Wednesday, January 31, 2007

கங்கை கொண்ட சோழபுரம் - படங்கள்

கடந்தவாரம் ஊரில் இருந்த பொழுது பெரம்பலூருக்கு ஒரு திருமணத்திற்கு செல்லவேண்டியிருந்தது. காலையிலேயே திருமணம் முடிந்தபிறகு திருச்சிக்கு செல்வதற்காக பேருந்துநிலையத்தில் நின்றிருந்தபோதுதான் சுற்றுலாத்துறையின் ஒரு விளம்பரப் பலகையைப் பார்த்தேன். கங்கை கொண்ட சோழபுரம் -> 60 கி.மீ என்று போட்டிருந்தது. சரி வந்தது வந்து விட்டோம் அந்த ஊரிலும் என்ன இருக்கிறது என்று பார்த்துவிடலாம் என்று அங்கு செல்வதற்காக ஜெயங்கொண்டம் செல்லும் பேருந்தில் ஏறிவிட்டேன். (ஜெயங்கொண்ட சோழபுரம்தான் ஜெயங்கொண்டம் ஆகி விட்டது). ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் இறங்கும்போது மணி மதியம் 1. உச்சி வெயில் உச்சியைப் பிளந்தது. பொதுவாக பயணம் செய்யும்போதோ, கூட்டமாக இருக்கும்போதோ என்னால் சாப்பிட முடியாது. சரி பழச்சாறு எதுவும் குடிக்கலாம் என்றால் நல்லதாக ஒரு கடையையும் காணோம். சரி தமிழனின் தேசிய பானம் தேநீரையேக் குடிப்போம் என்று ஒரு கடையில் ஒதுங்கினேன். ( தேநீர் குடிப்பதை கொஞ்ச நாட்களாக நிறுத்தியிருந்தேன். இப்போது மறுபடி ஆரம்பமாகிவிட்டது ) வீட்டில் டம்ளரில் ( தமிழில் கோப்பை? ) வழிய வழிய கொடுப்பார்கள். அந்தக் கடையில் கொடுத்தது தொண்டை நனைவதற்குள் தீர்ந்து விட்டது. மறுபடி இன்னொன்றையும் வாங்கி நானே குடிப்பதை அந்தக் கடைக்காரர் ஒரு மார்க்கமாக தான் பார்த்தார். அப்புறம் அங்கிருந்து 10 கி.மீ தொலைவில் இருக்கும் கங்கை கொண்ட சோழபுரத்துக்குப் பயணமானேன். நான் எதிர்பார்த்தது பழைய கோட்டை, அரண்மனை எதுவும் இருக்கும் என்றுதான். அங்குபோனால் இருந்தது என்னவோ ஒரே ஒரு கோயில் தான். அதுதான் பிரகதீசுவரர் கோயிலாம். ( அப்போ தஞ்சையில் இருப்பது என்ன? எனக்கும் தெரியவில்லை.)


முகப்பில் நுழையுமுன் எடுத்தப்படம்.

புல்தரையெல்லாம் நன்றாகப் பராமரித்து வைத்திருக்கிறார்கள்.

இது என்னவென்றே தெரியவில்லை உள்ளே எட்டிப்பார்க்கலாம் என்று நுழைந்தபோது ஒரு காதல் ஜோடி இருந்தது.அமைதியாக வந்துவிட்டேன்.

வெயிலின் பின்னணியில் கோபுரம்.

வெயிலின் முன்னணியில் (:-) ) கோபுரம்.

இருப்பது ஒரே கட்டடம் அல்ல. ஒன்றன் பின் ஒன்றாய் இரண்டு கட்டடங்கள்.


நீலத்துக்கும் பச்சைக்கும் இடையே கோபுரம்.

வெள்ளை நந்தியும் கருப்பு நந்தியும்

வெளியே வந்த பிறகு ஒரு மூலையில் இருந்து எடுத்தப் படம்.

