Saturday, February 10, 2007

இது காதல் பூக்கும் மாதம் - 100




உன்னிடம் பகிர்ந்தால்
எல்லாத் துயரங்களும் பாதியானது.
பிரிவுத் துயரம் மட்டும் இரட்டிப்பாகிறது.
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க் குரைக்கோ பிற.

என்னைப் பிரிந்து செல்வதற்கு என் காதலர்க்கு ஒப்புதல் அளித்துவிட்டேன்; ஆனால், இப்போது பிரிவுத் துன்பத்தால் என்னுடலில் பசலை படர்வதை, யாரிடம் போய்ச் சொல்வேன்?


உன் பிரிவு தரும் துக்கமும்
உடலைத் தாண்டி உயிர் வரைப் பரவுகிறது…
உன் முத்தங்களைப் போல!
அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.

பிரிவு காரணமாகக் காதலர் உண்டாக்கினார் எனும் பெருமிதம் பொங்கிடப் பசலை நிறம் என் உடலில் ஏறி ஊர்ந்து பரவுகின்றது!

நீ பார்க்காமல்
நானெப்படி அழகாவேன்?
உன்னைப் பார்க்காமல்
எனக்கெப்படி வரும் வெட்கம்?
எப்போது உன்னைப் பிரிவேன் எனக்
காத்திருந்து தாக்குகிறது காதல் நோய்.

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.

காதல் நோயையும், பசலை நிறத்தையும் கைம்மாறாகக் கொடுத்து விட்டு அவர் என் அழகையும், நாணத்தையும் எடுத்துக் கொண்டு பிரிந்து சென்று விட்டார்.

என் மனமும் உதடும்
முணுமுணுப்பது உன்னை மட்டும்தானே?
எனக்கேத் தெரியாமல் எப்படி வந்தது பசலை?
உள்ளுவன் மன்யான் உரைப்ப தவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.

யான் நினைப்பதும், உரைப்பதும் அவரது நேர்மைத் திறன் பற்றியதாகவே இருக்கும்போது, என்னையறியாமலோ வேறு வழியிலோ இப்பசலை நிறம் வந்தது எப்படி?

இடுப்பில் இருந்து
இறக்கிவிடமுடியாதக் குழந்தையைப் போல
உன்னையேத் தொற்றிக்கொண்டிருக்கிறது
என் மனம்.

உவக்காணெம் காதலர் செல்வார் இவக்காணென்
மேனி பசப்பூர் வது.

என்னைப் பிரிந்து காதலர் சிறிது தொலைவுகூடச் செல்லவில்லை; அதற்குள்ளாக என் மேனியில் படர்ந்து விட்டதே பசலை நிறம்.

விடைபெறும் கடைசி தருணம்
என்விரல் விட்டு உன் விரல் பிரியும்
இறுதி நொடியில்
பௌர்ணமி அமாவாசையானது போல
அழிந்துபோனது என் அழகெல்லாம்!

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கண்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.

விளக்கின் ஒளிகுறையும் சமயம் பார்த்துப் பரவிடும் இருளைப்போல, இறுகத் தழுவிய காதலன்பிடி, சற்றுத் தளரும்போது காதலியின் உடலில் பசலைநிறம் படர்ந்து விடுகிறது.

'தூக்கத்திலும் கூட
என்னைக் கட்டிக் கொண்டே தூங்குவதேன்?' என்கிறாய்.
ஒருவேளை கனவில் என்னைப் பிரிந்து விட்டால்?
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.

தழுவிக் கிடந்தேன்; சற்றுத் தள்ளிப் படுத்தேன்; அவ்வளவுதான்; என்னை அள்ளிக் கொண்டு விட்டதே பசலை நிறம்!

என் அழகு குறைந்து கொண்டே வருகிறதென
கண்ணாடி கூட பழிக்கிறது!
அதற்கெப்படிப் புரியும்?
என்னழகுக்குக் காரணம் நீயென!

பசந்தாள் இவளென்ப தல்லால் இவளைத்
துறந்தார் அவரென்பார் இல்.

இவள் உடலில் பசலை நிறம் படர்ந்தது எனப் பழித்துக் கூறுகிறார்களே அல்லாமல், இதற்குக் காரணம், காதலன் பிரிந்து சென்றிருப்பது தான் என்று சொல்பவர் இல்லையே.

என் பிரிவுதான்
உன் பிரியமெனில்
தாராளமாக
என்னைப் பிரி!
என்னுயிர் உரி…

பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.

பிரிந்து சென்றிட என்னை ஒப்புக் கொள்ளுமாறு செய்த காதலர் நலமாக இருப்பார் என்றால் என்னுடல் பசலை படர்ந்தே விளங்கிடுமாக!

நீ நலம் என்றால்
நானும் நலம்.
நீ நலமில்லையென்றால்
நானே இல்லை!
பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்.

என்னைப் பிரிவுக்கு உடன்படுமாறு செய்த காதலரை அன்பில்லாதவர் என்று யாரும் தூற்றமாட்டார்கள் எனில், பசலை படர்ந்தவள் என நான் பெயரெடுப்பது நல்லது தான்!

இது காதல் பூக்கும் மாதம் - 110

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

11 comments:

  1. எழுத்துலதான் காதல்னா, பதிவு நிறம்ப காதல் சின்னமா இருக்குது... காதல் முரசுன்னு சொன்னது தப்பே இல்ல...

