Thursday, June 26, 2008

ஒருகண்ணில் பூக்கும் மறுகண்ணில் தாக்கும்

வழக்கம்போல இன்னொரு தெலுங்கு மெட்டுக்கான எனது தமிழ் வரிகள்!

படம் : வான
இசை : கமலாக்கர்
குரல் : ரஞ்சித், சித்ரா
தெலுங்கு வரிகள் : சீத்தாராம சாஸ்திரி

[audio:sirimalli.mp3]

தமிழில் :

ஒருகண்ணில் பூக்கும் மறுகண்ணில் தாக்கும் சிறுபார்வை யார் தந்தது
கைவளையல் குலுங்க கால்கொலுசு சிணுங்க இதழ்கவிதை யார் சொன்னது
கவிதை தருவாயா… இதழ்கள் தருவேனே… - ஒரு கண்ணில்

பனித்துளிப் பூக்கள் மெய்யோடுசாயும் மெல்லினம் உன் ஸ்பரிசம்
பலகோடி மின்னல் உயிர்வரைபாயும் வல்லினம் உன் ஸ்பரிசம்
இனங்கள் கலக்கட்டும்… காதல் களைகட்டும்… - ஒரு கண்ணில்

இதயத்தின் ஆழம் நினைவுகள் ஓரம் வரைந்தேன் உனதுருவம்
இரவினில் நீளும் கனவுகள் யாவும் கரைந்தேன் தினந்தோறும்
மனசே புவியாக… காதல் நிலவாக… - ஒரு கண்ணில்

காதல் கவிதைகள்

காதல் கவிதைகள் ( கவிதை 'பற்றிய' கவிதைகள் )

நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!

*

இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!

*

குறைகளோடு பிறக்கும்
எனது கவிதைகள் யாவும்
உன் முத்தம் வாங்கி
முழுமையடைகின்றன!

*

உன் வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென குழம்பாதே.
மலர்தான் உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!

*

எழுத எழுத வெறுமையாகவே இருக்கிறது தாள்.
எழுதியதுமே தாளிடமிருந்து தப்பித்து
உன்னைச் சேரும்… காதல் கவிதைகள்!

*

மேலும் சில காதல் கவிதைகள் :

2011 Valentine's Day Special

2011 புத்தாண்டு காதல் கவிதைகள்

தேவதைகளின் தேவதை

முத்தம்

காதல் கவிதை

அன்புள்ள காதலிக்கு

2007 Valentine's Day

காதல் வாங்கினால் முத்தம் இலவசம்

Monday, June 16, 2008

முதல் நாள் இன்று - ஒளிப்பதிவு

இன்று முதல் ஜனனிக்கு ஆசிரியைகளாக வரப்போகிறவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஜனனியிடமிருந்து அவர்களை ஆண்டவன் காப்பாற்றட்டும் :)

[flashvideo filename=video/jananikural.flv /]

Wednesday, June 11, 2008

விட்டுக்கொடுத்தல்

சிகரெட் முதல்
கடல் குளியல்
ECR பயணம்
பெரிய ராட்டினத்தில் சுற்றுதல் வரை
உனது பயங்களுக்கு அடிபணிந்து
எனது விருப்பங்களையெல்லாம்
உனக்காக விட்டுக்கொடுத்திருக்கிறேன்.
இறுதியில்… என் காதலையும்!

Tuesday, June 10, 2008

துவக்கி வைத்த குழந்தை

ஓவியம் வரைய
நீர் வண்ணங்களைக்
கலக்கி வைத்திருந்தேன்.
தரையில் கொட்டி
துவக்கி வைத்தது
ஒரு குழந்தை.

*

ஊரிலிருந்து வந்த மாமன்
தான் புதிதாய் வாங்கி வந்த
ஏரோப்ளேன்,
கண்டெயினர் லாரி,
இரண்டடுக்கு பஸ்,
சுற்றிக்கொண்டே இருக்கும் ரயில்…
எல்லாவற்றையும் எடுத்துக் காட்டினான்.
எல்லா வண்டிகளையும்
ஓட்டி சலித்தக் குழந்தை
பழையபடி
அவனை மண்டியிட சொன்னது...
ஆனை சவாரிப் போக!

