Sunday, March 23, 2008

காதல் தேடும் வாழ்த்து

எனக்கு என்னைப் பிடித்திருப்பதே
உனக்கு என்னைப் பிடித்திருப்பதால்தான்.
*
அந்த மூன்று வார்த்தைகளைக் கேட்டாலும்
”எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்” என்று
வெட்கப்படுகிறவளை என்ன செய்ய?
*
கோபமாய் நீயென்னை முறைக்கும்போதெல்லாம்
எனக்கு வருத்தமாயிருக்கிறது.
ஓவியனாய்ப் பிறக்கவில்லையென!
*
உன் வாசனையை
என்னுடன் கூட்டிச்செல்வதற்காகவே
தினமும் உன் கைக்குட்டை வாங்கிச் செல்வேன்.
*
உனக்கொரு ரகசியம் சொல்வதாக நானும்,
எனக்கொரு ரகசியம் சொல்வதாக நீயும் சந்தித்தபோது,
இரண்டுமே ஒன்றுதான் என்பதறிந்து
ரகசியமாய்ச் சிரித்துக் கொள்ளும் காதல்!
*
இதுவரை நீ வந்த
கனவுகளையெல்லாம் சேர்த்து
ஒரே கனவாக காணும்
ஓர் இரவு கிடைக்குமா?
*
ஒவ்வொரு சந்திப்பிலும் நிரூபிக்கிறாய்.
கவிதையென்பது எழுதப்படுவதன்று
நிகழ்த்தப்படுவது என்று!
*
தூசிவிழுந்த இடக்கண்ணில்
நீ ஊதிவிடுவதைக் கண்டு
பொறாமையில் மூடிக்கொள்ளும் வலக்கண்!
*
என் பிறந்தநாளுக்கு அனுப்ப
காதல் தேடும் வாழ்த்து
நீ!
*
நான் தேடுகிறேனென்பதற்காக உடனே கிடைத்துவிடாதே.
ஊடலும் கூடலும் மட்டுமல்ல...
காதலில் தேடலும் சுகம்தான்!
*

Friday, March 07, 2008

உருப்படியா எதாவது நெனைடா! வலைப்பதிவுல எழுதனும்ல!

