கதைகளையும் வாசித்த பிறகு இன்னும் சிறியதாக எழுதியிருக்கலாமோ என்ற எண்ணம் வராமலில்லை. முக்கியமாக மோகன் தாஸ், அரைபிளேடு, நாடோடி இலக்கியன், பெனாத்தல் சுரேஷ், இலவசக்கொத்தனார் ஆகியோரது கதைகளை வாசித்த போது அவை சிறியதாகவும், சிறப்பானதாகவும் தோன்றின.

ஆனாலும் எப்படியோ தப்பித்து முதல் கட்ட தேர்வில் தேறி இறுதி கட்டத்திற்கு வந்த போது, நடுவர்களும் மதிப்பிடுவார்கள் என்றதும் “இந்தப் பிரதியின் கருத்தியலில் உள்ள நுண்ணரசியல் சமூகக் கேடானது”, “மற்றுமொரு வார இதழ் பாணியிலான காதல் கதை” இந்த மாதிரி எதாவது நடுவர்கள் கதையைத் துவைத்து விடுவார்களோ என்று தான் நினைத்துக் கொண்டேன் :) ஆனால் நடுவர்களும் சிறப்பான மதிப்பெண்கள் கொடுத்து ஊக்கப் படுத்திவிட்டார்கள்!!!

உண்மையில் வாக்குகள் எதிர்பார்ப்புக்கும் அதிகமாகவே விழுந்திருந்தன. ஆரம்பம் முதலே நல்ல விமர்சனங்களைத் தந்த எனது அறைத்தோழன், கல்லூரி நண்பர்கள், அலுவலக/மின்மடல் சகோதரிகள் ( போட்டியப் பத்தி, தெரிஞ்சவங்களுக்கு எல்லாம் பிரச்சாரம் பண்ணின அளவுக்கு பாசக்காரத் தங்கச்சிங்க), சுவரொட்டி ஒட்டாத குறையாக விளம்பரம் செய்த நண்பர் பிரேம்குமார், “நம்ம கதைல காதல் இருக்கு செல்லம். கண்டிப்பா ஜெயிக்கும் :)” என்று உற்சாகப் படுத்திய நண்பன் ஸ்ரீ, கதையை சீர்படுத்தி,ஊக்குவித்த பண்புடன் குழும நண்பர்கள் – அபுல், ப்ரியன், எழில் இன்னும் பலர், பின்னூட்டமிட்டு, மடலனுப்பி வாழ்த்திய வலைப்பதிவர்கள்/வாசகர்கள், வாக்களித்த வாக்காளர்கள், நடுவர்கள் அனைவருக்கும் நன்றி.

புத்தாண்டில் ஓர் இனிய துவக்கமாக இது அமைவதற்கு வாய்ப்பளித்த சர்வேசனுக்கு பாராட்டுகள் கலந்த நன்றி.

முன்பே சொல்லியிருந்தால் நானும் வாக்களித்திருப்பேனே என்று கடிந்து கொண்ட பாசக்கார நட்புகளுக்கும் நன்றி :)

பிகு – எதுக்கிப்போ இவ்வளவு ஆர்ப்பாட்டம்னு கேட்காதீங்க :) எழுதிய மூன்றாவது சிறுகதைக்கே ஒரு அங்கீகாரம் கிடைச்ச மகிழ்ச்சி வேற ஒன்னுமில்ல ;-) முதல் இரண்டு சிறுகதைகளும் கூட ஓரளவுக்கு நச் கதைகள் தான். படித்துப் பாருங்கள் – ஒரு குட்டிக் காதல் கதை , ஊடல்

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

Monday, November 05, 2007

கல்யாண வீட்ல மொய் எழுதியிருக்கீங்களா?

முன்னலாம் கல்யாண வீடுகள்ல ஒவ்வொரு வேலையையும் செய்யறதுக்குனு சொந்தக்காரங்கள்ல சில நிபுணர்கள் இருப்பாங்க.

ஸ்டோர் ரூம் பாத்துக்கிறதுக்குனு ஒருத்தர் இருப்பார். சமையல் காரங்க சொன்ன அளவவிட கொஞ்சம் அதிகமாவேதான் நாம பொருட்கள் எல்லாம் வாங்கிப் போடுவோம். அத அளவா வேணுங்கும்போது மட்டும் கொஞ்சம் கொஞ்சமா ரிலீஸ் பண்ணி கால்வாசிப் பொருட்கள மிச்சம் பண்ணி கல்யாணம் முடிஞ்சதும் வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்துடுவாங்க இந்த ஸ்டோர் கீப்பர்ஸ்.

அப்புறம் பந்தி பரிமாறுவதும் ஒரு கலை. வரிசையா ஒவ்வொரு ஐட்டமா வச்சிட்டுப் போறதுதானன்னு சாதாரணமா நெனச்சுட முடியாது. பந்தியில பொதுவா யாருமே என்ன வேணும்னு கேட்கிறதுக்கு தயங்குவாங்க. அவங்க முகக்குறிய வச்சே என்ன வேணும்னு கேட்டுப் பரிமாறுறதுல இருந்து, எவ்வளவு பேர் சாப்பிட்டாங்க, இன்னும் எவ்வளவு பேர் வருவாங்க, என்னென்ன ஐட்டம் தீந்து போச்சு, பத்தலன்னா ரெடி மேடா என்ன செய்யலாம்? இப்படி முடிவெடுக்கிற வல்லமை படைச்ச ஆளுங்க தான் இதுக்கெல்லாம் லாயக்கு.

அடுத்தது பந்தல், மேளம், போக்குவரத்து வசதி, லைட் செட், மேடை அலங்காரம் இப்படி அததுக்குனு இருக்கிற ஆளுங்களப் பிடிச்சி சேர்க்கிறதுக்கு நல்ல வெளிவட்டார தொடர்பு இருக்கிற ஆளு வேணும். கடைசி நேரத்துல எது வேணும்னாலும் இவருகிட்ட சொன்னா போதும் எங்க இருந்தோ, எப்படினோ தெரியாது ஆனா கேட்டது கிடைச்சிடும். எப்பவும் கல்யாணம் முடிஞ்சு மண்டபத்த விட்டு கடைசியா போற ஆளு இவராத்தான் இருப்பாரு.

ஆனா இப்போ இந்த மாதிரி எல்லா வேலைகளையும் அவுட்சோர்சிங் பண்ணிடறாங்க. சமையல் + பரிமாற ஒரே காண்ட்ராக்ட். யூனிஃபார்ம போட்டுகிட்டு அவங்களும் மெசின் மாதிரி வேலைய முடிச்சிட்றாங்க. அப்புறம் மண்டபம் + மேடை + பந்தல் எல்லாம் ஒரே கணக்கில் வந்துடுது. எதுக்கும் பெரிசா அலைய வேண்டியதில்லை. ஆனா எல்லா வேலையும் இப்படி அவுட்சோர்சிங்க்ல போனாலும் இன்னமும் சொந்தக்காரங்களே பாத்துக்கிட்டு இருக்கிற வேலை இந்த மொய்யெழுதுறது மட்டும்தான். பண விசயமாச்சே... நம்மாளுங்க உசாராத்தான் இருப்பாங்க :)

தாலி கட்டின அடுத்த நொடியே மண்டப வாசல்ல ரெண்டு பக்கமும் ஆளுக்கு ஒரு டேபிள் சேர இழுத்துப் போட்டு மாப்பிள்ளை & பொண்ணு வீட்டு ஆளுங்க உக்காந்துடுவாங்க. பொண்ணு வீட்டு மொய், மாப்பிள்ள வீட்டு மொய் ரெண்டும் கலந்துடக் கூடாதுனு கொஞ்சம் உசாரா எதிர் கோஷ்டி பக்கம் போற ஆளுங்கள நோட் பண்ணிகிட்டே இருக்கனும். நாற்பது பக்க நோட்டெல்லாம் போய் இப்போ அர குயர் நோட்டு வந்துடுச்சு. ஒரு ஆள், பெயர் + தொகை எழுதிகிட்டே வர இன்னொரு ஆள் பணத்த வாங்கி ஒரு மஞ்ச பைக்குள்ள போட்டுக்குவாரு.(இந்த மஞ்ச பை எப்போதான் மறையும்?) எங்க வீட்டு விசேசங்கள்ல எப்பவும் எல்லா வேலைகள்லையும் கை வச்சிட்டாலும் இந்த மொய்யெழுதுற வேலைல இப்போ கடசியா ரெண்டு மூனு கல்யாணத்துலதான் உக்காந்தேன். எனக்கு இருக்கிற பயம் என்னன்னா என்னோட கையெழுத்து பதினாலு கோழி சேந்து கிறுக்கின மாதிரியே இருக்கும். அத அந்த மொய்நோட்டுல காலத்தால் அழியாச்சின்னமா வைக்கனுமாங்கறதுதான். ஆனா பழைய மொய் நோட்டுகளப் பாத்த பின்னாடி என் கையெழுத்து எனக்கே அழகா தெரிஞ்சது. அப்புறம் துணிச்சலா உக்காந்தாச்சு. இப்ப போன மாசம் தங்கச்சி (சித்தப்பா பொண்ணு) கல்யாணத்துல மொய் எழுத உக்காந்தப்ப அத ஒரு பதிவா போடுவேன்னு நெனைக்கல ;-)

மொத பேரு எழுதும்போதே கஷ்டமாப் போச்சு. பேர ஏழுமலை னு சொன்னா எனக்கு ஏழுமலைனு எழுத வர மாட்டேங்குது. Ezumalai னு எழுதப் போறேன். மொத பக்கம் ஒரு இருபது பேர் எழுதின பின்னாடிதான் தமிழ் கொஞ்சம் தானா வர ஆரம்பிச்சுது. இனிமே அப்பப்போ தமிழ்ல பேனா எடுத்து எழுதனும்.

ஆனா கிராமத்து ஆளுங்க இன்னமும் தமிழோடதான் இருக்காங்க. பேர் சொல்லும்போது ஒருத்தர் ஆவன்னா திருஞானம் னு சொன்னார். நானும் 'ஆவன்னா திருஞானம்'னே தான் எழுதினேன். அவரு தம்பி ஆவன்னா தலையெழுத்துப்பா ன்னாரு. தலையெழுத்தா? இவருக்கு தலையெழுத்து கூட தெரிஞ்சிருக்குமோனு பாத்தா இனிசியல தான் தலையெழுத்துனு சொல்றாருனு புரிஞ்சது. அப்புறம் அவர் பேர ஆ. திருஞானம்னு ஒழுங்கா எழுதியாச்சு. தலையெழுத்த அதாங்க இனிசியல இன்னமும் தமிழ்ல சொல்ற ஆளுங்களும் இருக்காங்க.