Monday, June 09, 2008

என்னிடமும் ஒரு காதல் இருக்கிறது

உங்களுக்கு இலக்கியமாக்கித் தர
என்னிடமும் ஒரு காதல் இருக்கிறது.
நாவல் வடிவம் அதற்கு நீளம்.
சிறுகதையில் மிகவும் சுருங்கும்.
கவிதையென்றால் பொய் சேரும்.

எழுதினாலே இயல்பு மாறக்கூடும்.

உங்களுக்கு இலக்கியமாக்கித் தர
என்னிடமும் ஒரு காதல் இருக்கிறது.
எழுத்தில் சிதைக்காமல்
நினைவிலிருந்தே வாசித்துக்கொள்ள வழியிருக்கிறதா?

*
பாதிக்கனவுடன்
கலைந்துவிட்ட உறக்கத்தை
மீதிக்கனவுக்காக இழுத்துப்போனேன்.
விழித்தபோது கிடைத்திருந்தது
புதிதாய் இன்னொரு பாதிக்கனவு.

Friday, June 06, 2008

கயிற்றின் மீது நடத்தல்

பைக் ஓட்டிக்கொண்டிருந்த கணவன்,
சாலையோரத்தில் கையில் கம்புடன்
கயிறு மீது நடந்த சிறுமியை
ஆச்சர்யமாய்ப் பார்த்தான்.
பின்னாலிருந்த மனைவி
அலட்சியமாய்த் திரும்பிக்கொண்டாள்.
அடுத்த வேகத்தடையில் விழுந்துவிட நழுவும்
தூங்கியக் குழந்தையுடனும்,
பிக்பஜாரில் வாங்கிய பொருட்களுடனும்,
காற்றில் பறக்கும் புடவை பிடித்து
பின்தொடரும் வாகனப் பார்வையிலிருந்து
இடது மார்பை மறைத்துக்கொண்டே வருவதை விடவா
பெரிய சாகசம்?

Thursday, June 05, 2008

சிறுகதை – ஆறுமுவம் பொண்டாட்டி

பொனாசிப்பட்டி ஆறுமுவம் பொண்டாட்டின்னா தெக்க அந்தரப்பட்டியில இருந்து வடக்க மகிளிப்பட்டி வரைக்கும் கொணமான பொம்பளைனு அத்தன சனத்துக்கிட்டயும் நல்ல பேரு. அவளும் யாருக்கும் எந்தக் கெட்டதும் மனசுல கூட நெனைக்க மாட்டா.நல்லது கெட்டதுக்கு வூட்டுக்கு வார சனத்த ஒரு வேலையும் செய்யவுட்டதில்ல.'அடநீங்க ஒக்காருங்கத்தாச்சி. செத்த நேரத்து வேல..நான் பாத்துக்கறேன்' னு சொல்லிட்டு அவளே செஞ்சு முடிச்சிருவா. யார் வூட்டு கண்ணாலங்காச்சினாலும் சரி, எழவுழுந்த வூடாருந்தாலும் சரி காய்கசவ அரியற எடத்துலயோ, யாணம்பாணம் வெளக்கற எடத்துலயோ அவள பாக்கலாம்.'ஆளுக்கு அஞ்சாறா செஞ்சா செத்த நேரத்துல செஞ்சிரலாம்'னு சிரிச்சுக்கிட்டே சொந்த வூடு மாரி மளமளன்னு வேலைய பாத்துக்கிட்டு இருப்பா. ஆறுமுவம் பொண்டாட்டி இருந்தா ஏழூரு வேலையயும் என்னா சேதி?ன்னு கேட்றுவான்னு பொம்பளையாளுங்க மெச்சிக்குவாங்க.

