Monday, November 13, 2006

காதல் வாங்கினால் முத்தம் இலவசம்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


(இது தேன்கூடு போட்டிக்கு நான் அனுப்பும் முதல் க(வி)தை!)


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எதிர் வீடு காலியான +2 விடுமுறையில்
இதயத்துக்குள் குடி புகுந்தது ஒரு கனவு:
“இரண்டிலும் ஒரு தேவதை குடிவருவாளா?”

உறங்கிக் கொண்டிருக்கும்போதே உன் கனவு பலித்ததுண்டா?
நான் உறங்கிக்கொண்டிருந்த ஒரு பின்னிரவில்தான்
உன் குடும்பம் எதிர்வீடு புகுந்தது!

பழகிய ஒரே வாரத்தில்
என் வீட்டு சமையலறை வரை வருகிறாய்!
எப்போதும் உன்வீட்டு வாசல்படி தாண்டியதில்லை நான்!

என் அம்மாவிடம் கதையளக்கிறாய்…
என் அப்பாவிடம் பேசுகிறாய்…
என் தங்கையிடம் விளையாடுகிறாய்…
என்னை மட்டும் பார்க்கிறாய்!

அடுத்த வாரமே கலந்தாய்வு*க்கு ஒன்றாய்ப் பயணிக்கிறோம் !
மறு வாரமே ஒரே கல்லூரியில் சேர்கிறோம்!!

ஒருமுறை தானே இயற்கை வரம் தரும்…
வாரா வாராம் தருமா என்ன?

அந்த ஒருமாதமும்
கோடை விடுமுறையல்ல…
கொடை விடுமுறை!

என் வீட்டில் எல்லோரிடமும் பேசுகிற நீ!
உன் வீட்டில் யாரிடமும் பேசாத நான்!
நம்முடன் பேசியும் பேசாமலும் நாம்!

முதலாமாண்டு எதிர்வீட்டுப்பெண்ணாய்…
இரண்டாமாண்டு கல்லூரித்தோழியாய்…
மூன்றாமாண்டு நலம்விரும்பியாய்…
என் இதயவாசல்கள் ஒவ்வொன்றாய்த் திறந்து உள்நுழைகிறாய்!

மூன்றாண்டுகளாக…
எதையெல்லாமோப் பேசி தீர்த்த நாம்
இறுதியாண்டு முழுதும் காதலைப் பற்றியே பேசியதன்
காரணம் அப்போது தெரியவில்லை!

காதலைப் பற்றிய உன் எண்ணங்களை
முழுதாய் அறிந்து கொண்டபோதும்
உன்னை மனைவியாக அடையப் போகிறவன்
கொடுத்து வைத்தவன் என்றே
நினைத்துக் கொண்டது என் மனது!

பின்னொரு நாள்
என் கவிதைகளை வாசித்து விட்டு
என்னைக் கணவனாய் அடையப் போகிறவள்
கொடுத்து வைத்தவள் என்று நீ சொல்ல
மெல்லிய சலனம் எனக்குள்!

அதன்பிறகு
என் மீது நீ அக்கறை கொள்ளும்
ஒவ்வொரு நிகழ்விலும்
கொஞ்சம் கொஞ்சமாய்
உடைந்து கொண்டிருந்தது
உன் மீது நான் கொண்டிருப்பது
நட்புதான் என்ற என் நம்பிக்கை!

எப்போது, எப்படி, எதனால்
என்கிற கேள்விக்கெல்லாம்
பதில் சொல்லாமல்
நம் நட்புக்குள்ளே
சத்தமில்லாமல் மெதுவாய்
நுழைந்து கொண்டிருந்தது
என் காதல்!

ஒருநாள் பழைய நண்பனிடம்
உன்னை அறிமுகப் படுத்துகையில்
உதடு சொன்னது – “எதிர் வீட்டுப் பெண்”
உள்ளம் சொன்னதோ – “எங்க வீட்டுப் பெண்”

மின்சாரம் இல்லாத அந்தப் பௌர்ணமி இரவில்
மொட்டை மாடியில் கூடியிருக்கிறது குடும்பம்…
என்னிடம் தனியாக கேட்கிறாய்…

“ஒரு கவிதை சொல்லு”

“எதைப் பற்றி?”