இன்னொருத்தர் பேர சொல்லிட்டு 'முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்'னு அடுப்புக்குள்ள போடுங்கன்னாரு. எந்த அடுப்புக்குள்ள போட்றதுன்னு நான் முழிக்க, அவர் திரும்ப திரும்ப அடுப்புக்குள்ள போடுங்க அடுப்புக்குள்ள போடுங்கன்னே சொல்லிட்டு இருந்தாரு. எனக்கு அப்புறம் தான் புரிஞ்சது அவர் அடப்புக்குள்ள ( இந்த மாதிரி அடைப்புக்குறிக்குள்ள:-) ) போட சொல்றாருன்னு. நாந்தான் இன்னும் ப்ராக்கெட்டுக்குள்ள போட்டுட்டு இருக்கேன் :(

இன்னொரு பாட்டி வந்தாங்க. 'யாரு சின்னபுள்ளயோட சின்ன மவனா? நல்லாருக்கியா கண்ணு'னு கேட்டுட்டு சுருக்குப் பையில இருந்து பணத்த எடுத்து கொடுத்துட்டு தாத்தா பேர்ல எழுதீருனு சொல்லிட்டாங்க. நான் காலேஜ் சேந்த பின்னாடி எங்க வீட்டுக்குப் போறதே எப்போவாதுதான். சொந்த கிராமத்துக்குப் போய் பல வருசமாச்சு. சொந்தக்காரங்க பேரு, உறவுமுறையெல்லாம் அம்மாகிட்ட அடிக்கடி கேட்டுதான் ரெப்ரஷ் பண்ணிக்குவேன். இவங்களே எந்த பாட்டி, அம்மா வழி சொந்தமா, அப்பா வழி சொந்தமானு ஒன்னும் புரியல. இதுல தாத்தா பேருக்கு நான் எங்க போறது? தாத்தா பேரு என்னனு அவங்க கிட்டவே கேட்கிறதுக்கும் தயக்கமா இருந்துச்சு. எப்பவும் ஒரு மூலைல அமைதியா இருந்தாலும் அப்பப்போ என் மூளையும் வேலை செய்யும். 'தாத்தாவோட முழுப் பேரு (என்னமோ பாதிப் பேரு எனக்குத் தெரிஞ்சுட்ட மாதிரி) என்னம்மாயி?' னு கேட்டேன். (அந்த பாட்டி எனக்கு அம்மாயி முறையா அப்பாயி முறையானும் தெரியல) நல்லவேளை பாட்டிக்குத் துணையா வந்த ஒரு அக்கா தாத்தாவோட முழுப் பேர சொல்லிக் காப்பாத்திட்டாங்க. அப்புறம் ஊர்ப்பேரயும் நான் கேட்டதும் 'ஒம் பேரன் ஊர் பேரு கூட தெரியாத மாதிரி கேக்குது பாரு'னு சொல்லி சிரிச்சுட்டு அந்த அக்காவும் கைவிரிச்சுட்டுப் போய்ட்டாங்க. எனக்கும் ஒரு வழியும் தெரியல. தாத்தா பேருக்கு முன்னாடி அம்மா சொந்த ஊரையும், பின்னாடி அப்பா சொந்த ஊரையும் போட்டுட்டேன். ரெண்டுல ஒரு ஊராதான் கண்டிப்பா இருக்கும் :-)

அப்புறம் ஒருத்தர் வந்தாரு. 'பொனாசிப்பட்டி நரசிங்கபுரம் வடக்குத் தோட்டம் சொக்காஞா பெரிய மவ வூட்டுப் பேரன், கான்னா ராமலிங்கம், தாய் மாமன் பணமாக எழுதிக்கொண்டது...' னு ஒரு தொடர்கதை எழுதற மாதிரி சொல்லிக்கிட்டே போறாரே ஒழிய நிறுத்தமாட்டேங்கறாரு. அவரு பேர எழுதுறதுக்கே தனியா மொய் வசூலிச்சிருக்கனும்.

அப்புறம் இப்போ புதுசா இன்னொன்னு பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. பணத்த ஒரு கவருக்குள்ள போட்டு வெளிய ஊரு பேரு எல்லாம் தெளிவா எழுதிக் கொடுத்துட்றாங்க. நமக்கும் அது வசதிதான். ஆனா என்ன... உள்ள பணம் இருக்குதான்னு கொஞ்சம் பாத்துக்கனும் :-) அப்படிதான் ஒருத்தரு வந்தாரு கையில ஒரு ஏழு கவரோட. தம்பி அமவுண்ட் கரெக்டா இருக்கானு பாத்துக்கப்பானு பக்கத்துலையே நின்னுட்டாரு. கவருக்கு வெளிய குறிச்சிருந்த தொகையும் உள்ள இருக்கிற பணமும் சரியா இருக்கானு ஏழு கவர்லையும் சரி பாத்துட்டு சரியா இருக்குண்ணே னு சொன்னேன். போகும்போது கேட்டாரு. இது மாப்பிள்ள வீட்டு மொய் தான னு. அத மொதல்லையே கேட்டிருக்கலாம்ல? 'இது பொண்ணு வீட்டு மொய்ணே மாப்பிள்ள வீட்டு மொய் அந்தப்பக்கம்'னு சொல்லி அனுப்பிட்டேன். அவர் கிட்ட ஆமான்னு சொல்லியிருந்தா சித்தப்புக்கு ஒரு அமவுண்ட் லாபம் தான் ;-)ஆனா விட்டுட்டேன்...

இதனால நான் சொல்ல வர்றது என்னன்னா அடுத்த முறை சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு போனா மொய் வைக்கிறீங்களோ இல்லையோ மொய் எழுதுங்க, இந்த மாதிரி ஒரு மொக்கப் பதிவு போடறதுக்காகவாவது பயன்படும் :-)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Tuesday, September 04, 2007

ஐதராபாத் - கோவை - கரூர் - பழனி

கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் வெள்ளிக்கிழமை கரூரில் நடந்தது எங்கள் புதுமனைப் புகுவிழா.
வியாழக்கிழமை மதியம் 1 மணிக்கு ஹைதரபாத்தில் இருந்து கோவைக்குப் புறப்பட்டேன். அது கோவை வழியாக கொச்சி செல்லும் ஏர் டெக்கான் விமானம்.
ஓணம் நெருங்கியதால் விமானத்தில் சேட்டன், சேச்சிகளின் கூட்டம்தான் அதிகமாக இருந்தது. முத்து நகரத்தை வானில் இருந்து கொஞ்சம் ரசித்துக்கொண்டிருக்கும்போது,
பணிப்பெண் டீ வேண்டுமா என்றார். தலையாட்டினேன். வெந்நீரும் , டீத்தூளும் கொடுத்துவிட்டு நகர்ந்து விட்டார் நானே கலந்து குடித்த டீ க்கு 20 ரூபாய் அதிகம்தான். கரூர் டீக்கடையில் மாஸ்டரே கலந்து கொடுக்கும் டீ, இரண்டு ரூபாய் ஐம்பது காசுதான் :)

கோவையில் இறங்கி அக்கா, அண்ணன் மகள்களுக்கு ஆடைகள் வாங்க ஸ்ரீதேவிக்கு சென்றபோது அங்கும் சேச்சிகளின் கூட்டம். ஸ்ரீதேவியில் ஓணம் வரை ஆடித்தள்ளுபடியை நீட்டித்திருந்தார்கள்.பிறகு கோவை – கரூர் பேருந்து பயணம். இரண்டாண்டுகளுக்கு முன்பு வரை கல்லூரியில் படித்த காலங்களில் மாதமொருமுறையோ இரண்டுமுறையோ பயணம் செய்த பழக்கமான பாதை. சன்னலோரத்தில் மழையை ரசித்தபடியே விகடனில் மூழ்கியிருந்தேன். காங்கேயம் வந்ததும் “வண்டி 5 நிமிசம் தாங்க நிக்கும் டீ குடிக்கிறவங்க சீக்கிரமா குடிச்சிட்டு வாங்க” கண்டக்டர் சத்தம் கொடுத்து விட்டு அவரும் டீ குடிக்கப் போய் விட்டார். கல்லூரி காலங்களில் எப்போதும் இங்கே இறங்கி ஒரு கிங்ஸும் ஒரு டீயும் வாங்கிக் கொண்டு டீ ஒரு சிப் உறிஞ்சிக்கொண்டு கிங்ஸ் ஒரு பஃப் இழுத்துக்கொள்வேன். அது ஒரு கனாக் காலம் :) அன்று இரண்டு டீ டோக்கன் மட்டும் வாங்கி இரண்டு டீயைமட்டும் குடித்து விட்டு வந்து விட்டேன். வீட்டுக்குப் போய்ச் சேர இரவாகிவிட்டது.

வெள்ளிக்கிழமை புதுமனைப் புகும்விழா எல்லாம் முடிந்து கொஞ்சம் ஓய்வு. அடுத்த நாள் சனிக்கிழமை அக்கா மகளுக்கு மொட்டையடிக்க பழனிக்குப் பயணம் அதையும் முடித்துக்கொண்டு அன்று மாலை வந்து பழைய வீட்டில் இருந்த பொருட்களைக் அடுக்கிக் கட்டிக் கொண்டிருந்தோம். நண்பர்களின் அழைப்புகள் துவங்கின.
“டேய் நீ எஸ்கேப்பாகிட்டியா?”
“என்னடா கால அட்டண்ட் பண்ற? அச்சச்சோ அப்ப உயிரோடதான் இருக்கியா”
“உனக்கு ஒன்னும் ஆகலியா? மச்சான் தப்புச்சிட்டியா?”
நக்கலோடு நண்பர்கள் நலம் விசாரித்தபோதுதான் தெரியும் ஹைதராபாத் குண்டுவெடிப்பைப் பற்றி. நான் இருப்பது ஹைதராபாத்துக்கு பக்கத்து மாவட்டத்தில் ஒரு கிராமம் அங்கெல்லாம் யாரும் குண்டுவைக்கமாட்டார்கள் என்று சொல்லி அவர்களைக் கடுப்பேத்திவிட்டு ஐதராபாத் நண்பனை அழைத்தேன். அவனோ, “நமக்கெல்லாம் ஒன்னுமில்லடா ஒருவேளை நீயும் இங்க இருந்திருந்தா குண்டு வெடிச்ச ஏரியாவுக்குதான் சுத்தப் போயிருப்போம்” என்று சொல்லி என்னைக் கடுப்பேத்தினான் :)

அன்று இரவு புதிய வீட்டில் மின்விசிறிகளை மாட்டுவதற்கு ஆட்கள் வந்திருந்தார்கள். மூன்று விசிறிகளை முடித்துவிட்டு நான்காவது மாட்டும்போது அது கொஞ்சம் புதிய மாடல் மாதிரி இருக்கவும் உள்ளே கைவிட்டு போல்ட் மாட்ட வசதியாக இல்லை. ரொம்ப நேரம் முயற்சி செய்து கடுப்பானவர் திட்ட ஆரம்பித்துவிட்டார், “ இவனுங்க புதுசா டிசைன் பண்றன்னு சொல்லி ஏசியில உட்காந்துகிட்டு கம்ப்யூட்டர்ல டிசைன் பண்ணிட்றானுங்க… நம்ம தாவு தான் தீருது… @$@#$ டிசைன் பண்ணவனையே கூட்டிட்டு வந்து நீயே மாட்றான்னு சொல்லனும்…அப்பத் தெரியும்… ஒரு நாள் முழுக்க நெம்புனாலும் ஒரு ஃபேனக் கூட மாட்ட மாட்டான்” எப்படியோ திட்டிக் கொண்டே அதை மாட்டி விட்டார். கடைசி வரைக்கும் நான் ஒரு பொட்டி தட்றவன்னு காட்டிக்கவே இல்லையே :)