சாமி கும்பிட்டாக்கூட'ஆத்தா மகமாயி... இந்த வருசமாவது ஊர்ல மழயக்கொண்டா. எல்லா சனத்தையும் காப்பாத்து' னு வேண்டிக்கிட்டு 'எம்புருசனுக்கு நல்ல புத்தியக்கொடு'ன்னு கடசியாதான் வேண்டிக்குவா.ஆனா, போன செம்மத்துல அவ என்ன பாவம்பண்ணாளோ இப்புடி ஆறுமுவத்துக்கு வாக்கப்பட்டு சீரழியறா. கட்டிக்கொடுக்கும்போது அவங்கப்பாரோட சேந்து காடுகரய பாத்துக்கிட்டு ஆறுமுவம் ஒழுங்காதான் இருந்தான். வருசம் ஒன்னா வரிசையா நாலு புள்ள பொறந்துச்சு. நாளும் பொட்ட. அவங்கப்பாரு போய் சேந்த பின்னாடிதான் அவனுக்கு புத்தி கெட்டுப்போச்சு.'இந்தூர்ல ஈனப்பயதாங் இருப்பான்.நா அரிசி யாவாரம் பண்றேன்'னு பொண்டாட்டி புள்ளய ஊர்லயே வுட்டுட்டு உடுமலைப்பேட்டைக்கு ஓடிப்போயிட்டான். நாலு வருசமா ஆளு அட்ரசே காணோம். தேடிப்போன ஆளுங்களுக்கும் ஒரு ருசுவுங் கெடைக்கல. ஆனா அவன் திரும்பி வருவான்னு அவ நம்பிகிட்டு இருந்தா. 'ஏதோ ஆறுமுவம்பொண்டாட்டிங்கறதால இன்னும் இந்தூர்ல இருக்கா; வேற ஒருத்தியா இருந்தா இந்நேரம் பொறந்த ஊருக்கே பொட்டியக் கட்டியிருப்பா' ன்னு ஒரக்கேணியில தண்ணியெறச்ச சனம் பேசிக்கிச்சுங்க.

அந்த வருசம் மாரியாயி நோம்பியப்ப வந்திருந்தான். பொண்டாட்டி, புள்ளைங்களுக்கு இந்தான்னு ஒரு சீலத்துணி, சட்டத்துணி வாங்கியாரல. அப்பானு போயி கட்டிகிட்ட புள்ளைங்க ஏமாந்து போச்சுங்க. ஊர்ல இருந்த நாள்ல ஒரு நாக்கூட அவன் வூடு தங்கல. இச்சி மரத்தடில சீட்டாடுனான், மொட்டயன் காட்டுல சேத்தாளிங்க கூட மொடாமுழுங்கி மாரி கள்ளுக் குடிச்சான். குளித்தல போயி சினிமா பாத்தான். ஆனா கொண்டாந்த காசுல ஒத்த பைசா வூட்டுக்குனு குடுக்கல. நோம்பிக்கு மக்யா நாளு ராத்திரி கரகாட்டம்னு சொல்லி ரெக்கார்ட் டான்சு நடக்க மத்திப்பட்டிக்காரன் கொழா செட்டுல ஊரு முழுக்க பாட்டு சத்தம் மொழங்குச்சு. புள்ளைங்கள தூங்க வச்சிட்டு படுத்திருந்த ஆறுமுவம்பொண்டாட்டி அழுதுகிட்டே அவன திட்டிட்டு இருந்தா. 'நம்முடைய நடனத்தைப் பாராட்டி, இப்பொழுது உடுமலைப்பேட்டை அரிசி வியாபாரி திரு. ஆறுமுகம்பிள்ளை அவர்கள் ரூபாய் இரண்டாயிரத்தை அன்பளிப்பாக அளித்துள்ளார்கள். அவருக்கு நன்றி செலுத்திக்கொண்டு அடுத்த பாடலாக...' காதுல அதக்கேட்டதும் ஆங்காரம் வந்தவாளாட்டம் எந்திரிச்சுப் போனா...ரெக்கார்டு டான்சு நடந்த நாடகக்கொட்டாய்க்கு. அங்க தண்ணியப்போட்டுட்டு தள்ளாட்டத்துலதான் இருந்தான் ஆறுமுவம். அங்கன ரெண்டு பேருக்கும் நடந்த சண்டைல ரெக்கார்டு டான்சு நின்னு எல்லாரும் இவங்க சண்டய வேடிக்க பாக்க ஆரம்பிச்சுட்டாங்க. கடசில 'நீயெனக்கு பொண்டாட்டியுமில்ல;நா ஒனக்கு புருசனும்மில்ல' னு சொல்லிட்டு அப்பவே உடுமலப்பேட்டைக்கு போயிட்டான். அன்னைக்கு வூடு வர்றவரைக்கும் எல்லா சாமிக்கும் சாபம் குடுத்துக்கிட்டே வந்தா. நாலு பொட்டப்புள்ளைய வச்சிருக்காளே, அந்த மாரியாயி, ஆறுமுவம் பொண்டாட்டிய இப்படி சோதிக்குதேன்னு ஊரு சனம் வெசனப்பட்டுக்குச்சு.

