Monday, August 20, 2007

காதல் கூடம் - 2


அடுத்த ஆண்டு பள்ளியின் முதல் நாள்.

காத்திரு என்று நானும்
காத்திருக்கிறேன் என்று நீயும்
சொல்லிக் கொண்டதில்லை.
ஆனாலும் காலைதோறும் காத்திருப்பாய்
ஆற்றுப்பாலத்தில் மிதிவண்டி துணையோடு.

காலைக் கதிரவனுக்கு
உன்னை ரசிக்க ஒருகண் போதவில்லை.
ஆற்றுநீர் பிம்பமாய்
மறுகண்ணும் மையலில்.

ஆற்றை ரசித்தபடி...
நகத்தை கடித்தபடி...
ஒரு காலால் பெடலை மிதித்தபடி...
அப்படி, இப்படியென
நொடிக்கொரு முறை மாறிக்கொண்டேயிருக்கும்
உன் காத்திருப்பின் '...படி'

தூரத்தில் வருகிறேன் நான்.
ஒரு புன்னகை கொடுத்து
மறு புன்னகை பெறுகிறோம்.
அன்றைய முதல் புன்னகை
கண்ணிடுக்கில் பத்திரமாகிறது.

பாடங்களைத் தாண்டி வேறெதும் பேசியதில்லை
நம் உதடுகள்.
காதலைத் தாண்டி வேறெதும் பரிமாறியதில்லை
நம் கண்கள்.

பதினோராம் வகுப்பானதால்
நீலம் துறந்து பச்சை உடுத்தியிருந்தது
உன் சீருடை.
மழை கழுவிய மலரென
இன்னும் கொஞ்சம் மெருகேறியிருந்தது
உன் பொன்னிறம்.

பக்கம் பார்த்தபடியே
பாலத்தில் துவங்கும்
நம் பள்ளிப் பயணம்.

இடம் நான்.
வலம் நீ.
ஆனாலும் என்னிடம் நீ.

ஒன்றாய் ஒத்திசைந்து
ஒரு நான்குசக்கர வாகனமாய்
பவனிவரும் நம் மிதிவண்டிகள்,
பள்ளியருகே வந்ததும்
தொடர்வண்டியாய் மாறும்.

உள்நுழைந்ததுமே அறிவிப்புப் பலகையில்
நம் பெயர்கள் பளிச்சிடுகின்றன.
முதல், இரண்டாமிடம் பெற்றதற்கான வாழ்த்துக்களுடன்.



நம் பெயர் பொறித்த திருமண அழைப்பிதழாய்
அதனை உருமாற்றிப் பார்த்து தடுமாறுகிறது மனம்.

அங்கிருந்து மீண்டு
மிதிவண்டி நிறுத்துமிடம் நோக்கிப் பிரிகிறோம்.

இப்போது,
வலம் நான்.
இடம் நீ.
ஆனாலும் என் வளம் நீ.

புதிய வகுப்பறை கண்டுபிடித்து
வழக்கம்போல இடம்பிடிக்கிறோம்.
நீ முதல் பெஞ்சிலும்.
நான் கடைசி பெஞ்சிலும்.

ஏதோ சொல்ல நீ வாயெடுக்க, “டாண் டாண் டாண்”.
வணக்கக்கூட்டத்திற்கான மணி அடிக்கிறது.
பள்ளி மைதானத்தில் “ப” வடிவில்
நாங்கள் கூடுகிறோம்.
கடவுள்வாழ்த்துப் பாட மேடையோரப் பூங்காவாய்
நீ நின்றிருக்கிறாய்.

*ஒலிவாங்கி முன்னால் வருகிறாய்.
ஒளி வாங்கிக் கொள்கிறது கூட்டம்.

மேடையில் நின்றவாறு நீ என்னைத்தேட…
சீருடைகளுக்கிடையே ஒளிந்து நான் உன் தேடல் ரசிக்க…
தினம் தினம் பார்த்துப் பழகியவைதானென்றாலும்
சந்தித்த நொடியில்
தொட்டுவிட்ட விரல்களைப் போல
சட்டென விலகுகின்றன நம் பார்வைகள்.