ஞாயிற்றுக் கிழமை காலையிலிருந்தே பொருட்களையெல்லாம் புதியவீட்டிற்கு மாற்றிவிட்டு கரூர் பேருந்து நிலையத்திற்கு நான் வந்த போது மணி 2:30 ஆகியிருந்தது.
6 மணிக்கு எனக்கு சேலத்தில் ரயில்! சேலம் பேருந்தில் ஏறினாலும் நாமக்கல்லுக்கே சீட்டு வாங்கினேன். நாமக்கல்லில் எல்லாப் பேருந்துமே 15 நிமிடம் நிறுத்துவார்கள். அதனால் நாமக்கல்லில் இறங்கி முன்னால் செல்லும் (அப்ப மத்தவண்டிலாம் பின்னால போகுமான்னு கேட்காதீங்க) வண்டியில் ஏறிப் போய்க்கொண்டிருந்தபோது கொஞ்ச நேரத்தில் நான் கரூரில் இருந்து வந்த வண்டி எங்களை முந்திக் கொண்டு சென்றது. அதிலேயேப் போயிருக்கலாமோ என்று யோசித்தேன். ஆனால் முந்தி சென்ற வண்டி வாழைக்காய் ஏற்றி வந்த ஒரு லாரியோடு மோதி லாரி கவிழ்ந்திருந்தது. பேருந்திலிருந்தவர்களுக்கு பெரிதாக பாதிப்பில்லை என்றே நினைக்கிறேன். நல்ல வேளை நான் அதில் செல்லவில்லையென்று நினைத்துக் கொண்டது மனம். கொஞ்ச நேரத்தில் எப்படியெல்லாம் மாற்றி நினைக்க ஆரம்பித்து விடுகிறது அது!

ரயில் தர்மபுரியை நெருங்கும்போது அக்காவிடமிருந்து அழைப்பு, “குட்டி, நியூஸ் தெரியுமா பழனியில இன்னைக்கு ரோப் கார்ல ஒரு கேபின் அறுந்து விழுந்ததுல 4 பேர் எறந்துட்டாங்களாம்” எனக்கு பயங்கர அதிர்ச்சி. நாங்களும் பழனி ஏறி இறங்கியது அதே ரோப் காரில்தான். அதுவும் முதலில் நாங்களும் ஞாயிறுதான் பழனி செல்வதாக இருந்தது, நான் ரயிலைப் பிடிக்க தாமதமாகிவிடுமென்றுதான் சனிக்கிழமையன்றே போய் வந்தோம். ஐதராபாத், பழனி, நாமக்கல் னு எல்லா எடத்துலயும் எஸ்கேப்பாகிட்டே வந்திருக்கேன் :) ரயிலில் எனக்கு லோயர் பெர்த் கிடைத்திருந்தது. சைட் லோயரில் 0.1 டன் எடையில உட்காந்திருந்த ஒருத்தர் படுக்கும்போது எனக்கு மேல் இருந்த மிடில் பெர்த்தில் ஏறினார். எனக்கென்னமோ அதுதான் எமனுடைய அடுத்த அட்டெம்ட்டா இருக்குமோ என்று தோன்றியது. போன வாரம் பார்த்த எமதொங்கா தெலுங்கு படமெல்லாம் அப்போ எதற்கு ஞாபகத்துக்கு வந்ததுன்னே தெரியல. மிடில் பெர்த்த தாங்கிப் பிடித்திருக்கும் அந்த சங்கிலியைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தேன். நல்லா உறுதியாகதான் இருந்தது. அந்த நம்பிக்கையிலேயே தூங்கி ஒருவழியாக பத்திரமா வந்து சேர்ந்துட்டேன்! :)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Friday, July 20, 2007

நான் ரசிக்கும் பாடல்கள் - 4

பாடல் : தேவதையக் கண்டேன்
படம் : காதல் கொண்டேன்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
குரல் : ஹரிஷ் ராகவேந்தர்
வரிகள் : நா. முத்துக்குமார்

தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன்
என் உயிருடன் கலந்துவிட்டாள்.
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள்
என் முகவரி மாற்றி வைத்தாள்.

ஒரு வண்ணத்துப்பூச்சி எந்தன் வழிதேடி வந்தது
அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது.
தீக்குள்ளே விரல் வைத்தேன்தனித்தீவில் கடைவைத்தேன்
மணல்வீடு கட்டிவைத்தேன்.

(தேவதையை)


தேவதை தேவதை தேவதை தேவதை அவளொரு தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை அவளொரு தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை

விழி ஓரமாய் ஒரு நீர்த்துளி வழியுதே என் காதலி
அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் போதும் போதும்
அழியாமலே ஒரு ஞாபகம் அலைபாயுதே என்ன காரணம்
அருகாமையில் உன் வாசம் வீசினால் சுவாசம் சூடேறிடும்
கல்லறை மேலே பூக்கும் பூக்கள்
கூந்தலைப் போய்த்தான் சேராது
எத்தனை காதல் எத்தனை ஆசை
தடுமாறுதே தடம் மாறுதே
அடி பூமி கனவில் உடைந்து போகுதே

(தேவதையை)

தோழியே ஒரு நேரத்தில் தோளிலே நீ சாய்கையில்
பாவியாய் மனம் பாழாய்ப் போகும் போகும் போகும்
சோழியாய் என்னை சுழற்றினாய் சூழ்நிலை திசை மாற்றினாய்
கானலாய் ஒரு காதல் கண்டேன் கண்ணை குருடாக்கினாய்
காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம்
காற்றிடம் கோபம் கிடையாது
உன்னிடம் கோபம் இங்கு நான் கொண்டால்
எங்கு போவது என்ன ஆவது
என் வாழ்வும் தாழ்வும் உன்னைச் சேர்வது.

(தேவதையை)

(ஒரு வண்ணத்துப்பூச்சி)

பாடலைக் கேட்க :


Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க

Wednesday, June 27, 2007

எட்டாக்கனி

எட்டு விளையாட்டுக்கு என்னை அழைத்த சிறிலுக்கு நன்றிகள். என்னைப் பற்றி பெருமையான எட்டு விசயங்கள் எழுத எதுவுமில்லை. அதனால் என்னைப் பற்றிய எட்டு விசயங்களை மட்டும் பகிர்ந்துகொள்கிறேன்.

1. "அருட்பெருங்கோ நல்ல தமிழ்ப் பெயர், ஆனா வாய்லதான் நுழைய மாட்டேங்குது" - என்னோடப் பெயரைக் கேட்டதும் பெரும்பாலானவர்கள் சொல்றது இதுவாத்தான் இருக்கும். அதக் கொஞ்சம் தெளிவாக்க இதை ஒரு வாய்ப்பா எடுத்துக்கறேன். என்னோட இயற்பெயர் சிவசாம்ராஜ். தமிழ் மேல இருந்த பாசத்துல சாம்ராஜ், பெருங்கோ ஆகிட்டான் (சாம்ராஜ் ‍- பேரரசன் - பெருங்கோ). எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால, பேர்ல இருந்த சிவமும் பிடிக்கல, அதையும் மாத்தலாம்னு யோசிச்சப்போதான் அன்பே சிவம்னு கமல் சத்தம் போட்டார். சரி அன்பு னு மாத்தலாம்னு யோசிக்கும்போதுதான் என்னோட சிற்றறிவுக்கு, கொஞ்ச நாள் முன்னாடி நான் எங்கேயோ படிச்ச ஒரு விசயம் ஞாபகத்துக்கு வந்தது. குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் இந்த மாதிரி நமக்குப் பழக்கமானவங்க மேல காட்டறதுக்கு பேர்தான் அன்பு, ஆனா முன்னப்பின்ன பழக்கமில்லாத எல்லார் மேலேயும் காட்டற அன்புக்கு அருள்னு பேர் அப்படினு எங்கேயோ படிச்சிருக்கேன். இப்படிதான் சிவம் அன்பாகி , அன்பு அருளாகி, இறுதியா சிவசாம்ராஜ்- அருள்+பெருங்கோ - அருட்பெருங்கோ ஆகிட்டேன். (அருட்பெருங்கோனு சும்மா பேருக்குதான் வச்சிருக்கேன், இன்னும் கெசட்ல எல்லாம் மாத்தல)

2.இன்னொரு விசயம் சொல்லனும்னா, நான் எப்பவும் தமிழ்ல தான் கையெழுத்துப் போடறேன். ஆரம்பத்துல ம.சிவசாம்ராஜ் னு போட்டுட்டு இருந்தது, அப்புறமா ம.சிவசாம்ராசு ஆகிடுச்சு. நான் எங்க நிறுவனத்துல வேலைக்கு சேர்ந்தப்போ முதல் மூனு மாசத்துக்கு பயிற்சி வகுப்பு நடந்தது. எங்க வகுப்புல மொத்தம் 140 பேர் இருந்தோம். அதுல வருகைப் பதிவேட்டுலப் பார்த்தா 138 பேர் ஆங்கிலத்துல தான் கையெழுத்துப் போட்டிருப்பாங்க. என்னத்தவிர தாய்மொழியில கையெழுத்துப் போட்ட அந்த இன்னொருத்தர் ஒரு ஜப்பானியர் :)