கடந்த வாரம் முழுவதும் வீட்டிலிருந்ததில் கிடைத்த வாய்ப்பு இது. இப்படி மகிழ்ச்சியான நிகழ்வுகள் இருந்தாலும் ஒரு பிரிவின் துயர் ரொம்பவே வாட்டிவிட்டது என்னை. தமிழ்மணத்தைப் பிரிந்து இருந்ததைத்தான் சொல்கிறேன். :-)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

33 comments:

  1. தந்தை இராஜராஜன் எழுப்பியதைவிட சிறப்பான கோவிலைக் கட்ட விரும்பிய இராசேந்திர சோழனின் முயற்சியிது. கங்கையில் தூய்மை செய்யப் பட்டு கனக விசயன் தலையில் கொணர்ந்த கற்களைக் கொண்டு கட்டப் பட்டதோ என்ற ஐயம் எனக்கு உண்டு. வரலாறு அறிந்தவர்கள் கூறுவார்கள் என எதிர்நோக்குகிறேன்.

    ReplyDelete
  2. சிங்கம் போன்ற அது என்னவென்றே தெரியவில்லை என்று எழுதி இருக்கிறீர்களே அதற்குள் ஒரு கிணறு இருப்பதாக நியாபகம்.
    சில வருடங்களுக்கும் முன் சென்றபோது திறந்து தான் இருந்தது.இப்பொது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் முன்பு போல் பார்க்க இயலவில்லை.கோயிலுக்குள்சில இடங்கள் ,சுற்றுப்பாதையில் சில இடங்கள்.. செல்வதற்கு தற்போது தடை உள்ளது.

    ReplyDelete
  3. நண்பரே நானும் கங்கை கொண்ட சோழபுரம் பார்த்தவள் என்பதால் விள்க்கம்.3வது படத்தில் உள்ளது'சிங்கமுக கிணறு' அதன் வழியாக உள் நுழைந்தால் கிணற்றுக்குச் செல்லும் படிகள் இருக்கும்.அதன் சுற்றுப் பாதையில் பார்த்திருந்தீர்களானால்,கம்பி வலை மூடப்பட்ட ஒரு துவாரம் வழி கிணற்றுப் பாதை தெரியும் .அருகிலேயே கிணறு பார்க்கவில்லையா? நல்லவேளை பார்த்திருந்தால் அது கூவத்தை விட நாறிக்கிடப்பதை படம் பிடித்திருப்பீர்.
    இந்த கோயில் தஞ்சையில் உள்ள 'பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு இணையாக இராசேந்திர சோழனால் கட்டப்பட்டது.ஒரே மாதிரி வரைபட அமைப்பு.ஒரே கல்லில் யானைகள் மூலம் கல்லை ஏற்றி விதானம் அமைக்கப்பட்டது.
    ஐப்பசி மாத பௌர்ணமியன்று மிகப்பெரிய லிங்கத்திற்கு நடக்கும் 'அன்ன அபிஷேகம்' விஷேஷமானது.

    ReplyDelete
  4. வாங்க மணியன்,

    / தந்தை இராஜராஜன் எழுப்பியதைவிட சிறப்பான கோவிலைக் கட்ட விரும்பிய இராசேந்திர சோழனின் முயற்சியிது. /

    அப்படித்தான் படித்ததாக எனக்கும் நினைவு!

    /கங்கையில் தூய்மை செய்யப் பட்டு கனக விசயன் தலையில் கொணர்ந்த கற்களைக் கொண்டு கட்டப் பட்டதோ என்ற ஐயம் எனக்கு உண்டு. வரலாறு அறிந்தவர்கள் கூறுவார்கள் என எதிர்நோக்குகிறேன். /

    அங்கு படிப்பதற்கு கல்வெட்டுக்களும் கூட அதிகம் இல்லை. நான் போன போது கோயிலும் சாத்தப்பட்டிருந்தது. வரலாறு தெரிந்தவர்கள் சொல்வார்கள்!