கண்களை மூடி
சன்னக்குரலெடுத்து
பாடத் துவங்குகிறாய்.
காற்றில் தேன் தெளிக்கப் படுகிறது.

அந்தப் பூவரச மரத்தில் இருந்து விழுந்த இலையொன்று
காற்றில் அலைந்து அலைந்து நிலம் தொடுகிறது.
இசைத்தட்டு ஒலிக்காமல் நீ இசைக்கும் பாடல்
செவிவழி நுழைந்து அலைந்து உயிர் தொடுகிறது.

கண்மூடி நீ செய்யும் பாவனையெல்லாம்
காதல் செய்த காட்சிக் கவிதையென
ஒற்றைக்கண்ணில் படம்பிடிக்கிறேன்.

தலைமையாசிரியரின் உரை தொடர்ந்து
அப்பொழுதே பரிசளிப்பு விழாவும் தொடங்குகிறது.
“பத்தாம் வகுப்பு – மொத்த மதிப்பெண் முதலிடம்” என்று நிறுத்தி விட்டு,
என்னைப் பார்த்தபடியே என் பெயர் வாசிக்கிறாய்.
இல்லை சுவாசிக்கிறாய்.

உயிர் கட்டி இழுத்தது போல் மேடையேறி
நீயெடுத்துக் கொடுத்த சான்றிதழை
தலைமை ஆசிரியர் கையால் பெறுகிறேன்.

“பத்தாம் வகுப்பு – மொத்த மதிப்பெண் இரண்டாமிடம்” என்று சொல்லி
வெட்கம் சேர்த்து உன் பெயரை நீயே உச்சரித்தாய்.
இல்லை உள் சரித்தாய்.

உயிர்பெற்ற கட்டடங்கள் மீண்டும் அதனை உச்சரிக்க
மைதானமெங்கும் எதிரிசைக்கிறது உன் பெயர்.
உண்மையில் உன் பெயர் அழகு!
நீயே சொல்லும்போது பேரழகு!!

தமிழிலிலும் நான் முதலிடம், நீ இரண்டாமிடம்.
மற்றப் பாடங்களுக்கு முதலிடம் என்று சொல்லி
நம் பெயர்களை சேர்த்தே நீ சொல்லும்போது
ஒலிபெருக்கிபோல எனக்குள்ளும் அதிர்வலைகள்!

கூட்டம் முடிந்து திரும்புகையில்
நீ மந்திரித்த நம் பெயர்கள்
காற்றில் மயங்கியபடி இருந்தன.

உற்றுப் பார்க்கிறேன்.
உன் பெயரின் பின்னே
கிறங்குகிறது என் பெயர்.

நானும் வகுப்பறை நோக்கி உன்னைத் தொடருகிறேன்.
உன் நிழலை என்மேல் சுமந்தபடி.
நிழல் நிசமாகும் நம்பிக்கையோடு.

(அடுத்தப் பகுதி)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

*ஒலிவாங்கி - Mic

27 comments:

  1. அருமையா இருக்கு!!!!!!!

    சரி எனக்கு ஒரு சந்தேகம் அது என்ன உங்க எல்லா கதைக்கும்
    நாயகன் பெயர் "அருள்"
    நாயகி பெயர் "இளவரசி"......

    எல்லா வரிகளுமே அழகா இருக்கு!!!!!!

    ReplyDelete
  2. / அருமையா இருக்கு!!!!!!!

    சரி எனக்கு ஒரு சந்தேகம் அது என்ன உங்க எல்லா கதைக்கும்
    நாயகன் பெயர் "அருள்"
    நாயகி பெயர் "இளவரசி"......

    எல்லா வரிகளுமே அழகா இருக்கு!!!!!!/

    நன்றி எழில்!

    பாரதிக்கு ஒரு கண்ணம்மா மாதிரி அருளுக்கு ஒரு இளவரசி :)))

    ReplyDelete
  3. இடம் நான்.
    வலம் நீ.
    ஆனாலும் என்னிடம் நீ.

