Wednesday, April 30, 2008

தண்டவாளப்பயணம் (சங்கம்னா ரெண்டு போட்டிக்காக)

இரண்டு வாரப் பணிக்காக மும்பைக்கு வந்த எனக்கு வேலை செய்யும் நிறுவனமே 'கார்ரோட்' அருகே தங்குமிடம் கொடுத்திருந்தது. காலையிலும் மாலையிலும் மும்பையின் மின்தொடருந்தில் திருவிழாக்கூட்டமிருக்கும் என்று நண்பன் சொன்னது சரிதான். அதுவும் அன்று திங்கட்கிழமைவேறு. எனது அலுவலகம் இருக்கும் லோயர் பரேலுக்கு ஒரு சீட்டை வாங்கிக்கொண்டு நடைமேடைக்கு வந்து நின்றுகொண்டேன். 'கார் ரோட்' டுக்கும் 'லோயர் பரேலு'க்கும் இடையில் தான் இனி தினசரி பயணம். என் நிறத்தைப் பார்த்தோ என்னவோ 'தம்பி தமிழா?' என்று கேட்டு அறிமுகமானார் அவர். நாற்பது வயதிருக்கும். பேச்சில் இன்னும் கிராமம் இனித்தது. கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்ததில் அவரைப் பற்றி தெரிந்துகொண்டது – 'பெயர்- பழனிச்சாமி.  ஊரை விட்டு வந்து பதினைந்து வருடங்கள் ஆகின்றன; மனைவி + இரண்டு பிள்ளைகளுடன் மும்பையில் வசிக்கிறார்; இங்கு வேறு யாரும் உறவினர்கள் இல்லை. மும்பைக்கு வந்தபிறகு இன்னும் ஊருக்கே சென்றதில்லை'. எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. பதினைந்து ஆண்டுகளாக ஊர்ப்பக்கமே போகாமல் இருந்திருக்கிறார். நான் யோசித்துக் கொண்டிருக்கையிலேயே, ஊரிலிருந்து வந்தபிறகு எல்லாத் தொடர்புகளும் விட்டுப் போய்விட்டதாக, தனக்கோ/எனக்கோ சொன்னார்.அவரிடம் செல்பேசிகூட இருந்ததாகப் படவில்லை.அதன்பிறகு நானாக எதுவும் கேட்டுக்கொள்ளாமலிருந்தேன். வண்டி மாதுங்காவைத் தாண்டிப் போய்க்கொண்டிருந்தது.கேட்க வேண்டாம் என்று நாகரிகம் தடுத்தும் ஒரு சந்தேகத்தில் அவருடையது காதல் திருமணமா என்று மட்டும் கேட்டேன்.ஆமாம் என்று சொல்லி, வெளியே பிற கட்டடங்களுடன் ஒட்டாமல் தனித்து நின்ற ஒரு கட்டடத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறருடைய காதல் கதைகளை விளக்கமாக கேட்பதில் எனக்கு விருப்பமில்லாததால் ( வேறென்ன பொறாமைதான் ), அத்துடன் அமைதியானேன். லோயர் பரேலில் இறங்கும்போது அவரைப் பார்த்தால், கண்களில் ஒரு சோகம் வந்திருந்தது. கேட்கக் கூடாததைக் கேட்டுவிட்டேனோ? ஒருவேளை ஊரைவிட்டு ஓடிவந்து திருமணம் செய்து கொண்டிருப்பார்களாயிருக்கும். பிறிதொருநாள் சந்தித்தால் பேச்சுவாக்கில் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளலாம் என்றபடி அலுவலகம் நோக்கி நடக்கத் துவங்கினேன்.

நாந்தாங்க பழனிச்சாமி. பம்பாய்க்கு வந்த இந்த பாஞ்சு வருசத்துல பழசெல்லாம் மறந்துட்டுதான்  பொழப்பு ஓடிட்டிருக்கு. அன்னைக்கு ரயில்ல மொத தடவ பாத்தப்பவே  காதல் கல்யாணமானு பட்டுனு அருளு கேட்டுட்டாப்ல. எனக்கு பழசெல்லாம் நாவத்துக்கு வந்து கண்ணெல்லாங்கூட  கொஞ்சம் கலங்கிப் போயிருச்சு. அதுக்கப்புறம் ஒருநா சாயங்காலம் மறுநடைல பாத்துகிட்டப்ப, அத நெனப்பு வச்சிகிட்டு மன்னிப்பெல்லாம் கேட்டுகிட்டாப்ல. எனக்கு ரொம்ப சங்கடமாப் போயிருச்சுங்க. என்ன கேட்கக் கூடாதத கேட்டுட்டாப்ல? ஊர்லையே இருந்திருந்தா என்னென்னப் பேச்செல்லாம் எங்க காதுல விழுந்திருக்கும்? தங்கத்தையும் சேர்த்துதான் சொல்றேன். என்னயவிட அவளுக்குதான் ரெண்டுபங்கு பேச்சும்,ஏச்சும். 'மொத தடவ நா அவளப் பாத்தது ஒரு தைப் பொங்க சமயத்துலதான். அப்ப எங்கூரு வயசுப்பயலுங்க ஒரு பத்து பேருக்கு மேல புலவர் வகுப்புக்குப் பக்கத்ல இருக்ற பிள்ளாபாளையத்துக்கு போயிகிட்டு இருந்தோம். கருப்பத்தூர்ல இருந்து வந்து சொல்லி கொடுத்துட்டு இருந்தாரு ஒரு புலவரு. தைப்பொங்கலன்னைக்கு அவுரு தோட்டத்துக்கு எங்களயெல்லாம் கூப்ட்ருந்தாரு. அவுரு வூட்டுக்குப் பக்கத்துலையே சால போட்டுக் குடியிருந்தாங்க அவுரோட பங்காளி வீட்டுப் பொறந்தவளும் அவுங்க மவ தங்கமும். தங்கத்தோட அப்பாரு சிறுவயசுலயே தவறிட்டாப்ல. கண்ணாலங்காச்சியெல்லாம் மாமம் மொறைல அந்த புலவரு பாத்து செய்றதுதான். நாங்க போனப்ப, வாசல்ல இருந்த மரத்துல காப்புக்கட்டுக்கு வேப்பந்தள ஒடிச்சிகிட்டு இருந்தா தங்கம். அவளுக்கு தங்கம்னு பேரு வெச்சது பொருத்தந்தான். ஒரு நா பொழுது அங்கிட்டு இருந்துட்டு வந்ததுலயே தெரிஞ்சுபோச்சு, அவ கொணமும், வேல செய்யற பாங்கும். சிரிச்ச மொவமா கலையா இருந்தா. எனக்கு அவளப் பாத்துட்டு வந்ததுல இருந்து கிறுக்குப் பிடிச்சாப்ல ஆயிருச்சு.' என்னோடக் கதைய சொல்லிகிட்டே வந்ததுல கார் ரோட் டேசன் வந்ததையே நாங்கவனிக்காம விட்டுட்டனே… 'மீதிக்கதைய நாளைக்கு வந்து கேட்டுக்கறேன்'னு சொல்லிட்டு ஓடிப்போயிட்டாப்ல அருளு. ஹும்….இனிமே பாக்கறோமோ இல்லையா. யாரு கண்டா?

