Wednesday, October 31, 2007

கணக்கம்பட்டியாரு கத - 2

நேத்தைக்கு சொன்னது இங்க

"இதோ பாருங்கோ… பொதுவாவே சித்திரை மாசம் அம்பாளுக்கு உகந்த நாள்… கும்பாபிஷேகத்துக்கு உகந்த நட்ஷத்திரம் வெள்ளிக்கிழமையிலயே வர்றதும் ரொம்ப விஷேஷமானது. வளர்பிறையும்கூட" வந்திருந்த ஐயன், கிட்டாஞாகிட்ட சொன்னதையே எல்லாருக்கும் கேக்குறாப்ல திரும்பி ஒருதரம் சத்தமா சொன்னாரு.

"அதில்ல சாமி… எங்க ஊருல சித்திர மாசம் ரெண்டாவது வெள்ளிக்கிழம ஏற்கனவே ஒரு கெட்டது நடந்து போச்சு…அதே நாள சாமி சொல்லவுந்தான்…" – இழுத்தாரு கிட்டாஞா.
அது வரைக்கும் பேசாம இருந்த கணக்கம்பட்டியாரு சித்திரையிலேயே மொத வெள்ளிக்கிழம நல்லாருக்குதான்னு பாக்கலாம்னு யோசனை சொன்னாரு.

சொல்லிக்கிட்டே பைக்குள்ள இருந்து சோழிய எடுத்து கைக்குள்ள வச்சி கண்ண மூடி நடுநெத்தில வச்சி என்னமோ முணுமுணுத்துட்டு, சோழிய கீழ விசுறுனாரு.
பனெண்டு சோழில பதினொன்னு மூடிருந்துது. ஒன்னு மட்டும் தெறந்திருந்தது.

'மொத மாசம் சித்திர தான் தாயே நாங்களும் பாக்குறோம்'னு சொல்லிகிட்டே அஞ்ச கழிச்சுட்டு ஏழு சோழிய மட்டும் கையில எடுத்தாரு.

'மாசத்த சொன்னவ கெழமையும் சொல்லும்மா' னு மறுபடியும் ஏழ விசுறுனாரு. அஞ்சு தெறந்திருந்துது. ரெண்டு மூடிருந்துது.

'அஞ்சாங்கெழமதான் ஆத்தாளும் சொல்றா' னு எல்லாரையும் பாத்து சொல்லிட்டு கடசியா நாலு சோழிய மட்டும் கையில எடுத்துகிட்டு
'எந்த வாரம்னும் ஆத்தாளையே கேட்ருவோம்'னு நாலையும் விசுறுனாரு. எல்லாரும் சோழி போன எடத்தையே எக்கிகிட்டு பாத்தாங்க.

அங்க ஒரு சோழி தெறந்திருந்துது. மூனு மூடிருந்துது. அவரு சொல்லாமயே எல்லாருக்கும் புரிஞ்சிருச்சு. எல்லாரும் ஐயனப் பாத்தாங்க. அவரு பஞ்சாங்கத்த தொறந்தவரு மொத வெள்ளிக்கிழம கரிநாளு அது ஒகந்த நாளு இல்லனு கைய விரிச்சிட்டாரு. பாத்தவங்களுக்கெல்லாம் மொகம் வாடிருச்சு. என்னப் பண்றதுன்னு யாருக்கும் புரியல.

கணக்கம்பட்டியாரே சொன்னாரு 'கரிநாளெல்லாம் சூரியங்கணக்குதான், நாம உதயத்துக்கு முன்னாடியே கும்பாசியேகத்த முடிச்சிரலாம்'னு அவரு சொல்லி வாய மூட்றதுக்குள்ள பழனி மூலையில கவுளி* சத்தம் கேட்டுச்சு. அந்தப் பக்கம் திரும்பி பாத்து கன்னத்துல போட்டுக்கிட்டாரு கிட்டாஞா. நல்ல சகுனம்னு எல்லாருக்கும் தெரியும் ஆனா ஐயன் அந்த தேதிக்கு ஒத்துக்கலயே. ரெண்டாவது வெள்ளின்னா தான் வர்றதாகவும் இல்லன்னா அவங்களயே கும்பாசியேகம் நடத்திக்க சொல்லிட்டுப் போயிட்டாரு. அவரு போனதுக்கப்புறம் கோயில்ல ரெண்டு பக்கமும் பேசறதுக்கு ஆளுங்க இருந்தாங்க.

'ஐயன் சொல்றபடியே அவனக் கூப்ட்டே பண்ணிரலாம்…சாமி சமாசாரமெல்லாம் அவனுக்குத் தெரியாததா நமக்குத் தெரிஞ்சிரப் போவுது?'

'ஏன் ஐயனக் கூப்பிட்டுதான் பண்ணனும்னு எதாவது கணக்கு இருக்குதா? தெக்கியூர் கோயில்ல நம்மாளுங்கதான பண்ணாங்க?'