    வலம் நான்.
    இடம் நீ.
    ஆனாலும் என் வளம் நீ.


    அருமை அருள் அருமை. மேலே இருக்கும் வரிகள் ரொம்ப நல்லா இருக்கு பிரதர்.

    ReplyDelete
  4. //காலைக் கதிரவனுக்கு
    உன்னை ரசிக்க ஒருகண் போதவில்லை.
    ஆற்றுநீர் பிம்பமாய்
    மறுகண்ணும் மையலில்.//


    வழக்கம் போல அசத்திட்டீங்க அருட்பெருங்கோ !!

    ReplyDelete
  5. ப‌ள்ளிக்கூட‌ வாழ்க்கையே ஒரு க‌விதை மாதிரி தான். அதுவே க‌விதை வ‌டிவில் வ‌ரும்போது இன்னும் அழ‌கு. ப‌ட‌ங்க‌ள் எல்லாம் போட்டு அச‌த்துறீங்க‌ளே த‌ல... அதுவும் அந்த‌ க‌ரும்ப‌ல‌கை ப‌ட‌ல் பிர‌மாத‌ம்

    அப்புற‌ம் எழில் கேட்ட‌ ச‌ந்தேக‌ம் என‌க்கும் இருக்கு. அதுவும் முக்கிய‌மா.. அந்த‌ ம.அருள்முருக‌ன்.......(ப‌ய‌ங்க‌ர‌ உள்குத்தா இருக்கே)

    ReplyDelete
  6. இதைப் படிச்சதும் ஒண்ணே ஒண்ணுதான் தோணுது??

    நீங்க அவசியம் கரூர் போகணுமா?? ஒழுங்கா உக்காந்து எழுதி முடிச்சுட்டு போயிடுங்களேன்.

    ஹி ஹி. சன் டீவி யில மதியம் போடற படங்களை வெச்சு காதல் செவ்வாய்னு போடுவாங்க. அது அடுத்த வாரம்தான் உண்மையாகப் போகுது...

    ReplyDelete
  7. / இடம் நான்.
    வலம் நீ.
    ஆனாலும் என்னிடம் நீ.

    வலம் நான்.
    இடம் நீ.
    ஆனாலும் என் வளம் நீ.


    அருமை அருள் அருமை. மேலே இருக்கும் வரிகள் ரொம்ப நல்லா இருக்கு பிரதர்./

    நன்றி ஸ்ரீ... காதலே வளமான இடம் தானே? ;)

    ReplyDelete
  8. / //காலைக் கதிரவனுக்கு
    உன்னை ரசிக்க ஒருகண் போதவில்லை.
    ஆற்றுநீர் பிம்பமாய்
    மறுகண்ணும் மையலில்.//


    வழக்கம் போல அசத்திட்டீங்க அருட்பெருங்கோ !!/

    நன்றிங்க நாடோடி இலக்கியன்!!!

    ReplyDelete
  9. /ப‌ள்ளிக்கூட‌ வாழ்க்கையே ஒரு க‌விதை மாதிரி தான். அதுவே க‌விதை வ‌டிவில் வ‌ரும்போது இன்னும் அழ‌கு. ப‌ட‌ங்க‌ள் எல்லாம் போட்டு அச‌த்துறீங்க‌ளே த‌ல... அதுவும் அந்த‌ க‌ரும்ப‌ல‌கை ப‌ட‌ல் பிர‌மாத‌ம்/

    பள்ளிக்கூட வாழ்க்கைய மறுபடி அனுபவிக்க முடியாதில்ல... அதான் இப்படி எழுதிப் பாத்துக்கலாம்னு :) அந்த மாதிரி அறிவிப்பு பலகை எல்லாப் பள்ளிக்குடத்திலயும் தான் இருக்கும்... என்ன இந்த மாதிரி கருப்பா இருக்காது... அழிச்சு, எழுதி , அழிச்சு அது சாம்பல் நிறத்துல இருக்கும் :)