அன்று மாலை அவராக அவருடையக் கதையை சொல்லத் துவங்கியதும் வேண்டாமென்று சொல்ல மனமில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தேனா இல்லை அடுத்தவர் அந்தரங்கத்தை அறிந்துகொள்ளும் ஆழ்மன எண்ணமா என்று புரியவில்லை. ஆனால் கேட்பதற்கு சுவாரசியமாக இருந்தது. அவர் மனைவி தங்கத்தை முதல் தடவை பார்த்ததும் காதல் வந்ததைச் சொன்னவர், யார் முதலில் காதலைச் சொன்னது என்பதை சொல்வதற்குள் நான் இறங்கிவிட்டேன். அடுத்து மீண்டும் ஒரு திங்கட்கிழமை காலை எதிர்பாராதவிதமாக பழனிச்சாமியை சந்தித்தபோது, பேச்சினூடாக அவர் கதையை நினைவூட்டினேன்.நான் எதிர்பார்த்த படியே இவர்தான் காதலை முதலில் சொல்லியிருக்கிறார். இருவரும் ஒரே சாதி என்பதும், திருமணம் செய்துகொள்ளும் முறையிலான உட்பிரிவுதான் என்பதும் அவருக்கு தைரியம் கொடுத்திருந்தாலும், தங்கம் என்ன சொல்லுவாரோ என்கிற தயக்கம் இருந்திருக்கிறது. அவருடன் பழகுவதற்காகவே புலவர் வீட்டில் நடக்கும் அரசியல் கூட்டங்களுக்கு விருப்பமில்லாவிட்டாலும் போய்வந்திருக்கிறார். தங்கத்திடம் கொஞ்சம் பேசிப்பழகியதும் நேரடியாக விருப்பத்தைச் சொல்லிவிட, அவர் முதலில் தயங்கினாலும் பிறகு ஒப்புக் கொண்டிருக்கிறார். தங்கத்தின் அம்மாவிடமும், அந்த புலவரிடமும் உடனே பேசி அவர்களும் இவருடையக் குடும்பத்தினரிடம் பேச வருவதாக சொல்லியிருக்கிறார்கள். எல்லாம் நல்லபடியாக நடப்பதாக தெரிந்தாலும் அப்புறம்தான் பிரச்சினை துவங்கியதாக சொன்னார். அவருடனேயே கதை கேட்டுக்கொண்டே போய்விட்டு இன்னொரு வண்டியில் திரும்பிவிடலாமா என்று யோசிக்கும்போது லோயர்பரேல் வந்து விட்டதாக அவரே நினைவுபடுத்தவும் மனமில்லாமல் இறங்கவேண்டியதாகப் போய்விட்டது.

இன்னோரு நா கால வண்டியில போவும்போது கார் ரோட் டேசன்ல அருளு நின்னுகிட்டிருந்தாப்ல. வெளிய கையாட்டுனேன். பாத்துட்டு என்னோட பெட்டியிலயே ஓடி வந்து ஏறிகிட்டாப்ல. சௌக்கியமா இருக்கீங்களான்னு கேக்றதுக்கும் புதுசா ஒரு ஆளு கெடச்சா சந்தோசமாத்தான் இருக்கு.'ஒங்க கதைய நீங்க முடிக்கவே இல்லையே'ன்னு உரிமையோட கேட்டுகிட்டு, 'இன்னைக்காவது எறங்கறதுக்குள்ள எல்லாக் கதையும் சொல்லிடுங்க'ன்னு சிரிச்சாப்ல. 'ஹும்…சொல்றேன்'னு நானுஞ்சிரிச்சேன். “தங்கத்த எனக்குப் புடிச்சிருக்குன்னு அவங்கம்மாகிட்ட நாம்பேசுன மக்யாநாளு, தங்கத்தோட அம்மாவும், அந்த புலவரும் எங்க தோட்டத்துக்கு வந்து எங்க வூட்ல பேசுன அன்னைக்குதான் எங்களுக்கு சனி புடிச்சுது. எப்பவோ செத்துப் போன எங்கப் பாட்டனுக்கு ரெண்டு சம்சாரமாம். கலியாணமான கொஞ்ச நாள்ளையே மொத சம்சாரம் தவறிப் போயிருக்கு. அப்புறம் கட்ன ரெண்டாவது சம்சாரத்துக்குக்குப் பொறந்ததுதான் எங்க அம்மாவெல்லாம். செத்துப் போன அந்த மொதக் கெழவியோட கெளைல வந்தவருதான் தங்கத்தோட அப்பா. மொறையெல்லாம் கணக்குப் பாத்தா தங்கத்தோட அப்பாவும், நானும் பங்காளி மொறையாவுது. அதாவது தங்கத்துக்கு நாஞ் சித்தப்பா மொற! பெரியவங்க வுடுவாங்களா? ரெண்டு தலமொறைக்கு முன்னாடி இருந்ததெல்லாம் கணக்குப் பண்ணவேணாம்னு அந்த புலவரு பேசறாரு. ஆனா தங்கத்தோட அம்மா அதுக்கு ஒத்துக்கவே இல்ல. அன்னைக்கு நடந்ததெல்லாம் ஒரே சண்டையா முடிஞ்சு போச்சு. அதுக்கப்புறம் ஒருநா என்னையும் தங்கத்தையும் தனியா கூப்ட்டு பேசினாரு அந்த புலவரு. ரெண்டு பேரும் வலுசா கட்டிக்கனும்னு எங்க ஆசய சொன்னோம். 'சரி ஊரு ஒத்துக்காது. வெள்ளிக்கெழம விடியக்காலைல அய்யருமலைல வச்சி தாலிய கட்டிட்டு வந்துருவோம். நானும் வர்றேன். தாலி கட்டிட்டு வந்தபிற்பாடு ஊரெதுவும் பேசாது'னு சொல்லி எங்களுக்கு தெகிரியம் சொன்னாரு. அதே மாதிரி வெள்ளிக்கெழம அய்யருமலைக்குப் போனோம்.” கதைய சொல்லிகிட்டே வந்தேன், ஆனா அன்னிக்கும் கதைய முடிக்கிறதுக்குள்ள லோயர் பரேல் டேசன் வந்துருச்சு. “அண்ணே சாயங்காலம் வந்து அந்த படிக்கட்டு பக்கத்துலயே நிக்கிறேன் . நீங்க கையாட்டுங்க உங்க வண்டியிலேயே ஏறிக்கிறேன்”னு கத்திகிட்டே ஓடிட்டாப்ல.