3.பள்ளிக்கூடத்துல படிக்கும்போது பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டின்னா ஒரு ஆர்வக்கோளாறுல போய் கலந்துக்குவேன். எப்படியும் பரிசு கிடைச்சுடும். அதுல மறக்க முடியாததுன்னு சொல்லனும்னா ஆறாவது படிக்கும்போது ஆத்தூர் தாலுகாவுல எல்லாப் பள்ளிக்கும் பொதுவா நடந்த போட்டியில முதல் பரிசு வாங்கினதுதான். ஒவ்வொரு பள்ளியில இருந்தும் ஒருத்தர மட்டும்தான் தேர்ந்தெடுத்து அனுப்பனும்னு சொன்னதால முதல்ல எங்க பள்ளி அளவுல ஒரு போட்டி நடந்துச்சு. அதுல எப்படியோ என்னத் தேர்ந்தெடுத்து அனுப்பிட்டாங்க. அந்த தாலுகா அளவுல நடக்கிற போட்டிக்கு என்னோட உடன்பிறப்பு (அண்ணண்)தான் சைக்கிள்ல கூட்டிட்டுப் போனாரு. அங்கப் போய் பார்த்தா ஒரு கூட்டமே வந்து கும்மியடிச்சுட்டு இருக்காங்க. ஒவ்வொரு பள்ளிக்கூடத்துல இருந்தும் ஒருத்தர்தான் வரணும்னு சொன்னா அந்த ஒருத்தருக்கு பக்கபலமா நாலு வாத்தியாருங்க சுத்திலும் இருக்காங்க. அங்கங்க நின்னுகிட்டு பேசப் போறவங்களுக்கு சிப்ஸ்.. ச்சீ.. டிப்ஸ் கொடுத்துட்டு இருக்காங்க. எல்லாம் தனியார் பள்ளிக்கூடமா… ஒரே படோபடமா இருக்கிறதப் பார்த்ததும் எனக்கு காதல் கொண்டேன் தனுசு மாதிரி ஒரே பீலிங்க்சா போச்சு. வெள்ள சட்ட, காக்கி டிராயர்னு நம்ம யூனிபார்மே ஒரு தினுசாதான் இருக்கும். பேச்சுப் போட்டி ஆரம்பிச்சு எல்லாரும் பேச ஆரம்பிச்சாங்க. ஒருத்தன் பேச்சுல ஆக்ரோஷத்தக் காட்டி மைக்க உடைக்கப் போயிட்டான். அவனுக்கு எல்லாரும் கை தட்றத பார்த்தவுடனே அவனுக்குதான் பரிசு கிடைக்கும்னு முடிவே பண்ணிட்டேன். அப்புறம் இன்னொரு பொண்ணு பேசும்போது எனக்கு பரிசு கிடைக்காதுன்னு எனக்கே கன்ஃபார்ம் ஆச்சு. பின்ன என்னங்க தமிழ்லதான் பேச்சுப்போட்டினு சொன்னாங்க, அந்த பொண்ணு நடுவுல அசால்ட்டா இங்கிலீசுல பேச ஆரம்பிச்சுடுச்சு. எதுவும் புரியலன்னாலும் எல்லாரும் கை தட்டுறாங்க எனக்கு கண்ணே கட்ட ஆரம்பிச்சுடுச்சு. (எங்க பள்ளிக்கூடத்துல இங்கிலீசு வாத்தியாரே இங்கிலீசுல பேசி நான் பார்த்ததில்ல.) அப்புறம் நானும் போய் பேசிட்டு வந்து உட்காந்துட்டேன். முடிவ அறிவிக்க வந்தவர் பின்னாடி இருந்துதான் அறிவிப்போம்னு சொல்லி மூனாவது பரிச அந்த ஆக்ரோசப் பையனுக்கு கொடுத்துட்டார். ரெண்டாவது பரிச வாங்கினதுக்கே அந்த பொண்ணு அழ ஆரம்பிச்சிடுச்சு.ஒருவேளை முதல் பரிசு கிடைக்கும்னு எதிர்பார்த்திருக்கும்போல! கடைசியா முதல் பரிசு “அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியைச் சேர்ந்த….” னு அவர் சொல்லி முடிக்கிறதுக்குள்ள நான் மேடைல போய் நின்னுட்டேன் :). போட்டியோட தலைப்பு “காந்தியும் காமராஜரும்”, பரிசா கொடுத்த புத்தகம் “சத்திய சோதனை” :) ( முதல் பரிசு வாங்கினத விட அதிகமா அன்னைக்கு நான் சந்தோசப்பட்டது வேற ரெண்டு விசயத்துக்குதான். இரண்டாவது பரிசு வாங்கின பள்ளியில இருந்து ஒரு டீச்சரம்மா வந்து “தம்பி நல்லாப் பேசினப்பா! உனக்கு யாரு ப்ரிபரெசனெல்லாம்?” னு கேட்டதுக்கு “எங்கக்கா” அப்படின்னு பெருமையா சொன்னதும் + எனக்கு ஒரு மிட்டாய் கொடுக்கிறதுக்கே ரெண்டு தடவை யோசிக்கிற எங்கண்ணன் அன்னைக்கு எனக்கு டீ , பன்னெல்லாம் வாங்கிக்கொடுத்ததும் தான் :) )

4.பத்தாவது வரைக்கும் நானும் நல்லாதான் படிச்சுட்டு இருந்தேன். பத்தாவதுல பள்ளியிலேயே முதல் மதிப்பெண் வாங்கற அளவுக்கு நல்ல பையன்னா பார்த்துக்குங்க. அதுக்கப்புறம்தான் எனக்கு சனி பிடிச்சதா இல்ல சனிக்கு என்னப் பிடிச்சதான்னு தெரியல. அதுவரைக்கும் பங்காளிகளா இருந்த படிப்பும் நானும் பகையாளிகளா மாறிக் கடைசியில, கல்லூரியில “உன் சேவை கல்லூரிக்குத் தேவை”னு சொல்லி, நாலு வருசப் படிப்ப அஞ்சு வருசம் படிக்க வைச்சு அனுப்புற அளவுக்குப் போயிடுச்சு (அந்த சோகக் கதைய ஒரு தொடர் கதையா அப்புறம் எழுதறேன் :) )

5.கரூர்ல 10, +1, +2 படிச்ச மூனு வருசமும் நான் ஒரு படம் கூட பார்த்ததில்ல. வீட்டிலயும் டி.வி கிடையாது. “சூர்யவம்சம்” படம் பார்க்க எங்கம்மாவே கட்டாயப் படுத்தி பார்க்க சொல்லியும் நான் பார்க்கல… பசங்க எல்லாரும் பள்ளிக்கூடத்துக்கு கட் அடிச்சுட்டு படத்துக்குப் போகும்போது நான் கட் அடிச்சுட்டு நூலகத்துக்குப் போய்டுவேன், நாவல் படிக்க. ஆனா அதுக்கெல்லாம் சேர்த்து கோவைல கல்லூரியிலப் படிக்கும்போது படம் படமா பார்த்துத் தள்ளியாச்சு.

6.சின்ன வயசுல இருந்தே ஊர் சுத்துறதும், ஊர் ஊரா சுத்துறதும் எனக்குப் பழக்கமாகிடுச்சு. பிறந்தது ஆத்தூர்ல... 7வது வரைக்கும் படிப்பு அங்கதான்... அப்பவே பசங்களோட ஊர் சுத்துறது ஆரம்பிச்சிடுச்சு, அப்புறம் ரெண்டு வருசம் சேலத்துல...அண்ணா நூலகம், மாவட்ட மைய நூலகம், ராஜாஜி நூலகம்னு சுத்தி(சுத்திப் படிச்சி)ருக்கேன், அப்புறம் +2 வரைக்கும் கரூர்ல...இது நம்ம ஏரியா! சொல்லவே வேண்டாம்… நல்லா ஊர் சுத்தின ஊர்!!! அப்புறம் கல்லூரி படிப்பு 5 வருசம் கோவைல... உண்மையிலேயே ஊர் சுத்துற சுகத்த முழுசா அனுபவிச்சது கோவைலதான். பீளமேட்டுல இருந்து மருதமலை வரைக்குமே சைக்கிள்லையே போயிட்டு வந்துடுவோம்னா பார்த்துக்கோங்க‌. அது முடிஞ்சதும் வேலைல சேர்ந்தது மைசூர்ல, அப்புறம் ஹைதராபாத், பெங்களூர், மும்பை, சென்னைனு பந்தாடி நேத்து காலைலதான் மறுபடியும் ஹைதரபாத் வந்து எறங்கியிருக்கேன்.

7.காதக் கிட்ட கொண்டு வாங்க ஒரு ரகசியம் சொல்றேன்… “முதல் முதலா முழுசா ஒரு சிகரெட் பிடிச்சப்போ எனக்கு வயசு 10. கடைசி சிகரெட் பிடிச்சப்போ வயசு 22”. ( இப்போ எனக்கு வயசு 24 :) )

8.நான் வ‌லைப்ப‌திய‌ற‌தோ, க‌விதை(?) எழுத‌ற‌தோ எங்க‌ வீட்ல‌ யாருக்குமேத் தெரியாது. வீட்ல‌ சொல்லாம‌ இருக்கிற‌துக்கு ஒரே கார‌ண‌ம் நான் எழுதியிருக்கிற‌து எல்லாமே காத‌ல‌ப் ப‌த்தி ம‌ட்டுமே இருக்கிற‌தால‌தான். அப்ப‌டியென்ன‌ காத‌ல‌ப் ப‌த்தி எழுத‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம்னு கேட்கிற‌வ‌ங்க‌ளுக்கு : எட்டாக்கனி , கிட்டாக்கனி மேல‌தான எல்லோருக்குமே ஆசை அதிக‌மா இருக்கும்?

நான் அழைக்க விரும்பும் எட்டு பேர் :

1. ப்ரியன்
2. சத்தியா
3. கோவி.கண்ணன்
4. சுதர்சன்.கோபால்
5. ப்ரேம்குமார்
6. தேவ்
7. இம்சை அரசி
8. பொட்"டீ"க்கடை சத்யா

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Friday, April 27, 2007

வெளங்காத விசயம் - 5

வணக்கம் நண்பர்களே...

கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு... தமிழ்மணம் பக்கம் வந்து...

இந்த "வியர்டு திங்சு"னு ஒரு வெளாட்டு ஆரம்பிச்சு நடந்திட்டு இருந்தது..இப்போ எல்லாரும் மறந்தே போயிருப்பீங்க...ஆனா எனக்கு இப்போதான் நேரம் கிடச்சிருக்கு... என்னையும் இந்த ஆட்டத்துக்கு இழுத்த கார்த்திக் பிரபுவுக்கும், இம்சையரசிக்கும் நன்றிய சொல்லிட்டு ஆரம்பிக்கிறேன்...

வியர்டு நா என்னனு எனக்கு நெஜமாவே வெளங்கல... அப்புறம் தான் தெரிஞ்சது அதுவே ஒரு வெளங்காத விசயம்தான்னு... என்னப் பத்தி எனக்கே வெளங்காத ஒரு 5 விசயத்த சொல்லலாம்னு இருக்கேன்... சிரிக்கிறவங்க சத்தம் போட்டுலாம் சிரிக்கப் படாது ;) மேலப் படிங்க...