    ReplyDelete
  5. அதுக்குள்ள அடுத்த ஊர சுத்தி காமிச்சிட்டீங்க... நான் இதுவரைக்கும் இங்கு போனதேயில்லை... உங்க புகைபடம் ஆவலை தூண்டுகிறது....

    ReplyDelete
  6. படங்கள் நல்லா வந்திருக்கு கோ. கட்டிடக் கலை அமைப்பைப் பார்த்தியா! என்ன நேர்த்தி. இந்தக் கோயிலும் தஞ்சைக் கோயிலும் தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப்படுகின்றவை. ஆகையால்தான் துப்புரவாகவும் ஒழுங்காகவும் இருக்கின்றன. மற்ற பெரிய கோயில்கள் எல்லாம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.

    ReplyDelete
  7. // மணியன் said...
    தந்தை இராஜராஜன் எழுப்பியதைவிட சிறப்பான கோவிலைக் கட்ட விரும்பிய இராசேந்திர சோழனின் முயற்சியிது. கங்கையில் தூய்மை செய்யப் பட்டு கனக விசயன் தலையில் கொணர்ந்த கற்களைக் கொண்டு கட்டப் பட்டதோ என்ற ஐயம் எனக்கு உண்டு. வரலாறு அறிந்தவர்கள் கூறுவார்கள் என எதிர்நோக்குகிறேன். //

    இல்லை மணியன். கனக விசயர்கள் ராஜேந்திர சோழனுக்கும் கிட்டத்தட்ட என்னூறு ஆண்டுகளுக்கு முந்தையவர்கள். அதாவது சேரன் செங்குட்டுவன் காலம். கண்ணகிக்குக் கோயில் கட்ட வேண்டுமென்று விரும்பவும் ஒரு அமைச்சன் பொதிகையில் கல்லெடுத்துக் காவிரியில் நீரெடுதுக் கழுவிக் கட்ட வேண்டும் என்கிறான். இன்னொருவனோ இமயத்தில் கல்லெடுத்து கங்கையில் மூழ்கியெடுத்துச் செய்ய வேண்டுமென்கிறான். கொன்றை சூடிய விரிசடையன் நமக்கு ஒரு கல் தாரானோ என்று இமயம் செல்ல நினைக்கிறான் செங்குட்டுவன். அப்பொழுது வடவர்களான கனகனும் விசயனும் பாண்டிய, சேர, சோழர்களை இகழ்ந்து சொல்லிய செய்தி எட்டுகிறது. ஆகையால் கல்லெடுக்க என்று மட்டும் புறப்பட நினைத்தவன் போருக்கும் புறப்பட்டுப் போய் வென்று கல்லெடுத்து கனகவிசயர் தலையில் வைத்துக் கொணர்ந்தான்.

    ReplyDelete
  8. அன்பு அருட்பெருங்கோ...

    அருமையான பதிவு...கோவிலை நன்றாக புகைப்படம் எடுத்திருக்கிறிர்கள். (உங்களின் புகைப்பட கருவியைப் பற்றி சொன்னால் நன்றாக இருக்கும்).

    நான் இங்கு போனதில்லை...நம் மாநிலத்தில் பார்க்க வேண்டிய பல அருமையான இடங்கள் உள்ளது..
    ம்ம்ம்ம்... நேரம்தான் கிடைக்கவில்லை :-((

    அருமையான விளக்கங்கள் கொடுக்கின்ற அனைவருக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  9. நல்ல படங்கள் அருட்பெருங்கோ.

    மணியன் ஐயா. கனக விசயரின் தலையில் கட்டிக் கொண்டு வந்தது சேரன் செங்குட்டுவன் - கண்ணகி சிலை செய்வதற்காக - என்று படித்த நினைவு.

    ReplyDelete
  10. செல்லாது செல்லாது....

    காதல் முரசு பக்கத்துல காதல் இல்லாம ஒரு பதிவா...

