Saturday, January 15, 2011

பொங்கல் கவிதை

[caption id="attachment_543" align="aligncenter" width="600" caption="பொங்கல் கவிதை"]பொங்கல் கவிதை[/caption]

ஆத்து தண்ணி ஆள இழுக்க வாய்க்காத்தண்ணி காலு வழுக்க
கேணிமேட்டுத் தொட்டியில குளிச்சுத்தான் பழகிப்புட்ட...
ஒம் மேலுபட்டத் தண்ணி தோப்பெல்லாம் பாயுது
தென்னங் கொலையெல்லாம் செவப்பாத்தான் காய்க்குது.

பாம்படக் காட்டுக்குள்ள மாடுமேச்ச மத்தியானம்
கரும்புக்கட்ட ஒங்காலக்கிழிக்க நீவச்ச ஒப்பாரி எங்கண்ணக்கிழிக்க
நெஞ்சுலயும் முதுவுலயும் ஒரேநேரம் ஒன்ன நாஞ்சொமந்தேன்..
பொழுதுசாய நாம்படுத்த கட்டிலுக்கு காலுமுறிஞ்சு றெக்கமொளச்சுது.

தெக்கியூர் தோப்புல திருட்டுமரம் ஏறுனபுள்ள
மாம்பழமெல்லாம் மடியிலகனக்க எறங்கமுடியாம நீ ஏங்கிநிக்க
எந்தோளுமேல காலவச்சி பத்திரமா எறங்கிப்புட்ட
எறங்குனவ ஏறாதபடிக்கு ஒன்னப் பொதச்சிருக்கு எந்நெஞ்சுக்குழி

கரும்பு வெட்டுறப்ப கரும்புத்தோவக் கையக்கிழிக்க
ஒஞ்சோட்டுப் பொண்ணுங்கெல்லாம் அப்பஞ்சட்டையில வந்திருக்க
சோளக்கொல்லப் போட்டிருந்த எஞ்சட்டைய நீ உடுத்தியிருக்க
பட்டுச்சட்ட போட்டுக்கிட்டு பயணம்போகுது பாவிபய மனசு

நெதமும் ஒன்னெனப்ப நெஞ்சாங்கேணி எறச்சி ஊத்த
நெல்லு வயலாட்டம் வெளஞ்சு நிக்குது ஆசப்பயிரு
அறுப்புக்கு நீவந்தா அறுப்புக்கூலி ஆயுசு முச்சூடும்..
தைபொறந்ததும் கண்ணுல அருவாளோட வயலுக்குள்ள எறங்கிப்புட்ட
பொங்கப்பான கணக்கா பொங்குதடி எம்மனசு.

***
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

5 comments:

  1. அருள் நீங்க மாதத்திற்கு ஒரு பதிவு போட்டாலும் அசத்தலாக இருக்கு. காணும் பொங்கல் அன்று உங்கள் பதிவை கண்டது மிக்க மகிழ்ச்சி

    //கரும்புக்கட்ட ஒங்காலக்கிழிக்க நீவச்ச ஒப்பாரி எங்கண்ணக்கிழிக்க//

    ம்.. வழக்கம் போல் வரிகள் அருமை

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமை...அருமை... என்னோட நெஞ்சை பிசைந்த வார்த்தைகளின் உபயோகம்...இயல்பு மாறாத யதார்த்தம் ததும்பும் காட்சிகள்...ஜாலமில்லாமலேயே...மாயம் காட்டுகிறது...கவிதை இல்லை இது எம் மக்களின் வாழ்க்கை...பாராட்டுகிறேன்...வார்த்தை வற்றிபோன மவுனத்திலும் கூட உங்களோடே பயணிக்கிறேன்.ஜல்லிக்கட்டை பற்றிய பதிவுகளை எதிர்பார்க்கிறேன். நன்றி...

    ReplyDelete
  3. வாழ்த்துக்கும் வார்த்தைக்கும் மிக்க நன்றிங்க சுல்தான்.

    ReplyDelete
  4. விரிவான கருத்துக்கு நன்றி கார்த்திகேயன். முயற்சி செய்யறேன்!

    ReplyDelete
  5. get pongal pantigai

    ReplyDelete