“ம்ம்ம்… என்னைப் பற்றி?”

“சுடிதாரிலும் வருகிறாய்…
தாவணியிலும் வருகிறாய்…
நீ புதுக் கவிதையா? மரபுக் கவிதையா?”

“ம்ம்ம்… காதல் கவிதை!”

மின்சாரம் வந்தது!
நீ மறைந்து போனாய்…

எனக்கேத் தெரியாமல் நானுன்னைக் காதலிக்க…
உனக்கேத் தெரியாமல் நீயென்னைக் காதலிக்க…
காதலுக்கு மட்டுந்தான் தெரிந்திருக்கும்,
அப்போது நாம் காதலித்தது!

அடுத்துவந்த நாட்களில்
வார்த்தைகளைத் தாண்டி
பார்வைகள் பேசிக்கொண்டதை
வார்த்தையில் வடிக்க முடியுமா?

எல்லோர்க்கும் முன்பு பேசிக்கொண்டிருந்தவள்,
யாருக்கும் தெரியாமல் ரகசியமாய்ப் பேசுகிறாய்!

பேசுவதே பாதிதான்…அதிலும் பாதியை
பார்வையில் சொல்லிவிட்டுப் போனால்
எப்படிப் புரியும்?

பன்மொழி வித்தகனாக யாராலும் முடியும்!
பெ(க)ண்மொழி வித்தகனாக யாரால் முடியும்?

காதல்
சொல்லப்படுவதும் இல்லை!
கேட்கப்படுவதும் இல்லை!
அது உணரப்படுவது!
உணர்ந்ததும் பாடாய்ப் படுத்துவது!

நம் காதலை நாம் உணர்ந்தபிறகும்
யார் முதலில் சொல்வதென நம்மிடையேப் போட்டி!
நடுவராய் இருக்கிறது நம் காதல்!

பெண்கள் காதலைச் சொல்லும்போது
வெட்கம் பிடுங்கித் தின்னுமாம்…
ஆண்கள் காதலைச் சொல்லும்போது
பயம் வந்து கொல்லுமாம்…

உன் வெட்கத்துக்காக நான் காத்திருக்க…
என் தைரியத்தை நீ பரிசோதிக்க…
தவித்துக் கொண்டிருந்தது நம் காதல்!

வென்றாய் நீ!
சொல்லிவிடத் துணிந்து விட்டேன் நான்!
எப்படி? எப்படி?? எப்படி???

“சொல்லுவது எளிது, சொன்னதை செய்வது கடினம்!” **
காமத்துப்பால் எழுதிய வள்ளுவனா இப்படி சொன்னது?
காதல் மட்டும் இங்கே முரண்படுகிறது!

அதே மொட்டை மாடி…
மாலை நேரம்…
நீ…நான்…தனிமை…

“உங்கிட்ட ஒன்னு சொல்லனும்; ஒன்னு கேட்கனும்”

“சொல்லு”

“நான் ஒரு பொண்ணக் காதலிக்கிறேன்”

“கேளு”

“அ..து.. நீ.. தா..னா..ன்..னு.. தெ..ரி..ய..னு..ம்…”

திக்..

திக்..

திக்..

“ம்ம்ம்… இது எனக்கு முன்னாடியேத் தெரியுண்டா லூசு!”

சொல்லிவிட்டு வெட்கப் பட்டாய் நீ!
தோற்கவில்லை நான்!

“காதலுக்குப் பரிசெல்லாம் இல்லையா?”

“என்ன வேணும்?”

“ஒரு முத்தம்”

சிரித்துக் கொண்டே என் உள்ளங்கை எடுக்கிறாய்…

“நீ
உதட்டில் கொடுப்பது
மட்டும் தானடி முத்தம்…
மற்றதெல்லாம் வெறும் சத்தம்!”

சொல்லிவிட்டு, புன்னகையோடு நான் பார்க்க ,
“நீ ரொம்பப் பேசற.. உனக்குக் கையிலக் கூடக் கிடையாது.. இந்தா இப்படியே வாங்கிக்க” என்று சொல்லி

“உன் உள்ளங்கையில் முத்தமிட்டு
உதடு குவித்து ஊதி விட்டாய்…
காற்றிலெல்லாம் கலந்துபோனது,
உன் காதல் வாசம்!”