ஒரே சாதியில் காதலித்தும் கூட ஏதாவது ஒரு வகையில் பிரச்சினை முளைத்துவிடுகிறது. ஊருக்குத் தெரியாமல் திருமணம் என்றாரே… இறுதியில் என்னதான் நடந்திருக்கும்? போகிற வண்டியிலேயே நின்றிருந்தது என் பார்வை.மாலையில் தெரிந்துவிடப் போகிறது என்று நினைத்தபடி அலுவலகம் செல்லத் தொடங்கினேன். இங்குள்ள வங்கி அலுவலகத்துக்கு நான் வந்திருந்தது என் நிறுவனம் செய்யும் திட்டப்பணியின் தகவல்நுட்ப உதவிக்காக. முதலில் ஒரு மாதத்துக்கும்,தேவைப்பட்டால் இன்னொரு மாதம் நீட்டித்துக் கொள்ளலாம் என்ற அளவிலும் இந்த ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.. ஆனால் ஒரு மாதத்துக்குள்ளாகவே வங்கியின் தகவல்நுட்பப் பிரிவின் பிரச்சினைகள் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்ததால் ஒப்பந்தத்தை நீட்டிக்காமல் என்னை திரும்ப அழைத்துக் கொள்வதாக சனிக்கிழமை இரவே மடல் வந்திருந்தது. அடுத்த நாள் காலை டெல்லியில் உள்ள அந்த வங்கியின் தலைமை அலுவலகத்தில் நடக்கும் மற்றொரு திட்டப்பணி தொடர்பான சந்திப்புக்காக நானும் டெல்லிக்கு அழைக்கப்பட்டிருந்தேன். அன்று மதியமே டெல்லிக்கான விமான பயணச்சீட்டும் இணைக்கப்பட்டிருந்தது. மதியம் 1 மணிக்கு விமானம். வங்கியில் இருந்தவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு அறைக்குத் திரும்பினேன். மாலையில் பழனிச்சாமி என்னைத் தேடக்கூடும். நான் மும்பையைவிட்டுப் போய்விட்டேன் என்பதை அவருக்குத் தெரிவிக்காமல் வந்த குற்றவுனர்ச்சியைவிட அவர் கதையின் முடிவு என்ன என்ற குழப்பம் அதிகமாக இருந்தது. விமானத்தில் ஏறியபின்னரும் மனம் பழனிச்சாமி திருமணத்திலேயே நின்றுகொண்டிருந்தது. ஊரை விட்டே ஒதுக்கி வைத்திருப்பார்களா? இவர்களாக ஓடி வந்திருப்பார்களா? குழந்தைகளுடன் திரும்பிப் போயிருந்தால் அவர்களுடையப் பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்களா? மீண்டுமொருமுறை மும்பை வந்தால் பழனிச்சாமியை தேடிப் பிடித்து கேட்டுவிடலாம் என்ற சமாதானத்துடன் ஜன்னலில் பார்த்தேன். விமானம் மும்பையை விட்டு விலகிக்கொண்டிருந்தது. மீண்டும் ஒருமுறை மும்பைக்கு வராமலாப் போய் விடுவேன்?