'நாளு நல்லா இல்லைன்னா நாம என்னைய்யா பண்ண முடியும்? ரெண்டாவது வெள்ளிக்கிழமன்னு முடிவு பண்ணுவோம் அதுக்கு மேல ஆத்தா விட்ட வழி'

'அதே ஆத்தா விட்ட வழியில மொத வெள்ளிக்கிழம நடத்த வேண்டியதுதானா? கும்பாயிசேகம் நம்மூர்க்கோயிலுக்கு! இதுல நம்மூர்க் காரனவிட அசலூர்க்காரன் சொல்றத கேக்கனுமாங்கறேன்'

'யாருப்பா அது? கணக்கம்பட்டியான் நம்மூரா? அவனும் அசலூர்ல இருந்து பொழைக்க வந்தவந்தானப்பா' – பின்னாடி இருந்து எவனோ ஒருத்தன் இப்படி சொன்னதும் அதுக்கப்புறம் யாரும் பேசல.

அதுவரைக்கும் கணக்கம்பட்டியார அசலூர்க்காரனா யாரும் பாத்ததில்ல. அந்த சொல்லு வந்தபின்னாடி யாரும் எதுவும் பேசாம இருக்கவும் எல்லாருமே அப்பிடிதான் இவ்வளவுநாளா நெனைச்சிருக்காங்கன்னு கிட்டாஞாவுக்கு கோவம் வந்துருச்சு.

'எவண்டா அவன் கணக்கம்பட்டியான பொழைக்க வந்தவன்னு சொன்னது? நாளைக்கே ஒங்களுக்கு ஒரு நோக்காடுன்னா அவன் வீட்டுக்குதாண்டா வரணும் மசுராண்டிகளா. நீங்க என்னைக்கு வேணா கும்பாயிசேகம் நடத்திக்கோங்க..எங்கள ஆள விடுங்க' னு கோவமா கத்திட்டு கணக்கம்பட்டியானையும் இழுத்துகிட்டு போயிட்டாரு.

அதுக்கப்புறம் ஐயன் சொன்ன மாதிரியே சித்திர மாசம் ரெண்டாவது வெள்ளியே கும்பாயிசேகம் நடத்தறதுனு முடிவு பண்ணி வேலையெல்லாம் ரொம்ப வெரசா* நடந்துது. நாள் குறிச்சதுல இருந்து ஊரே கவுச்சி* தொடாம சுத்தபத்தமா இருந்துதுன்னுதான் சொல்லனும். வெசாலக்கெழம ராத்திரியே ஐயனுங்க வந்து அவங்க வேலைய செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. கும்பாயிசேகமும் நல்லபடியா முடிஞ்சுது. ஆனா செத்த நேரத்துலையே கோயிலுக்குள்ள ரைட்டுக்கு இழுத்திருந்த ஒயரு அறுந்து வுழுந்து ஈரத்துல நின்னவங்க பதினேழு பேரு கட்டையாப் போயிட்டாங்க. ராமக்கல்லாசுபத்திரிக்கு கொண்டுபோயும் இன்னும் மூனு உசுரு முடிஞ்சிருச்சு. மொத்தமா இருவது பேர காவு வாங்கிட்டா மாரியாயி. அதுக்கப்புறம் ஒரு வருசம் கழிச்சு கணக்கம்பட்டியாரு குறிச்சு கொடுத்த தேதியிலதான் மறுபடியும் கும்பாயிசேகம் நல்ல விதமா நடந்து முடிஞ்சது. அப்போதான் ஊராளுங்களுக்கெல்லாம் கணக்கம்பட்டியான் மகிம புரிஞ்சுதுங்கறது கிட்டாஞாவோட கணக்கு.

அந்த வருசம் இன்னொன்னும் நடந்துச்சு. கிட்டாஞா மவளுக்கு பொட்டபுள்ள பொறந்து மூனு மாசம் இருக்கும்போது ஓயாம ஒரு ராத்திரி முச்சூடும்* அழுதுகிட்டே இருந்துது. அவரு பொண்டாட்டியும், மவளும் வசம்ப தேச்சுப் பாக்குறாங்க, புள்ள மருந்த சங்குல ஊத்தி ஊத்தி பாக்குறாங்க. அது அழுவறதுக்கேப் பொறந்த மாதிரி அழுதுகிட்டே கெடந்துது. மூச்சு வாங்கி மூச்சு வாங்கி அழுததுல புள்ள பொழைக்குமாங்கறதே சந்தேகமாப்போச்சு. அப்புறம் கணக்கம்பட்டியாரு வந்துதான் துண்ணூறு மந்திரிச்சு அழுகறது நிப்பாட்டுனாரு. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் பொக்க வாய சிரிச்சுக்கிட்டு பால குடிச்சுட்டு ஒன்னுந்தெரியாத புள்ள கணக்கா அது தூங்கிருச்சு. அப்போ கிட்டாஞா பொண்டாட்டியும், மவளும் கணக்கம்பட்டி கால்லையே வுழுந்துட்டாங்க.அன்னைய பொழுதுக்கு அவருதான் அந்த குடும்பத்துக்கு தெய்வம்.