“என்னிடம் காதல் வாங்கினால்
முத்தம் இலவசம்” என்றாய்…
“என்னிடம் காதல் வாங்கினால்
மொத்தமாய் நானே இலவசம்” என்றேன்…

தனக்கொரு க(வி)தை
இலவசமாய்க் கிடைத்த மகிழ்ச்சியில்
நம்மையேப் பார்த்துக் கொண்டிருந்தது…
நம் காதல்!


அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

_______________________________________
*கலந்தாய்வு – counseling
**சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.

54 comments:

  1. //என்னிடம் காதல் வாங்கினால்
    முத்தம் இலவசம்” என்றாய்…
    “என்னிடம் காதல் வாங்கினால்
    மொத்தமாய் நானே இலவசம்” என்றேன்…//

    ஆக மொத்தம் இரண்டுபேராலும் எங்களுக்கு அழகான(கொஞ்சம் ரொமான்ஸ் ஜாஸ்தியான:)) கவிதை இலவசம்!! காதல் வாழ்க!
    ஷைலஜா

    ReplyDelete
  2. //ஒருமுறை தானே இயற்கை வரம் தரும்…
    வாரா வாராம் தருமா என்ன?//

    அருட்பெருங்கோ! இந்தமாதிரி ஒரு வரி மட்டும் நல்லா இருக்குன்னு சொல்ல முடியலைங்க. எல்லா வரிகளுமே நல்லா இருக்கு. கவிதை படிச்ச பின்னாடி ஒரு நிமிஷமாவது ஒன்னும் தோணாம இருந்தா அந்தக் கவிதை வெற்றி அடைஞ்சிருச்சின்னு சொல்லுவாங்க. அதுல நீங்களும் ஜெயிச்சுட்டீங்க

    ReplyDelete
  3. ரொம்பவும் அருமையான கவிக்கதை!

    ReplyDelete
  4. hi arut,
    Kavithai Super....
    keep it up..
    with luv
    ganesh

    ReplyDelete
  5. கலக்கல் அருள்...

    “சுடிதாரிலும் வருகிறாய்…
    தாவணியிலும் வருகிறாய்…
    நீ புதுக் கவிதையா? மரபுக் கவிதையா?”

    “ம்ம்ம்… காதல் கவிதை!”

    இவ்வரிகள் போதும்...அருள்...வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. புதுக்கவிதையா - மரபுக்கவிதையா மேட்டரை எங்கேயா புடிச்ச...தூள்...டக்கர்..

    ReplyDelete
  7. Vaashthukkal vetri pera ;)

    ReplyDelete
  8. "பெண்கள் காதலைச் சொல்லும்போது
    வெட்கம் பிடுங்கித் தின்னுமாம்…
    ஆண்கள் காதலைச் சொல்லும்போது
    பயம் வந்து கொல்லுமாம்…

    உன் வெட்கத்துக்காக நான் காத்திருக்க…
    என் தைரியத்தை நீ பரிசோதிக்க…
    தவித்துக் கொண்டிருந்தது நம் காதல்!"...

    ம்... காதல் தவிப்பிலும் ஓர் சுகம் உண்டு இல்லையா? அழகான காதல் கவிதை ஒன்றை நானும் ரசித்துச் செல்கின்றேன்.

    வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. இது பா.விஜய் மற்றும் தபு சங்கர் இருவரின் கவிதைகளின் தொகுப்பு..என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  10. //காதல்
    சொல்லப்படுவதும் இல்லை!
    கேட்கப்படுவதும் இல்லை!
    அது உணரப்படுவது!
    உணர்ந்ததும் பாடாய்ப் படுத்துவது!//

    அழகு அழகு !!!

    //உங்கிட்ட ஒன்னு சொல்லனும்; ஒன்னு கேட்கனும்”
    “சொல்லு”
    “நான் ஒரு பொண்ணக் காதலிக்கிறேன்”
    “கேளு”
    “அ..து.. நீ.. தா..னா..ன்..னு.. தெ..ரி..ய..னு..ம்…”//

    மிக அருமை அருள் !!! :))

    இதயத்தில் முத்தமிடுகிறது வரிகள்!!!

