Showing posts with label காதல் - பிப்ரவரி - 2007. Show all posts
Showing posts with label காதல் - பிப்ரவரி - 2007. Show all posts

Friday, March 09, 2007

இது காதல் பூக்கும் மாதம் – 210

இது காதல் பூக்கும் மாதம் – முதல் பகுதி

21. நெஞ்சொடு புலத்தல்


உனக்குத் துணையாக உன்மனம்…
உன்மனதுக்குத் துணையாக என்மனம்…
எனக்குத் துணையாக…
நான் மட்டும்!

அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீயெமக் காகா தது.

நெஞ்சே! நம்மை நினைக்காமல் இருப்பதற்கு அவருடைய நெஞ்சு அவருக்குத் துணையாக இருக்கும்போது நீ எமக்குத் துணையாக இல்லாமல் அவரை நினைத்து உருகுவது ஏன்?


உயிரோடு இருப்பதா?
உன்னோடு இருப்பதா? என்றால்…
உன்னோடு வருகிறது என் இதயம்!

உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.

நெஞ்சே! நம்மிடம் அன்பு காட்டாதவர் அவர் எனக் கண்ட பிறகும், நம்மை வெறுக்க மாட்டார் என நம்பி அவரிடம் செல்கின்றாயே.


என் கண்ணும் உன் கண்ணையேத் தேடுகிறது…
என் இதயமும் உன் இதயத்தையே நாடுகிறது…
என் அங்கங்களையெல்லாம் இழுத்துக் கொண்ட பின்
உயிரை மட்டும் ஏன் விட்டு வைத்திருக்கிறாய்?


கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங் கவர்பின் செலல்.

நெஞ்சே! நீ எனை விடுத்து அவரை விரும்பிப் பின் தொடர்ந்து செல்வது, துன்பத்தால் அழிந்தோர்க்கு நண்பர்கள் துணையிருக்க மாட்டார்கள் என்று சொல்வது போலவோ?


நம் காதலைப் பற்றி
உன் மனம் என் மனதிடம் என்ன பேச்சு பேசுகிறது?
நீ தான் எதுவுமே பேசுவதில்லை.


இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.

நெஞ்சே! முதலில் ஊடல் செய்து பிறகு அதன் பயனைக் கூடலில் நுகர்வோம் என நினைக்க மாட்டாய்; எனவே அதைப்பற்றி உன்னிடம் யார் பேசப் போகிறார்கள்? நான் பேசுவதாக இல்லை.



உன் மௌனத்தில் இருந்துதான் பெறப்பட்டன
என் காதலுக்கானத் தாலாட்டும்…
ஒப்பாரியும்!

பெறாஅமை அஞ்சும் பெறினபிரி வஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.

என் நெஞ்சத்துக்குத் துன்பம் தொடர் கதையாகவே இருக்கிறது. காதலரைக் காணவில்லையே என்று அஞ்சும்; அவர் வந்து விட்டாலோ பிரிந்து செல்வாரே என நினைத்து அஞ்சும்.


உன்னோடு பேசாத நாட்களை
என் நாட்குறிப்பில் இருந்து நீக்குகிறேன்
அவை நான் வாழாத நாட்கள்!


தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு.

காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.


என் காதலை உதறினாய்
நீ உதறிய வேகத்தில் உதிர்ந்தது
என் உயிர்.


நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாவென்
மாணா மடநெஞ்சிற் பட்டு.

அவரை மறக்க முடியாமல் வாடும் என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சத்துடன் சேர்ந்து மறக்கக் கூடாது நாணத்தையும் மறந்து விட்டேன்.



நீ பிரிந்தபிறகும் கூட
உன்னை வெறுக்கத் தோன்றவில்லை என் இதயத்துக்கு…
என் இதயம் நேசித்தவளென்பதால் மட்டுமல்ல
என் இதயத்தை நேசித்தவளென்பதாலும்!


எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.


உன்னைப் பிரிந்த நாட்களில்
எனக்குத் துணையாயிருக்கிறது
தனிமை!


துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி.

துன்பம் வரும்போது அதனைத் தாங்குவதற்கு நெஞ்சமே துணையாக இல்லாவிட்டால் பிறகு யார் துணையாக இருப்பார்?



உள்ளமே உன்பின்னால் போனபின்
உலகமே என் பின்னாலிருந்து
என்ன பயன்?


தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.

நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.


அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Wednesday, March 07, 2007

இது காதல் பூக்கும் மாதம் - 200

இது காதல் பூக்கும் மாதம் - முதல் பகுதி


20. புணர்ச்சி விதும்பல்


“உன்னை எனக்குப் பெயர் வைக்க சொன்னால்
என்ன பெயர் வைப்பாய்?” என்று கேட்பவளிடம்,
‘மதுமதி’ என்றேன்.
போதை தரும் நிலவுக்கு
வேறென்ன பெயர் வைக்க முடியும்?

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

மதுவை அருந்தினால்தான் இன்பம், ஆனால் காதல் அப்படியல்ல; நினைத்தாலே இன்பம்; காதலர்கள் ஒருவரையொருவர் கண்டாலே இன்பம்.


உன் காதலின் முன்னே போட்டியிட முடியாமல்
உன்னிடம் சரணடைகின்றன
என் சின்னக் கோபங்கள்!

தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.

பனையளவாகக் காதல் பெருகிடும் போது தினையளவு ஊடலும் கொள்ளாமல் இருக்க வேண்டும்.


“உன்னோடுப் பேச மாட்டேன்” என்று சொல்லி விட்டு
கண்களால் இத்தனைக் காவியம் வடிப்பதற்கு பதில்
நீ வாயைத் திறந்தே பேசி விடலாம்!

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.

என்னை அரவணைக்காமல் தமக்கு விருப்பமானவற்றையே செய்து கொண்டிருந்தாலும், என் கண்கள் அவரைக் காணாமல் அமைதி அடைவதில்லை.


நீ என்னோடு கா(ய்) விட்டுப்
பேசாமல் இருக்கும் பொழுதுகளில்
மேலும் கனிந்து விடுகிறது
என் காதல்.

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதென் னெஞ்சு.

ஊடுவதற்காகச் சென்றாலும்கூட அதை நெஞ்சம் மறந்து விட்டுக் கூடுவதற்கு இணங்கி விடுவதே காதலின் சிறப்பு.


என்னைப் பிரிந்து விட்டதற்காக நீயும்
உன்னைப் பிரிய விட்டதற்காக நானும்
வருத்தப் பட்டுக் கொண்டிருக்கையில்…
அமைதியாக நம்மை சேர்த்து வைக்கிறது
நம் காதல்!

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கண்
பழிகாணேன் கண்ட இடத்து.

கண்ணில் மை தீட்டிக் கொள்ளும் பொழுது அந்த மை தீட்டும். கோலைக் காணாதது போலவே, காதலனைக் காணும்பொழுது அவன் என்னைப் பிரிந்து சென்ற குற்றத்தை மறந்து விடுகிறேன்.


நீ விலகியதில்
என் காதலுக்கு உன் மேல் வருத்தம்!
மீண்டும் நீ வந்ததும்
அத்தனை வருத்தங்களும் அரைநொடியில் மாறிப் போயின…
அழகானக் காதலாய்!


காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.

அவரைக் காணும்பொழுது அவர் குற்றங்களை நான் காண்பதில்லை; அவரைக் காணாதபொழுது அவர் குற்றங்களைத் தவிர வேறொன்றையும் நான் காண்பதில்லை.


உன்னோடு
நான் போடும் சண்டையெல்லாம்
உன்னிடம் தோற்பதற்கே!


உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.

வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுமெனத் தெரிந்திருந்தும் நீரில் குதிப்பவரைப் போல, வெற்றி கிடைக்காது எனப் புரிந்திருந்தும், ஊடல் கொள்வதால் பயன் என்ன?


பிரிவிற்குப் பின்னான நம் முதல் சந்திப்பில்
எந்தக் காரணமும் சொல்லாமல்
என் மார்பில் முகம் புதைத்து
நீ வடித்தக் கண்ணீரில்
மேலும் சுத்தமாகிறது என் காதல்!

இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.