    /அப்புற‌ம் எழில் கேட்ட‌ ச‌ந்தேக‌ம் என‌க்கும் இருக்கு. அதுவும் முக்கிய‌மா.. அந்த‌ ம.அருள்முருக‌ன்.......(ப‌ய‌ங்க‌ர‌ உள்குத்தா இருக்கே)/

    தல, இந்த பேர் நல்லா இல்லைனா சொல்லுங்க மாத்திடலாம்... இதுல என்னய்யா உள்குத்து இருக்கு? :)

    ReplyDelete
  10. நந்தா,

    / இதைப் படிச்சதும் ஒண்ணே ஒண்ணுதான் தோணுது??

    நீங்க அவசியம் கரூர் போகணுமா?? ஒழுங்கா உக்காந்து எழுதி முடிச்சுட்டு போயிடுங்களேன்./

    வீட்ல விசேசங்க போய் தான் ஆகணும் :)
    எழுதி முடிச்சாலும் திங்கட்கிழமை அன்னைக்கு பயணத்துல இருப்பேன்..அதான் செவ்வாய் அன்னைக்கு :)

    /ஹி ஹி. சன் டீவி யில மதியம் போடற படங்களை வெச்சு காதல் செவ்வாய்னு போடுவாங்க. அது அடுத்த வாரம்தான் உண்மையாகப் போகுது.../

    ஆகா... :-)))

    ReplyDelete
  11. / என்னைப் பார்த்தபடியே என் பெயர் வாசிக்கிறாய்.
    இல்லை சுவாசிக்கிறாய்////

    அனுபவிச்சு ரசிச்சு எழுதிரீங்க.. ரொம்ப நல்லா இருக்கு அருட்பெருங்கோ.../

    நன்றிங்க மேடம்!!!

    /ஆக இளவரசிய பார்க்க கரூர் போரீங்களா?/

    ஐயையோ இல்லீங்க...
    பயணத்துக்கான காரணம் -
    புதுமனை புகு விழா + அக்கா பொண்ணுக்கு மொட்டை

    /அருளுக்கு ஒரு இளவரசி :)))

    ???????/

    பாரதியோட கற்பனை கதாபாத்திரம் கண்ணம்மா மாதிரி அருளோட கற்பனை கதாபாத்திரம் இளவரசி :)

    ஆனா பாரதிக்கே கண்ணம்மா கிடைக்கலங்கறது வேற விசயம் ;)

    ReplyDelete
  12. >>சரி எனக்கு ஒரு சந்தேகம்
    //அப்புற‌ம் எழில் கேட்ட‌ ச‌ந்தேக‌ம் என‌க்கும் இருக்கு//
    ~~ ஆக இளவரசிய பார்க்க கரூர் போரீங்களா? ~~

    அட விடுங்க தல அவங்க எப்பவுமே அப்படித்தான் பதிவு மனசுல பதியுறமாதிரி இருந்துதுனா அனுபவிக்கிறத விட்டுட்டு ஆறாயுறாங்க.. ம்ம்ம் அது சரி எல்லோரும் மீறான் அன்வர் ஆகிடமுடியாதுல்ல....

    எங்கதான் படிச்சிங்களோ இப்படி (இளைத்து)எழுத !! எந்த வரியாவது எடுத்து இது நல்லாயிருக்குன்னு சொல்லவே முடியலயப்ப்ப்பா அனைத்தும் அருமை.

    அப்படியே வட்டம் வட்டமா கொசுவர்த்தி சுருள் சுத்தி பழைய நினைவுகளுக்கு சென்று திரும்புகிறது என் மனது.

    சந்தோசம்யா ரொம்ப சந்தோசம் ஓசியிலே படம் பார்த்த சந்தோசம். காதல் கூடம் எழுத்துக்களாக தெறியவில்லை காட்சிகளாகதான் காண்கிறேன். இன்னும் சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்.