    ReplyDelete
  11. :-))))) நல்லாயிருக்குது கவிதைக் கதையும் அதிலுள்ள காதலும். ரசித்தேன்.

    காப்பியும் டீயும் மறுத்துப் பாலைப் பருகுவதற்கு அருட்பெருங்கோவிற்கான காரணம் இதுதானா? ;-) அன்பால் முத்தம் தரப் பால் வேண்டும்தானே!

    ReplyDelete
  12. அருள் ... அசத்தல் கவிதை..மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் ரசனையான கவிதை வரிகள்.

    வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. கொன்னுட்டீங்க போங்க..... கலக்கலான கவிதை......காதல் காதல் காதல்... மனசே என்னவோ போல ஆயிடுச்சு......

    ReplyDelete
  14. அருமையாய் இருக்கிறது அனைத்து வரிகளும் .....
    வெற்றிக்கு வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete
  15. ஏம்ப்பா! வார்த்தைகளை நீர் கோர்த்தீரா! அல்லது அவை என்னையும் சேர்த்துக்கொள் என்று வந்து விழுந்தனவா!
    ப்ச்..மனதை பிசைந்துவிட்டீரையா!
    "மிக அருமை" என்பது மிகக்குறைந்த மதிப்பீடு என்று நினைக்கிறேன்.. வேறென்ன சொல்ல...!
    -கவிப்ரியன்.

    ReplyDelete
  16. //எல்லோர்க்கும் முன்பு பேசிக்கொண்டிருந்தவள்,
    யாருக்கும் தெரியாமல் ரகசியமாய்ப் பேசுகிறாய்!//
    //உன்னை அறிமுகப் படுத்துகையில்
    உதடு சொன்னது – “எதிர் வீட்டுப் பெண்” உள்ளம் சொன்னதோ – “எங்க வீட்டுப் பெண்”//

    இப்படி ஏதாவது இரண்டு வரிகளை மட்டும் எடுத்து, 'மிக அற்புதமான வரிகள்' என்று சொல்ல ஆசைதான்.. ஆனால் அது மற்ற வரிகளுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம்..

    எல்லா வார்த்தைகளிலும் காதல் வழிகிறது.. அழகு க(வி)தை..

    வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. /ஆக மொத்தம் இரண்டுபேராலும் எங்களுக்கு அழகான(கொஞ்சம் ரொமான்ஸ் ஜாஸ்தியான:)) கவிதை இலவசம்!! காதல் வாழ்க!
    ஷைலஜா /

    காதல் வாழ்க வாழ்க :))

    தங்களின் வாழ்த்துக்கும், முதல் பின்னூட்டத்திற்கும் நன்றிகள் ஷைலஜா...

    ReplyDelete
  18. /அருட்பெருங்கோ! இந்தமாதிரி ஒரு வரி மட்டும் நல்லா இருக்குன்னு சொல்ல முடியலைங்க. எல்லா வரிகளுமே நல்லா இருக்கு. கவிதை படிச்ச பின்னாடி ஒரு நிமிஷமாவது ஒன்னும் தோணாம இருந்தா அந்தக் கவிதை வெற்றி அடைஞ்சிருச்சின்னு சொல்லுவாங்க. அதுல நீங்களும் ஜெயிச்சுட்டீங்க /

    இளா, உங்களோட ஊக்கம் உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சியா இருக்கு... இன்னும் இதே மாதிரியான கவிதைகளையேத் தொடர்ந்து எழுத ஆசைப்படுகிறேன்...

    தங்களுடையப் பாராட்டுக்கும் நன்றிகள்!!!

    ReplyDelete
  19. /வாசிக்க வாசிக்க, மனதிற்குள் காதல் உணர்வுகள் புகை போலப் படர்கிறது.. வாழ்த்துக்கள் /

    அப்படியா? புகை உடம்புக்குப் பகைனு சொல்லுவாங்களே!!!

    ஆனா இந்தப் புகை மனசுக்கு இதமானது(னும் சொல்றாங்க)... என்னமோப் போங்க :)

    வாழ்த்துக்கு நன்றி திருமால்!!!

    ReplyDelete
  20. /ரொம்பவும் அருமையான கவிக்கதை!/

    நன்றி வேந்தன்!!!