என்னுள்ளம் கவர்ந்த கள்வனே! இழிவு தரக்கூடிய துன்பத்தை நீ எனக்கு அளித்தாலும் கூட, கள்ளை உண்டு களித்தவர்க்கு மேலும் மேலும் அந்தக் கள்ளின் மீது விருப்பம் ஏற்படுவது போலவே என்னையும் மயங்கச் செய்கிறது உன் மார்பு.


இப்படியெல்லாம் இறுக்கிப் பிடிக்காதே
என் காதல் மிக மிக மென்மையானது
உன்னைப் போல!


மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்.

காதல் இன்பம், மலரைவிட மென்மையானது. அதனை அதே மென்மையுடன் நுகருபவர்கள் சிலரே ஆவார்கள்.


பார்வையில் கோபத்தீ மூட்டுகிறாள்.
மன்னிப்பு கேட்க நெருங்கினால்..
கட்டியணைத்துக் காதல் தீ மூட்டுகிறாள்!


கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.

விழிகளால் ஊடலை வெளியிட்டவள், கூடித் தழுவுவதில் என்னைக் காட்டிலும் விரைந்து செயல்பட்டு என்னோடு கலந்து விட்டாள்.


அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Tuesday, February 27, 2007

இது காதல் பூக்கும் மாதம் - 190

இது காதல் பூக்கும் மாதம் -முதல் பகுதி


19.
குறிப்பறிவுறுத்தல்

எல்லாவற்றையும் பங்கிடுவோம் என்றாய்.
நான் காதலைக் கொண்டு வந்தேன்.

நீ பிரிவைக் கொண்டு வந்தாய்.

கொண்டு வந்த பிரிவை என்னிடம் கொடுத்து விட்டு,

காதலை மட்டும் நீ வாங்கிக் கொள்ளவே வில்லை!

கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு.

வெளியில் சொல்லாமல் மறைக்கப் பார்த்தாலும், நிற்காமல் தடைகடந்து விழிகள் சொல்லக்கூடிய செய்தி ஒன்று உண்டு; அதுதான் பிரிவை விரும்பாத காதல்.

நீ பேரழகி என்று நான் பிதற்றுவதெல்லாம் பொய்தான்.
ஆனால் அதைக் கேட்டதும் வெட்கப்படுகிறாயே

அப்போதே அது உண்மையாகி விடுகிறது.

கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது.

கண்நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் கொண்ட என் காதலிக்குப் பெண்மைப் பண்பு நிறைந்திருப்பதே பேரழகாகும்.

நீ கலந்து கொள்ளும் அழகிப் போட்டியில் மட்டும்
போட்டியின்றி ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்து விடுகிறார்கள்

உன்னை!

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன் றுண்டு.

மணியாரத்திற்குள் மறைந்திருக்கும் நூலைப்போல இந்த மடந்தையின் அழகுக்குள்ளே என்னை மயக்கும் குறிப்பு ஒன்று உளது.

நீ சிரிக்கும் போதெல்லாம்
வழுக்கி வழுக்கி விழுகிறேன்

உன் கன்னக் குழியில்.

முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.

மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது.

என் ஆயுள் முழுவதுக்குமான
ஆனந்தம் முழுவதும் ஒளிந்திருக்கிறது

உன் அரை நொடிச் சிரிப்பில்!

செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன் றுடைத்து.

வண்ணமிகு வளையல்கள் அணிந்த என் வடிவழகியின் குறும்புத்தனமான பார்வையில், என்னைத் துளைத்தெடுக்கும் துன்பத்தைத் தீர்க்கும் மருந்தும் இருக்கிறது.

“மீண்டும் சந்தித்தால்
கட்டிப் பிடிப்பாயா?” என்றால்,

“ம்ம்ம்… மீண்டும் பிரியாமலிருக்க

பிடித்துக் கட்டுவேன்” என்கிறாள்.

இவளைக் கட்டிப் பிடித்துக் கட்ட வேண்டும்

காதலால்!

பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து.

ஆரத் தழுவி அளவற்ற அன்பு காட்டி அவர் என்னைக் கூடுவதானது மீண்டும் அவர் என்னைப் பிரிந்து செல்லப் போகிற குறிப்பை உணர்த்துவது போல் இருக்கிறதே.

நீண்டப் பிரிவுக்குப் பிறகு என்னைக் கண்டதும்,
உன்னை விட்டுப் பிரியப் போகிற கவலை…

உன் ஆடைகளுக்கு!

தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை.

குளிர்ந்த நீர்த் துறைக்கு உரிய காதலன் உடலால் கூடியிருக்கும் போது, உள்ளத்தால் பிரியும் நினைவு கொண்டதை என் வளையல்கள் எனக்கு முன்னரே உணர்ந்து கழன்றன போலும்!

“என்னைப் பிரிந்திருந்த போது எப்படி உணர்ந்தாய்?” என்றவளிடம்
“சொர்க்கத்தில் இருந்ததைப் போல” என்றதும் அழுகிறாள்.

உயிர் போனால்தான் சொர்க்கத்துக்குப் போக முடியும் என்பது

இவளுக்குத் தெரியாதோ?

நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.

நேற்றுத்தான் எம் காதலர் பிரிந்து சென்றார்; எனினும், பல நாட்கள் கழிந்தன என்பது போல் பசலை நிறம் எம்மைப் பற்றிக் கொண்டதே.

நீ சிகப்பாம்.
நான் கருப்பாம்.

கேலி பேசுகிறார்கள்.

உன்னையேத் தொடரும்

உன் நிழல் பின் எப்படியிருக்கும்?

தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது.

பிரிவு காரணமாகக் கழலக் கூடிய வளையலையும், மெலிந்து போகக் கூடிய மென்மையான தோளையும் நோக்கியவன் காதலனைத் தொடர்ந்து செல்வதென்ற முடிவைத் தன் அடிகளை நோக்கும் குறிப்பால் உணர்த்தினான்.

“பிரிந்து விடு! பிரிந்து விடு!”
என்று ஆயிரம் வார்த்தைகளில் சொல்லிவிட்டு

ஒற்றைப் பார்வையில் உயிர் போகக் கெஞ்சுகிறாளே

இவளை விட்டு எப்படிப் பிரிய?

பெண்ணினாற் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.

காதல் வேட்கையைக் கண்களால் உணர்த்திக் காதலனுடன் போவதற்கு இரந்து நிற்கும்போது பெண்மைக்குப் பெண்மை சேர்த்தாற் போன்று இருக்கின்றது.

இது காதல் பூக்கும் மாதம் - 200

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Friday, February 23, 2007

இது காதல் பூக்கும் மாதம் - 180

இது காதல் பூக்கும் மாதம் - முதல் பகுதி

18. அவர்வயின் விதும்பல்

உன்னையே எதிர்பார்த்து
என் கண்ணெறிந்த கனலால்
வீதியில் தீ.


வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.

வருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்ந்தன.

என் மனதுக்குத் தெரியாமல்
உன்னை நானும் மெதுவாய் விலக்க…
விலகிப் போகிறது என் உயிர்.
வேகமாய் இறுக்கிப் பிடித்துக் கொள்கிறேன்…
உன்னையும், என்னுயிரையும்!


இலங்கிழாய் இன்று மறப்பினென் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.

காதலரைப் பிரிந்திருக்கும் நான், பிரிவுத் துன்பம் வாராதிருக்க அவரை மறந்திருக்க முனைந்தால், என் தோள்கள் அழகு நீங்கி மெலிந்து போய் வளையல்களும் கழன்று விழுவது உறுதியடி என் தோழி.

நீ வரும் வரை
நுழையக்கூடாதென உத்தரவிட்டிருக்கிறேன்.
என் வீட்டு வாசலில்
மன்றாடிக் கொண்டிருக்கும்
மரணத்திடம்!

உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.

ஊக்கத்தையே உறுதுணையாகக் கொண்டு வெற்றியை விரும்பிச் சென்றுள்ள காதலன், திரும்பி வருவான் என்பதற்காகவே நான் உயிரோடு இருக்கிறேன்.

உள்ளேயிருந்தால் உன் வருகையைப்
பார்க்க முடியாமல் போய்விடுமாம்.
மேலே வந்து
கண்வழியே எட்டி எட்டி பார்க்கிறது
என் இதயம்.

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு.