அன்னைக்கு சாயங்காலம் திரும்பி வந்தப்ப லோயர் பரேல் டேசன்ல படிக்கட்டுக்குப் பக்கத்துல எட்டிப் பாத்தா அருளக் காணோம். அப்புறம் நெதம் காலைல வர்றப்ப கார் ரோட்லையும் , சாயங்காலம் போறப்ப லோயர் பரேல்லயும் எட்டிப் பாத்துகிட்டேதான் போறேன். ஒரு மாசத்துக்கு மேல ஆயிப் போச்சு. பம்பாய்ல ரெண்டு மாசம்தான் வேலன்னு சொல்லிகிட்டு இருந்தாப்ல. வேல முடிஞ்சு போயிருக்கும். போன் நெம்பரு கூட வாங்கி வச்சுக்காமப் போயிட்டேன். பம்பாய்க்கு வந்தபொறவு எங்க கதைய சொல்லியழுவக் கூட ஒரு நாதியத்துப் போனோம். தாலி கட்டிகிட்டு வந்தா ஏத்துக்குவாங்கன்னு கட்ன தாலியோட அவங்கம்மா கால்ல விழுந்துடலாம்னுதான் அய்யருமலைல தாலிகட்னகழுத்தோட ஊருக்குப் போனோம். வெளிய வந்து பாத்துட்டு வூட்டுகுள்ளப் போயிட்டாங்க அவங்கம்மா. சுத்திப்போடதாஞ் செந்தண்ணி கரச்சுட்டு வர்றதுக்கு போறாங்கன்னு நின்னுகிட்டு இருந்தோம். நடு வூட்ல தூக்குலத் தொங்குவாங்கன்னு யாரும் நெனைக்கவேயில்லியே. அன்னைக்கு ஊர்சனமெல்லாம் எங்களப் பேசாத பேச்சில்ல. அழுதழுது ஓஞ்சு போனா தங்கம். எங்கூட்டுக்கும் போகப் புடிக்காம பம்பாய்க்கு ரயிலேறி வந்து பதனஞ்சு வருசம் ஆகிப்போச்சு. சாதி சனம்னு யாருமில்லாம தனியாவே வளருதுங்க புள்ளைங்க ரெண்டும். பொறந்த ஊரு, சாதி சனம்னு இப்பதான் மனசு அல்லாடுது. இன்னொரு தடவ அருளு பம்பாய்க்கு வந்தா, வூட்டுக்குக் கூட்டிட்டுப் போய் புள்ளைங்ககிட்ட மாமான்னு சொல்லிக் காட்டனும். அருளு இன்னொருதரம் பம்பாய்க்கு வராமலாப் போயிடுவாப்ல?

பின்குறிப்புகள் :

1. இதனை வ.வா.சங்கத்தின் சங்கம்னா ரெண்டு போட்டிக்கு இணைக்கிறேன்.
2. இது தமிழ்மண நட்சத்திர வாரத்தின்போது பதிவிடுவதற்காக எழுதப்பட்டது. ஆனால் முழுமையாகாமல் இருந்தது, வவாசங்கத்தின் போட்டிக்காக முழுமையாக்கப்பட்டு பதிவிடப்பட்டுள்ளது.

Tuesday, April 29, 2008

காதல் செ(ய்)வ்வாய்



அணிகலன் இல்லாத கோபத்தில்
என் முத்தமெடுத்து அணிந்து கொள்கின்றன
உன் இதழ்கள்.

*

கண்ணில் முத்தமிட வந்தேன்.
இமை ம(ப)றித்துக்கொண்டது.

*

"ஆயிரம் முத்தங்களுடன்,
_____"
என்று கையொப்பமிட்ட கடிதங்கள் போதும்.
ஓர் இதழொப்பம் செய்.

*

கேட்டதும் கிடைக்கும் முத்தம் யாருக்கு வேண்டும்?
உன் முத்தச்சண்டையை விட
முத்தத்துக்கான சண்டையே என் விருப்பம்.

*
 
ஒரு கவிதைக்கு ஒரு முத்தமென்றாய்.
பேராசையில் நூறு கவிதைகள் நீட்டினேன்.
வெட்கத்துடன் சொல்கிறாய் -
"லூசு... குட்டி குட்டியா நூறு எழுதறதுக்கு நீளமா ஒன்னு எழுதலாம்"

Monday, April 28, 2008

இசையில்லாப் பாடல் – 1

சின்ன சின்னதாய் சிலிர்த்திடும் சில கனவுகள்
செல்ல செல்லமாய் எனக்குள்ள் சிறு சாரல்கள்
கனவுகள்…. உன் கண்கள் சேருமா?
சாரலில்… உன் இதயம் நனையுமா?காதல் பூக்கள் கண்கள் போலே பூக்க வைத்தேன்
பார்வைப் பூங்கா உந்தன் பாதை ஆக்கி வைத்தேன்
நீ வரும்வழியில்… உன் கருவிழியும்… வண்டாகுமோ… கொண்டாடுமோ(சின்ன சின்னதாய்)

காற்றைக் கூட பாடல் மூலம் உழுது வைத்தேன்
காதல் கவிதை எந்தன் இதழில் எழுதி வைத்தேன்
உன் பூவிதழும்… உன் தேனிதழும்… இசையாகுமோ… கவிசேருமோ

(சின்ன சின்னதாய்)

கனவில் வந்தாய் கன்னக் குழியில் நழுவ பார்த்தேன்
காலைப் பனியில் காதல் கலந்து மழை வார்த்தேன்
உன் கல்மனசும்… என் நிலமாகும்.... மண்வாசனை… உண்டாகுமோ

(சின்ன சின்னதாய்)

Sunday, April 27, 2008

ரெண்டு வார்த்த

"என்னைப் பத்தி ரெண்டே வார்த்தையில் சொல்லத் தெரியுமா?"

"எத்தன வேணும்? சொல்..."

"தெரிஞ்ச வரைக்கும் சொல்லுப் போதும்... எனக்குப் பிடிச்சது கிடைக்குதான்னுப் பார்க்கறேன்"

நடக்கும் பூங்கா
ஒளிரும் இசை
கைவீசும் கவிதை
ஓய்வில்லா ஓவியம்
தென்றலின் தேகம்

இதயமுள்ள இரக்கம்
பகல் நிலா
கலவரக் கண்வீச்சு
புன்னகைப் பூங்கொத்து
அன்பின் தாய்

நிலவின் நிலவு
பூக்களின் பொறாமை
இரவின் வெளிச்சம்
சிணுங்கும் சிற்பம்
பேசும் மௌனம்

மழையின் மழலை
இசையின் குரல்
காதலின் காதலி
ஐந்தடி ஹைக்கூ
நடக்கும் நதி

அழகின் அகராதி
கொஞ்சும் கோபம்
கவிதைக் கருவூலம்

"இதுல எது உனக்குப் பிடிச்சிருக்கு?"

"ம்ஹும் ஒன்னும் இல்ல"

"ஒன்னுமே இல்லையா?"

"எனக்கு ரொம்பப் பிடிச்சது ஒன்னே ஒன்னு இருக்கு. ஆனா நீ அத சொல்லல"

"அப்படியா? அப்போ உனக்குப் பிடிச்சத நீயே சொல்லு..."

"உன் காதலி!"

