Sunday, February 18, 2007

இது காதல் பூக்கும் மாதம் - 170

இது காதல் பூக்கும் மாதம் - முதல் பகுதி

17. நிறையழிதல்


நீயிருந்தவரை உனக்கு அடங்கிக் கிடந்துவிட்டு
நீ பிரிந்ததும் என்னையே அடக்குகிறது
காதல்.


காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.

காதல் வேட்கை இருக்கிறதே, அது ஒரு கோடரியாக மாறி, நாணம் எனும் தாழ்ப்பாள் போடப்பட்ட மன அடக்கம் என்கிற கதவையே உடைத்தெறிந்து விடுகின்றது.


நள்ளிரவிலும் விழித்தெழிந்து
கண் கசக்கினால்
நீ தான் தெரிகிறாய்.

காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்.

காதல் வேட்கை எனப்படும் ஒன்று இரக்கமே இல்லாதது; ஏனெனில் அது என் நெஞ்சில் நள்ளிரவிலும் ஆதிக்கம் செலுத்தி அலைக்கழிக்கிறது.


காதலும் தும்மலும்
ஒன்றுதான் என்றேன்.
ஒரு முறை தும்மிவிட்டு
விலகி விட்டாய்.

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.

எவ்வளவுதான் அடக்க முயன்றாலும் கட்டுப்படாமல் தும்மல் நம்மையும் மீறி வெளிப்படுகிறதல்லவா; அதைப் போன்றதுதான் காதல் உணர்ச்சியும்; என்னதான் மறைத்தாலும் காட்டிக் கொடுத்துவிடும்.


இலை மறை காயாக இருந்துவிட்டு
இப்போது பறவை கொத்தும் கனியாகிவிட்டது
நம் காதல்!


நிறையுடையேன் என்பேன்மன் யானோவென் காமம்
மறையிறந்து மன்று படும்.

மன உறுதிகொண்டவள் நான் என்பதே என் நம்பிக்கை; ஆனால் என் காதல், நான் மறைப்பதையும் மீறிக்கொண்டு மன்றத்திலேயே வெளிப்பட்டு விடுகிறதே.


அடித்துவிட்டு ஓடுகிற குழந்தையைத்
திருப்பியா அடிக்கிறோம்?
ஒரு முத்தம்தானே கொடுக்கிறோம்?
நீ - குழந்தை.
என் காதல் – முத்தம்.

செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன் றன்று.

தம்மைப் பிரிந்து சென்ற காதலரைப் பகையாகக் கருதி அவரைத் தொடர்ந்து மன அடக்கம், காதல் நோயுற்றவர்க்கு இருப்பதில்லை.


நீ விலகியதும்
உன்னிடமிருந்து என்னிடம் ஓடி வருகிறது காதல்.
என்னிடமிருந்து உன்னிடம் ஓடிப் போகிறது என் இதயம்!


செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்.

வெறுத்துப் பிரிந்ததையும் பொறுத்துக் கொண்டு அவர் பின்னே செல்லும் நிலையை என் நெஞ்சுக்கு ஏற்படுத்திய காதல் நோயின் தன்மைதான் என்னே.


‘முத்தமிடுகையில்
இதழ்களைத் திறக்கிறாய்…ஆனால்
கண்களை மூடிக் கொள்கிறாய்’
என்று சொன்னதுதான் தாமதம்…
கண்களையும் அகலத் திறந்து
ஒரு முத்தம் கொடுத்துவிட்டு
முகத்தையே மூடிக் கொண்டாய்!


நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்.

நமது அன்புக்குரியவர் நம்மீது கொண்ட காதலால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்யும்போது, நாணம் எனும் ஒரு பண்பு இருப்பதையே நாம் அறிவதில்லை.


“என்னிடம் என்ன பிடித்திருக்கிறது” என்றாய்.
“உன்னிடம் எதுவும் பிடிக்கவில்லை” என்றேன்.
திரும்பிக் கொண்டாய்.
“மொத்தமாய் உன்னையேப் பிடித்த பிறகு
உன்னிடம் எது பிடிக்கிறதென தனியாக எப்படி
சொல்ல?”


பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை.

நம்முடைய பெண்மை எனும் உறுதியை உடைக்கும் படைக்கலனாக இருப்பது, பல மாயங்களில் வல்ல கள்வராம் காதலரின் பணிவான பாகுமொழியன்றோ?


கழுத்தைப் பிடித்து
சண்டையிட வந்தவன்
உன்னைப் பார்த்ததும்
கட்டிப்பிடிக்கிறேன்…
உன் வெட்கத்தை!

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.

ஊடல் கொண்டு பிணங்குவோம் என நினைத்துதான் சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விடுத்து அவருடன் கூடுவதைக் கண்டு என் பிடிவாதத்தை மறந்து தழுவிக் கொண்டேன்.


நீ விலகியதால்
காட்டுத்தீயாய் எரிந்து கொண்டிருந்த என் கோபம்
உன்னுடைய ஒரு துளி கண்ணீரில் அணைந்தது.

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்.

நெருப்பிலிட்ட கொழுப்பைப் போல் உருகிடும் நெஞ்சம் உடையவர்கள், கூடிக் களித்தபின் ஊடல் கொண்டு அதில் உறுதியாக இருக்க முடியுமா?

இது காதல் பூக்கும் மாதம் - 180

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

4 comments:

  1. //‘முத்தமிடுகையில்
    இதழ்களைத் திறக்கிறாய்…ஆனால்
    கண்களை மூடிக் கொள்கிறாய்’
    என்று சொன்னதுதான் தாமதம்…
    கண்களையும் அகலத் திறந்து
    ஒரு முத்தம் கொடுத்துவிட்டு
    முகத்தையே மூடிக் கொண்டாய்!
    //


    வாவ்.. என்ன ஒரு அழகான கற்பனை, அருட்பெருங்கோ

    ReplyDelete
  2. வாங்க மு. கா,

    /வாவ்.. என்ன ஒரு அழகான கற்பனை, அருட்பெருங்கோ/

    கற்பனைகள் எல்லாமே அழகாகத்தானே இருக்கும்.. ;-)

    நன்றி கார்த்தி...

    ReplyDelete
  3. //நீ விலகியதால்
    காட்டுத்தீயாய் எரிந்து கொண்டிருந்த என் கோபம்
    உன்னுடைய ஒரு துளி கண்ணீரில் அணைந்தது.//

    இது அழுத்தமா இருக்கு. கொஞ்சம் கனமான கவிதைகளில் அழுத்தம் இருந்தா அதோட தாக்கமே தனீ.

    ReplyDelete
  4. வாங்க சேதுக்கரசி,

    /
    இது அழுத்தமா இருக்கு. கொஞ்சம் கனமான கவிதைகளில் அழுத்தம் இருந்தா அதோட தாக்கமே தனீ./

    "அழு"த்தமா இருக்குனு சொல்றீங்களா? சரிதான்!!!

    நன்றி சேதுக்கரசி!!!

    ReplyDelete