காதல் வயப்பட்டுக் கூடியிருந்து பிரிந்து சென்றவர் எப்போது வருவார் என்று என் நெஞ்சம், மரத்தின் உச்சிக் கொம்பில் ஏறிப் பார்க்கின்றது.

கருப்பு வெள்ளையாய்
இருக்கும் என் கண்களும்
உனைக் கண்டால்
வண்ணங்களாய்ப் பூக்கும்!


காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்குமென் மென்தோள் பசப்பு.

கண்ணார என் கணவனைக் காண்பேனாக; கண்டபிறகே என் மெல்லிய தோளில் படர்ந்துள்ள பசலை நிறம் நீங்கும்.

நீண்ட பிரிவுக்குப் பிறகு சந்தித்ததும்,
கட்டிப் பிடித்து முத்த மழை பொழிகிறாள்.
“எங்கிட்ட பேசவே மாட்டேன்னு சொன்ன?” என்று கேட்டால்
“பேச மாட்டேன்னு தான சொன்னேன்” என்று
சுவரில் எழுதிக் காட்டுகிறாளே… இவளை என்ன செய்ய?
என் பங்குக்கு நானும் கொஞ்(சு)சம் முத்தமிடுவதைத் தவிர…


வருகமன் கொண்கண் ஒருநாட் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.

என்னை வாடவிட்டுப் பிரிந்துள்ள காதலன், ஒருநாள் வந்துதான் ஆகவேண்டும். வந்தால் என் துன்பம் முழுவதும் தீர்ந்திட அவனிடம் இன்பம் துய்ப்பேன்.

பிரிந்தவர் கூடும்பொழுது
வார்த்தை கை விடுமாம்…
சரி விடு!
முத்தம் கை கொடுக்கும்!

புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்ணன்ன கேளிர் வரின்.

கண்ணின் மணியாம் என் காதலர் வந்தவுடன், பிரிந்திருந்த துயரின் காரணமாக அவருடன் ஊடல், கொள்வேனோ? அல்லது கட்டித் தழுவிக் கொள்வேனோ? அல்லது ஊடுதல் கூடுதல் ஆகிய இரண்டையும் இணைத்துச் செய்வேனோ? ஒன்றுமே புரியவில்லையே எனக்கு; அந்த இன்பத்தை நினைக்கும்போது.

வெற்றி பெற்று
உன்னிடம் வாழ்த்துப் பெறுவது இன்பம்தான்!
ஆனாலும் தோற்கும்போதெல்லாம்
ஆதரவாய் நீ தலை கோதுகிறாயே…
அந்த சுகத்துக்கே
எல்லாவற்றிலும் தோற்றுப் போகலாம்!

வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.

தலைவன், தான் மேற்கொண்டுள்ள செயலில் வெற்றி பெறுவானாக; அவன் வெண்றால் என் மனைவியுடன் எனக்கு மாலைப்பொழுதில் இன்ப விருந்துதான்.

நாம் சேர்ந்திருந்த பொழுதுகளில்
நொடிமுள் வேகத்தில் மணிமுள்ளும்
பிரிந்திருக்கும் பொழுதுகளில்
மணிமுள் வேகத்தில் நொடிமுள்ளும் சுற்றுகின்றன.
இந்த கடிகாரத்தைப் பழுது பார்க்க வேண்டும்!

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத் தேங்கு பவர்க்கு.

நெடுந்தொலைவு சென்ற காதலர் திரும்பி வரும் நாளை எதிர்பார்த்து ஏங்குபவர்க்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகத் தோன்றும்.

தூக்கத்திலும்
தூக்கிக் கொஞ்சுகிறேன்
நீ தரும் துயரங்களை!

பெறினென்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.

துன்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் நிலையிழந்து போயிவிடுமானால், பிறகு ஒருவரையொருவர் திரும்பச் சந்திப்பதனாலோ, சந்தித்துக் கூடவதினாலோ, என்ன பயன்?

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Sunday, February 18, 2007

இது காதல் பூக்கும் மாதம் - 170

இது காதல் பூக்கும் மாதம் - முதல் பகுதி

17. நிறையழிதல்


நீயிருந்தவரை உனக்கு அடங்கிக் கிடந்துவிட்டு
நீ பிரிந்ததும் என்னையே அடக்குகிறது
காதல்.


காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.

காதல் வேட்கை இருக்கிறதே, அது ஒரு கோடரியாக மாறி, நாணம் எனும் தாழ்ப்பாள் போடப்பட்ட மன அடக்கம் என்கிற கதவையே உடைத்தெறிந்து விடுகின்றது.


நள்ளிரவிலும் விழித்தெழிந்து
கண் கசக்கினால்
நீ தான் தெரிகிறாய்.

காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்.

காதல் வேட்கை எனப்படும் ஒன்று இரக்கமே இல்லாதது; ஏனெனில் அது என் நெஞ்சில் நள்ளிரவிலும் ஆதிக்கம் செலுத்தி அலைக்கழிக்கிறது.


காதலும் தும்மலும்
ஒன்றுதான் என்றேன்.
ஒரு முறை தும்மிவிட்டு
விலகி விட்டாய்.

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.

எவ்வளவுதான் அடக்க முயன்றாலும் கட்டுப்படாமல் தும்மல் நம்மையும் மீறி வெளிப்படுகிறதல்லவா; அதைப் போன்றதுதான் காதல் உணர்ச்சியும்; என்னதான் மறைத்தாலும் காட்டிக் கொடுத்துவிடும்.


இலை மறை காயாக இருந்துவிட்டு
இப்போது பறவை கொத்தும் கனியாகிவிட்டது
நம் காதல்!


நிறையுடையேன் என்பேன்மன் யானோவென் காமம்
மறையிறந்து மன்று படும்.

மன உறுதிகொண்டவள் நான் என்பதே என் நம்பிக்கை; ஆனால் என் காதல், நான் மறைப்பதையும் மீறிக்கொண்டு மன்றத்திலேயே வெளிப்பட்டு விடுகிறதே.


அடித்துவிட்டு ஓடுகிற குழந்தையைத்
திருப்பியா அடிக்கிறோம்?
ஒரு முத்தம்தானே கொடுக்கிறோம்?
நீ - குழந்தை.
என் காதல் – முத்தம்.

செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன் றன்று.

தம்மைப் பிரிந்து சென்ற காதலரைப் பகையாகக் கருதி அவரைத் தொடர்ந்து மன அடக்கம், காதல் நோயுற்றவர்க்கு இருப்பதில்லை.


நீ விலகியதும்
உன்னிடமிருந்து என்னிடம் ஓடி வருகிறது காதல்.
என்னிடமிருந்து உன்னிடம் ஓடிப் போகிறது என் இதயம்!


செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்.

வெறுத்துப் பிரிந்ததையும் பொறுத்துக் கொண்டு அவர் பின்னே செல்லும் நிலையை என் நெஞ்சுக்கு ஏற்படுத்திய காதல் நோயின் தன்மைதான் என்னே.


‘முத்தமிடுகையில்
இதழ்களைத் திறக்கிறாய்…ஆனால்
கண்களை மூடிக் கொள்கிறாய்’
என்று சொன்னதுதான் தாமதம்…
கண்களையும் அகலத் திறந்து
ஒரு முத்தம் கொடுத்துவிட்டு
முகத்தையே மூடிக் கொண்டாய்!


நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்.

நமது அன்புக்குரியவர் நம்மீது கொண்ட காதலால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்யும்போது, நாணம் எனும் ஒரு பண்பு இருப்பதையே நாம் அறிவதில்லை.


“என்னிடம் என்ன பிடித்திருக்கிறது” என்றாய்.
“உன்னிடம் எதுவும் பிடிக்கவில்லை” என்றேன்.
திரும்பிக் கொண்டாய்.
“மொத்தமாய் உன்னையேப் பிடித்த பிறகு
உன்னிடம் எது பிடிக்கிறதென தனியாக எப்படி
சொல்ல?”


பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை.

நம்முடைய பெண்மை எனும் உறுதியை உடைக்கும் படைக்கலனாக இருப்பது, பல மாயங்களில் வல்ல கள்வராம் காதலரின் பணிவான பாகுமொழியன்றோ?