Thursday, April 24, 2008

அம்மா வாழ்ந்த மச்சுவீடு

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு
தாத்தா காலத்தில் கட்டப்பட்ட வீடு அது.
மச்சு வீடென்றால் எல்லோருக்கும் தெரியும்.

அத்தைப்பெண், மாமன்மகனான
அம்மாவும் அப்பாவும்
சிறுவயது முதல் விளையாண்ட வீடு.
அவர்களின் திருமணமே அந்த வீட்டில்தான் நடந்ததாம்.

அப்புறம் அப்பா காலத்தில்
தொழில் நலிவடைய, வீடு அடமானத்திற்குப் போனது.
கடைசியாக அப்பாவும் நலிவடைய
அவரைக்காப்பாற்ற வீட்டை விற்றோம்.
வீடும்போனது.
கொஞ்ச நாளில் அப்பாவும் போனார்.

நாங்கள் இந்த வாடகை வீட்டுக்கு வந்து
இருபது ஆண்டுகள் முடியப்போகிறது.
இத்தனை நாள் சேமிப்புடன், வங்கிக்கடனையும் சேர்த்து
நேற்றுதான் பழைய மச்சு வீட்டையே விலைபேசி முடித்தேன்.
மீண்டும் தான் வாழ்ந்த வீட்டுக்கே போகிற மகிழ்ச்சி அம்மாவுக்கு.

இன்று வாடகை வீட்டை காலி செய்து கிளம்பும்போது
தான் வாழ்ந்த வீட்டையே திரும்பி பார்த்தபடி வருகிறாள்
என் பன்னிரண்டு வயது மகள்.
பி.கு : இது 101% கற்பனை.

Wednesday, April 23, 2008

என்னை மட்டுமேன் நாத்திகன் ஆக்கினாய்?

நிழல் தேடி நெருங்கும்பொழுதெல்லாம்
வெயில் பொழியும் விருட்சம்
நீ.

*

நம் பிரிவைப் பற்றி அறியாமல்
வழக்கம்போல வந்து ஏமாறுகின்றன
உன் கனவுகள்.

*

கிழிக்க மனமின்றி
பத்திரப்படுத்திய உன் கடிதங்களை
வாசிக்கும்பொழுதெல்லாம் கிழிகிறது
மனம்.

*

நம் பிரிவுக்குப் பிறகு
128 முறை தூக்கியெறிந்திருக்கிறேன்
நீ பரிசளித்த பொருட்களை.
*

நீயும் தேவதைதான்.
நம் காதலும் தெய்வீகமானதுதான்.
என்னை மட்டுமேன் நாத்திகன் ஆக்கினாய்?

*

Tuesday, April 22, 2008

(enom + google) -> dreamhost & blogger -> wordpress

பிளாக்கரில் இருந்து வேர்ட்பிரசுக்கு மாறியதில் எதிர்பார்த்த அளவுக்கு சிரமம் இல்லையென்றாலும், கடைசி வரை ஓரு பதற்றம் இருக்க தான் செய்தது!

சித்திரை ஒன்று முதல் வேர்ட்பிரசில் பதியவேண்டுமென நினைத்திருந்தேன். ஆனால் முடியவில்லை. 2007 ஜனவரியில் google apps மூலமாக enom நிறுவனத்திடம் arutperungo.com தள முகவரியை பதிவு செய்துகொண்டு பிளாக்கரிலேயே பதிவெழுதிக்கொண்டு வந்தாலும், துவக்கம் முதலே வேர்ட்பிரஸ் மீது ஒரு காதல் இருந்தது. வேர்ட்பிரசுக்கு மாறவேண்டுமானால் சொந்தமாக வலையிடமும் இருக்க வேண்டும். அதற்கு ஆண்டுக்கு 3000 ரூபாய் செலவு செய்வது, மொக்கை கவுஜையெழுதும் நமக்கு கொஞ்சம் அதிகம் (கொஞ்சமா? அதிகமா?) என்று தோன்றியதால் அந்த காதல் அப்படியே காணாமல் போனது.

அண்மையில் நண்பனொருவன் dreamhost வழங்கும் promo code குறித்து சொல்லவும் அதைப்பார்த்தால், கழிவுகள் போக அதுவும் கிட்டத்தட்ட அதே செலவுதான் வந்தது. ஆனாலும் விளம்பரம் மூலம் இந்த செலவை ஈடுகட்ட முடியுமா என்று சோதித்து பார்க்க வலைப்பதிவில் விளம்பரங்கள் போட்டுப்பார்த்ததில் மாதம் இருநூறு ரூபாய் வந்தது. கணக்கு சரியாக இருக்குமென விளம்பரங்கள் மீது பாரத்தைப் போட்டு வலையிடமும் வாங்கிவிட்டேன்.

enom இடமிருந்து dreamhost க்கு தள முகவரியை மாற்றிக்கொள்ள ஐந்து நாட்களானது. அந்த சமயத்தில் dreamhostஇன் உதவி சேவை மிகச்சிறப்பாக இருந்தது என்பதைக் குறிப்பிட வேண்டும். எல்லா சந்தேகங்களுக்கும் அவர்களிடமிருந்து உடனடி பதில் மடல் கிடைத்தது.

dream host இல் வேர்ட்பிரஸ் நிறுவிக்கொள்வதும் எளிது. பொதுவாக வலையிட வழங்கிகள் தரும் cpanel வசதி இல்லையென்றாலும், அது மாதிரியான ஒரு panel முகப்பு dreamhost இல் உண்டு! மேகி நூடுல்ஸ் மாதிரி இரண்டே நிமிடத்தில் வேர்ட்பிரஸ் 2.5 நிறுவிக்கொள்ளலாம்.

முதலில் பரிசோதனைக்காக தற்காலிகமாக ஒரு தள முகவரியில் நிறுவிக்கொண்டு பிளாக்கரிலிருந்து வேர்ட்பிரசுக்கு பதிவுகளை இறக்கிப்பார்த்தேன். கரையோரத்தென்றல் பதிவுகள் ஒரு நிமிடத்தில் வேர்ட்பிரசுக்கு வந்துவிட்டன. அதே நம்பிக்கையில் அமராவதி ஆத்தங்கரை பதிவுகளை இறக்கினால், அப்போது வந்தது பிரச்சனை!