    சரி போகட்டும் சிவா.. அருளையும், இளவரசியையும் யாருக்கும் தெறியாம எனக்குமட்டும் சொல்லுங்க சரியா... மெய்யாலுமே நான் யார்கிட்டேயும் சொல்லமாட்டேன். ஹி ஹி..

    காதல் கூடம்... கோபுரம்

    -- நண்பன்

    ReplyDelete
  13. //ஒன்றாய் ஒத்திசைந்து
    ஒரு நான்குசக்கர வாகனமாய்
    பவனிவரும் நம் மிதிவண்டிகள்,
    பள்ளியருகே வந்ததும்
    தொடர்வண்டியாய் மாறும்.//

    படிக்கற எங்களுக்கே பாதி வயசு கொறஞ்சிடும் போல... எழுதற உங்களுக்கு...

    ReplyDelete
  14. அருமையாக இருக்கு அருள் ;)

    ஆனா உள்குத்து இல்லைன்னு சொல்லி சொல்லியே பல உண்மைகள் வெளிவரும் போல ;)

    ReplyDelete
  15. ம்ம்ம்ம்ம்ம்ம்!!!!!!
    அருமை!!!

    ReplyDelete
  16. /அட விடுங்க தல அவங்க எப்பவுமே அப்படித்தான் பதிவு மனசுல பதியுறமாதிரி இருந்துதுனா அனுபவிக்கிறத விட்டுட்டு ஆறாயுறாங்க.. ம்ம்ம் அது சரி எல்லோரும் மீறான் அன்வர் ஆகிடமுடியாதுல்ல..../

    சரியா சொன்னீங்க...:)))

    /எங்கதான் படிச்சிங்களோ இப்படி (இளைத்து)எழுத !! /

    இளைத்து எழுதவா? ம்ம்ம்... சரியாதான் சொல்லிருக்கீங்க...என்ன நேர்ல பாத்தா புரியும் ;)

    /எந்த வரியாவது எடுத்து இது நல்லாயிருக்குன்னு சொல்லவே முடியலயப்ப்ப்பா அனைத்தும் அருமை.

    அப்படியே வட்டம் வட்டமா கொசுவர்த்தி சுருள் சுத்தி பழைய நினைவுகளுக்கு சென்று திரும்புகிறது என் மனது.

    சந்தோசம்யா ரொம்ப சந்தோசம் ஓசியிலே படம் பார்த்த சந்தோசம். காதல் கூடம் எழுத்துக்களாக தெறியவில்லை காட்சிகளாகதான் காண்கிறேன். இன்னும் சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்./

    வாழ்த்துக்களுக்கு நன்றிங்க அன்வர்!!!

    /சரி போகட்டும் சிவா.. அருளையும், இளவரசியையும் யாருக்கும் தெறியாம எனக்குமட்டும் சொல்லுங்க சரியா... மெய்யாலுமே நான் யார்கிட்டேயும் சொல்லமாட்டேன். ஹி ஹி../

    கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... நான் கோபமா இருக்கேன்!!!!

    /காதல் கூடம்... கோபுரம்

    -- நண்பன்/
    _/\_
    _/\_
    _/\_ இந்த மாதிரியா??? ;)

    ReplyDelete
  17. துரியோதனன்,

    /படிக்கற எங்களுக்கே பாதி வயசு கொறஞ்சிடும் போல... எழுதற உங்களுக்கு.../

    எனக்கு வயசெல்லாம் அப்படியே இருக்குங்க...
    மனசு மட்டும் பள்ளிக்கூடத்துக்கு போயிடுச்சு!

    (அப்போ நெறைய படிக்காம வந்துட்டேன்...அதெல்லாம் படிக்கிரதுக்காக போயிருக்கு வேற ஒன்னுமில்ல ;))

    ReplyDelete
  18. / அருமையாக இருக்கு அருள் ;)/

    நன்றிங்க கோபி !!!

    /ஆனா உள்குத்து இல்லைன்னு சொல்லி சொல்லியே பல உண்மைகள் வெளிவரும் போல ;)/

    வேணாம்...நான் அப்புறம் அழுதுறுவேன்...