1. சின்ன வயசுல இருந்து ராத்திரி தூக்கம் வரலன்னா 1,2,3 நு நான் பாட்டுக்கு கண்ண மூடிட்டு எண்ண ஆரம்பிச்சுடுவேன்...அடுத்த நாள் காலையில எழுந்ததும் முந்தின நாள் ராத்திரி கடைசியா எத்தன வரைக்கும் எண்ணினொம்னு யோசிச்சுப் பார்ப்பேன்.. இது வரைக்கும் ஒரு தடவை கூட கண்டுபிடிக்கமுடியல :( இப்பவும் இதே பழக்கம் தான்... எத்தனை வரைக்கும் எண்ணுறோம்னு அடுத்த நாள் கண்டிப்பா தெரியாதுன்னு தெரிஞ்சும் ஏன் இப்படி எண்ணிக்கிட்டு இருக்கேன்னு இன்னைக்கு வரைக்கும் வெளங்கல :)

2. இதுவும் தூக்கம் சம்பந்தப்பட்டதுதான்... தூக்கத்துல நடக்கிற பழக்கம் மாதிரி எனக்குத் தூக்கத்துல யோசிக்கிறப் பழக்கம் இருக்கு :) ஆஃபிசுல ஒரு நாள் முழுக்கப் போராடி வராத லாஜிக் அன்னைக்கு ராத்திரி தூக்கத்துல யோசிச்சு கண்டுபுடிச்சுடுவேன்... அடுத்த நாள் காலையில முதல் வேலையா அத எங்கேயாவது குறிச்சு வச்சிடுவேன்...இது பல தடவ நடந்திருக்கு..(ஒரு நாள் தூக்கத்துல/கனவுல ஒரு காதல் பயணத்துக்கு எழுதறதுக்காக ஒரு கவிதை யோசிச்சு அத அப்பவே செல்போன் வெளிச்சத்துல ஒரு நோட்ல கிறுக்கி வச்சிட்டு தூங்கியிருக்கேன்...அடுத்த நாள் அந்த நோட்ட எடுத்துப் பாக்கும்போது கோழி கிறுக்கின கையெழுத்துல ஒரு கவிதை :) யோசிச்சுப் பார்த்தா முந்தின நாள் கனவுல எழுதினதுன்னு புரிஞ்சது) இது எனக்கு மட்டும் இருக்கா இல்ல நெறைய பேருக்கு இருக்கான்னு வெளங்கல :)

3. பேருந்துல போகும்போது நெறைய பேருக்கு ஜன்னலோர சீட்தான் புடிக்கும்... ஆனா எனக்கு அதுலையும் ஒரு குறிப்பிட்ட சீட்தான் விருப்பம்...எல்லாப் பேருந்துலையும் பின்னாடி படிக்கட்டுக்கு முன்னாடி இருக்கிற ஜன்னலோர சீட்தான் நான் எப்பவும் உட்கார்ற சீட்... ஒரு தடவ கரூர்ல இருந்து கோவை போகும்போது நான் பைய எப்பவும் வைக்கிற எடத்துல (படிக்கட்டுக்கும் நான் உட்கார்ற சீட்டுக்கும் இடையில இருக்கிற சந்துல...அதாவது எனக்குப் பின்னாடி என்னோட பைய வச்சிட்டு நான் ஜன்னல்ல வேடிக்கைப் பார்க்க ஆரம்பிச்சுடுவேன் :) ) வச்சிட்டு விகடன விரிச்சுப் படிக்க ஆரம்பிச்சுட்டேன்...கொஞ்ச நேரத்துலையே என்னோட பைய எடுத்துக்கிட்டு ஒரு திருடர் (என்ன விட வயசுல பெரியவர் போல ;)) எறங்கிப் போயிட்டார்... அப்புறமும் திருந்தாம இன்னமும் ஏன் ஒவ்வொரு தடவையும் அதே சீட்ல உட்காந்துட்டுப் பயணம் பண்றேன்னு எனக்கே வெளங்கல :)

4. எந்தப் பொருள் வாங்கறதா இருந்தாலும் அது கருப்பு கலர்ல இருக்குதான்னு மொதல்லத் தேட ஆரம்பிச்சுடுவேன்... வச்சிருக்கிற செல்போன், பெல்ட், பர்ஸ் முதல் கொன்டு செருப்பு வரைக்கும் எல்லாமே கருப்புதான்...ப்ளாக் டெம்ப்ளேட் கூட முதல்ல கருப்புல தான் இருந்துச்சு...நெறைய பேர் படிக்க முடியலன்னு சொன்னதால கலர் மாத்திட்டேன் ;) நானே கருப்பா இருக்கும்போது எதுக்கு மத்தத எல்லாம் கருப்புக் கலர்ல வாங்கிட்டு இருக்கேன்னு எனக்கே வெளங்கல ;)

5. இதுதாங்க ரொம்பவே யோசிக்க வைக்கிற விசயம்...

திங்கள் முகமென்றும்...
செவ்வாய் இதழென்றும்...
புதன் கிடைத்தாலும் கிடைக்காத பெண்ணென்றும்...
வியாழன் கிரகத்து அப்சரசென்றும்...
வெள்ளிச் சிரிப்பென்றும்...
பெண்ணிடம் மயங்கினால் உனக்குப் பிடித்தது சனி!
வாழ்வில் ஞாயிறு பிறக்க, சுடிதாருக்காக சுயமரியாதை இழக்காதே...

அப்படினு கல்லூரியிலப் படிக்கும்போது காதலிக்கிற/கடலை போடற பசங்களுக்காக தெளிவா(?) சிந்திச்சு அறிவுரை (;)) சொன்ன நான் எப்படி இந்த மாதிரியெல்லாம் உளற ஆரம்பிச்சேன்னு எனக்கே வெளங்கல ;)

இந்த ஆட்டத்துக்கு நான் யார கூப்பிட்றதுன்னு எனக்குத் தெரியல... எல்லாருமே ஆடி முடிச்சிருப்பாங்க... அதனாலப் படிக்கிறவங்க யாராவது இன்னும் இந்தப் பதிவு போடாம இருந்தா தொடருங்க...

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Wednesday, January 31, 2007

கங்கை கொண்ட சோழபுரம் - படங்கள்

கடந்தவாரம் ஊரில் இருந்த பொழுது பெரம்பலூருக்கு ஒரு திருமணத்திற்கு செல்லவேண்டியிருந்தது. காலையிலேயே திருமணம் முடிந்தபிறகு திருச்சிக்கு செல்வதற்காக பேருந்துநிலையத்தில் நின்றிருந்தபோதுதான் சுற்றுலாத்துறையின் ஒரு விளம்பரப் பலகையைப் பார்த்தேன். கங்கை கொண்ட சோழபுரம் -> 60 கி.மீ என்று போட்டிருந்தது. சரி வந்தது வந்து விட்டோம் அந்த ஊரிலும் என்ன இருக்கிறது என்று பார்த்துவிடலாம் என்று அங்கு செல்வதற்காக ஜெயங்கொண்டம் செல்லும் பேருந்தில் ஏறிவிட்டேன். (ஜெயங்கொண்ட சோழபுரம்தான் ஜெயங்கொண்டம் ஆகி விட்டது). ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் இறங்கும்போது மணி மதியம் 1. உச்சி வெயில் உச்சியைப் பிளந்தது. பொதுவாக பயணம் செய்யும்போதோ, கூட்டமாக இருக்கும்போதோ என்னால் சாப்பிட முடியாது. சரி பழச்சாறு எதுவும் குடிக்கலாம் என்றால் நல்லதாக ஒரு கடையையும் காணோம். சரி தமிழனின் தேசிய பானம் தேநீரையேக் குடிப்போம் என்று ஒரு கடையில் ஒதுங்கினேன். ( தேநீர் குடிப்பதை கொஞ்ச நாட்களாக நிறுத்தியிருந்தேன். இப்போது மறுபடி ஆரம்பமாகிவிட்டது ) வீட்டில் டம்ளரில் ( தமிழில் கோப்பை? ) வழிய வழிய கொடுப்பார்கள். அந்தக் கடையில் கொடுத்தது தொண்டை நனைவதற்குள் தீர்ந்து விட்டது. மறுபடி இன்னொன்றையும் வாங்கி நானே குடிப்பதை அந்தக் கடைக்காரர் ஒரு மார்க்கமாக தான் பார்த்தார். அப்புறம் அங்கிருந்து 10 கி.மீ தொலைவில் இருக்கும் கங்கை கொண்ட சோழபுரத்துக்குப் பயணமானேன். நான் எதிர்பார்த்தது பழைய கோட்டை, அரண்மனை எதுவும் இருக்கும் என்றுதான். அங்குபோனால் இருந்தது என்னவோ ஒரே ஒரு கோயில் தான். அதுதான் பிரகதீசுவரர் கோயிலாம். ( அப்போ தஞ்சையில் இருப்பது என்ன? எனக்கும் தெரியவில்லை.)


முகப்பில் நுழையுமுன் எடுத்தப்படம்.

புல்தரையெல்லாம் நன்றாகப் பராமரித்து வைத்திருக்கிறார்கள்.

இது என்னவென்றே தெரியவில்லை உள்ளே எட்டிப்பார்க்கலாம் என்று நுழைந்தபோது ஒரு காதல் ஜோடி இருந்தது.அமைதியாக வந்துவிட்டேன்.

வெயிலின் பின்னணியில் கோபுரம்.

வெயிலின் முன்னணியில் (:-) ) கோபுரம்.

இருப்பது ஒரே கட்டடம் அல்ல. ஒன்றன் பின் ஒன்றாய் இரண்டு கட்டடங்கள்.


நீலத்துக்கும் பச்சைக்கும் இடையே கோபுரம்.

வெள்ளை நந்தியும் கருப்பு நந்தியும்

வெளியே வந்த பிறகு ஒரு மூலையில் இருந்து எடுத்தப் படம்.

கடந்த வாரம் முழுவதும் வீட்டிலிருந்ததில் கிடைத்த வாய்ப்பு இது. இப்படி மகிழ்ச்சியான நிகழ்வுகள் இருந்தாலும் ஒரு பிரிவின் துயர் ரொம்பவே வாட்டிவிட்டது என்னை. தமிழ்மணத்தைப் பிரிந்து இருந்ததைத்தான் சொல்கிறேன். :-)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Tuesday, January 30, 2007

படம் பார்த்துக் கதை கேளுங்க

இது தான் அமராவதி ஆறு.முன்பெல்லாம் ஆற்றில் குளிக்கிற அளவுக்கு தண்ணீரும் போகுமாம், சுத்தமாகவும் இருக்குமாம்.
பிறகு சாயப்பட்டறைகள் பெருகி சாயக்கழிவுகள் கலந்து ஆறு நாறிப்போனது. எப்போதாவது மழை வந்து ஆற்றை கழுவி விட்டுப் போகும். அப்போது மட்டும் ஆற்றில் ஊற்றுத் தோண்டி குளிக்கலாம். அப்புறம் ஆற்றில் இறங்கிவிட்டாலே வீட்டில் வந்து ஒருமுறை குளிக்க வேண்டிய நிலைமையில் இருந்தது. இப்போது இரண்டாண்டுகளாக பரவாயில்லை கொஞ்சமாகவேனும் தண்ணீர் ஓடிக் கொண்டு இருக்கிறது. நான் பார்க்கும்போது ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்தார்கள். சுத்தமாகதான் இருக்கும்போல ;-)

இதுதாங்க நான் பள்ளிவாழ்க்கையின் கடைசி மூன்றாண்டுகள் போய் வந்த பள்ளிக்கூடம். ( படித்த பள்ளிக்கூடம் என்று பொய் சொல்ல விருப்பமில்லை ;-) ) திரு. வா. செ. குழந்தைசாமியும் இங்கே படித்திருக்கிறார். ஜான் டேவிட்டும் இங்கே படித்திருக்கிறார். நூற்றாண்டு கண்ட பழமையானப் பள்ளிகளுள் இதுவும் ஒன்று. தேய்த்து தேய்த்து வழுவழுப்பாகிப்போன மரப்பெஞ்சுகள், மரப்படிகள், அந்தக்கால மச்சு என இன்னும் பழமை மாறாத பள்ளி!