24 பதிவுகளை இறக்கியதும் வேர்ட்பிரஸ் வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிடுகிறது. அதற்கு மேல் நகரவில்லை. உதவி மன்றங்களில் தேடிப்பார்த்ததில் பதிவின் தலைப்பில் special character (தமிழில்?) இருந்தால் வேர்ட்பிரஸ் கோபித்துக்கொள்ளும் என்று சொல்லப்பட்டிருந்தது. அப்படி அந்த 25 –வது பதிவுக்கு என்னதான் தலைப்பு கொடுத்திருந்தேன் என்று பார்த்தால் நானும் ஒரு தெலுங்குப்படமும் – 2 என்று தான் கொடுத்திருந்தேன். இதில் எதுவும் special character இல்லையென்றாலும், தலைப்பில்  அந்த ‘- 2’ என்பதை நீக்கினாலும் வேலை செய்யவில்லை. கடைசி முயற்சியாக பிளாக்கரிலிருந்து அந்த பதிவையே தூக்கிவிட்டு முயற்சி செய்தபோது 24 ஐ கடந்துபோனது! மகிழ்ச்சியில் விசிலடிக்க விரலெடுக்கும்போதே 59 வது பதிவில் மீண்டும் வேர்ட்பிரஸ் களைப்படைந்து விட்டது. 60 வது பதிவு என்னவென்று பார்த்தால் ‘அழுகையோடு ஆரம்பமானது முதலிரவு - 2’ இருந்தது. அநேகமாக என் கதைகளின் இரண்டாம் பாகம் மட்டும் வேர்ட்பிரசுக்கு பிடிக்கவில்லையென்று நினைக்கிறேன்.

உதவி கேட்டு வேர்ட்பிரஸ் கொ.ப.செ. வுக்கு ஒரு மடலனுப்பினேன். அவரும் நிறைய நேரம் போராடி பார்த்து விட்டு என்ன பிரச்சனையென்று புரியவில்லையே என்று வருத்தப்பட்டார். பாவம் வேர்ட்பிரசுக்கு கெட்ட பெயர் வந்துவிடக்கூடாதே என்கிற கவலையும் அவருக்கு :) அப்படியே வேர்ட்பிரசுக்கு பிடிக்காத பதிவுகளையெல்லாம் நீக்கி கொண்டே வந்ததில் கடைசியாக 7 விக்கெட் இழப்புக்கு 192 ஓட்டங்கள் எடுத்தேன் ;) (7 பதிவுகள் நீக்கி 192 பதிவுகளை கடத்த முடிந்தது!)

ஆரம்பகட்ட சந்தேகங்களுக்கு ரவியின் விளக்கங்கள் உதவியாக இருந்தன. ஓரளவுக்கு பழக்கமானதும் நீட்சிகளைத் தேடி பயன்படுத்திப்பார்க்க ஆரம்பித்தேன். இந்த பதிவில் பயன்படுத்தப்படும் நீட்சிகளின் பட்டியல் Links என்று பக்கப்பட்டியில் உள்ளது.

அதில் எனக்கு மிகவும் பிடித்தது, Simple pie நீட்சியே. அதைப்பயன்படுத்தி உருவாக்கியதே பதிவகம். இதை செய்யும் வழிமுறையும் ரவி மன்றத்தில் இருக்கிறது.

இதுக்கு மேலயும் செய்தி வாசிக்கிற மாதிரியே என்னால பேச முடியலங்க. எப்பவும் போல பேசுவோம். வேர்ட்பிரசுக்கு மாறினதுல நான் பட்டு தெரிஞ்சிகிட்டது :

  • பிளாக்கர்ல இருந்து வேர்ட்பிரசுக்கு மாறுவதா இருந்தா தள முகவரி, வலையிடம் ரெண்டுமே ஒன்னா வாங்கிட்டு மாறிக்கனும். முதல்ல தள முகவரி மட்டும் சொந்தமா வச்சிகிட்டு ரொம்ப நாளைக்கு பிளாக்கர் சேவையவே பயன்படுத்தவேணாம். பின்னாடி வேர்ட்பிரசுக்கு மாறும்போது இதுல கொஞ்சம் பிரச்சனையிருக்கு.

  • ஒவ்வொரு இடுகைக்கும் இருக்கிற PermaLink பிளாக்கர்ல ஒருமாதிரியும் வேர்ட்பிரஸ்ல வேற மாதிரியும் இருக்கும். பிளாக்கர்ல இருந்த அதே permalink வச்சிக்க ஒரு நீட்சி இருந்தாலும் அதுவும் குழப்பம் பண்ணிடுது. ரெண்டு இடுகைக்கு ஒரே permalink கொடுத்து வச்சிடுது :(

  • நீட்சி, வார்ப்புரு ன்னு எதுவா இருந்தாலும் முதல்ல பரிசோதிக்க நிரந்தரமா ஒரு தள முகவரி (testing.arutperungo.com மாதிரி ) வச்சிக்கிறது நல்லது. அதுல ஒழுங்கா வேல செஞ்சுதுன்னா அப்பறமா உண்மையான தளத்துல பயன்படுத்திக்கலாம். (UAT – Production environment மாதிரி!)

  • உங்க பதிவ ஓடை மூலமா நெறைய பேர் வாசிக்கிறாங்கன்னா ஓடை மாறும்னு முன்னாடியே அறிவிப்பு கொடுத்துடறது நல்லது. ( Google reader மூலமா என்னோட பதிவ வாசிச்சுட்டு இருந்தவங்க 100க்கும் அதிகமானவங்க இன்னும் ஓடை முகவரிய மாத்திக்காம இருக்காங்க! )


இப்போதைக்கு இந்த மொக்க போதும். வேர்ட்பிரஸ் ஒரு கடல் மாதிரி கெடக்கு. இன்னும் கொஞ்சம் தெரிஞ்சுட்டு அப்பறமா வர்றேன்!