அப்பறம் அவன் அங்கயே இன்னொருத்திய சேத்துக்கிட்டான்னு தெரிஞ்சதும், அவன் திரும்பி வருவான்;புள்ளைங்கள கர சேப்பாங்கற நெனப்பெல்லாம் அவளுக்கு அத்துப்போச்சு. தனியா வெள்ளாம வைக்க அவளால முடியாதுன்னு, இருந்த நெலத்தையும் குத்தைக்கு வுட்டுட்டு அவ கொத்து வேலைக்கு போவ ஆரம்பிச்சுட்டா. அப்பறம் ஊர்லயும் மழயில்லாம என்னப்பண்றதுன்னு தெரியாம கரும்பு வெட்ற வேலைக்குப் போவ ஆரம்பிச்சா. மில்லு தொறந்திருக்கற மாசத்துல சத்தியமங்கலத்துக்கோ, பெருகமணிக்கோ புள்ளைங்கள இழுத்துக்கிட்டுப் போயிருவா. மூனு மாசம், நாலு மாசம்னு வேலையிருக்கும். மில்லு மூடிட்டா ஊருக்கு வந்துரனும். ரெண்டு வருசம் இப்படியேப்போச்சு. புள்ளைங்க பள்ளியோடம் படிக்க ஒரே ஊர்ல இருந்தாதா சொகப்படும்னு ஊர்லயே இருக்கனும்னு மூனாவது வருசம் கரும்பு வெட்ற வேலைக்கும் போவல. பொழப்புக்கு என்னப்பண்றதுன்னு தெரியாம முழிச்சவளுக்கு ஒரு கரும்பின்ஸ்பெக்டர் சொன்னது சரியாப்பட்டுச்சு. ஏதோ மகளிர் சுய உதவிக்குழுவுன்னு பொம்பளைங்களுக்கு தொழில் செய்ய கவர்மெண்டு லோன் குடுக்குதுன்னு சொல்லவும், யார் யாரையோ புடிச்சு பட்டுப்புழு வளக்கறதுக்கு லோன் வாங்கிட்டா. குளித்தலைல இருந்து அதுக்கு கூடெல்லாம் வந்து எறக்கிட்டுப்போயிட்டாங்க. ஒரே வருசத்துல நல்லா பெருக்க ஆரம்பிச்சிருச்சு. அவளப்பாத்து ஊருப்பொம்பளைங்க கொஞ்சம்பேரும் சேர அடுத்த வருசம் குளித்தல தாலுக்காவுல அவங்க குழுதான் நெறய லாபம் பாத்துதுன்னு அதிகாரிங்க எல்லாம் பாராட்டுனாங்க.புருசன் வுட்டுட்டு ஓடுனாலும் ஒத்தப் பொம்பளையாவே ஆறுமுவம்பொண்டாட்டி நாலு புள்ளைங்களையும் கர சேத்துடுவான்னு ஊருக்குள்ள ஆம்பளைங்களும் பேசிக்கிட்டாங்க.