வலைப்பதிவுல எழுதறதெல்லாம் நெனச்சத அப்படியே எழுதினதா என்ன? இல்லல்ல? வடிகட்டி , அடிச்சுத் திருத்திதான எழுதிகிட்டிருக்கோம். நெனைக்கிறத அப்படியே எழுதினா எப்படி இருக்கும்? ரொம்ப கேவலமா இருக்கும்! என்னமோ மறந்துட்ட மாதிரி இருக்கே. இன்னைக்கு வெள்ளிக்கிழமை. ஷூ போட வேண்டியதில்ல. பர்ஸ், மொபைல், ஐடிகார்ட் எல்லாம் இருக்கு கெளம்புவோம். போக போக யோசிப்போம். இன்னைக்கு அந்தமாதிரி ஒன்னு எழுதி இந்த ப்ரூஃப் ரீடிங்க் வெங்காயமெல்லாம் பண்ணாம அப்படியே போட்டு பாப்போம்.வர வர என்ன எழுதறதுன்னு தெரியாம என்னத்தையோ எழுதிகிட்டு இருக்கிறதுக்கு நெனச்சதையே எழுதுறது நல்லதுதான். நெனச்சதையோ எழுதறதுனு முடிவு பண்ணிக்கிட்டா என்னெல்லாம் எழுதலாம்னு யோசிச்சு அத மட்டுமே மனசு நெனைக்க ஆரம்பிச்சுட்டா என்னப்பண்றது? ரொம்ப கொழம்பிட்டேன்னு நெனைக்கிறேன். மொதல்ல ஆட்டோ வருதான்னுப் பாப்போம். நெனைக்கறத எல்லாம் ஆட்டோவுல வச்சுக்குவோம். வெயில் ஆரம்பிச்சிடுச்சா? என்ன ஊரோ இது. குளிருன்னா ரொம்ப குளிருது. வெயிலடிச்சா இப்படி கொளுத்துது.ஹும் இன்னைக்கும் முன்னாடிதான் உட்காரனுமா? சரி நம்ம சைசுக்கு முன்னாடியே வசதியா உக்காந்துக்கலாம்தான். ம்ம்ம் இப்போலருந்து 'நெனைக்க' ஆரம்பிப்போம். பதிவுல எழுதனுமே. ச்சே என்னதான் அப்படி குசுகுசுன்னு பேசிகிட்டே இருப்பாங்களோ! இந்த தெலுங்குப் பொண்ணுங்க என்ன பேசினாலும் ரொமாண்டிக்கா வேற இருக்கு. குரல் காரணமா இல்ல தெலுங்கே இப்படிதானா. எல்லாப் பொண்ணுங்களுமே இப்படிதான் பேசறாங்க. ஒருவேளை நமக்குதான் வயசுக்கோளாறோ? செல்லம் நீ யூத்து இல்ல. வயசாகிடுச்சு. அத மொதல்லப் புரிஞ்சிக்கோ. சரி அப்போ தெலுங்கே இப்படித்தான்னு வச்சுக்குவோம்.சுந்தரத்தெலுங்குனு சும்மாவா சொன்னான்? ம்ம்ம் கண்ணாடில பாத்தா ஒருத்திதான் தெரியறா. ம்ம்ம் நல்லாதான் இருக்கா. டேய் இதையெல்லாம்கூட பதிவுல எழுதப்போறியா? என்ன பாத்ரூம்லையா எட்டிப் பாத்தோம்? சைட்டடிக்கிறது ஒரு தப்பா? நம்மள 'நெனைக்க' விடாம எடஞ்சல் பண்ணது இவங்க சத்தம்தான். ஹும் சரி நாம மறுபடி உருப்படியா எதாவது 'நெனைக்க' ஆரம்பிப்போம்.பதிவுல எழுதனுமே! போட்டான்யா சடன் ப்ரேக்கு. ஏற்கனவே எலும்புல தோலப்போத்திகிட்டு சுத்திகிட்டு இருக்கோம். இப்படியெல்லாம் வண்டியோட்டினா இருக்குற எலும்பும் தேஞ்சுதான் போகும். எலும்பு மஜ்ஜைதானம்னு பதிவுல யாரோ எழுதிருந்தாங்க. அப்பறம் அதுமாதிரி எலும்புதானம் தான் வாங்கனும்! ஆகா நம்ம பாட்ட போட்டுட்டானா. நாம எதாவது நெனைக்கலாம்னாதான் பாட்ட