Saturday, April 19, 2008

மாற்றம்

எனது வலைப்பதிவுகள் பிளாக்கரில் இருந்து வேர்ட்பிரசுக்கு மாற்றப்பட்டிருக்கின்றன.புதிய முகவரிகள் – http://blog.arutperungo.com மற்றும் http://songs.arutperungo.com நன்றி.

கவிதை காதல் – வேர்ட்பிரசில் முதல் பதிவு!

‘எனக்கு உன்னைப்போல


கவிதையெழுதத் தெரியாது’ என்கிறாய்.


எனக்கும்தான் உன்னைப்போல


கவிதை பேசத் தெரியாது!


 


*


 


கல்லூரியில் கூட


யாரையும் பார்த்து தேர்வெழுதியதில்லை.


காதலில் மட்டும்


உன்னைப் பார்த்துதான் கவிதையெழுதுகிறேன்.


 


*


 


கவிதையெழுதுவதில்


என் விரல்களை வென்றுவிடுகின்றன


உன் இதழ்கள்!


 


*


 


நீ கையொப்பமிட்டு தரும்


எந்தப் புத்தகமும்


கவிதைப் புத்தகம்தான்!


 


*


 


இப்படி வாசிக்க…


ஆயிரம் கவிதைகள் இருக்கின்றன.


நேசிக்க…நீ மட்டும்தான்!


 


*


ஒருவழியா வேர்ட்பிரசுக்கு மாறி ஒரு கவுஜைப் பதிவும் எழுதியாச்சு. ப்ளாக்கர் – வேர்ட்பிரஸ் மாற்றம் நடந்தபோதும், வேர்ட்பிரஸ் நீட்சிகளைப் பயன்படுத்தத் துவங்கியபோதும் சிரமமிருந்தாலும் எப்படியோ சமாளிச்சாச்சு! வேர்ட்பிரசுக்கு மாறினது குறித்த விரிவான பதிவு ஓரிரு நாளில் பதிக்கிறேன். புது வீடு எப்படியிருக்குனு சொல்லிட்டுப்போங்க :)

Saturday, April 12, 2008

நட்பின் ஈரம் – ப்ளாகரில் எனது கடைசி பதிவு!

மூன்று நெருங்கிய தோழிகளின் பெயர்களைக் கேட்டார்கள்.
உனது பெயரை மூன்று முறை சொன்னேன்.
*
தாமதமானாலும்,
நான் வரும்வரை
காத்திருக்கிறாள் காதலி.
தாமதமானதும்,
தேடிக்கொண்டு
வீட்டுக்கே வருகிறாள் தோழி!

*
ஒருநாள் பேசாவிட்டாலும்
கோபிக்கிறது காதல்.
யுகம் கடந்து பேசினாலும்
குதூகலிக்கிறது நட்பு!

*

நெடும்பயணத்துக்கான வழியனுப்புதலில்
வண்டி கிளம்பியபின் நீ ஓடிவந்து நீட்டிய
தண்ணீர் பாட்டில் முழுக்க நிரம்பியிருந்தது
நம் நட்பின் ஈரம்!

*
தினமும் பூப் பறித்து தருகிறது காதல்.
பூஞ்செடிக்கு நீரூற்றுகிறது நட்பு!

***

கடந்த சில நாட்களாக எனது வலைப்பதிவினைத் திறப்பதில் பிரச்சினைகள் இருந்திருக்கும். இதுவரை, தளம் (domain) மட்டும் சொந்தமாக வைத்துக்கொண்டு, ப்ளாகர் சேவை மூலம் பதிவெழுதிக் கொண்டிருந்தேன். அதில் இருந்து மாறி, தனி வலையிடம் (self hosting) வாங்கி வேர்ட்ப்ரஸ் மூலம் வலைப்பதியும் முயற்சியில் இருப்பதே அதற்கு காரணம்.

http://blog.arutperungo.com மற்றும் http://songs.arutperungo.com ஆகிய URLகளில் எந்த மாற்றமுமிருக்காது. ஆனால் திங்கட்கிழமை (14-04-2008) முதல் குறைந்தது ஒரு வார காலத்துக்கு இந்த URLகள் வேலை செய்யாது. புதிய இடுகைகள் எதுவும் எழுத முடியாத இந்த ஒரு வார காலத்தில் (மட்டும்) பழைய இடுகைகளை வாசிக்க விரும்பினால் http://arutperungo.blogspot.com மற்றும் http://samsongs.blogspot.com ஆகிய URL களைப் பயன்படுத்தலாம்!

கூகிள் ரீடர் அல்லது பிற RSS reader பயன்படுத்தி செய்தியோடை மூலமாக வாசித்து வருபவர்களுக்கு :
நீங்கள் http://feeds.feedburner.com/arutperungo மற்றும் http://feeds.feedburner.com/arutperungosongs செய்தியோடைகளைப் பயன்படுத்தினால், எந்த மாற்றமும் செய்ய வேண்டியிருக்காது.
ஒருவேளை
http://arutperungo.blogspot.com/feeds/posts/default ( அல்லது http://blog.arutperungo.com/feeds/posts/default )

மற்றும்

http://samsongs.blogspot.com/feeds/posts/default ( அல்லது http://songs.arutperungo.com/feeds/posts/default ) பயன்படுத்தினால், முன்னாலிருக்கும் feedburner செய்தியோடைகளுக்கு மாறிக்கொள்ளவும்.

மின்னஞ்சல் மூலமாக வாசிப்பவர்கள், எந்த மாற்றமுமில்லாமல் தொடர்ந்து மின்னஞ்சல் மூலமாக பதிவுகளை வாசிக்கலாம்.

வேர்ட்பிரஸிற்கு மாறிய பிறகு வாசிப்பதில் ஏதேனும் பிரச்சனைகளிருந்தால் மடலிடவும் – arutperungo@arutperungo.com

நட்பின் ஈரம் – ப்ளாகரில் எனது கடைசி பதிவு!