கரூர் பசுபதீசுவரர் கோயில் கோபுரம். இதுவரை ஒரே ஒரு முறைதான் உள்ளே சென்றிருக்கிறேன். வரலாற்று(?) செய்திகளை நிறையப் படங்களாக வரைந்து வைத்திருக்கிறார்கள். பொறுமையாகப் படித்தால் கொஞ்சம் பழையக் கதைகளைத் தெரிந்து கொள்ளலாம். உள்ளே கரூர்ச் சித்தர் என்பவரின் சமாதியும் உள்ளது. தமிழில் குடமுழுக்கு செய்யப்பட்ட திருமுக்கூடலூரும் போய்ப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன் , ஆனால் நேரமில்லை :-(





எங்கள் பள்ளிக்கூடத்தில் முதல் பாடவேளையிலேயே வருகைப் பதிவெல்லாம் முடிந்துவிடும். அப்புறம் யார் எங்கு போகிறார்கள் என்றெல்லாம் யாரும் கவனித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். வகுப்பில் மாணவர்கள் எண்ணிக்கையெல்லாம் சாதாரணமாக மூன்றிலக்க எண்ணில்தான் இருக்கும். எங்கள் வகுப்பில் 10 வதில் 80 பேர் இருந்தோம். 11, 12 ம் வகுப்பில் 120 பேருக்கு மேல்!!! அரசுப் பள்ளி என்பதால் ஆசிரியரும் கண்டிப்பாக இருப்பதில்லை. அதனால் முக்கால்வாசி நேரம் வெளியில்தான் சுற்றிக்கொண்டிருப்போம். பள்ளிக்குப் பக்கத்திலேயே நூலகம் இருந்தது. அங்கே ஒரு கல்கியையோ, சாண்டில்யனையோ எடுத்துக்கொண்டு இந்த இடத்துக்கு வந்துவிடுவேன். இதுதான் பழைய ரயில்வே நிலையம் இருந்த இடம். படிப்பதற்கு ஏற்ற வகையில் அமைதியாக இருக்கும். பள்ளிநேரத்தில் பாதிப்பொழுது இங்கேதான் கழிந்தது.

தாந்தோன்றிமலையில் உள்ள பெருமாள் கோயில். இந்தக் கோயிலுக்குப் போகிற வழியில் ஒரு முனியாண்டி விலாஸ் உணவகம் இருக்கிறது. வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, அமாவாசை என்று வீட்டில் அசைவம் கிடைக்காத நாட்களில் நமக்கு விருந்து வைக்கும் இடம் அது.





இதுதான் திண்ணப்பா திரையரங்கம். இந்த திரையரங்கத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. ஒவ்வொருக் காட்சியிலும் படம் திரையிடப் படுவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கும். மக்களும் எழுந்து நிற்பார்கள். இது இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.





கரூரில் பெரியாருக்கு சிலையில்லாத குறை சிலவருடங்களுக்கு முன்புதான் தீர்ந்தது. முதலில் மார்பளவு சிலையாக வைத்தார்கள்; அண்மையில் ஒரு பேருந்து மோதியதில் அதுவும் சிதைந்து போகவும், பிறகு முழு உருவச்சிலையாக வைக்கப்பட்டிருக்கிறது. சிலை வைத்தவர்கள் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள்.







அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Monday, January 29, 2007

ஓரு மொட்டைப் பதிவு!

காதலைத் தவிர்த்து மற்ற விசயங்களையும் எழுதுங்கள் என்று சுதர்சன்.கோபால் அன்பு(?) கட்டளையிட்டதால் இந்தப் பதிவு.


மருமகளுக்கு (அக்காவின் மகள்) மொட்டை அடிக்கும் நிகழ்ச்சி இருந்ததால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்தவாரம்தான் வீட்டிற்கு(கரூக்கு)ப் போக வாய்ப்புக் கிடைத்தது. நான்கு நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு கடந்த வெள்ளிக்கு முந்தைய வெள்ளி ஊருக்குக் கிளம்பிவிட்டேன். ரயில் பயணம் என்பது எனக்கு எப்போதுமே அரிதாகவே அமைகிறது. காரணம் , பயணங்களை இரண்டு, மூன்று வாரங்களுக்கு முன்பே திட்டமிடுவதுமில்லை, முன்பதிவு செய்யுமளவுக்கு நான் சுறுசுறுப்புமில்லை. எப்போதுமே பேருந்து பயணம்தான் எனக்கு வசதியாகப் படுகிறது. அதுவும் தனியார் சொகுசுப் பேருந்துகளிலும் பயணிப்பதில்லை. அரசுப் பேருந்துதான். இரண்டு மணிநேரத்துக்கு ஒரு முறை ஏதாவது ஒரு பேருந்து நிலையத்தில் இறங்கி ஒரு தேநீரைக் குடித்துவிட்டு அடுத்தப் பேருந்தில் மாறி மாறிப் பயணிக்கிற அரைத்தூக்கப் பயணம்தான் எனது விருப்பம். மிகத்தாமதமாக பெங்களூர் இசிட்டியில் இருந்து கிளம்பியதால் ஒசூர் போய்ச்சேரவே இரவு மணி 12 ஆகியிருந்தது. பேருந்தில் ஜன்னலோரம் தான் எனக்குப் பிடிக்கும். அதுவும் பின்படிக்கட்டுக்கு முந்தைய இருக்கையென்றால் மிக விருப்பம். சேலம் செல்லும் பேருந்தில் அப்படியே ஓர் இருக்கை கிடைக்க ஏறிவிட்டேன். சன்னலைத் திறந்தால் குளிர்காற்று வீசுகிறது. மூடி வைக்கவும் மனமில்லை. அவஸ்தைதான், ஆனாலும் அதற்கே ஏங்குகிறது மனமும். (காதலைப் போலவா என்று யாரும் கேட்கக்கூடாது ;-) ) எப்படியோ அரைத்தூக்கத்தோடே சேலம் போய், பின் கரூர் போய்ச்சேர காலை மணி 8 ஆகியிருந்தது.

*********************


அடுத்த நாள் - சமயபுரம். தனிப்பட்ட முறையில் கோயில்களைப் பழந்தமிழர்களின் கட்டடக்கலைக்கான எடுத்துக்காட்டு என்பதைத் தவிர வேறெந்த எண்ணத்தோடும் நான் பார்ப்பதில்லை. மருமகளின் மொட்டைக்காக இந்தமுறை சமயபுரம் கோயிலுக்குள் போனபோதுதான் பார்த்தேன். கோவிலுக்குள்ளே தரையெல்லாம் மழையில் ஊறிய தெருவைப் போல இருந்தது. கூட்டமும் அதிகம். சுத்தம்தான் குறைவு. கோவிலுக்கு வந்த பட்டாடைகளையெல்லாம் ஏலத்தில் விட்டுக் கொண்டு இருந்தார்கள். அதில் கொஞ்சம் சுத்தத்துக்கும் செலவு செய்யலாம். மொட்டையடிக்கும் போதெல்லாம் அழாமல் இருந்த மருமகள் மொட்டையடிக்கப் பட்ட பிறகு “மொட்டையடிச்சுட்டாங்க…மொட்டையடிச்சுட்டாங்க” என்று தலையை தொட்டுப் தொட்டுப் பார்த்து அழுததில் அவளுக்கு இரண்டு நாட்களாக விடவில்லை காய்ச்சல்.

************************

வீட்டில் எப்போதும் தொலைக்காட்சி பார்ப்பதைவிட வானொலி கேட்பதையே அதிகம் விரும்புவேன். இந்த முறை, மக்கள் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி மிகவும் கவர்ந்தது. தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் “சொல் விளையாட்டு” என்ற நிகழ்ச்சிதான் அது. முதல் சுற்றில் தமிழ் எழுத்துக்கள் சிலவற்றில் இருந்து சரியான சொல்லைக் கண்டுபிடிக்க வேண்டும். அடுத்த சுற்றில் விடுப்பட்ட எழுத்துக்களை நிறைவுசெய்து ஒரு சொல்லைக் கண்டுபிடிக்க வேண்டும். மூன்றாவது சுற்றில் ஒரு பிரபலத்தின் புகைப்படம் கொஞ்சம் கொஞ்சமாகக் காண்பிக்கப் படுகிறது. அவர் யாரெனக் கண்டுபிடிக்கவேண்டும். உண்மையிலேயே ஆர்வத்தைத் தூண்டுகிற நிகழ்ச்சி. மக்கள் தொலைக்காட்சியின் மற்ற நிகழ்ச்சிகளைப் போலவே இதில் வரும் அறிவிப்பாளரும் நல்ல தமிழிலேயேப் பேசுகிறார். நேயர்களையும் தமிழில் பேச ஊக்கப் படுத்துகிறார். அதற்காகவே மக்கள் தொலைக்காட்சிக்கு தாராளமாக ஒரு ஓப் போடலாம்!

*************************

தூக்கம் வராத ஒரு பின்னிரவில் படுக்கையில் கண்களை மூடிக்கொண்டு வானொலியின் காதைக் திருகிக்கொண்டு இருந்தேன். ஏதோ ஒரு இடத்தில் சன்னமாக இலங்கைத் தமிழ் கேட்கவும், பழைய ஆண்டெனாவை எடுத்து வானொலியோடு இணைத்துப் பார்த்தேன்.பிறகு தெளிவாகக் கேட்டது. இலங்கையில் இருந்து ஒலிபரப்பாகும் தென்றல் FM. இதுவரைக் கேட்டிராத பல பாடல்களை ஒலிபரப்பினார்கள்.எத்தனை வாக்மேன், ஐ பாட் எல்லாம் வந்தாலும் இரவு நேரத்தில் வானொலியில் பாட்டு கேட்கிற சுகம் தனிதான். அடுத்து என்னப் பாட்டு வரும் என்று காத்திருக்க வைக்கிற சுவாரசியம்தான் வானொலியின் சிறப்பு. அதிலும் எப்பொழுதாவது நாம் எதிர்பார்க்கிற பாட்டே ஒலிபரப்பாகும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவேது? அன்று அப்படித்தான் நடந்தது. இரவின் மடியில் என்றொரு நிகழ்ச்சியில் ஒலிபரப்பான முதல் இரண்டு பாடல்கள் – “உயிரே…உயிரே” (பம்பாய்) மற்றும் “அன்பே… அன்பே” (ஜீன்ஸ்). ரஹ்மான் இசை. ஒரு சொல்லே இரண்டு முறை வருகிறது. அடுத்தப்பாடலாக “வெண்ணிலவே…வெண்ணிலவே” (மின்சாரகனவு) வருமோ என்று நான் நினைத்திருக்க அதேபாடல்தான் ஒலிபரப்பானது. அடுத்த பாடலையும் கண்டுபிடிப்போம் என்று அதே மாதிரியான பாடல்களையெல்லாம் நான் யோசித்துக் கொண்டிருக்க வந்ததென்னவோ காதலுக்கு மரியாதையிலிருந்து “இது சங்கீதத் திருநாளோ” தான்.