    செல்லாது செல்லாது...

    ReplyDelete
  11. அழகான படங்கள்!

    //உள்ளே எட்டிப்பார்க்கலாம் என்று நுழைந்தபோது ஒரு காதல் ஜோடி இருந்தது.அமைதியாக வந்துவிட்டேன்.//

    :-)))

    ReplyDelete
  12. அருமையான படங்கள். இன்னும் போக சந்தர்ப்பம் கிடைக்கலை.
    கட்டாயம் போகணும்.

    ReplyDelete
  13. எக்ஸூஸ்மீ...படங்கள் சூப்பர்...உங்கள் கேமிரா ஸ்பெஸிபிகேஷன் சொல்றீங்களா ?

    சின்ன வயதில் போயிருக்கேன்....கோயில் எல்லாம் ரொம்ப பெருசா இருந்தது...இப்போ பார்த்தா சிறுசா இருக்குமோ என்னவோ ?

    மேலும் அந்த சிங்க அமைப்புக்க்கு உள்ளே ஒரு கிணறு இருந்தது, அந்த கிணறில் எட்டிப்பார்த்தேன்...அப்போ தண்ணீர் இருந்தது...இப்போ காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு அப்புறம்தான் போய் எட்டிப்பார்க்கனும்..

    காதல் கவிதைக்கு ஏதாவது கரு கிடைச்சிதா ?

    ReplyDelete
  14. வாங்க லட்சுமி,

    / சிங்கம் போன்ற அது என்னவென்றே தெரியவில்லை என்று எழுதி இருக்கிறீர்களே/
    அது சிங்கம்போல இருக்கிறது என்பது தெரிகிறது ஆனால் அது எதற்கு என்றுதான் தெரியவில்லை.

    /அதற்குள் ஒரு கிணறு இருப்பதாக நியாபகம்./

    நான் உள்ளே செல்லவில்லை. ஆனால் பக்கத்தில்தான் ஒரு கிணறு இருந்தது.

    / சில வருடங்களுக்கும் முன் சென்றபோது திறந்து தான் இருந்தது.இப்பொது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் முன்பு போல் பார்க்க இயலவில்லை.கோயிலுக்குள்சில இடங்கள் ,சுற்றுப்பாதையில் சில இடங்கள்.. செல்வதற்கு தற்போது தடை உள்ளது. /

    இப்போதும் திறந்துதான் இருக்கிறது. ஆனால் காதலர்களுக்காக மட்டும் போல :-)) நான் சென்றது மதிய நேரம் என்பதால் கோயில் பூட்டியிருந்தது. நான் உள்ளே செல்லவில்லை. வெளியே இருந்து மட்டும் படஎடுத்துக் கொண்டு வந்துவிட்டேன்.

    ReplyDelete
  15. அருமையான படங்கள்.
    இவை எம் முன்னோர்கள் எமக்கு விட்டுச் சென்ர சொத்துகள். இவற்றை அழியாது பாதுகாக்க வேண்டிய கடமை உலகத்தில் உள்ள தமிழர்க்கும் உண்டு.

    ReplyDelete
  16. வாங்க கௌசி,

    /நண்பரே நானும் கங்கை கொண்ட சோழபுரம் பார்த்தவள் என்பதால் விள்க்கம்.3வது படத்தில் உள்ளது'சிங்கமுக கிணறு' அதன் வழியாக உள் நுழைந்தால் கிணற்றுக்குச் செல்லும் படிகள் இருக்கும்.அதன் சுற்றுப் பாதையில் பார்த்திருந்தீர்களானால்,கம்பி வலை மூடப்பட்ட ஒரு துவாரம் வழி கிணற்றுப் பாதை தெரியும் /

    பெயர் விளக்கத்திற்கு நன்றிங்க. நான் தான் உள்ளேயேப் போகவில்லையே ( காதலர்களுக்குத் தொல்லை கொடுப்பது பாவம் இல்லையா? ;-) )

    /அருகிலேயே கிணறு பார்க்கவில்லையா? நல்லவேளை பார்த்திருந்தால் அது கூவத்தை விட நாறிக்கிடப்பதை படம் பிடித்திருப்பீர்./
    கிணற்றைப் பார்த்தேன் ஆனால் படம் பிடிக்க தோணவில்லை!