    ReplyDelete
  21. /hi arut,
    Kavithai Super....
    keep it up..
    with luv
    ganesh /

    கவிதையை ரசித்ததற்கும் கருத்து சொன்னதற்கும் நன்றி கணேஷ்!!!

    ReplyDelete
  22. //கலக்கல் அருள்...

    “சுடிதாரிலும் வருகிறாய்…
    தாவணியிலும் வருகிறாய்…
    நீ புதுக் கவிதையா? மரபுக் கவிதையா?”

    “ம்ம்ம்… காதல் கவிதை!”

    இவ்வரிகள் போதும்...அருள்...வாழ்த்துக்கள். //

    வாழ்த்துக்களுக்கு நன்றி ப்ரியன்...

    தங்கள் பயணம் எப்படிப் போகிறது? ;)

    ReplyDelete
  23. /புதுக்கவிதையா - மரபுக்கவிதையா மேட்டரை எங்கேயா புடிச்ச...தூள்...டக்கர்.. /

    இதெல்லாம் புடிக்கிற மேட்டர் இல்ல மனசப் படிக்கிற மேட்டர் அப்படின்னு எனக்குள்ள ஒருத்தன் சத்தம் போட்றானே என்னப் பண்ணலாம் ரவி?

    டக்கர் என்றால் என்ன? ;)
    (ஜீ.ரா உதவி தேவை!! )

    ReplyDelete
  24. /எல்லா வரிகளுமே நல்லா இருக்கு
    அழகான கவிதை வாழ்த்துக்கள் /

    நன்றி காண்டீபன்...
    உங்கள் கவிதைகளும் கூடத்தான்!!!

    ReplyDelete
  25. /Vaashthukkal vetri pera ;) /

    வாசிப்புக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி ஹனீஃப்...

    ReplyDelete
  26. /ம்... காதல் தவிப்பிலும் ஓர் சுகம் உண்டு இல்லையா? அழகான காதல் கவிதை ஒன்றை நானும் ரசித்துச் செல்கின்றேன்.

    வெற்றி பெற என் வாழ்த்துக்கள். /

    ம்ம்ம்... உண்டு என்றுதான் நினைக்கிறேன்!!!

    வாழ்த்துக்களுக்கு நன்றி சத்தியா!!!

    ReplyDelete
  27. /இது பா.விஜய் மற்றும் தபு சங்கர் இருவரின் கவிதைகளின் தொகுப்பு..என்று நினைக்கிறேன். /

    என்ன அனானி, வாலி, வைரமுத்து எல்லாம் விட்டுட்டீங்க? :)

    என்னமோப்பா எனக்குத் தோண்றத எழுதறேன்.. யாருது மாதிரி இருந்தா என்ன? சரி தான?

    ReplyDelete
  28. /மிக அருமை அருள் !!! :))

    இதயத்தில் முத்தமிடுகிறது வரிகள்!!! /

    காதல் வரிகள் அல்லவா? நவீனுக்கு அப்படித்தான் இருக்கும்! ;)

    வாழ்த்தியமைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  29. /:-))))) நல்லாயிருக்குது கவிதைக் கதையும் அதிலுள்ள காதலும். ரசித்தேன்./

    நீங்கள் ரசிக்கும் படி எழுதியதில் எனக்கும் மகிழ்ச்சியே!

    /காப்பியும் டீயும் மறுத்துப் பாலைப் பருகுவதற்கு அருட்பெருங்கோவிற்கான காரணம் இதுதானா? ;-) அன்பால் முத்தம் தரப் பால் வேண்டும்தானே! /

    பண்பால் காதல் பெற என்றும்கூட இருக்கலாமே!!!

    ReplyDelete
  30. /அருள் ... அசத்தல் கவிதை..மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் ரசனையான கவிதை வரிகள்.

    வெற்றி பெற என் வாழ்த்துக்கள். /

    பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி தேவ்!!

    ReplyDelete
  31. /கொன்னுட்டீங்க போங்க..... கலக்கலான கவிதை......காதல் காதல் காதல்... மனசே என்னவோ போல ஆயிடுச்சு...... /

    ஐயோ நான் சோகமா எல்லாம் எதுவும் முடிக்கலையே!! சந்தோசமா தான முடிச்சிருக்கேன்!!!