போட்டு நெனைக்கவுடாம பண்றானுங்க. சரிவிடு பாவனா செல்லம் கண்ணு முன்னாடி தெரியுதில்ல அப்பறமென்ன? ம்ம்ம் நல்லாதான் இருந்தா ஆனா கொஞ்சம் குண்டா இருந்தானு சத்தி சொன்னான். நமக்கு ஒல்லியாதான் தெரிஞ்சா. பாவிங்க அநியாயமா பாதியிலேயே கொன்னுட்டானுங்க. தெலுங்கு படத்துலையும் வர வர சோகமா முடிக்க ஆரம்பிச்சுட்டானுங்க. ரெண்டாவது தடவை பாக்கப்போனா பாவனா சாகறதுக்கு முன்னாடி வந்துடனும். இந்த வாரம் போலாமா. ஆகா போஸ்டர் மாறியிருக்கே. அதுக்குள்ள தூக்கிட்டானுங்களா?இந்த பாட்டுக்கு தமிழ் வரி எழுதினா நல்லாதான் இருக்கும். செப்பாலனுந்தி சின்ன மாட்டைனா... ஆகநந்தி தாகநந்தி லோலோனா... இதுக்கு என்னத்த எழுதறது? தன்னான தன்ன்ன்ன தன்ன தானேனா தான னன்ன னான னன்ன னானானா... பெரிய இசை வித்துவான்...பாடிப்பாக்கறாரு நாம பாடும்போது எவ்ளோ நாராசமா இருக்கும்னு தெரியுமில்ல அப்பறம் எதுக்கு? மனசுக்குள்ளதான பாட்றோம். மனசுக்குள்ள பாடும்போது எல்லாரும் எஸ்பிபிதான். பாட்டக் கேளு பாட்டக்கேளு...கிள்ளாமல் கிள்ளும் பார்வைபார்த்தாலே வண்ணமின்னல் கொண்டகண்ணில் விழுவேனா... ஆபிஸ்ல போய் முழுபாட்டையும் கேட்டுட்டு எழுதுவோம். இதுக்காடா சம்பளம் கொடுக்கறானுங்க? எங்க கொடுக்கறானுங்க? பாதி பேங்க் லோனுக்கே போயிடுது. ஆகா பாட்ட வுட்டாச்சே. ஆட்டோவுல கேட்டுட்டே எழுதறதுக்கு நாம என்ன வாலியா பக்கெட்டா? கருமம்புடிச்சவனே உருப்படியா எதாவது நெனைடா! பதிவுல எழுதனும்ல? இந்தப் பொண்ணு எதுக்கு கண்ணாடில நம்மளயே பாக்கறா? இதெல்லாம் ரொம்ப ஓவர் ஆமா! அநேகமா நெனைக்கறோம்னு நெனச்சிக்கிட்டு தானா பேச ஆரம்பிச்சுட்டோம்னு நெனைக்கிறேன்? ம்ம்ம் ம்ம்ம் ஒன்னும் ஆகல. முடி நெறைய வளந்துடுச்சோ? இந்த வாரம் வெட்டனும். ஆபிஸ் சலூன்லயே இருவத்தஞ்சு ரூபாய்க்கு பூ மாதிரி வெட்டிவிட்றாங்கனு சத்தி சொன்னான். பூவதான் பூ மாதிரி வெட்ட முடியும். முடிய எப்படி பூ மாதிரி வெட்டுவாங்க? நம்ம முடி என்ன பூ மாதிரியா இருக்கு? மயிர் மாதிரி இருக்கு. லூசு! முடியும் மயிரும் ஒன்னுதாண்டா. முடினும் சொல்லலாம். மயிரும்னும் சொல்லலாம். நீங்க சொன்ன மாதிரியும் சொல்லலாம்ணே. இப்ப எதுக்கு செந்தில் வசனமெல்லாம்? வள்ளுவரே மயிர்னு சொல்லிருக்கார்ல கற்றது தமிழ்ல கூட வருமே. அந்த ஹீரோயின் கூட நல்லாதான் இருந்தா. நெசமாதான்