கழுத்தைப் பிடித்து
சண்டையிட வந்தவன்
உன்னைப் பார்த்ததும்
கட்டிப்பிடிக்கிறேன்…
உன் வெட்கத்தை!

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.

ஊடல் கொண்டு பிணங்குவோம் என நினைத்துதான் சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விடுத்து அவருடன் கூடுவதைக் கண்டு என் பிடிவாதத்தை மறந்து தழுவிக் கொண்டேன்.


நீ விலகியதால்
காட்டுத்தீயாய் எரிந்து கொண்டிருந்த என் கோபம்
உன்னுடைய ஒரு துளி கண்ணீரில் அணைந்தது.

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்.

நெருப்பிலிட்ட கொழுப்பைப் போல் உருகிடும் நெஞ்சம் உடையவர்கள், கூடிக் களித்தபின் ஊடல் கொண்டு அதில் உறுதியாக இருக்க முடியுமா?

இது காதல் பூக்கும் மாதம் - 180

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Saturday, February 17, 2007

இது காதல் பூக்கும் மாதம் - 160

இது காதல் பூக்கும் மாதம் - முதல் பகுதி

16. நெஞ்சொடு கிளத்தல்


காதல் நோய்க்கு
காரணம் யாரெனக் கேட்டால்
உன்னைக் காட்டியது…
மருந்து என்னவென்று கேட்டாலும்
உன்னையேக் காட்டுகிறது
உன்னைப் போல தான் குறும்பு செய்கிறது
இந்த மனமும்!


நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கு மருந்து.

எந்த மருந்தினாலும் தீராத என் காதல் நோய் தீர்ந்திட ஏதாவது ஒரு மருந்தை நினைத்துப் பார்த்து, நெஞ்சே! உன்னால் சொல்ல முடியுமா?


உன்னை எதிர்பார்த்து,
காற்றிருக்கும் வரை
காத்திருக்கும்…
இந்த மனம்!

காத லவரிலர் ஆகநீ நோவது
பேதமை வாழியென் நெஞ்சு.

அவர் நமது காதலை மதித்து நம்மிடம் வராத போது, நெஞ்சே! நீ மட்டும் அவரை நினைத்து வருந்துவது அறியாமையாகும்; நீ வாழ்க.


என் கவிதைகள்
எதனையும் வாசிக்காமல்
உன்னையே யாசித்துக் கொண்டிருக்கிறது
என் காதல்!

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.

பிரிவுத் துன்பம் தந்த காதலருக்கு நம்மிடம் இரக்கமில்லாத போது, நெஞ்சே! நீ மட்டும் இங்கிருந்து கொண்டு அவரை எண்ணிக் கலங்குவதால் என்ன பயன்?


தங்களை விட்டுவிட்டு
உன்னோடு போய்விட்டதாம்…
மனதிடம் சண்டையிடுகின்றன
கண்கள்!


கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று.

நெஞ்சே! நீ காதலரிடம் செல்லும் போது கண்களையும்கூட அழைத்துக்கொண்டு போ; இல்லையேல் அவரைக் காண வேண்டுமென்று என்னையே அவை தின்று விடுவது போல் இருக்கின்றன.


‘உன்’ , ‘என்’ என்பன போய்
‘நம்’ ஆனதால்…
உன்னையே நம்மையே
நினைத்திருக்கிறது என் நம் மனம்!


செற்றார் எனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.

நெஞ்சே! நாம் விரும்பினாலும் நம்மை விரும்பி வராத அவர், நம்மை வெறுத்து விட்டார் என நினைத்து அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட முடியுமா?


உன்னை நோக்கி வரும்
என் சின்னக் கோபங்களும்
உன் புன்னகையைப் பார்த்ததும்
மன்னிப்போடு மண்டியிடுகின்றன!

கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு.

நெஞ்சே! கூடிக் கலந்து ஊடலை நீக்கும் காதலரைக் கண்டால் ஒரு தடவைகூடப் பிணங்கியறியாத நீ இப்போது அவர் மீது கொள்ளுகிற கோபம் பொய்யானது தானே?


இந்த மனமும்
உன்னைப் பற்றியே
புலம்பிக் கொண்டிருந்தால்…
என்னைப் பற்றி
நான் யாரிடம் புலம்ப?



காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேனிவ் விரண்டு.

நல்ல நெஞ்சமே! ஒன்று காதலால் துடிப்பதையாவது விட்டு விடு; அல்லது அதனைத் துணிந்து சொல்ல முடியாமல் தடுக்கும் நாணத்தையாவது விட்டு விடு. இந்த இரண்டு செய்லகளையும் ஒரே நேரத்தில் தாங்கிக் கொள்ள என்னால் முடியாது.


“பிரிந்து விட்டாள்”, “பிரிந்து விட்டாள்” என்று புலம்பிக் கொண்டே
உன் பின்னேப் போய்க் கொண்டிருக்கிறதே இந்த இதயம்…
இனியெப்படி நான் வாழ்வது?

பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதையென் நெஞ்சு.

நம்மீது இரக்கமின்றிப் பிரிந்து விட்டாரேயென்று ஏங்கிடும் அதே வேளையில் பிரிந்தவர் பின்னாலேயே சென்று கொண்டிருக்கும் என் நெஞ்சம் ஓர் அறிவற்ற பேதை போன்றதாகும்.


உன்னைத் தொலைத்து விட்டு,
இப்போது உன்னைத் தேடியே
நானும் தொலைந்து போகிறேன்.


உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.

உள்ளத்திலேயே காதலர் குடி கொண்டிருக்கும்போது, நெஞ்சமே! நீ அவரை நினைத்து வெளியே எவரிடம் தேடி அலைகிறாய்?


என் எடையும்
உன் எடைக்கு சமமாகி விட்டது!
மனதில் உன்னை சுமக்கும் போதும்…


துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமா
இன்னும் இழத்தும் கவின்.

சேராமல் பிரிந்து சென்ற காதலரைச் சிந்தையில் வைத்திருப்பதால் மேலும் மேனியெழில் இழந்து மெலிந்து அழிய வேண்டியுள்ளது.

இது காதல் பூக்கும் மாதம் - 170

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Thursday, February 15, 2007

இது காதல் பூக்கும் மாதம் - 150

இது காதல் பூக்கும் மாதம் - முதல் பகுதி

15. உறுப்பு நலன் அழிதல்



வளையல் கழன்று விழுமளவுக்கு
இளைத்துப் போனதாய் சொல்கிறாய்

உன் வளையலில் நுழையுமளவுக்கு

நான் இளைத்ததை யாரிடம் சொல்ல?


பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்

தொல்கவின் வாடிய தோள்.


பருத்திருந்த பருவத் தோள்கள் பழைய எழில் குலைந்து
, பசும்பொன் வளையல்களும் கழன்று விழுகின்றன காதலனைப் பிரிந்து வாடுவதன் காரணமாக.


உன் அழகை அழிக்கிறது…

எனக்கு அழுகையை அளிக்கிறது…

நம் பிரிவு!


கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு

தொல்கவின் வாடிய தோள்.


வளையல்களும் கழன்று விழ
, இருந்த அழகையும் இழந்த தோள்கள் என்னைப் பிரிந்திருக்கும் காதலரின் கொடுமையை ஊருக்கு உரைக்கின்றன.


உன்னை நினைத்தே
இளைத்துப் போகிறது உடல்…

உன்னால்தான் இளைக்கிறேனென உலகம் பேச

களைத்துப் போகிறது மனமும்!


தொடியொடு தோள்நேகிழ நோவல் அவரைக்

கொடியார் எனக்கூறல் நொந்து.


என் தோள்கள் மெலிவதையும்
, வளையல்கள் கழன்று விழுவதையும் காண்போர் என்னுடையவர் இரக்கமற்றவர் என இயம்புவது கேட்டு இதயம் நொந்து போகிறேன்.


என் வருத்தங்களை எல்லாம்

உன்னிடம் சொல்ல

வாய் வந்தால் மனம் தடுக்கிறது..

மனம் வந்தால் சொல் மறுக்கிறது!


பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்

வாடுதோட் பூசல் உரைத்து.


நெஞ்சே! இரக்கமற்று என்னைப் பிரிந்திருக்கும் அவருக்கும் வாடி வதங்கும் என் தோள்களின் துன்பத்தை உரைத்துப் பெருமை அடைய மாட்டாயோ
?