    கதையிலேயாவது சேர்த்து வைப்போமே :)

    ReplyDelete
  32. /அருமையாய் இருக்கிறது அனைத்து வரிகளும் .....
    வெற்றிக்கு வாழ்த்துக்கள் ;) /

    தனசேகர், நன்றிகள் பல...

    ReplyDelete
  33. அசத்தலான வரிகள்,
    அருமையான கவிதை!

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  34. /ஏம்ப்பா! வார்த்தைகளை நீர் கோர்த்தீரா! அல்லது அவை என்னையும் சேர்த்துக்கொள் என்று வந்து விழுந்தனவா!
    ப்ச்..மனதை பிசைந்துவிட்டீரையா!
    "மிக அருமை" என்பது மிகக்குறைந்த மதிப்பீடு என்று நினைக்கிறேன்.. வேறென்ன சொல்ல...!
    -கவிப்ரியன்.
    /

    கவிப்ரியன் , ரொம்பவே அதிகமா புகழ்றீங்கன்னு நெனைக்கிறேன்...
    மனதில் விழுந்த வார்த்தைகளை பதிவில் கோர்த்திருக்கிறேன் அவ்வளவே..

    உங்கள் மதிப்பீட்டுக்கு மிகவும் நன்றி!!!

    ReplyDelete
  35. //

    “உன் உள்ளங்கையில் முத்தமிட்டு
    உதடு குவித்து ஊதி விட்டாய்…
    காற்றிலெல்லாம் கலந்துபோனது,
    உன் காதல் வாசம்!”

    //

    இது ரொம்ப நல்லாயிருக்கு

    என்றும் அன்பகலா
    மரவண்டு

    ReplyDelete
  36. /இப்படி ஏதாவது இரண்டு வரிகளை மட்டும் எடுத்து, 'மிக அற்புதமான வரிகள்' என்று சொல்ல ஆசைதான்.. ஆனால் அது மற்ற வரிகளுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம்..

    எல்லா வார்த்தைகளிலும் காதல் வழிகிறது.. அழகு க(வி)தை..

    வெற்றி பெற நல்வாழ்த்துக்கள். /

    தாரிணி, விரிவான பாராட்டுக்கு மிக்க நன்றிகள்!!!

    காதல் போல காதல் க(வி)தைகளும் எப்போதுமே அழகுதான்!!!

    ReplyDelete
  37. /அசத்தலான வரிகள்,
    அருமையான கவிதை!

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்./

    திவ்யா, பாராட்டு + வாழ்த்து இரண்டுக்குமே நன்றிகள்!!!

    ReplyDelete
  38. //இது ரொம்ப நல்லாயிருக்கு

    என்றும் அன்பகலா
    மரவண்டு//

    நீங்க காதல் வாசம் நுகர்ந்தவரோ? இந்த வரிகளை(யும்?) ரசிச்சிருக்கீங்களே! :)

    நன்றி கணேஷ்.

    ReplyDelete
  39. /ஓட்டு போட்டாச்... /

    வாங்க பாலாஜி...
    வாக்களிச்சத தேர்தல் முடியற வர வெளிய சொல்லக்கூடாதாம் :)

    இருந்தாலும் நானும் நன்றி சொல்லியாச்சே!!! :)

    ReplyDelete
  40. ஓட்டு போட்டாச்சு...

    ReplyDelete
  41. போட்டாச்சு...போட்டாச்சு....

    ReplyDelete
  42. தேன்கூடு போட்டியில் என்னுடைய இந்தப் படைப்பு(:))க்கு வாக்களித்த, மற்றும் என்னை ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்!!!!

    ReplyDelete
  43. நீளமான கவிதையா இருந்தாலும் ஒரே விறுவிறுப்பாப் போகுது. உணர்ந்து
    எழுதித் தள்ளியிருக்கீங்க போல.. நல்லா இருந்தது.

    இதே பின்னூட்டம் தவறுதலாக, "காதல் ரயில்" கவிதையிலும் விழுந்துவிட்டது, ஆனால் அது இந்தக் கவிதைக்கு உரியது தான் என்று தெரியப்படுத்திக்கொள்கிறேன் :-)

    ReplyDelete
  44. நன்றி சேதுக்கரசி!!!

