Friday, September 23, 2011

தேவதை வம்சம் நீயோ

அக்கா மகள் ஜனனிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்து காணொளி பதிவாக...
[flashvideo filename=video/janani/Janani2011_conv.flv /]

Thursday, August 04, 2011

கண்ணாடி(ய) கவிதை

*

உலக அழகியின் புகைப்படத்தை
உன் வீட்டில்
கண்ணாடி என்பீர்களா?

*

உனதழகை
நீ பார்க்கும்பொழுது
பிரதிபலிக்கிற கண்ணாடி
நீ பார்க்காதபொழுது
உள்வாங்கிக் கொள்கிறது தெரியுமா?

*

உன் வீட்டுக் கண்ணாடிக்கு
தினமும் உனதழகை ரசிக்கும்
அதிர்ஷ்டம் தந்த மச்சங்களாய் மின்னுகின்றன
நீ ஒட்டி வைத்த ஸ்டிக்கர் பொட்டுகள்.

*

நீ வரைந்த கண்ணாடி ஓவியங்களின்
அழகை விசாரிக்கும்பொழுது
உன் 'கண்'ணாடியதை எப்படி ஓவியமாக்க?

*

உன்னை அழகாய்க் காட்டியதற்காக
நீ முத்தமிட்ட கணத்திலிருந்து
தன்னை அழகாய்க் காட்டிக்கொள்ள தவிக்கிறது
உன் வீட்டுக் கண்ணாடி.

Monday, August 01, 2011

மித்ரா மை ஃப்ரெண்ட்

ஓராண்டுக்கு முன்னர் அண்ணன் மகள் மித்ராவின் பேச்சு :

*

மித்ரா : அவளுடைய சுடிதாரை எடுத்துக்கொண்டு வந்து , அம்மா இதோட ஃப்ரெண்ட் எங்கம்மா?
அண்ணி : ஒன்றும் புரியாமல் விழிக்க..
மித்ரா : எங்கம்மா இதோட ஃப்ரெண்ட்?
அண்ணி : ட்ரெசுக்கு ஏது பாப்பா ஃப்ரெண்ட்?
மித்ரா : இந்தா இங்க இருக்கு. என்றபடி அந்த சுடிதாரின் துப்பட்டாவை எடுத்துக்கொண்டு ஓடுகிறாள்.

(சுடிதாரின் ஃப்ரெண்ட் அதன் துப்பட்டா என்பது உங்களுக்கு தெரியுமா?)

*

மொட்டைமாடியில் மித்ராவுக்கு சோறு ஊட்டுகையில்..

அண்ணி : அங்கப் பாரு பாப்பா.. அதான் அப்பா காக்கா.. அது அம்மா காக்கா..
மித்ரா : அது?
அண்ணி : அதுதான் பாப்பா காக்கா..
மித்ரா : எங்கம்மா சித்தப்பா காக்கா?

(காக்காவில் சித்தப்பாவைத் தேடுகிறாளா? சித்தப்பாவை காக்கா என்கிறாளா?)

*

ஜனனியின் அத்தை வீட்டில்..

ஜனனியின் அத்தை : மித்ரா பரவால்ல அமைதியா இருக்கா. ஜனனியா இருந்தா இந்நேரம் என்ன சட்னியாக்கியிருப்பா..
மித்ரா : ஜனனி உங்கள சட்னியாக்கினா, நான் உங்கள தோசையாக்கிடுவேன்!

(என்னா வில்லத்தனம்?)

*

வீட்டிலிருந்து கடற்கரைக்கு கிளம்பும்போது அண்ணா, அண்ணி, மித்ரா மூவரும் ஒரு பைக்கில் கிளம்ப, நான் தனியே ஒரு பைக்கில் கிளம்ப, மித்ரா சொல்லிச் சிரிக்கிறாள் : சித்தப்பா உங்க பின்னாடி உட்கார ஆள் இல்லையே..

( நான் என்ன சொல்ல? :) )

*

நான் US கிளம்பும்போது சமையல் பொருட்கள், பாத்திரங்களை அடுக்கிக்கொண்டு வந்ததைப் பார்த்த மித்ரா என்ன நினைத்துக்கொண்டாளோ, பக்கத்து வீட்டுக்காரர் ‘உங்க சித்தப்பா எதுக்கு அமெரிக்கா போயிருக்காங்க?’ என்று கேட்டபோது சொல்லியிருக்கிறாள் : ‘எங்க சித்தப்பா சமையல் வேல செய்ய போயிருக்காங்க!’