எல்லோருக்கும் முன்னும்
என் கைகோர்த்தே நடக்கிறாய்…

கூச்சத்தில் நானும் கைகளையெடுத்தால்

அழ ஆரம்பித்து விடுகிறாய்.

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.


இறுகத் தழுவியிருந்த கைகளைக் கொஞ்சம் தளர்த்தவே அந்தச் சிறு இடைவெளியையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் காதலியின் நெற்றி
, பசலைநிறம் கொண்டு விட்டது.

காற்று கூட
நம்மைப் பிரிக்கப் பார்க்கிறதென அழுகிறாய்.

வா! காற்றில்லாத கனவுலகம் ஓடிப் போகலாம்!


முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற

பேதை பெருமழைக் கண்.


இறுகத் தழுவியிருந்த போது
, இடையே குளிர்ந்த காற்று நுழைந்ததால் அதையே ஒரு பிரிவு எனக் கருதிக் காதலியின் அகன்று நீண்ட கண்கள் பசலை நிறம் கொண்டன.


என் கன்னங்களில்
முத்தங்களாய் வழிந்தவள்

கண்ணீராய் வழிகிறாய்


கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.


பிரிவுத் துயரால் பிறைநுதல் பசலை நிறமடைந்ததைக் கண்டு அவளது கண்களின் பசலையும் பெருந்துன்பம் அடைந்துவிட்டது.


இது காதல் பூக்கும் மாதம் - 160


அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Wednesday, February 14, 2007

காதல் படிக்கட்டுகள் - அறிவுமதி

இது காதல் படிக்கட்டுகள் என்று ஜூனியர் விகடனில் தொடராக வந்தபோது அறிவுமதி அவர்கள் எழுதியது. காதல் நாளுக்காக இங்கு....

என் பேனாவிலும்
மை உண்டு
நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்…
நீ இன்னும்
எழுதிக் கொண்டிருக்கிறாய்.

காதல் – கொடுப்பதன்று. எடுப்பதன்று. ஈர்த்துக் கவிழ்ப்பதன்று. மடக்குதல் அன்று. மடங்குதல் அன்று. எதிர்பார்த்த வெறியில்… எதிர்பாராத சொடுக்கில் கிடத்துதல் அன்று. இரக்கத்தில் கசிந்து இருளில் தேங்குதல் அன்று.

தேடல்கள்… தம் காத்திருத்தலின் தற்செயல் நிமிடத்தில் திகைத்துச் சந்தித்து… உள்திரும்பித் திருப்தியுறுவது. இரு ஞாபகங்கள் விரும்பி, ஒற்றை மறதிக்குள் அமிழ்வது.

அதை அறிய மனசு பூத்திருக்க வேண்டும். நிலா… மொட்டின் மீது வழிந்து விடுகிறது. பூதான் விந்துவாய் வாங்கிக் கொள்கிறது. காதலை வாங்கிக் கொள்ள எத்தனை பேருக்கு வாய்க்கிறது? காதலால் வாழ்ந்துகொள்ள எத்தனை பேருக்கு நேர்மை இருக்கிறது?

அது ஆணுக்கும் பெண்ணுக்குமாக நிகழ்வதா? ஆணுக்குள் இருக்கிற பெண்ணுக்கும் பெண்ணுக்குள் இருக்கிற ஆணுக்குமாக… எதிரெதிர் கண்ணாடிக்குள் நீளும் தொடர் பதிவுகளாய் நிகழ்வது.

அஃறிணையில் உயிரோட்டமாக இருக்கிற அது… உயர்திணையில் வெறும் உடலோட்டமாகி விடுகிறது. கற்பிதங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்கிற சமூக விலங்குகளுக்குக் கூண்டின் கூரைதானே வானம்! வானமற்றுப் போன வாழ்வில் சிறகுகளின் பாடல்கள் ஏது?

இந்தப் பிறவியில் சேர முடியாவிட்டால் என்ன… அடுத்தப் பிறவியில் சேர்ந்து வாழ்வோம் என்பதுவும்…உடல்களால் இணையாவிட்டால் என்ன… உயிர்களால் இணைந்து வாழ்வோம் என்பதுவும் ஏமாற்று. பொய்!

அது உடல் கடந்து நடப்பதா? உடல்களால் நடப்பது. சம அதிர்வுகளாலான மின்சேர்க்கை அது.

உடல்தொட்டதும் காதலை இழந்துவிடுகிறவர்கள் அதிகம். காதலைத் தொட்டு உடலை அடைபவர்கள் குறைவு – மிக மிக குறைவு.

ஸ்பரிசமும்…புணர்தலும் காதலின் நெருங்கிய மொழிகள். அவற்றைப் பேசாதே எனச் சொல்லும் தத்துவங்கள் யாவும் பொய் பேசும். வாழ்வின் வழிகள் முறித்துக் குளிர்காய்கிற எந்தச் சடங்கும் காதலைச் சிதைக்கும். பொருந்த நெருங்கும் முழுமைக்குள் சந்தேகங்கள் திணித்துச் சிரமம் செய்யும்.

அதனால்தான்… அடிமைச் சமூக அமைப்பில் வரலாற்று வழிநெடுக வாழ்ந்து பழகிவிட்ட நமக்கு, வாழ்க்கை மட்டுமல்லாது காதலும் போராட்டமாகிவிட்டது. அடுத்தவர்களிடமிருக்கிற நம்மை மீட்பதும்…நமக்குள் இருக்கிற அடுத்தவர்களை வெளியேற்றுவதுமான சிக்கல்கள் நிறைந்த போராட்டமிது!

இத்தகைய நெருடல்கள் நிறைந்த வாழ்வில்… காதலைச் சந்தித்ததாக யாரேனும் கூறினால் நம்ப மாட்டேன்! காதலிகளைச் சந்தித்திருக்கலாம். காதலன்களைச் சந்தித்திருக்கலாம். காதலை மட்டும் சந்தித்திருக்கவே முடியாது!

சூழ்ந்தார் துயரங்களை வீழ்த்தி எழாத எவருக்குள்ளும் காதல் எழாது – எழ முடியாது. காதலைப் போல ஒன்று எழலாம். அதுவே காதல் ஆகாது.

காதலென்பது என்ன… இழந்துவிட்டு வருந்துவதா? பிரிந்துகொண்டு அழுவதா? இல்லை…இல்லை.. ‘காதல்… காதல்… காதல்… காதல் போயின் சாதல்… சாதல்… சாதல்…’ சொன்ன பாரதியின் காதல் என்ன ஆனது? அவனது தொகுப்பில் பதினாறு விருத்தங்கள் ஆனது. ஆனாலும் சொல்கிறேன்…அவனது பிள்ளைக் காதல்தான் அவனைப் பிரபஞ்ச காதலனாக்கியது. அந்தத் தனிமனிதனை அதுதான் சமூக மனிதனாக்கியது. அதுதான் அவனிலிருஎந்து எழுந்து இன்னும் நித்திய நெருப்பாக நின்று எரிகிறது. அவனது போராட்ட உணர்வுக்குள் ஒன்பது வயதுச் சிறுமி ஒருத்தி ஊடுருவியிருக்கிறாள் என்கிற உண்மையை உணர்ந்தவர்களுக்குத் தான் தெரியும் – காதலின் பெருமை!

என்னை
எல்லோருக்கும்

பிடித்திருக்கிறது.

அவனையும்

எல்லோருக்கும்

பிடித்திருக்கிறது.

எங்களைத்தான்

யாருக்குமே

பிடிக்கவில்லை.

மற்றபடி இங்கே காதல் கடிதங்கள் எழுதிக் கொள்பவர்களையும்… பரிசுப் பொருட்களை மற்றிக் கொள்பவர்களையும்.. எச்சில் இனிப்புகளை ருசிபார்ப்பவர்களையுமா காதலர்கள் என்கிறீர்கள்?

ஸ்கூட்டரில் அணைத்துப் போவதையும்… திரையரங்குகளில் உரசிப் படம் பார்ப்பதையும்…கடற்கரை இருளில் மடியில் படுத்துக் கிடப்பதையும் காதல் என்று நம்பச் சொல்கிறீர்கள்?