அப்பறம் ஒரு தடவ கிட்டாஞாவுக்கும் மேலுக்கு சொகப்படாமப் போயிருந்துது. கணக்கம்பட்டியாரு, பேத்திக்கு கொடுத்த துண்ணூறுல மீந்து போனத மடிச்சு வச்சிருந்தத எடுத்துப் பூசிப் பார்த்தாரு கிட்டாஞா. ஆனா அது ஒன்னும் கேக்கலயாம். அப்பறம் அவருகிட்டையே போயி அவரு கையால மந்திரிச்சதும் தான் சரியாப் போச்சாம். அப்பறந்தான் இந்தாளுக்கு ஒரு அருளு இருக்குனு கிட்டாஞா அசலூரு போனாலும் கணக்கம்பட்டியாரப் பத்தி பெருசா சொல்ல ஆரம்பிச்சதெல்லாம்.

அந்தக்கதையெல்லாம் டீக்கட ஆறுமுவம் கேட்டூட்டு பெருமூச்சு விட்டுகிட்டான். 'சாமி செல பேருக்கு நாக்குலையே குடியிருக்கும் போல'னு சொல்லிட்டு க்ளாசக் கழுவப் போயிட்டான்.

செம்பட்டையன் மவளுக்கு மாப்ள கெழக்க இருந்துதான் வருவான்னு சோழி போட்டு சொன்னது, காணாமப் போன கங்காணி மவன கண்டுபுடிச்சது, தண்ணியில்லாத மேட்டாங்காட்ல கெணறு தோண்ட எடம்பாத்து சொல்லி, அங்கன மூனு ஊத்து கண்டது னு கணக்கம்பட்டியாரப் பத்தி கிட்டாஞா பேச ஆரம்பிச்சா அன்னைய பொழுதுக்கும் நிப்பாட்ட மாட்டாரு. கணக்கம்பட்டி தன்னோட கூட்டாளிங்கறதுலையும் அவருக்கு ஒரு பெருமை.

பழைய கதையெல்லாம் பேசிட்டு டீக்கடைய வுட்டு எந்திரிச்சு சைக்கிள எடுக்கவும், அரச மர முக்குல ஒம்பதர மணி வண்டி வாரதுக்கும் சரியா இருந்துச்சு. யாராவது ஊர்க்காரங்க வர்றாங்களான்னு பாக்க சைக்கிளப் புடிச்சிக்கிட்டே நின்னுட்டாரு கிட்டாஞா. வந்த வண்டியில இருந்து எறங்குனது கணக்கம்பட்டியாரு மவதான். கையில பத்து மாச புள்ள.

(நாளைக்கு கதய முடிச்சிட்றேன்...)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

6 comments:

  1. ம்.. நல்லா போய்க்கிட்டுருக்கு ... கதை நாளைக்கே முடிக்கனுமா.. பாத்துக்கோங்க.

    ReplyDelete
  2. /ம்.. நல்லா போய்க்கிட்டுருக்கு ... கதை நாளைக்கே முடிக்கனுமா.. பாத்துக்கோங்க./

    நீங்க கேட்டீங்க... எனக்கும் நேத்து ஆணிப்புடுங்க ஆணிப்பேட்டைக்கே கூட்டிட்டுப் போய்ட்டாங்க!!! இன்னைக்குதான் முடிக்கிறேன் :)

    ReplyDelete
  3. ரெண்டு பாகத்தையும் படிச்சிட்டேன் அருள்...நல்லாயிருக்கு ;))

    கிராமத்து நடை அட்டகாசம் ;)

    ReplyDelete
  4. elei makkaa... engorla kooda kitta thatta ipdithaan pesuvaava... aana ithu marutha pakka paasha thaane??

    ReplyDelete
  5. /ரெண்டு பாகத்தையும் படிச்சிட்டேன் அருள்...நல்லாயிருக்கு ;))

    கிராமத்து நடை அட்டகாசம் ;)/

    நன்றி கோபி!!! கிராமத்து நடை எல்லாம் கேள்வி ஞானம் தான்...

    ReplyDelete
  6. /elei makkaa... engorla kooda kitta thatta ipdithaan pesuvaava... aana ithu marutha pakka paasha thaane??/

    இது எல்லாம் கலந்து வரும்யா :) கரூர் கொஞ்சம் தமிழ்நாடு மத்தியிலதான இருக்கு ;-)

    ReplyDelete