    இப்படி மூச்சு விடாம மந்திரம் பாடுறீங்க...

    பலே... பலே....

    ReplyDelete
  2. //என் பிரிவுதான்
    உன் பிரியமெனில்
    தாராளமாக
    என்னைப் பிரி!
    என்னுயிர் உரி…//

    //இடுப்பில் இருந்து
    இறக்கிவிடமுடியாதக் குழந்தையைப் போல
    உன்னையேத் தொற்றிக்கொண்டிருக்கிறது
    என் மனம்.//

    //உன் பிரிவு தரும் துக்கமும்
    உடலைத் தாண்டி உயிர் வரைப் பரவுகிறது…
    உன் முத்தங்களைப் போல! //

    அருமை அருட்பெருங்கோ

    டெம்ப்ளேட்லயும் ஒரே காதல் மயம். அட என்னமோ போங்கப்பா, ஒரு மார்க்கமா தான் அலையிறாங்க.

    ReplyDelete
  3. //உன்னிடம் பகிர்ந்தால்
    எல்லாத் துயரங்களும் பாதியானது.
    பிரிவுத் துயரம் மட்டும் இரட்டிப்பாகிறது. //

    மிகவும் உண்மை!

    //உன் பிரிவு தரும் துக்கமும்
    உடலைத் தாண்டி உயிர் வரைப் பரவுகிறது…
    உன் முத்தங்களைப் போல!//

    நல்லா இருக்கு...

    ReplyDelete
  4. ்வாங்க ஜி,

    / எழுத்துலதான் காதல்னா, பதிவு நிறம்ப காதல் சின்னமா இருக்குது... காதல் முரசுன்னு சொன்னது தப்பே இல்ல.../

    அப்புறம்... காதல் நாள் நெருங்குதில்ல?

    /இப்படி மூச்சு விடாம மந்திரம் பாடுறீங்க...

    பலே... பலே..../

    என்னது மூச்சு விடாமலா?
    ஜி, மூச்சு விடாம இருந்தா அப்புறம் நமக்கு மந்திரம் பாடிடுவாங்க ;-)

    ReplyDelete
  5. வாங்க ப்ரேம்,

    /அருமை அருட்பெருங்கோ

    டெம்ப்ளேட்லயும் ஒரே காதல் மயம். அட என்னமோ போங்கப்பா, ஒரு மார்க்கமா தான் அலையிறாங்க./

    நன்றிங்க.... காதல் மார்க்கமா போக்லாம்னு ஒரு ஆசைதான் ;-)

    அது சரி காலைல 5 மணிக்கு பின்னூட்டம் போட்டிருக்கீங்களே.... என்ன ஆச்சு?

    ReplyDelete
  6. வாங்க சேதுக்கரசி,

    //உன்னிடம் பகிர்ந்தால்
    எல்லாத் துயரங்களும் பாதியானது.
    பிரிவுத் துயரம் மட்டும் இரட்டிப்பாகிறது. //

    மிகவும் உண்மை!/

    பகிர்ந்து கொள்ளவும் முடியாமல், தனக்குள்ளே வைத்துக் கொள்ளும் துயரமும கூட ் மிகவும் கொடுமையானதுதான்...

    //உன் பிரிவு தரும் துக்கமும்
    உடலைத் தாண்டி உயிர் வரைப் பரவுகிறது…
    உன் முத்தங்களைப் போல!//

    நல்லா இருக்கு.../

    நன்றிகள்!!!

    ReplyDelete
  7. காதல் மார்க்கமா? அடிச்சு கிளப்புங்க.

    உங்க கவிதைய படிக்கதான் காலைல 5 மணிக்கே எழுந்துட்டேன் (ஹி ஹி ஹி, ஊருக்கு போகனும், அதான் அவ்வளவு சீக்கிரம்)

    ReplyDelete
  8. / காதல் மார்க்கமா? அடிச்சு கிளப்புங்க./

    ஒரு பேச்சுக்கு கூட சொல்லக்கூடாதா? ;-)

    /உங்க கவிதைய படிக்கதான் காலைல 5 மணிக்கே எழுந்துட்டேன் (ஹி ஹி ஹி, ஊருக்கு போகனும், அதான் அவ்வளவு சீக்கிரம்)/

    ஆகா... சரி சரி பத்திரமா போயிட்டீங்கல்ல?

    ReplyDelete
  9. அருமை அருட்பெருங்கோ...

    அத்தனையுத் தேன்
    ரசித்தேன்..
    மகிழ்ந்தேன்...

    ReplyDelete
  10. வாங்க கோபி,

    / அருமை அருட்பெருங்கோ...

    அத்தனையுத் தேன்
    ரசித்தேன்..
    மகிழ்ந்தேன்.../

    தேன் தடவிய கருத்துக்களுக்கு நன்றிகள் நண்பா....

    ReplyDelete
  11. உங்கள் கவிதைகளில் வார்த்தைகளைவிட உணர்வுகள் அதிகமாக இருப்பாதல், வாழ்த்த வார்த்தைகளை கூறாமல் உணர்ந்து விட்டு போக்குகிறேன், மன்னியுங்கள்….

    தினேஷ்

    ReplyDelete