காதலின் எல்லை திருமணம் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளவும் உரத்துச் சொல்லவும் இங்கே எத்தனை பேருக்குத் தெம்பு இருக்கிறது? தம் காதலை வெற்றி கொள்ளவும் தம் பிள்ளைகளின் காதலுக்கு வரவேற்புச் சொல்லவும் இங்கே எத்தனை பேருக்குப் பக்குவம் இருக்கிறது?

அதற்குக் காரணம் அவர்களல்ல; நீங்களுமல்ல. நானுமல்ல. குற்றமற்ற விலங்குகளை நமக்குள் நாமே வளர்த்துப் பழக நாட்கள் இன்னும் நமக்கு அமையவில்லை. நமது மனம் என்பது தொலைதூரத் தலைமுறைகளைத் தாண்டிய வேட்டைக் கால வாழ்வியற் கருத்துருவாக்கங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கற்பிக்கப்பட்ட மனோபாவங்களுக்குள் வாழப்பழகிவிட்டதனாலேயேயே, காதல் செய்தலும் மிகப்பெரிய சமூக குற்றமென நமக்குள்ளாகவே ஒருவன் எழுந்து நம்மை எச்சரிக்கிறான்.

காதல் குற்றமா? சமூக குற்றமா? நமக்குள் இருக்கிற புற மிருகங்களையும் அக மிருகங்களையும் உசுப்பிவிட்டு கடித்துக் குதற்ச்சொல்லி ரத்தம் ரசிப்பவனே அப்படிச் சொல்வான். சமூகச் சூழல்களின் சிலந்தி இழைகளிலிருந்து விடுபட்டு… வாழ்வின் இயல்புத் தளத்தில் இயற்கையின் இயக்கமாகிவிடச் சம்மதிக்கிற எவனும், அதனை அப்படி சொல்ல சம்மதிக்க மாட்டான்!

நாம் பிளந்து கிடக்கும் பிரபஞ்ச பிசிறுகள். காதலில் இணைகிற ஆணும் பெண்ணும் பிரபஞ்ச இயக்கத்தின் ஆணி வேருக்குள் நெகிழ்ந்து இறங்குகிறார்கள். அது இருவரின் முழுமையடைதல் இல்லை. முழுமைக்கான அடுக்குகளின் ஒழுங்கமைவில் அது ஒரு பகுதி.

இருட்டிக் கொண்டு வருகிற ஏதோ ஒரு மழைக்காலத்தில்… பாறையின் மீது வந்து ஒரு பெண் படுக்கிறாள் என்பது…அந்தப் பாறையிலிருந்து என்றோ தெறித்துச் சிதறிய ஒரு பகுதி மீண்டும் வந்து அதே இடத்தில் பொருந்துவதாக அர்த்தம். அந்தப் பெண்மீது அவலது அந்தக் கணத்தின் முழுச்சம்மதத்தில்…அவளது ஆண் கவிழ்ந்து இயங்கப் போகிறான் என்கிறபோது அவர்கலள் மட்டுமல்ல… அவர்களைச் சுமந்துள்ள பாறையும் சூழ்ந்துள்ள செடிகளூம்…செடிகளில் அமர்ந்துள்ள வண்ணத்துப் பூச்சிகளும் கூட அவர்களோடு சேர்ந்து இயங்கப் போகின்றன என்று அர்த்தம். காதலின் மையத்தில் குனிந்து முகம் பார்க்கிற எவரும் உலகச் சுழற்சியின் ஏதோ ஓர் ஒழுங்கின்மையைச் சரிசெய்கிறவர்களாகவே இருப்பார்கள்.

மேல் இமைகளில்
நீ இருக்கிறாய்.

கீழ் இமைகளில்

நான் இருக்கிறேன்.

இந்தக் கண்கள் கொஞ்சம்

உறங்கி விட்டாலென்ன?

வாழ்வின் இடையில் வந்து இடையில் போய்விடுகிற தற்காலிக அதிர்வு அல்ல அது. ஆயுளைக் கடந்தும் உடல்மாறிக்கொள்கிற நிரந்தர அதிர்வு.

காமத்துக்கான முன் ஒத்திகையாக அதனைக் கருதுகிறவர்களூக்கே அது தற்காலிகம். உடல்களால் காமம் பேசிமுடித்த திருப்தியில் உயிர்களால் காதல் பேச முடிகிறவர்களூக்கு மட்டுமே அது நிரந்தரம். அப்படிப் பேசிப் பழகப் பயிற்சி வேண்டும்.

எவரும் எவருக்கும் நன்றி சொல்ல நினைக்காத தருணங்களால் பேச வேண்டும், அதனை. உதடுகளின் மெல்லிய அதிர்வுகள் சாட்சியாக… ஈரத்தில் நனைந்த விழிகள் சாட்சியாக… அக்குளில் பூக்கும் வியர்வையின் வாசம் சாட்சியாக…ஏன் கூச்சங்கழிந்த நிர்வாணம் சாட்சியாக… இழையும் பெருமூச்சுக்களால் பேச வேண்டும் அதனை. பேசப் பேசப் பேசத் தெவிட்டாத பேச்சு அது. பேசியிருக்கீர்களா நீங்கள்?

நான் பேசியிருக்கிறேன். ஆணாக இருந்தல்ல. பெண்ணாக இருந்துதான் பேசியிருக்கிறேன். என்ன சிரிக்கிறீர்கள்? பெண்ணாகித்தான் பேசமுடியும். அதனை!

பெண்ணாகத் தெரியாத எந்த ஆணுக்கும் காதலின் தரிசனம் வாய்க்குமென்று நான் நம்பவில்லை. ஆயிரம் பெண்களுக்குரிய தாய்மையைத் தன் இதயத்துக்குள் ஏற்றுக்கொள்கிற ஆண்தான், ஒரு பெண்ணின் இதயத்துக்குள் இடம்பெறுகிற அருகதையுள்ளவனாகிறான்.

இருவராய் இணைந்து இருக்கையில் கூடத் தனிமையாய் இருக்கிற சுந்தந்திர சுகத்தை ஒரு பெண்ணுக்கு எவன் தருகிறானோ, அவண்தான் ஆண் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியைப் பெறுகிறான்!

அழகியக் கூண்டு செய்து… அதற்குள் அடக்கி வைத்து… ‘இது என் பறவை.. இது எனக்கு… எனக்கு மட்டுமே’ என்று எந்தப் பெண்ணையும் சொல்ல எந்த ஆணும் வெட்கப் படவேண்டும். விரும்பி வந்து ஒரு பறவை எவ்விதம் அமர்ந்ததோ அவ்விதமே விரும்பியவண்ணம் அது பறந்து செல்லுதலுக்கும் சிரமமற்றபடி கிளையாக இருக்கச் சம்மதித்தலே அணுக்கு அழகு.

உரிமை கொண்டாடுதல் அன்று உரிமை தருதலே காதல். தருதல் என்ற சொல்லுக்குள்ளும் ஓர் ஆதிக்கத்தனம் தெரிகிறதே! தருவதற்கு ஆண் யார்? தருதலும் பெறுதலுமற்ற கருனைப் பெருவெளியில் சிறகுச் சிக்கலின்றிப் பறத்தலே காதல்!

முழுவிடுதலையைச் சுவாசித்துப் பூப்பதுதான் காதல். எந்தச் சிறைக்குள்ளும் … எந்த விலங்குக்குள்ளும்… அடைபட்டு கட்டுப்பட்டு இருக்க சம்மதிக்காது அது.

என்னைச் செதுக்கியது பெண்மை. என்னில் சிற்பமானது காதல். எனக்குள் எல்லாமும் அதுதான். எல்லாமும் கற்றுத் தந்ததும் அதுதான்!

பூவைப் பறித்துவிடாமல் அதன் செடியிலேயே பார்த்து ரசிக்க… கைகளின் முடிப்பிசிறுகளில் சிக்கி நகரும் எறும்பை நசுக்கிவிடாமல் மெல்ல எடுத்து ஊதிவிட…அசையும் ஊதுவத்திப் புகையில் இசை கேட்க… பயணங்களூடே உடைக்கப்படும் பாறைகள் பார்த்து அழ... இறந்து கிடக்கும் வண்ணத்துப் பூசியை எடுத்துப் போய் அடக்கம் செய்ய… போக்குவரத்து மிகுந்த சாலையில் கிடந்து நசுங்கும் ஏதோ ஒரு குழந்தையின் ஒற்றைச் செருப்பைத் தவித்து எடுத்து ஓரமாய் வைக்க… அதுதான்… ஆம் … அதுதான் எனக்குக் கற்றுத் தந்தது. காதல் கற்றுத் தரும். காதல் எல்லாம் தரும். காதலியுங்கள். புரிந்துகொள்வதை அதிகம் பேசலாம். உணர்ந்து கொள்வதை?