சொல்றியா? நெசமாதான் சொல்றேன். அடுத்த படத்துலயே ஜீன்ஸ்ல வந்தான்னா வேற ஹீரோயின்னு நெனச்சுதான் பாக்கப் போற அப்பறமென்ன? இந்த சத்தியெல்லாம் எப்படிதான் ஞாபகம் வச்சிக்கிறானோ. நமக்கு மட்டும் ஒரே பொண்ண வேற ட்ரஸ்ல பாத்தா அடையாளம் தெரிய மாட்டேங்குது. இந்த வீக்னஸ் எல்லாம் இப்போ ரொம்ப முக்கியமா? உருப்படியா எதாவது நெனைடா! பதிவுல எழுதனும்ல? நான் நெனைக்க மாட்டேன்னா சொல்றேன். இந்த மனசு ஒன்னும் நெனைக்க மாட்டேங்குது. இன்னைக்கு புதன் கிழமை கூட இல்லியே எதுக்கு இப்படி பொலம்பறோம்? இந்த நெனைக்கிறத எழுதறது எல்லாம் நமக்கு ஒத்து வராது. கம்முனு எதாவது கவுஜை யோசிப்போம். அட இந்த பொண்ணு மறுபடியும் என்னையே பாக்கறா. ம்ஹும்... இது என்னவோ முள்ள போய் கால்ல ஏத்திகிட்டு 'முள்ளு குத்திடுச்சு'னு சொல்ற மாதிரி தான் இருக்கு. சரி கவுஜயாவது யோசி. வழக்கம்போல கண்ணுல இருந்தே ஆரம்பிப்போம். ஏன் கால்ல இருந்து ஆரம்பிச்சா கவுஜ வராதா? என் கண்கள், உன் கண்களின் அடிமையா என்ன? உனது பார்வைகளையும் சேர்த்து சுமக்கிறதே. அப்பறம் ஆச்சர்யக்குறி! கவித கவித, சைட்டடிக்கிறேங்கறத எப்படியெல்லாம் சொல்ற. இப்படியே எழுதிகிட்டிருந்தா அய்யனாரோ ஆசிப்போ ஒருநாள் தேடிவந்து கும்மப் போறாங்க. அது மட்டும் நிச்சயம். டேய் உருப்படியா எதாவது நெனைடா! பதிவுல எழுதனும்ல... ஆபிசே வந்தாச்சு இனிமே உருப்படியா நெனச்சு ஒன்னும் பண்ணப் போறதில்ல. இன்னைக்கும் கொஞ்சம் இண்டர்வியூ கூட்டம் வந்திருக்கு போல. ம்ம்ம் எல் கே ஜி சேர்றதுக்கு ஜனனியே ரெண்டு ஸ்கூல்ல இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணிட்டா. வாழ்க்கைல நாமளே இதுவரைக்கும் ஒரே ஒரு இண்டர்வியூதான் அட்டெண்ட் பண்ணிருக்கோம். என்ன கொடும சார் இது. நாம வேல தேடும்போதுதானா டாலர் மதிப்பு தகிடுதத்தம் போடனும்? ஒருத்தனும் கால் பண்ண மாட்டேங்கறான். முன்னவாது we will get back to you னு சொல்லுவானுங்க. இப்ப அதகூட சொல்றதில்ல. இட்லி? ஜூசே போதும். மொசம்பி சனியன் சாத்துக்குடின்னு வந்து தொலைய மாட்டேங்குது. ஒரு சாத்துக்குடி ஜூசக் குடிச்சுட்டுப் போய் நெனச்சத எல்லாம் பதிவெழுதலாம். என்னத்த நெனச்சோம். பதிவுல எழுதற மாதிரி உருப்படியா ஒன்னுமே நெனைக்கல. என்ன தலைப்பு வைக்கிறது? 'தொடர்பயணத்தின் தொடர்பறுந்த குறிப்புகள் தொடர்பான பிரதி' னு வைக்கலாமா? தலைப்ப பாத்ததும் தெறிச்சு ஓடிடுவாங்க. அய்யனார் ஜ்யோவ்ராம் சுந்தர் சுகுணா திவாகர் மாதிரி நாலு பேரு படிச்சாதான் உண்டு. இப்படியொரு மொக்கைப் பதிவ எழுதிட்டு எதாவது மொக்கத்தலைப்ப வைப்போம். அதுக்கப்புறம் படிக்கிறவங்க பாடு. நாளைக்காவது உருப்படியா எதாவது நெனைடா. வலைப்பதிவுல எழுதனும்ல!