    /இந்த கோயில் தஞ்சையில் உள்ள 'பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு இணையாக இராசேந்திர சோழனால் கட்டப்பட்டது.ஒரே மாதிரி வரைபட அமைப்பு.ஒரே கல்லில் யானைகள் மூலம் கல்லை ஏற்றி விதானம் அமைக்கப்பட்டது./

    சிறப்புதான்… அடுத்தமுறை தஞ்சை போனால் அதையும் படம் பிடிக்கனும்!

    /ஐப்பசி மாத பௌர்ணமியன்று மிகப்பெரிய லிங்கத்திற்கு நடக்கும் 'அன்ன அபிஷேகம்' விஷேஷமானது./
    இதை வீட்டில் இருப்பவர்களிடம் தான் சொல்ல வேண்டும் :-)))

    ReplyDelete
  17. வாங்க கார்த்திக்,

    / அதுக்குள்ள அடுத்த ஊர சுத்தி காமிச்சிட்டீங்க... நான் இதுவரைக்கும் இங்கு போனதேயில்லை... உங்க புகைபடம் ஆவலை தூண்டுகிறது.... /

    இதுவும் போன வாரம் போன ஊர்தான். நீங்களும் போய்ப் பாருங்க நல்லா இருக்கு!!!

    ReplyDelete
  18. வாங்க ராகவன்,

    / படங்கள் நல்லா வந்திருக்கு கோ. /

    வெயிலில் எடுத்ததால் இருக்கும்!

    /கட்டிடக் கலை அமைப்பைப் பார்த்தியா! என்ன நேர்த்தி./

    அதற்காகதானே போனதே!

    / இந்தக் கோயிலும் தஞ்சைக் கோயிலும் தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப்படுகின்றவை. ஆகையால்தான் துப்புரவாகவும் ஒழுங்காகவும் இருக்கின்றன. மற்ற பெரிய கோயில்கள் எல்லாம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.
    /

    ம்ம்ம்... வித்தியாசம் காணமுடிந்தது. பராமரிப்புக்காக நிச்சயம் பாரட்டலாம்!!!

    ReplyDelete
  19. /இல்லை மணியன். கனக விசயர்கள் ராஜேந்திர சோழனுக்கும் கிட்டத்தட்ட என்னூறு ஆண்டுகளுக்கு முந்தையவர்கள். அதாவது சேரன் செங்குட்டுவன் காலம். கண்ணகிக்குக் கோயில் கட்ட வேண்டுமென்று விரும்பவும் ஒரு அமைச்சன் பொதிகையில் கல்லெடுத்துக் காவிரியில் நீரெடுதுக் கழுவிக் கட்ட வேண்டும் என்கிறான். இன்னொருவனோ இமயத்தில் கல்லெடுத்து கங்கையில் மூழ்கியெடுத்துச் செய்ய வேண்டுமென்கிறான். கொன்றை சூடிய விரிசடையன் நமக்கு ஒரு கல் தாரானோ என்று இமயம் செல்ல நினைக்கிறான் செங்குட்டுவன். அப்பொழுது வடவர்களான கனகனும் விசயனும் பாண்டிய, சேர, சோழர்களை இகழ்ந்து சொல்லிய செய்தி எட்டுகிறது. ஆகையால் கல்லெடுக்க என்று மட்டும் புறப்பட நினைத்தவன் போருக்கும் புறப்பட்டுப் போய் வென்று கல்லெடுத்து கனகவிசயர் தலையில் வைத்துக் கொணர்ந்தான். /

    பின்னூட்டத்துல ஒரு வரலாறு பாடமே நடக்குது :-))) நோட் பண்ணுங்கப்பா கல்வெட்டுல ;-)

    ReplyDelete
  20. வாங்க கோபி,

    /அன்பு அருட்பெருங்கோ...