அணுஅணுவாய்
சாவதற்கு

வாழ்வதற்கு

முடிவெடுத்துவிட்ட பிறகு

காதல்

சரியான வழிதான்.

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

இது காதல் பூக்கும் மாதம் - 143

இது காதல் பூக்கும் மாதம் - முதல் பகுதி

14. பொழுதுகண்டு இரங்கல்

உன்னை நினைக்கவைத்தே
என்னைக் கொல்கிறதே!
இது மாலையல்ல…
என் மரணத்தில் விழும் மாலை!

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.

நீ மாலைப் பொழுதாக இல்லாமல் காதலரைப் பிரிந்திருக்கும் மகளிர் உயிரைக் குடிக்கும் வேலாக இருப்பதற்காக உனக்கோர் வாழ்த்து!

அழுதழுது கண்ணெல்லாம் சிவந்து கிடக்கிறதே…
என்னைப் போல காதலியைப் பிரிந்துவருந்துகிறதா?
இந்த மாலைப் பொழுது.

புன்கண்ணை வாழி மருள்மாலை எங்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.

மயங்கும் மாலைப் பொழுதே! நீயும் எம்மைப் போல் துன்பப்படுகின்றாயே! எம் காதலர் போல் உன் துணையும் இரக்கம் அற்றதோ?

உன்னோடு இருந்த காலங்களில்
பூனையைப் போல இருந்த மாலைப் பொழுது
நீ போன பின் புலியாய்ப் பாய்ந்து கொல்கிறது!

பனியரும்பிப் பைதல்கொள் மாலை துனியரும்பித்
துன்பம் வளர வரும்.

பக்கத்தில் என் காதலர் இருந்த போது பயந்து, பசலை நிறத்துடன் வந்த மாலைப் பொழுது, இப்போது என் உயிரை வெறுக்குமளவுக்குத் துன்பத்தை மிகுதியாகக் கொண்டு வருகிறது.

நீயில்லாத போது
மாலை அழகாய் வருவதில்லை...
மலையளவு துயராய் வருகிறது!

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்
தேதிலர் போல வரும்.

காதலர் பிரிந்திருக்கும்போது வருகிற மாலைப் பொழுது கொலைக் களத்தில் பகைவர் ஓங்கி வீசுகிற வாளைப்போல் வருகிறது.

புலரும்போதெல்லாம் காதலோடு மலரவைத்துவிட்டு
சாயும்போது மட்டும், உன்னைக் காணாத துயரில்
என்னை சாய்த்துவிட்டே சாய்கிறது
இந்தப் பொழுது!

காலைக்குச் செய்தநன் றென்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை.

மாலைப் பொழுதாகிவிட்டால் காதல் துன்பம் அதிகமாக வருத்துகிறது. அதனால் பிரிந்திருக்கும் காதலர் உள்ளம் ``காலை நேரத்துக்கு நான் செய்த நன்மை என்ன? மாலை நேரத்துக்குச் செய்த தீமைதான் என்ன?'' என்று புலம்புகிறது.

மாலைப் பொழுது…
இனிதிலும் இனிது - உன்னோடு இருந்தால்!
கொடிதிலும் கொடிது - நீயில்லையென்றால்!


மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.

மாலைக்காலம் இப்படியெல்லாம் இன்னல் விளைவிக்கக் கூடியது என்பதைக் காதலர் என்னை விட்டுப் பிரியாமல் இருந்த போது நான் அறிந்திருக்கவில்லை.

காலையில் அரும்பி
பகலில் மொட்டாகி
மாலையில் மலர்கின்றன
என் காதல் துயரங்கள்!

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்.

காதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து, மாலையில் மலரும் ஒரு நோயாகும்.

நீ இருந்தால்
இரவின் இடிகளும் எனக்கு இன்னிசை…
நீ பிரிந்தால்
மாலையின் மெல்லிசையும் எனக்கு
கொல்லிசை!

அழல்போலும் மாலைக்குக் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.

காதலர் பிரிவால் என்னைத் தணலாகச் சுடுகின்ற மாலைப்பொழுதை அறிவிக்கும் தூதாக வருவது போல வரும் ஆயனின் புல்லாங்குழலோசை என்னைக் கொல்லும் படைக்கருவியின் ஓசைபோல் அல்லவா காதில் ஒலிக்கிறது.

இந்த மாலைப் பொழுது
என்னை மயக்கவே செய்கிறது…
நீயிருந்தாலும், பிரிந்தாலும்!


பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.

என் அறிவை மயக்கும் மாலைப் பொழுது, இந்த ஊரையே மயக்கித் துன்பத்தில் ஆழ்த்துவது போல் எனக்குத் தோன்றுகிறது.

நீ வருவாயென
நான் தேக்கி தேக்கி வைத்தாலும்,
என்னுயிரை கரைத்துக் கொண்டே இருக்கிறது...
இந்த மாலைப் பொழுது!


பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயுமென் மாயா உயிர்.

பொருள் ஈட்டுவதற்கச் சென்றுள்ள காதலரை எண்ணி மாய்ந்து போகாத என்னுயிர், மயக்கும் இந்த மாலைப் பொழுதில் மாய்ந்து போகின்றது.


------------------------------------

15. உறுப்புநலன் அழிதல்

என் கண்கள் – மலர்கள்.
உன் கண்கள் – வண்டுகள்.
தேக்கி வைத்த தேனெல்லாம்
கண்ணீராய் வீணாகிறது!

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.

பிரிவுத் துன்பத்தை நமக்களித்துவிட்டு நெடுந்தொலைவு சென்று விட்டாரேயென்று வருந்திடும் காதலியின் கண்கள் அழகிழந்துபோய், மலர்களுக்கு முன்னால் நாணிக் கிடக்கின்றன.

கண்ணீரும் ஒரு நாள் வற்றிப் போய்
செந்நீர் உதிர்க்கப் போகிறது
என் கண்கள்!

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.

பசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லை யென்பதை சொல்லி காட்டுகின்றன.

ஓராண்டாய் ஏற்றி வைத்த உடம்பும்
உன்னைப் பிரிந்த ஒரு நாளில்
இளைத்துப் போனது!

தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.

தழுவிக் கிடந்த போது பூரித்திருந்த தோள், இப்போது மெலிந்து காணப்படுவது; காதலன் பிரிவை அறிவிப்பதற்காகத்தான் போலும்.


இது காதல் பூக்கும் மாதம் - 150

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Tuesday, February 13, 2007

இது காதல் பூக்கும் மாதம் - 130

இது காதல் பூக்கும் மாதம் - முதல் பகுதி

13. கனவுநிலை உரைத்தல்

கனவிலும் முத்தங்களைக்
கொடுத்து என்னைக்
கடனாளியாக்குகிறாய்!


காதலர் தூதொடு வந்த கனவினுக்
கியாதுசெய் வேன்கொல் விருந்து.

வந்த கனவு காதலர் அனுப்பிய தூதுடன் வந்ததே; அந்தக் கனவுக்குக் கைம்மாறாக என்ன விருந்து படைத்துப் பாராட்டுவது?

நேரில் தான் உன்னோடு பேசமுடிவதில்லை.
கனவில் உன்னைக் கண்டாலாவது
உயிரோடிருப்பதைச் சொல்லலாம் என்றால்
உறங்காமல் அடம்பிடிக்கிறதே
இந்தக் கண்கள்!


கயலுண்கண் யானிரப்பத் துஞ்சின் கலந்தார்க்
குயலுண்மை சாற்றுவேன் மன்.

நான் வேண்டுவதற்கு இணங்கி என் மை எழுதிய கயல் விழிகள் உறங்கிடுமானால், அப்போது என் கனவில் வரும் காதலர்க்கு நான் இன்னமும் உயிரோடு இருப்பதைச் சொல்லுவேன்.