அந்த வருசம் தேர்தல்ல பிள்ளாபாளையம் பஞ்சாயத்து தலைவர் பதவி பொம்பளைங்களக்குனு ஒதுக்கியிருந்தாங்க. பொனாசிப்பட்டில இருந்து அந்த பஞ்சாயத்துக்கு மூனு மெம்பருங்க. மகிளிப்பட்டியில ரெண்டு, தெக்கியூர்ல மூனு. மொத்தம் பதனஞ்சு மெம்பருங்க பஞ்சாயத்துல இந்த மூனூருக்காரங்க மெஜாரிட்டி வந்தா அதுல யாரோ ஒருத்தர் தலைவராயிடலாம். மீதி ரெண்டு ஊர்க்காரங்க சம்மதம் வாங்கி போட்டியில்லாம யார அனுப்புறதுன்னு முடிவு பேச இச்சி மரத்தடியில கூட்டம் போட்டிருந்தாங்க. ஆறுமுவம்பொண்டாட்டி தான் சரியான ஆளுன்னு பள்ளியோட வாத்தியார் சொன்னதுக்கப்பறம் ஊரே அதுக்கு தலையாட்டுச்சு. மொதல்ல இதுக்கு அவ ஒத்துக்கலன்னாலும், நம்மூரு ஆளு தலைவராயிட்டா, நம்ம கம்மாய தூருவாரலாம், நம்மூருக்கு பெரிய பள்ளியோடம் கட்டலாம்னு சொல்லி அவள சம்மதிக்க வச்சிட்டாங்க. மூனூரு சனமும் ஒத்துமையா இருந்ததுல அவளே செயிச்சு தலைவராயிட்டா. முடிவு தெரிஞ்சன்னைக்கு பொனாசிப்பட்டியில வேட்டு வெடிச்சுக் கொண்டாடி, சாயுங்காலம் கூட்டம் போட்டிருந்தாங்க. பள்ளியோட வாத்தியாரு எல்லாருக்கும் முட்டாய்க்கொடுத்துக்கிட்டே சந்தோசமா சொல்லிக்கிட்டு இருந்தாரு 'நம்ம ஆறுமுவம் பொண்டாட்டிதான் இனிமே பிள்ளபாளையத்துக்கே பஞ்சாயத்துத் தலைவர்!'

அப்பறமா அவ பேச ஆரம்பிச்சா... 'எம்பேரு ஆறுமுவம் பொண்டாட்டியில்ல...லெச்சுமி. நம்மூருக்கு…'

Wednesday, June 04, 2008

வரவேற்பறை மீன்தொட்டி

அறுபது பவுன் நகை போட்டு
ஹுண்டாய் i10 –ம் கொடுத்து
அமெரிக்க மாப்பிள்ளையுடன்
அலங்காரமாய் மகளை அனுப்பி வைத்தார்
வரவேற்பறை மீன்தொட்டி மாதிரி.
அவளும் விப்ரோ வேலையைத் துறந்து இல்லத்தரசியானாள்
வரவேற்பறை தொட்டிமீன் மாதிரி!

Tuesday, June 03, 2008

ஏமாந்தியா?

காலையில் படியிறங்கும்பொழுது
கீழ்வீட்டுக் குழந்தை முறைத்துப்பார்த்தபடி நின்றது.
அதனை சிரிக்க வைக்க
கையாட்டி சிரித்தபடி நான் கீழிறங்க,
சலனமில்லாமல் பார்த்துக்கொண்டு
என் தலை மறையும் நேரம்
கையாட்டத் துவங்கியது.
திரும்பி நான் எட்டிப்பார்க்க,
‘ஏமாந்தியா?’ என்பதாய் தலையாட்டி
கோணல் வாய்வைத்து சிரித்தது.
கையாட்டலைவிட தலையாட்டல் அழகாய் இருந்தது.

Monday, June 02, 2008

கோயில் பிரகாரமெங்கும் இறைந்து கிடந்தன

உன்னை நினைத்துக்கொண்டிருப்பதைப் போலவே
இனிப்பாய் இருக்கிறது.
நீயுமென்னை நினைத்துக்கொண்டிருப்பதாய்
நினைத்துக்கொள்வது!

*

இமைப்பொழுதிலும்
கவிதை எழுதுவேன்.
இமைப்பது நீயெனில்.

*

உலகின் பெண்களுக்கெல்லாம்
உனதுருவம் அமைந்துவிட்ட மாயக்கனவிலும்…
உன்னைக் காட்டிக்கொடுத்து சிரிக்கிறது,
உனது பார்வை!

*

நீ குடை விரித்ததும்
குடை சாய்ந்தது
மழை வண்டி!

*

இமை மூடிய கண்களில் அரைப்பார்வையுடன்
விரல் மூடிய உள்ளங்கையில் திருநீற்றுடன்
அடிப்பிரார்த்தனைக்காக நீ சுற்றிய
கோயில் பிரகாரமெங்கும் இறைந்து கிடந்தன…
சில கவிதைகள்!