    அருமையான பதிவு...கோவிலை நன்றாக புகைப்படம் எடுத்திருக்கிறிர்கள். (உங்களின் புகைப்பட கருவியைப் பற்றி சொன்னால் நன்றாக இருக்கும்)./


    Sony Cybershot DSC S500 model Camera. 6.0 Mega Pixel.

    /நான் இங்கு போனதில்லை...நம் மாநிலத்தில் பார்க்க வேண்டிய பல அருமையான இடங்கள் உள்ளது..
    ம்ம்ம்ம்... நேரம்தான் கிடைக்கவில்லை :-((/

    ஆமாங்க தமிழ்நாட்டிலேயே சுற்றிப் பார்க்க நிறைய இடங்கள் உள்ளன...நேரம்தான் பிரச்சினையே

    /அருமையான விளக்கங்கள் கொடுக்கின்ற அனைவருக்கும் நன்றிகள்.
    /

    அதே அதே :))

    ReplyDelete
  21. வாங்க குமரன்,

    / நல்ல படங்கள் அருட்பெருங்கோ. /

    நன்றிங்க :-)

    /மணியன் ஐயா. கனக விசயரின் தலையில் கட்டிக் கொண்டு வந்தது சேரன் செங்குட்டுவன் - கண்ணகி சிலை செய்வதற்காக - என்று படித்த நினைவு.
    /

    ஓவர் டூ மணியன் சார் :-)))

    ReplyDelete
  22. வாங்க ஜி,

    /செல்லாது செல்லாது....

    காதல் முரசு பக்கத்துல காதல் இல்லாம ஒரு பதிவா...

    செல்லாது செல்லாது... /

    அதற்காகத் தான் பக்கத்துல ஒரு படக்கவிதை எப்பவுமே இருக்கே ;-))

    ReplyDelete
  23. வாங்க சேதுக்கரசி,

    /அழகான படங்கள்!/ அழகான கட்டடம் = அழகான படம்!

    //உள்ளே எட்டிப்பார்க்கலாம் என்று நுழைந்தபோது ஒரு காதல் ஜோடி இருந்தது.அமைதியாக வந்துவிட்டேன்.//

    :-))) /

    அட சிரிக்காதீங்க நிஜம்தான்!!

    ReplyDelete
  24. வாங்க டீச்சர்,

    /அருமையான படங்கள். இன்னும் போக சந்தர்ப்பம் கிடைக்கலை.
    கட்டாயம் போகணும். /

    சந்தர்ப்பம் கிடைக்கும்போது கண்டிப்பாப் போய்ப் பாருங்க ... அருமையா இருக்கும்!!

    ReplyDelete
  25. அருட்பெருங்கோ,
    எனக்கு மிகப்பிடித்த கோயில் இது.

    என் பங்கிற்கு நான் எடுத்த புகைப்படங்கள் இங்கே...

    ReplyDelete
  26. வாங்க வடுவூர் குமார்,

    /படங்கள் அருமை. /

    நன்றிங்க... வெயில் + ஓரளவுக்கு தரமான கேமரா தான் காரணங்கள் :-))

    ReplyDelete
  27. வாங்க கொலவெறி ரவி,

    /எக்ஸூஸ்மீ.../

    yes u r excused :-)))

    /படங்கள் சூப்பர்...உங்கள் கேமிரா ஸ்பெஸிபிகேஷன் சொல்றீங்களா ?/

    focal length, aperture time மாதிரி டெக்னிக்கல் அறிவெல்லாம் இன்னும் வளரல... :((

    /சின்ன வயதில் போயிருக்கேன்....கோயில் எல்லாம் ரொம்ப பெருசா இருந்தது...இப்போ பார்த்தா சிறுசா இருக்குமோ என்னவோ ?/

