Monday, July 31, 2006

என்னுடையக் குழந்தை!

அந்த ஆண்டு மழைக்காலத்தின் ஒரு மாலைவேளையில்,
மலைப் பாதையொன்றில் நான் போய்க் கொண்டிருக்கிறேன்.

விழிகளை மூடி மழையை செவிக்குள் சேமித்தவாறு செல்கிறேன்.
மழையையும் மீறி மனசைத் தொடுகிறது ஒரு மழலைக் குரல்.

பிஞ்சுக் கை ஒன்று மெல்ல என் பாதம் தொடுகிறது.
குனிந்து பார்த்தால் காலடியில் அழகானதொரு குழந்தை.

தூக்கலாமா என நான் யோசித்துக் கொண்டிருக்கும்போதே,
என் கால்களைப் பற்றி என்னை நோக்கிக் கை நீட்டுகிறது.

மூளை யோசிப்பதற்கு முன்னே மனதைத் தூண்டி,
வசீகரிப்பதில் குழந்தைக்கு நிகர் குழந்தைதான்!

குழந்தைக்கு என்னைப் பிடித்துப் போனதோ…
எனக்குக் குழந்தையைப் பிடித்ததோத் தெரியவில்லை.
ஆனால் அன்று முதல் நாங்கள் ஒன்றாகவேத் திரிகிறோம்.

மொழியுமில்லாத மௌனமுமில்லாத அதன் மழலைக் குரல் எதேதோ சொல்கிறது!
அதன் குறும்பும் சிரிப்பும் தவிப்பும் என்னைக் கொல்லாமல் கொல்கிறது!

என் கவிதைகளைத் தின்று நன்றாய் வளர்கிறது குழந்தை!
வளர வளர அதன் சுமை என்னை முழுதாய் அழுத்துகிறது!

அன்றென் பாதையில் குழந்தையைத் தவழ விட்டுப் போனவள் யாரோ?
குழந்தையைக் கொஞ்சியபடி அவளைத் தேடியலைகிறேன் நான்...

நம்
முதல் குழந்தைக்கு
என்னப் பெயர்
சூட்டலாமெனக் கேட்கிறாய்!
அடிப்பாவி!
நமக்கு(ள்) முதலில் பிறந்தது
காதல் குழந்தைதானே?


( சொல்ல மறந்து விட்டேனே!
உருவமில்லாத அந்தக் குழந்தைக்கு நான் வைத்த பெயர் – காதல்! )

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ!

2 comments:

  1. சூப்பரப்பு... நெஜந்தான், முதல்ல காதல் தான் 'பிறக்கிறது'. நல்ல சிந்தனை.


    `Guru
    `

    ReplyDelete
  2. நன்றி குரு...

    முதல் வருகைக்கும், பாராட்டுக்கும்...

    ReplyDelete