( அவ சொன்னதும் பாதி உண்மைதான் :))

Thursday, July 28, 2011

எப்பொழுது கவிதை வாசிக்கத் துவங்குகிறாய்

*

எனது முத்தங்கள்
ஆடைகளற்று நாணுகின்றன.
உனது முத்தங்களை அணிவித்தாலென்ன?

*

இறுதி அத்தியாயத்தை முதலில் வாசித்துவிட்டு
பிறகு நாவலைத் துவங்கும் வாசகனைப்போல
இறுதிவரியில் பொதிந்திருக்கும்
உனது முத்தங்களை அள்ளிய பிறகே
உனது கடிதங்களை வாசிக்கத் துவங்குகிறேன்.

*

நான்
நனைந்தபடி ரசிக்கும் பெருமழை
நீ.

*

செடிக்கு உரமாகட்டுமென
காலையில் சூடியப் பூக்களை
செடிக்கருகிலேயே உதிர்க்கிறாய்.
வாடிய பூக்களில் வீசும் உனது கூந்தல்மணத்தால்
அந்தியிலேயே மலர்கின்றன புதிய மொட்டுகள்.

*

உலகின் பேரழகான கவிதை
உலகின் பேரழகான வாசகிக்கென
எழுதப்படாமல் இருக்கிறது.
எப்பொழுது கவிதை வாசிக்கத் துவங்குகிறாய்?

*

Wednesday, June 08, 2011

பெண்ணழகி பெரும்பேரழகி



மேலே உள்ள தெலுங்குப் பாடலுக்கான எனது தமிழ் வரிகள் கீழே :

பெண்ணழகி பெரும்பேரழகி
ஐம் பொன்னழகி கருங் கண்ணழகி
என்னழகா என் பேரழகா
பூ சொல்லழகா அது செய்யழகா

நீயே காதலி நானே சாரதி
காதல் பயணம் பழகு
பாதை இருக்கு பாதம் இருக்கு
ஏனோ முளைக்கும் சிறகு

விலகி பழகி நழுவி தழுவி
விரலும் விரலும் கோர்த்தால் சித்தம்
இதழும் இதழும் கோர்த்தால் முத்தம்

ச ச ரி ரி க க பதநி
ச ச ரி ரி க க பதநி

நீ நடக்கும் சாலையெல்லாம்
பூச்செடிகள் பூத்துக் குலுங்கும்
நீ பேசும் வார்த்தையெல்லாம்
தேனீக்கள் தேடித் திரியும்
நீ சிரிக்கும் சிரிப்பையெல்லாம்
விண்மீன்கள் விலைக்கு வாங்கும்
நீ சொல்லும் கவிதையெல்லாம்
என்காதல் கொள்ளை கொள்ளும்
இரவின் மடியில் இதயம் உறங்க
இமைகள் விசிறி விசிறும்
கனவின் தயவில் இமைகள் உறங்க
இசையாய்த் துடிக்கும் இதயம்

இதயம் இமைக்கும் இமைகள் துடிக்கும்
கண்ணும் கண்ணும் கலந்தது கொஞ்சம்
நெஞ்சும் நெஞ்சும் கலந்தது மிஞ்சும்

ச ச ரி ரி க க பதநி
ச ச ரி ரி க க பதநி

கோவிலுக்கு நீவரும் பொழுது
உனைக்கண்டு கோபுரம் குனியும்
காதலிக்கும் உயிர்கள் எல்லாம்
நீவந்தால் உயிலை எழுதும்
மாமழையில் நனையும் பொழுது
உனைத்தொட்டு மழையும் குளிக்கும்
நள்ளிரவைத் தாண்டும் விடியல்
நீப்பேச உறக்கம் உறங்கும்
உறங்கும் வரையில் மயங்கும் நிலையில்
இமையில் இருக்கும் கனவு
விழிக்கும் வரையில் விழியின் திரையில்
தனியாய்த் தவிக்கும் நனவு

இரவும் பகலும் கனவும் நனவும்
நீயும் நானும் பேசியது காதல்
நீயும் நானும் பேசியது காதல்

ச ச ரி ரி க க பதநி
ச ச ரி ரி க க பதநி