***********************

( ஊர்க்கதை நாளையும் சொல்கிறேன் )

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

Wednesday, December 14, 2005

கரூர் - திருச்சி இலவச சேவை


குழந்தையை அணைத்துக் கொள்ளும் தாயின் கரத்தைப் போல வஞ்சி மாநகரை அணைத்துக் கொண்டு செல்கிறது - வரலாற்றில் ஆண் பொருணை என வருணிக்கப்பட்ட - அமராவதி ஆறு. ஆடி மாதத்தின் ஒரு மாலைப் பொழுதில் வஞ்சியில் இருந்து புறப்பட்ட நமது பேருந்து அமராவதி ஆற்றைக் கடந்து கிழக்கு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.பழங்காலத்தில் சேர மன்னர்கள் சோணாடு சென்ற ராஜபாட்டை இதுவாகத் தான் இருக்குமோ? நாமறியோம்! இதோ சாலைக்கு வலப்புறத்தில் தெரிகிறதே இது என்ன? பத்தடி உயரத்தில் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட மன்னர்களின் கோட்டை மதில் சுவர் போல இருக்கிறதே! உள்ளே பிரம்மாண்டமாகத் தெரிகிறதே அது சேர மன்னனின் அயுதக் கொத்தளமா? ஆ மேலே புகைப் போக்கிகள் போலத் தெரிகிறதே!வெற்றி வாகை சூடிய மன்னனை வரவேற்கக் காத்திருக்கும் யானைகளைப் போல சாலையின் இரு பக்கமும் நான்கு காத தூரத்துக்கு வரிசையாக நிற்கின்றனவே - சரக்கு வண்டிகள். ம். இப்போதுதான் தெரிகிறது.இது புலியூர் செட்டிநாடு பூசுமண் தொழிற்கூடமல்லவா!
இப்போது பேருந்து செல்கின்ற சாலைக்கு இணையாக இடப்புறத்தில் வந்து கொண்டிருக்கிறது இருப்புப்பாதை.அதையும் தாண்டி வடக்கேப் பார்த்தால் தெரிவது பசுமை! பசுமை!பசுமை! பொன்னியாற்றின் நீரால் பாசனம் பெறும் கிராமங்களில் உள்ள வாழைத்தோப்புக்களும், தென்னந்தோப்புக்களுமே பசுமைக்குக் காரணம். இப்போது சாலையின் வலப்புறத்தில் மறுபடியும் நாம் பார்ப்பது புலியூரில் பார்த்தது போன்ற அதேக் கட்டமைப்பு. இவை என்ன? மன்னர்களின் அரண்மனைகளில் உள்ள சுரங்கப்பாதைகளைப் போல இத்தனைக் குழாய்கள். ஓ! பேருந்து மாயனூருக்கு வந்து விட்டதா? இது தமிழ்நாடு குழாய்த் தயாரிப்புத் தொழிற்சாலை அல்லவா?
பேருந்தின் இரைச்சல் ஒலியையும் மீறி ஏதோ சல சல வென ஓர் ஓசைக் கேட்கிறதே இது என்ன? ஆகா! வடக்கில் இருந்து இரு வாய்க்கால்கள் சாலைக்கு அடியேப் புகுந்து தெற்கே வந்து இதோ சாலைக்கு இணையாக கிழக்கு நோக்கி செல்கின்றன! அந்த வாய்க்கால்களில் புரண்டோடும் தண்ணீர் எழுப்பிய ஓசை தானா அது?அந்த வாய்க்கால்கள் பொன்னியாற்றில் இருந்து தெற்கில் உள்ள ஊர்களுக்காகப் பிரிக்கப் பட்டவையாயிருக்கும். பேருந்து கிழக்கு நோக்கி செல்ல செல்ல வாய்க்கால்களுக்கும் சாலைக்கும் உள்ள இடைவெளி அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
பேருந்து இப்போது கிருட்டிணராயபுரம், மகாதானபுரம் ஆகிய சிற்றூர்களைத் தாண்டி வந்து நின்று விட்டது.இப்போது பேருந்தின் இரு பக்கமும் மக்களின் சத்தம் அதிகமாகக் கேட்கிறதே! வாழைப்பழங்களையும், மல்லிகை, கனகாம்பரம் போன்ற பூக்களையும் கையில் வைத்துக் கொண்டு பயணிகளிடம் வியாபாரம் செய்வோரைக் காண முடிகிறது.ஒவ்வொருப் பேருந்திலும் பத்துப் பதினைந்து பேர் சன்னலில் கூப்பாடு போட்டுக் கொண்டு இருக்கின்றனர்.எதற்காக பேருந்து நிற்கிறது என்று நாம் அறிந்து கொள்ள வேண்டாமா? வாருங்கள் பேருந்தில் இருந்து இறங்கி சற்று தூரம் காலாற நடந்து வரலாம்.நமது பேருந்துக்கு முன் இத்தனைப் பேருந்துகளும், சரக்கு வண்டிகளும், மகிழ்வுந்துகளும் காத்திருக்கின்றனவா?இன்னும் முன்னே சென்று பார்ப்போம். கிழக்கு நோக்கி சென்று கொண்டிருந்த சாலை இப்போது வடக்கு நோக்கி வளைகிறது.அது என்ன சாலைக்கு நடுவேத் தடுப்பு போடப்பட்டிருக்கிறது? ம் . இதுதானா செய்தி ! இதுவரை நாம் வந்த சாலைக்கு இணையாக இடப்புறத்தில் வந்து கொண்டிருந்த இருப்புப்பாதையை,பேருந்து செல்லும் சாலை இங்கே குறுக்கிடுகிறது.அதனால் தான் இருப்புப்பாதையில் தொடர்வண்டி வரும் நேரங்களில் சாலைப் போக்குவரத்துத் தடுக்கப்படுகிறது. அந்த சமயங்களில் பயணிகளிடம் பொருட்களை விற்றுப் பிழைப்பு நடத்துகின்றனர் இந்த சிறு வியாபாரிகள்.
தூரத்தில் போருக்கு அழைக்கும் சங்கொலியைப் பொல ஒரு சத்தம் கேட்கிறது - அது தொடர்வண்டியாகத்தான் இருக்கும், வாருங்கள் நாம் மீண்டும் பேருந்தில் ஏறிக் கொள்வோம். தொடர்வண்டிப் போனப் பிறகு போக்குவரத்து திறந்துவிடப்படுகிறது. பேருந்து மெல்ல ஊர்ந்து இருப்புப்பாதையைக் கடந்து வடக்கே செல்கிறது. நாம் இப்போது மீண்டும் ஒரு வாய்க்காலைக் கடக்கிறோம். பேருந்து உடனே மீண்டும் கிழக்கு நோக்கித் திரும்புகிறது. நமக்கு இடப்புறம் நாம் பார்ப்பது என்ன - ஏரியா? கடலா? சமுத்திரமா? வெறும் நீர்ப்பரப்பாகத் தெரிகிறதே! நீரின் ஓட்டத்தைப் பார்த்தபின் தான் புரிகிறது - இது தான் பொன்னியாறு.ஆடி மாதம் ஆதலால் பொன்னிப் பெருக்கெடுத்து ஓடுகிறாள்.
அப்படியே மெதுவாகத் திரும்பி நமக்கு வலப்புறம் பார்க்கிறோம். அட வாய்க்காலே ஓர் ஆற்றைப் போல் அல்லவா ஓடிக்கொண்டு இருக்கிறது.வாய்க்காலில் ஒரு பக்கக் கரையில் சிறுவர்களும் பெரியவர்களும் குளித்துக் கொண்டு இருக்கும் காட்சியைக் காண்கிறோம். பெரியவர்கள் உழைத்தக் களைப்பில் நீராடுவதை அவர்களின் நிதானமானக் குளியலில் காண முடிகிறது. ஆனால் சிறுவர்கள் அப்படி அல்ல - அவர்கள் துள்ளி விளையாடுவதையும், பாலத்தில் இருந்து வாய்க்காலில் குதித்து நீந்துவதையும் பார்க்கிறோம். அப்படியே வாய்க்காலின் அடுத்தக் கரைக்கு நம் பார்வையை செலுத்தினால் அங்கு பெண்கள் குளிப்பதையும், துணிகளைத் துவைத்துக் கொண்டிருப்பதையும் காண்கிறோம் அதற்கு மேலும் அங்கு பார்வையை செலுத்துவது பண்பாடில்லை ஆதலால் அந்தக் கரையைத் தாண்டி பார்க்கிறோம் - அங்கே இருப்புப்பாதை ஓடிக்கொண்டிருக்கிறது.
இதென்ன மன்னனை வாழ்த்தும் மக்களின் பேரொலி போல ஒரு சத்தம்.பேருந்தின் வேகமும் குறைகிறதே.சாலையில் மக்கள் கூட்டம் ஒன்று ஆற்றில் குளித்த ஈரத்துடன் வந்து கொண்டிருக்கிறது. தமிழரின் இசை வாத்தியமானப் பறை எழுப்பும் ஒலி நமது நரம்புகளைக் கூட முறுக்கேற்றுகிறதே! சன்னலில் எட்டிப் பார்ப்போம்! ஓ! ஆடிப் பெருக்கின்போது கிராமத்தில் இருக்கும் தம் குலதெய்வங்களை பொன்னியாற்றுக்குக் கொண்டு வந்து குளிப்பாட்டி எடுத்துச் செல்வது பொன்னியாற்றின் கரையோரக் கிராம மக்களின் வழக்கம்.இதுவும் அப்படியான ஒரு கிராம மக்களின் குலதெய்வத் திருவிழாதான் போலும்! சாமி சிலைகளை தலையில் தூக்கி வந்துகொண்டிருப்பவரிடம் எத்தனை மகிழ்ச்சி - சாமியை அவரேத் தொட்டுக் குளிப்பாட்டித் தூக்கி வருவது மகிழக்கூடியதுதான் - இல்லையா?. மக்கள் அனைவரும் தத்தம் குலதெய்வப் பாடலைப் பாடியபடி செல்கின்றனர். ஆற்றுக்குள் எட்டிப் பார்த்தால் இதுமாதிரியான குலதெய்வ திருவிழா ஆங்காங்கே நடந்து கொண்டிருப்பது தெரிகிறது. சரி பொன்னி ஆற்றின் மறு கரையில் ஏதோ நகருவது போலத் தெரிகிறதே அது என்ன? ஆம் நமது சாலையைப் போலவே பொன்னி ஆற்றின் மறுகரையை ஒட்டி ஒரு சாலை செல்கிறது - அது நாமக்கல்லையும் முசிறியையும் இணைக்கும் சாலை. அதற்கு அடுத்து ஒரு வாய்க்கால் உண்டு அதற்குப் பெயர் வடகரை வாய்க்கால். நமக்கு வலப்புறம் ஓடுவது தென்கரை வாய்க்கால்.
இதோ மீண்டும் சங்கொலி போன்ற அந்த சத்தம் கேட்கிறது! தொடர் வண்டி தான் வருகிறது போல, நாம் சற்று திரும்பி வலப்பக்கம் பார்ப்போம். ஆமாம் தொடர்வண்டி சீராப்பள்ளியிலிருந்து வஞ்சி நோக்கிச் செல்கிறது நமக்கு எதிர்த் திசையில்! பேருந்திலிருந்தும் தொடர்வண்டியில் இருந்தும் வாய்க்காலில் இருந்தும் சிறுவர்களும் இளைஞர்களும் கைகளை ஆட்டி சிரிக்கிறார்கள். சில குறும்புக்கார இளைஞர்கள் விசிலடித்து சத்தம் எழுப்புகின்றனர். நாம் அப்படியே கருப்பூர் முருகன் கோயிலையும், பல சிற்றூர்களையும் தாண்டி சென்றுகொண்டிருக்கையில் நமக்கு வலப்புறம் வந்து கொண்டிருந்த வாய்க்கால் திடீரென சாலைக்கடியேப் புகுந்து நமக்கு இடப்புறமாக வர ஆரம்பிக்கிறது.பொன்னியாறும் நம் கண்ணுக்குத் தெரியும் தொலைவில் இருந்து விலகி செல்கிறது.வாய்க்காலுக்கும் ஆற்றுக்கும் இடையே நாம் பல தென்னந்தோப்புகளையும், வாழைத்தோப்புகளையும் காண்கிறோம்.வாய்க்காலில் நீர்ப்பரப்பை ஒட்டி வளைந்திருக்கும் மரக்கிளைகளில் சிறுவர்கள் தொங்கிக்கொண்டு விளையாடுவதைப் பார்த்துக்கொண்டே நாம் குளித்தலைக்கு வந்து சேர்கிறோம். குளித்தலை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஊர் - அதை சொல்லாமல் சென்றால் இரசிகர்கள் கோவித்துக் கொள்வார்கள் - கலைஞர் முதன் முதலாகப் போட்டியிட்டு வென்ற சட்டமன்றத் தொகுதிதான் இந்தக் குளித்தலை.இப்போது சைவர்கள் அப்படியே மூக்கைப் பிடித்துக் கொள்ளவும் - வாய்க்காலை ஒட்டி மீன் விற்பனை நடக்கிறதல்லவா? மீன் வாசம்/வாடை பேருந்துக்குள்ளும் வீசுகிறது.குளித்தலைக்குள் நாம் நுழைவதற்கு முன்பே ஒரு சாலை வடக்கேப் பிரிகிறது - அது குளித்தலையையும் , முசிறியையும் இணைக்கும் பாலத்துக்குச் செல்லும் சாலை. பொன்னியாற்றின் குறுக்கேக் கட்டப்பட்டுள்ள பாலங்களிலேயே அகலமானப் பாலம் இதுவாய்த்தானிருக்கும்.
நாம் குளித்தலையைத் தாண்டி சிறுகமணி , பெருகமணி என பல ஊர்களைக் கடந்து போய்க்கொண்டுஇருக்கிறோம்...சாலை ஓரங்களில் இப்போது நாம் பார்க்கும் பேருந்துகள் வித்தியாசமாய்த் தெரிகின்றனவே! அதில் உள்ள மக்களும் இந்த ஊர் மக்கள் போல் தெரியவில்லையே! மக்கள் அனைவரும் கொண்டாட்ட மனநிலையில் இருப்பதைப் பார்த்தால் இது முக்கொம்பாக இருக்குமோ? ஆம்..இது முக்கொம்பேதான்...பொன்னியாற்றில் இருந்து கொள்ளிடமாறு பிரியும் இடமான இந்த முக்கொம்பைப் பார்க்க பல ஊர்களில் இருந்து மக்கள் வந்திருக்கிறார்கள்.அதுவும் ஆடி மாதம் பார்ப்பதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். சரி நாம் இன்னொரு நாள் சாவகாசமாக உள்ளே நுழைந்து பார்ப்போம்.இப்போது சீராப்பள்ளி நோக்கி நமது பயணத்தைத் தொடருவோம்.
பத்தாண்டுகளுக்கு முன் ஏரியாகவும், குளமாகவும் இருந்த இடங்களில் இப்போது தீப்பெட்டிகளை அடுக்கி வைத்தது போலத் தெரிகிறதே - இவைதான் அடுக்குமாடி குடியிருப்புகளா? சாலை மேட்டிலும் வீடுகள் பள்ளத்திலும் இருப்பதைப் பார்க்கிறோம். கண்ணுக்குப் பசுமை மறைந்து ஒருவித தூசிப்படலம் தெரிய ஆரம்பிக்கிறது. இதுவரை பேருந்தின் இரைச்சல் மட்டுமேக் கேட்டு வந்த நமக்கு வெளியே இருந்தும் பல இரைச்சல் சத்தம் கேட்க ஆரம்பிக்கிறது. நாம் சொல்லாமலேயே இரசிகர்கள் யூகித்திருப்பார்கள் - நாம் சீராப்பள்ளி வந்துவிட்டதை. நாம் பேருந்தை விட்டு இறங்கும் இந்த இடந்தான் சத்திரம் பேருந்து நிலையம். நாம் நமது பயணத்தில் பிரிய வேண்டிய நேரம் வந்து விட்டது - பிரிதொறு பயணத்தில் மீண்டும் உங்களை சந்திக்கிறேன்.