    ReplyDelete
  19. / ம்ம்ம்ம்ம்ம்ம்!!!!!!
    அருமை!!!/

    நன்றிங்க சிநேகிதன்!!!

    ReplyDelete
  20. Makka,
    Kavidhai padikum podhu, kadhal katchi ya manasula teriyudhu ya ...
    Nee kalaku makka ....

    ReplyDelete
  21. / Makka,
    Kavidhai padikum podhu, kadhal katchi ya manasula teriyudhu ya ...
    Nee kalaku makka ..../

    உங்க மனசு காதல் மனசு போல...அதான் காதல் தெரியுது ;)

    நன்றிங்க கவிதை ப்ரியன்!!!

    ReplyDelete
  22. இளைத்து எழுதனுமா அப்பறம் ரப்பர்வச்சி அழித்த கோடா இருக்கற அருள் காணாம இன்விசிபிலாகிடுவாரே... :(

    காதல் காட்சி நிஜமாவே விரிகிறது தான் கண்ணுக்குள்..
    (பின்குறிப்பு : எங்கள் பள்ளிக்கூடம் வெறும் பெண்கள் மட்டும் படிக்கும் கிறிதுவ பள்ளியாக்கும்)

    ReplyDelete
  23. / இளைத்து எழுதனுமா அப்பறம் ரப்பர்வச்சி அழித்த கோடா இருக்கற அருள் காணாம இன்விசிபிலாகிடுவாரே... :(/

    சரியா சொன்னீங்கக்கா... இப்பவே ரோட்ல நான் நடந்து போனா என்னடா ட்ரெஸ் மட்டும் தனியா வருதுனு எல்லாரும் பயப்பட்றாங்க :) இன்னும் இளைச்சா அவ்வளவுதான்!!!

    /காதல் காட்சி நிஜமாவே விரிகிறது தான் கண்ணுக்குள்..
    (பின்குறிப்பு : எங்கள் பள்ளிக்கூடம் வெறும் பெண்கள் மட்டும் படிக்கும் கிறிதுவ பள்ளியாக்கும்)/

    நானும் ஆண்கள் பள்ளியிலதான் படிச்சேன்னு ஒரு பின்குறிப்ப நான் ஆரம்பத்துல போடாம விட்டுட்டேன்... அதான் எல்லாரும் இந்த கும்மு கும்முறாங்க :)

    ReplyDelete
  24. Arputham.. arputham..!
    ilamai thuLLum nadayil, kaadhaL jodi bavani varattum!

    Anbudan,
    Na.Anandkumar

    ReplyDelete
  25. / Arputham.. arputham..!
    ilamai thuLLum nadayil, kaadhaL jodi bavani varattum!

    Anbudan,
    Na.Anandkumar/

    வாழ்த்துக்களுக்கு நன்றிகள் ஆனந்த்!!!

    ReplyDelete
  26. Aththanai Arumai. Solla varthaigal illai. Palli paruvam oru alagana paruvam, antha nerathil kaathal kolvatharku koduthu vaithiruka vendum. Nandraga eluthi irukireergal. Vaalthukkal.
    Arul - Elavarasi - karumpalagai padam arumai , engo kooti kondu ponathu en manathai..
    superb!

    ReplyDelete
  27. /Aththanai Arumai. Solla varthaigal illai. Palli paruvam oru alagana paruvam, antha nerathil kaathal kolvatharku koduthu vaithiruka vendum. Nandraga eluthi irukireergal. Vaalthukkal.
    Arul - Elavarasi - karumpalagai padam arumai , engo kooti kondu ponathu en manathai..
    superb!/

    வாங்க தீக்ஷண்யா... பல மாதங்கள் கழித்த வருகை :)

    வருகைக்கும் வாழ்த்துமொழிக்கும் நன்றிகள்!!!

    பள்ளியிலேயே காதலா??? படிக்க நல்லா இருக்கும,் ஆனா எதார்த்தத்துல? எனக்குத் தெரியல!!!

    ReplyDelete