Thursday, March 06, 2008

ஆம்.நானும் காதலிக்கத் துவங்கியிருக்கிறேன்.

அண்மைக்காலமாக
எனக்குள்ளும் புதிய மாற்றங்கள்
தென்படத் துவங்கியிருக்கின்றன.
என்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றுவது எனக்கேத் தெரிகிறது.
இராத்திரியின் நீளம் விளங்குகிறது.
நானும் கவுஜை ஜொள்ளுகிறேன்.
என் பிம்பம் விழுந்தே கண்ணாடிகள் உடைகின்றன.
கண்களிரண்டும் ஒளிகொள்வதாக நண்பன் சொல்கிறான்.
தலையணை நனைக்கிறேன்.
மூன்று முறை பல்துலக்குகிறேன்.
காத்திருக்கும்போது நிமிடங்கள் வருடங்களாகின்றன.
வந்துவிட்டால் வருடங்கள் நிமிடங்களாகின்றன.
வயிற்றுக்கும் தொண்டைக்கும்
தொண்டைக்கும் தலைக்கும்
உருவமில்லா உருண்டையொன்று உருளுகிறது.
உண்மையாகவே இருதயம் அடிக்கடி இடம்மாறித் துடிக்கிறது.
நிசப்த அலைவரிசைகளில்
எனது குரல் மட்டும் ஒலிபரப்பாகிறது மிக மிக சத்தமாக.
எனது நரம்பே நாணேற்றி எனக்குள் அம்புவிடுகிறது.
புதிய ஹார்மோன்கள் நைல்நதியாய்ப் பெருக்கெடுக்கின்றன.
எனினும் உதடுகள் மட்டும் சகாராவாகிறது.
வாழ்ந்துகொண்டே சாகவும் முடிகிறது.
செத்துக்கொண்டே வாழவும் முடிகிறது.
ஆம். நானும் காதலிக்கத் துவங்கியிருக்கிறேன்,
கண்ணாடிக் கோப்பையில் நிறைந்து கொண்டிருக்கும் இந்த மதுவை.
சியர்ஸ் :)

(கொலைவெறியோடு முறைக்காமல் இந்த மொக்கையையும் பார்த்துவிடுங்கள் ;-) )

Wednesday, March 05, 2008

ஒன்றாகத் தந்தாய்

தொலைந்து போய் அழும்பிள்ளையின் துயரும்
தொலைத்துவிட்டுக் கதறும் தாயின் வலியும்
ஒன்றாகத் தந்தாய்.

பாதி உயிரை இழந்த உடலின் கதறலும்
உடல் நீங்கிய உயிரின் தவிப்பும்
ஒன்றாகத் தந்தாய்.

பார்வையற்ற கண்களின் இருமையும்
வாயில்லா இதயத்தின் வெறுமையும்
ஒன்றாகத் தந்தாய்.

இனிமைகொள்ள ஒரு நினைவும்
தனிமைகொல்ல ஒரு நினைவும்
ஒன்றாகத் தந்தாய்.

எடுத்துப்போன இதயத்தை மட்டும் ஏன்
இரண்டாகத் தந்தாய்?

Tuesday, March 04, 2008

தலைப்பில்லாக் கவிதைகள்

வாசிக்கப்படாத தனது கவிதையொன்றை
வாசக சந்தையில் சுமந்து திரியும் கவிஞனை,
துரத்திக்கொண்டே இருக்கின்றன...
எழுதப்படாத பல கவிதைகள்!

*

ஷேர் ஆட்டோவின் மூவர் அமரும் பின்னிருக்கையில்
பெண்கள் இருவர் அமர்ந்திருக்க,
முன்பக்கம் ஓட்டுநர் அருகே அமர்கிறேன்.
சிரித்துக் கொண்டார்கள் இருவரும்.
நான் இன்னும் பண்படவேண்டுமென
நினைத்துக்கொண்டிருக்கலாம்.
பரவாயில்லை.
இயல்பாய்ப் பக்கத்தில் அமர்ந்திருக்கும்போதும்
தள்ளி தள்ளி அமர்ந்து சங்கடப்படுத்துவதைக் காட்டிலும்
இது மேல்!