    ஆமாமா ரொம்ப சிறுசா போயிடுச்சு... நானே கையில எடுத்து வச்சிப் பார்த்தேன்னா பாத்துக்கோங்களேன் ;-)

    /மேலும் அந்த சிங்க அமைப்புக்க்கு உள்ளே ஒரு கிணறு இருந்தது, அந்த கிணறில் எட்டிப்பார்த்தேன்...அப்போ தண்ணீர் இருந்தது...இப்போ காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு அப்புறம்தான் போய் எட்டிப்பார்க்கனும்../

    பாத்துங்க தீர்ப்பன்னைக்கு பெங்களூர்ல வெளிய அலையாதீங்க... உங்கள விட கொலவெறியோட இருக்கப்போறாங்க...

    /காதல் கவிதைக்கு ஏதாவது கரு கிடைச்சிதா ? /

    நிறைய நிறைய :)))

    ReplyDelete
  28. வாங்க வெற்றி,

    /அருமையான படங்கள்.
    இவை எம் முன்னோர்கள் எமக்கு விட்டுச் சென்ர சொத்துகள். இவற்றை அழியாது பாதுகாக்க வேண்டிய கடமை உலகத்தில் உள்ள தமிழர்க்கும் உண்டு./

    ம்ம்ம்...உண்மைதான்... பேணுவதோடு இவை பற்றிய விளம்பரங்களை சுற்றுலாத் துறையினர் அதிகமாக வெளியிட வேண்டும்...

    ReplyDelete
  29. வாங்க அருள்குமார்,

    /அருட்பெருங்கோ,
    எனக்கு மிகப்பிடித்த கோயில் இது.

    என் பங்கிற்கு நான் எடுத்த புகைப்படங்கள் இங்கே... /

    அப்படியா? உங்கள் படங்களையும் பார்த்தேன்... கோயில் பராமரிப்பின்றி இருப்பது போன்ற தோற்றம் தருகிறது...இப்பொழுது சென்று பாருங்கள் பளிச்சென இருக்கிறது...

    ReplyDelete
  30. நல்ல பதிவு மக்கா (நாங்களும் தஞ்சை போயி கோயில சுத்தி பார்த்தோம்னு சொல்ல அருமையான வாய்ப்பு) இப்படி ஒரு தெறமையை எங்க கிட்ட மறச்சிட்டீகளே ரொம்பவும் அருமையாகத்தான் இருந்தது கோயிலும் கோயிலின் சுற்றமும். வெளியே சுற்றியிருந்த அகழிதான் குப்பையெல்லாம் கொட்டி நெரைஞ்சிடுச்சி. சுற்றி கல்வெட்டுகள் அதிகமா இருந்துச்சு ஆனா எனக்குத்தான் அதை படிக்கத்தெரியல. படங்கள் முன்பே உங்க பதிவுல பார்த்த ஞாபகம்... இருந்தாலும் இன்னோர்தபா போய்ட்டு வந்தாப்புல கீது. சோக்காகீது மாமே இந்த மாதிரி புச்சு புச்சா புட்சு போடுங்கோ அப்பால ஓசில ஊர்சுத்துனாப்புல இர்க்கும். -- சேக்காளி

    ReplyDelete
  31. அங்கிட்டுப் போயிட்டு வரணும்ன்னு ஆசை வந்துருச்சுப்பா உன் பதிவைப் பாத்து..

    ReplyDelete
  32. வேங்கயின் மைந்தன் படிச்சிருக்கீங்களா? அதுல கடைசிய வரும் கங்கை கொண்ட சோழபுரத்தை அமைத்த விதம்.அந்த நகரத்தின் மர்மங்கள் படிக்க படிக்க ஆர்வமாய் இருக்கும். இப்போ அ.ஆ வில் பார்த்துட்டு அந்த இடத்துக்கு போகனும் னு ஆசையா இருக்கு

    ReplyDelete