    ReplyDelete
  45. //நீ
    உதட்டில் கொடுப்பது
    மட்டும் தானடி முத்தம்…
    மற்றதெல்லாம் வெறும் சத்தம்//

    //என்னிடம் காதல் வாங்கினால்
    முத்தம் இலவசம்” என்றாய்…
    “என்னிடம் காதல் வாங்கினால்
    மொத்தமாய் நானே இலவசம்” என்றேன்…//

    அற்புதம்!!! :)

    ReplyDelete
  46. கவிதை மிக அருமை..தங்கள் வலைப்பதிவு பற்றிச் சில தினங்கள் முன்னர் தான் அறிந்தேன்..அனைத்துப் பதிவுகளையும் ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன்..எல்லாம் மிக நன்றாக உள்ளன..வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  47. வாங்க CVR,

    ///நீ
    உதட்டில் கொடுப்பது
    மட்டும் தானடி முத்தம்…
    மற்றதெல்லாம் வெறும் சத்தம்//

    //என்னிடம் காதல் வாங்கினால்
    முத்தம் இலவசம்” என்றாய்…
    “என்னிடம் காதல் வாங்கினால்
    மொத்தமாய் நானே இலவசம்” என்றேன்…//

    அற்புதம்!!! :) /

    நன்றிகள்!!!

    ReplyDelete
  48. வாங்க நித்யா,

    /கவிதை மிக அருமை..தங்கள் வலைப்பதிவு பற்றிச் சில தினங்கள் முன்னர் தான் அறிந்தேன்..அனைத்துப் பதிவுகளையும் ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன்..எல்லாம் மிக நன்றாக உள்ளன..வாழ்த்துக்கள்.. /

    வாசித்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றிகள் பல!!!

    ReplyDelete
  49. ஐயா ராசா...

    எப்படியா இப்படில்லாம் உங்களுக்கு தோணுது?

    நானும் தான் எழுதப் பார்க்கிறேன்..ஒன்னும் விளங்க மாட்டேங்குது.

    ஒரே வார்த்தையில சொன்னா..என்னை வசப்படுத்திய மற்றுமொரு கவிதை.

    அன்புடன்,
    சுபைர்.

    ReplyDelete
  50. அருமையான கவிதை... ஒரு தெளிந்த நீரோட்டமா உணர்வுகளை வெளிபடுத்தும் கலை.... Best of luck அருட்பெருங்கோ
    எல்லா வரிகளுமே நல்லா இருக்கு
    அழகான கவிதை..... வாழ்த்துக்கள்
    சிங்கா சிங்கி

    ReplyDelete
  51. வாங்க அகமது,

    / ஐயா ராசா...

    எப்படியா இப்படில்லாம் உங்களுக்கு தோணுது?

    நானும் தான் எழுதப் பார்க்கிறேன்..ஒன்னும் விளங்க மாட்டேங்குது.

    ஒரே வார்த்தையில சொன்னா..என்னை வசப்படுத்திய மற்றுமொரு கவிதை.

    அன்புடன்,
    சுபைர்./

    வேலையில்லன்னா இப்படியெல்லாம் தான் யோசிக்கத் தோணும் :-)

    வாழ்த்துக்களுக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  52. வாங்க சிங்கா,

    / அருமையான கவிதை... ஒரு தெளிந்த நீரோட்டமா உணர்வுகளை வெளிபடுத்தும் கலை.... Best of luck அருட்பெருங்கோ
    எல்லா வரிகளுமே நல்லா இருக்கு
    அழகான கவிதை..... வாழ்த்துக்கள்
    சிங்கா சிங்கி/

    கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் சிங்கா...

    ReplyDelete
  53. வாங்க கோகிலா,

    / எப்படிப்பா...? எப்படி இப்படி?

    இனி நாங்கள் எல்லாம் காதல் கவிதை என்ற ஒன்றை முயற்சிக்கவே முடியாதபடி அமைகின்றன உங்கள் வரிகள்!/

    காதல் ஒன்னுதான் கவிஞனோட கற்பனைய தீராமப் பாத்துக்கும்னு எங்கேயோ படிச்சிருக்கேன்...

    வருகைக்கு நன்றிங்க...

    ReplyDelete