*

கடவுளைத் திட்டி எழுதியபோது
என்னிடம் கேட்கப்பட்டது - ‘நீ நாத்திகவாதியா?’
அப்புறம் பெண்ணின் வலிசுமந்த ஒரு கவிதைக்கு – ‘ஆண் பெயரில் எழுதும் நீ பெண் தானே?’
வன்கொடுமையை எதிர்த்து பேசியதும் – ‘நீ தலித்தா?’
காதல் கவிதையெழுதும்போதெல்லாம் – ‘உண்மையைச் சொல், நீ காதலிக்கிறாய்தானே?’

இப்பொழுது மரணம்பற்றிய கவிதையெழுதிக்கொண்டிருக்கிறேன்.
என்ன கேள்வி வரும்?

*

தோட்டத்து தென்னைமரம்
இடிவிழுந்து தீப்பிடித்த நாளில்
எனக்கும் நடை முடங்கியது.
பிறகு படுக்கையே வசிப்பிடம்.
பேச்சும் குழறி பின்னொருநாள் முழுவதுமாய் ஊமை.
ஒருவாரத்தில் செவியின் மரணத்தால் உலகமே அமைதி.
எழுபது வயதில் கணவருக்கு பாரமாய் இருக்கவே பிடிக்கவில்லை.
விட்டுப் போகவும் மனமில்லாமல் கண்ணீர் விடுகிறேன்.
எதிரில் கணவரும் அழுவது தெரிகிறது.
நெடுநாள் முன்பு இதேமாதிரி
தனியே என்னை அழவைத்து விலகிய
‘அவனை’ நினைத்துப் பார்த்ததும்,
எதிரில் கணவர் அழுவது தெரி...

*

Monday, March 03, 2008

எழுதுவதையும் வாசிப்பதையும் நிறுத்தி..

கடலினும் ஆழமானக் காதலுடன்
கடற்கரையில் காத்திருக்கத் துவங்குகிறாள் காதலியொருத்தி.

அவள் பார்த்தால் நெருங்குவதும் முறைத்தால் விலகுவதுமாய்
அலைந்து கொண்டிருந்தது கடல்.

நிலையாக நின்ற பாதத்தை நிலம் முத்தமிடத் துவங்கவும்
அங்குமிங்கும் நடக்கத் துவங்குகிறாள்.

நடக்கும் பாதம் உண்டாக்கிய காதல் ஓவியங்களை
கடலுக்குக் கடத்துறது அவளுக்குத் தெரியாமல் வந்த அலை.

காற்றுக்கும் யாரோ தூதனுப்ப தென்றல் உடையில் அதுவும் வந்து விட
தேவதையின் சிறகென தென்றலில் பறக்கும் துப்பட்டாவை அவள் இழுத்து நிறுத்தும் வேளையில்
தேவதைகள் ஏமாந்து போகின்றன.

ஒளிர்வதற்கு போட்டிவந்ததும் சூரியன் ஒளிந்துகொள்ள
உலகத்தின் ஒளிக்கு நிலவை அழைப்பதா இவளே போதுமா என்று குழம்புகிறது வானம்.

இவையெதனையும் கண்டுகொள்ளாமல்
எந்த கணத்திலும் பதுங்குதல் பாய்தல் என இரண்டுக்கும் தயாரான பார்வையை
கண்களில் ஒளித்துக்கொண்டு காதலனை மட்டுமே தேடுகின்றன அவள் கண்கள்.

தொலைவில் வரும் காதலன் கண்களைக் கண்டதும்
கண்களால் வல்லின சண்டையொன்று முடித்தவள்,
நெருங்கியதும் காற்றுக்கும் வலிக்காமல்
மெல்லின மொழியொன்றில் சொற்களை உச்சரிக்கத் துவங்குகிறாள்.

இப்பொழுது
எழுதுவதையும் வாசிப்பதையும் நிறுத்தி,
இமைகளை மூடிக்கொண்டால்…
காதலி தெரிகிறாள்!