( (அ)ண்ணே! வடக்கப் போறவங்கல்லாம்...இங்ங்னயே நில்லுங்ணே பஸ்ஸு இங்ங்னயே வரும்......தெக்கப் போறவங்க சென்ட்ரலுக்குப் போய்டுங்ணே
(அ)க்கா! உங்ளுக்குந்தாங்க்கா சொல்றேன்! )


கரூரில் இருந்து திருச்சிக்கு பேருந்திலோ தொடர்வண்டியிலோ சென்றவர்கள் கண்டிப்பாக ரசித்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.
மற்றவர்களும் ரசித்திருந்தால் "+" குத்துங்க இல்லாட்டி "-" குத்துங்க

- சந்திப்போம்

Tuesday, November 15, 2005

பம்பரக் கண்ணாலே!

இப்போது சிலர் "பம்பரக் கண்ணாலே பச்சைக் குத்தும்போது" தான் பத்தாண்டுகளுக்கு முன் என்னுடைய பம்பர அனுபவம் நினைவுக்கு வருகிறது ( பத்தாண்டுக்கு முன்னாடியேவா? என்று சின்னக்கவுண்டரை மனதில் வைத்துக்கொண்டு கேட்காதீர்கள் )...

அப்போது நாங்கள் குடியிருந்த தெருவின் முனை ஒரு விளையாட்டுக்களம் போல இருக்கும். அங்குதான் எங்கள் கில்லி-தாண்டில், பம்பர, ஜல்லி விளையாட்டுப் போட்டிகள் (தெரு விளக்கின்) மின்னொளியில் நடைபெறும். சீசனுக்கு ஏற்றாற்போல் விளையாட்டும் மாறுபடும்.
பம்பர சீசன் வந்துவிட்டால் பக்கத்து மள்ளிய ( மளிகை?) கடையில் புதுசுக் கண்ணாப் புதுசு என்று பல வகை, வண்ணங்களில் பம்பரங்கள் விற்பனைக்கு வந்துவிடும். வகை என்றால் சட்டிக்கட்டை, ஒல்லிக்கட்டை, மூளிக்கட்டை என்று பல வகைகளில் கிடைக்கும். பச்சையை சுற்றி மஞ்சள், சிவப்பை சுற்றி பச்சை, இன்னும் பல என்று வண்ணங்களுக்கும் குறைவிருக்காது.

நான் பம்பரம் விடும் முறையால் எனக்கு சட்டிக்கட்டை ஒத்துவராது. சட்டிக்கட்டை சுற்றும் போது கொஞ்சம் சாய்ந்தாலும் கட்டைத் தரையில் மோதி உருண்டு ஓடி விடும். என்னுடையத் தேர்வு எப்போதும் ஒல்லியாகவும் இல்லாத சட்டியாகவும் இல்லாத முட்டை வடிவக்கட்டைதான்.
வண்ணம் தேர்ந்தெடுக்கும் போதும் கவனம் தேவை! கடையில் பார்க்கும் போது அழகாய்த் தோன்றும் வண்ணம் சுற்றும் போது காணச் சகிக்காது. அதனால் எப்போதும் மற்றவரின் பம்பரங்கள் சுற்றும்போது பார்த்து நல்ல வண்ணத்தைத் தேர்ந்தெடுத்துக் கடைசியாகவே பம்பரம் வாங்குவேன்.

அடுத்த வேலை பம்பரத்துக்கு ஆணி அடிப்பது! முதலில் எல்லோரும் இரும்பு கடையில் ஆணி வாங்கி அதன் தலையை வெட்டி விட்டு பம்பரத்துக்கு அடிப்போம். ஆனால் பிறகு பம்பரக்காரன் ஒருவனின் தேடலில் ஒரு மாற்றுப்பொருள் கிடைத்தது! பீரோக் கம்பெனியில் பற்ற வைப்பதற்குப் பயன் படுத்தும் elctric rod களின் மிச்சம் தான் அது! திருடுவது குற்றம் என்று அந்த வயதிலேயேத் தெரிந்ததால் திருட மாட்டோம். யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்து விடுவோம்(!).

பம்பரத்துக்கு ஆணி அடிப்பது ஒருக் கலை. வேகமாக அடித்தால் கட்டை இரண்டாகப் பிளக்கும்.
கோணையாக அடித்துவிட்டாலோ மழைப்பாட்டில் ஷ்ரேயா ஆடுவது போல ஒரு 45 டிகிரி கோணத்தில் பம்பரம் சுற்ற ஆரம்பித்து விடும். சரியாக ஆணியை அடித்து விட்டாலும் பம்பரம் முழுமையாகத் தயாரில்லை!

கணினியே வாங்கினாலும் அதற்குப் பொட்டுவைத்து அழகு பார்ப்பது தமிழனின் பழக்கம். பம்பரத்திற்கும் ஒரு பொட்டு இருக்கிறது. அதன் பெயர் - "கொண்டாணி" (கொண்டை ஆணி). அதையும் வாங்கி பம்பரத்தின் உச்சந்தலையில் அடித்து விட்டால் பம்பர வேலை முடிந்தது.

பம்பரம் மட்டும் இருந்தால் போதுமா? (சுகன்யாவும் வேண்டும் என்கிறீர்களா?) சாட்டைக்கும் வேலை இருக்கிறது. சாட்டையை அப்படியேப் பயன்படுத்தினால் வாட்டமாக இருக்காது. ஒரு குளிர் பான பாட்டிலின் மூடியை எடுத்து சப்பையாக்கித் துளையிட்டு அதில் சாட்டையின் ஒரு முனையை சொருகி முடிந்துவிட்டால், சாட்டையைப் பம்பரத்தில் சுற்றிக்கொண்டு பிடித்துக் கொள்ள வசதியாக இருக்கும்.

சின்னப் பசங்களிடம் பிலிம் காட்டுவதற்காகவே பம்பரத்தை தரையில் விடாமலேயே கையில் சுற்ற வைக்க பல நாள் இரவு கண்விழித்துக் கற்றுக் கொண்டேன்!

ஆனால் சின்னக் கவுண்டருக்குப் பிறகு பம்பரம் விடுவதை நிறுத்தி விட்டோம்.

உங்கள் பம்பர அனுபவம் எப்படி?
(நான் இதுவரை பம்பரம் விடும் பெண்களைப் பார்த்ததில்லை)

சந்திப்போம்!