கனவில் மட்டும்தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...
உன்னையங்கு காண்பதால்!


நனவினான் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.

நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது.

இனிமையானக் கனவெல்லாம்
நனவாகி விட்டு…
கொடுமையான நனவெல்லாம்
அதில் வரும்
கனவாகி விட்டாலென்ன?



கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.

நேரில் என்னிடம் வந்து அன்பு காட்டாத காதலரைத் தேடிக் கொண்டு வந்து காட்டுகிற கனவால் எனக்குக் காதல் இன்பம் கிடைக்கிறது.

வருகிற வரை புரிவதில்லை
காதலென்று!
கலைகிற வரை தெரிவதில்லை
அதுவும் கனவென்று!


நனவினாற் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.

காதலரை நேரில் கண்ட இன்பம் அப்போது இனிமை வழங்கியது போலவே, இப்போது அவரைக் கனவில் காணும் இன்பமும் இனிமை வழங்குகிறது!

மெல்ல உன் விரல் பிடித்து
செல்லமாய் சில சொடுக்கெடுத்து
மெதுவாய்க் கூந்தல் கோதி
நெற்றியில் முத்தமிட நெருங்குகையில்
கலைகிறது…கனவு!

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினாற்
காதலர் நீங்கலர் மன்.

நனவு மட்டும் திடிரென வந்து கெடுக்காமல் இருந்தால், கனவில் சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே.

நனவில் வராமல் கொல்கிறாய்.
கனவில் வந்து கொல்கிறாய்.

நனவினான் நல்காக் கொடியார் கனவினான்
என்னெம்மைப் பீழிப் பது.

நேரில் வந்து அன்பு காட்டாத கொடிய நெஞ்சமுடையவர், கனவில் வந்து பிரிவுத் துயரைப் பெரிதாக்குவது என்ன காரணத்தால்?

நான் தூங்கும்போது
கனவில் நெருங்கி வந்து
தோள் சாய்ந்தவள்
விழித்துப் பார்த்தால் காணவில்லை…
வழியெங்கும் தேடினால்…
நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருக்கிறாய்
என் இதயமெத்தையில்!

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தார் ஆவர் விரைந்து.

தூக்கத்தில் கனவில் வந்து என் தோள் மீது சாய்ந்து இன்பம் தந்தவர், விழித்தபோது எங்கும் போய் விடவில்லை; என் நெஞ்சில் தாவி அமர்ந்து கொண்டார்.

கனவு மட்டும் இல்லையென்றால்
உன்னைக் காண்பது
கனவாகவேப் போயிருக்கும்!

நனவினான் நல்காரை நோவர் கனவினான்
காதலர்க் காணா தவர்.

கனவில் காதலரைக் காணாதவர்கள்தான் அவர் நேரில் வந்து காணவில்லையே என்று நொந்து கொள்வர்.

நாம் பிரிந்துவிட்டோமென்று
சொல்கிறவர்க்கெல்லாம்
கனவு காணும் பழக்கமில்லையோ?

நனவினான் நம்நீத்தார் என்பர் கனவினான்
காணார்கொல் இவ்வூ ரவர்.

என் காதலர் என்னைப் பிரிந்திருப்பதாக அவரைக் குற்றம் சாட்டுகிறார்களே, இந்த ஊரார், பிரிந்து சென்ற தமது காதலனைக் கனவில் காண்பது கிடையாதோ?


அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Monday, February 12, 2007

திங்.செவ்.புத.வியா.வெள்.சனி.ஞா







இது காதல் பூக்கும் மாதம் - 120

இது காதல் பூக்கும் மாதம் - முதல் பகுதி

12. நினைந்தவர் புலம்பல்

உன் நினைவுக(ள்)ளைக்
குடித்து குடித்து
போதையிலேயே இருக்கிறது
இந்த மனது.

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.

உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் கள்ளைவிட நினைத்தாலே நெஞ்சினிக்கச் செய்யும் காதல் இன்பமானதாகும்.

என்னையும் உன்னையும்
காலம் வந்து பிரித்தது.
எனக்குள் இருக்கும் உன்னை
யார் வந்து பிரிப்பார்?


எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன் றில்.

விரும்பி இணைந்த காதலரை நினைத்தலால், பிரிவின் போது வரக்கூடிய துன்பம் வருவதில்லை எனவே எந்த வகையிலும் காதல் இனிதேயாகும்.


நிற்காமல் வருகிற விக்கலைப் போல
மீண்டும் மீண்டும் உன்னிடம் வருகிறேன்.
வருவது போல வராமல் போகிற தும்மலாய்
என்னைவிட்டுப் போகிறாய்.



நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.

வருவது போலிருந்து வராமல் நின்று விடுகிறதே தும்மல்; அதுபோலவே என் காதலரும் என்னை நினைப்பது போலிருந்து, நினைக்காது விடுகின்றாரோ?


உன் முகவரி கேட்பவரிடம்
என் இதயத்தை காட்டு!
என் முகவரி கேட்பவரிடம்
உன் இதயத்தை…???



யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத் தெந்நெஞ்சத்
தோஒ உளரே அவர்.

என் நெஞ்சைவிட்டு நீங்காமல் என் காதலர் இருப்பது போல, அவர் நெஞ்சை விட்டு நீங்காமல் நான் இருக்கின்றேனா?


என் இதயவீட்டில்
உன்னைக் குடிவைத்துவிட்டு
உன் மனவாசலில்
காத்திருக்கிறேன்.



தம்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத் தோவா வரல்.

அவருடைய நெஞ்சில் எமக்கு இடம் தராமல் இருப்பவர்; எம் நெஞ்சில் மட்டும் இடைவிடாமல் வந்து புகுந்து கொள்வதற்காக வெட்கப்படமாட்டார் போலும்.


என் உயிரை
நழுவாமல் இறுக்கிப் பிடித்திருக்கிறது
உன் நினைவுக் கயிறு.



மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடுயான்
உற்றநாள் உள்ள உளேன்.

நான் அவரோடு சேர்ந்திருந்த நாட்களை நினைத்துத் தான் உயிரோடு இருக்கிறேன்; வேறு எதை நினைத்து நான் உயிர்வாழ முடியும்?


நினைத்துக் கொண்டிருந்தால்
உன்னிடமே போகிறது மனமும்…
மறக்க நினைத்தால்
என்னைவிட்டே போகிறது உயிரும்…
விலகிய பிறகு, உன்னை
நினைப்பதா? மறப்பதா?


மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.

மறதி என்பதே இல்லாமல் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே பிரிவுத்துன்பம் சுட்டுப் பொசுக்குகிறதே! பினைக்காமல் மறந்துவிட்டால் என்ன ஆகுமோ?

பேசவேண்டாமென்று சொன்னதைப் போல
உன்னை நினைக்கக்கூடாதென்றும் சொல்லிவிடாதே.
காதல்தான் இல்லை, உயிராவது மிஞ்சட்டும்!



எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.

எவ்வளவு அதிகமாக நினைத்தாலும், அதற்காகக் காதலர் என் மீது சினம் கொள்ளமாட்டார். அவர் எனக்குச் செய்யும் பெரும் உதவி அதுவல்லவா?


உன்னையும் என்னையும்
பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை
என்றவள் பிரிந்தே போய்விட்டாய்…
என்னை விட்டு உன்னோடு வந்து
கொண்டிருக்கிறது
என் மனமும், உயிரும்!



விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.

``நாம் ஒருவரே; வேறு வேறு அல்லர்.'' எனக்கூறிய காதலர் இரக்கமில்லாதவராக என்னைப் பிரிந்து சென்றுள்ளதை நினைத்து வருந்துவதால் என்னுயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருக்கிறது.


உன்னைப் பார்க்கும் ஆசையெல்லாம்
இந்த நிலவைப் பார்த்துத்
தீர்த்துக் கொள்கிறேன்
பௌர்ணமியன்று மட்டும்!


விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.

நிலவே! நீ வாழ்க; இணைபிரியாமலிருந்து, பிரிந்து சென்றுள்ள காதலரை நான் என் கண்களால் தேடிக் கண்டுபிடித்திடத் துணையாக நீ மறையாமல் இருப்பாயாக.

இது காதல் பூக்கும் மாதம் - 130

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.