மூன்று நெருங்கிய தோழிகளின் பெயர்களைக் கேட்டார்கள்.
உனது பெயரை மூன்று முறை சொன்னேன்.
*
தாமதமானாலும்,
நான் வரும்வரை
காத்திருக்கிறாள் காதலி.
தாமதமானதும்,
தேடிக்கொண்டு
வீட்டுக்கே வருகிறாள் தோழி!

*
ஒருநாள் பேசாவிட்டாலும்
கோபிக்கிறது காதல்.
யுகம் கடந்து பேசினாலும்
குதூகலிக்கிறது நட்பு!

*

நெடும்பயணத்துக்கான வழியனுப்புதலில்
வண்டி கிளம்பியபின் நீ ஓடிவந்து நீட்டிய
தண்ணீர் பாட்டில் முழுக்க நிரம்பியிருந்தது
நம் நட்பின் ஈரம்!

*
தினமும் பூப் பறித்து தருகிறது காதல்.
பூஞ்செடிக்கு நீரூற்றுகிறது நட்பு!

***

கடந்த சில நாட்களாக எனது வலைப்பதிவினைத் திறப்பதில் பிரச்சினைகள் இருந்திருக்கும். இதுவரை, தளம் (domain) மட்டும் சொந்தமாக வைத்துக்கொண்டு, ப்ளாகர் சேவை மூலம் பதிவெழுதிக் கொண்டிருந்தேன். அதில் இருந்து மாறி, தனி வலையிடம் (self hosting) வாங்கி வேர்ட்ப்ரஸ் மூலம் வலைப்பதியும் முயற்சியில் இருப்பதே அதற்கு காரணம்.

http://blog.arutperungo.com மற்றும் http://songs.arutperungo.com ஆகிய URLகளில் எந்த மாற்றமுமிருக்காது. ஆனால் திங்கட்கிழமை (14-04-2008) முதல் குறைந்தது ஒரு வார காலத்துக்கு இந்த URLகள் வேலை செய்யாது. புதிய இடுகைகள் எதுவும் எழுத முடியாத இந்த ஒரு வார காலத்தில் (மட்டும்) பழைய இடுகைகளை வாசிக்க விரும்பினால் http://arutperungo.blogspot.com மற்றும் http://samsongs.blogspot.com ஆகிய URL களைப் பயன்படுத்தலாம்!

கூகிள் ரீடர் அல்லது பிற RSS reader பயன்படுத்தி செய்தியோடை மூலமாக வாசித்து வருபவர்களுக்கு :
நீங்கள் http://feeds.feedburner.com/arutperungo மற்றும் http://feeds.feedburner.com/arutperungosongs செய்தியோடைகளைப் பயன்படுத்தினால், எந்த மாற்றமும் செய்ய வேண்டியிருக்காது.
ஒருவேளை
http://arutperungo.blogspot.com/feeds/posts/default ( அல்லது http://blog.arutperungo.com/feeds/posts/default )

மற்றும்

http://samsongs.blogspot.com/feeds/posts/default ( அல்லது http://songs.arutperungo.com/feeds/posts/default ) பயன்படுத்தினால், முன்னாலிருக்கும் feedburner செய்தியோடைகளுக்கு மாறிக்கொள்ளவும்.

மின்னஞ்சல் மூலமாக வாசிப்பவர்கள், எந்த மாற்றமுமில்லாமல் தொடர்ந்து மின்னஞ்சல் மூலமாக பதிவுகளை வாசிக்கலாம்.

வேர்ட்பிரஸிற்கு மாறிய பிறகு வாசிப்பதில் ஏதேனும் பிரச்சனைகளிருந்தால் மடலிடவும் – arutperungo@arutperungo.com

Wednesday, April 09, 2008

சுந்தரா ட்ராவல்ஸ்ல பயணம் பண்ணியிருக்கீங்களா?

சுந்தரா ட்ராவல்ஸ் படத்துல காமெடியெல்லாம் பாத்திருப்பீங்க. அந்த சுந்தரா ட்ராவல்ஸ் வண்டியில பயணம் பண்ணியிருக்கீங்களா? போன வெள்ளிக்கிழமை நான் அதுலதான் ஹைதராபாத்ல இருந்து சென்னைக்கு போனேன். எப்பவும் தொடர்வண்டியில, இல்லனா அரசு பேருந்துல போற நான், இந்த பயணத்த திடீர்னு முடிவு பண்ணினதுனால முன்பதிவு பண்ணாம வெள்ளிக்கிழமை இரவு வீட்ல இருந்து கிளம்பி நேரா நாம்ப்பள்ளி (தனியார் ட்ராவல்ஸ் நிறுவனங்கள் இருக்கிற இடம்) போய்ட்டேன். மூனு நாள் விடுமுறைங்கறதால எந்த ட்ராவல்ஸ்லையும் இடம் இல்ல. இருக்குதுன்னு சொல்றவங்க 1500 ரூபாய் கேட்டாங்க. மறுபேச்சு பேசாம அடுத்த வண்டிய தேடினேன். கடைசில ஒரு ட்ராவல்ஸ்ல கேபின் சீட் தான் இருக்குனு சொல்லி 450 ரூபாய்க்கு ஒரு டிக்கட் கொடுத்தாங்க. டிக்கட்ட பாத்தேன். சுந்தரா ட்ராவல்ஸ்னு போட்டிருந்தது என் கண்ணுக்கு ஷாமா சர்தார் ட்ராவல்ஸ்னு எப்படி தெரிஞ்சதுனு புரியல. 8:30 மணிக்கு வண்டி கிளம்பும்னு சொன்னாங்க. வண்டியில ஏறி உட்காந்துக்கலாம்னு போனப்ப "கேபின் சீட்டா? அப்படின்னா கடைசில ஏறு"ன்னு ஓட்டுனர் என்ன கொஞ்சம் ஓட்டுனதும், ‘கேபின் முன்னாடிதான இருக்கும். அப்புறம் எதுக்கு கடைசியில போய் ஏற சொல்றாரு?’ன்னு புரியாம பைய கைல வச்சிட்டே வண்டி பக்கத்துலையே நிக்க ஆரம்பிச்சேன்.

கொஞ்ச நேரத்துல என்ன மாதிரியே ஒரு அஞ்சாறு பேரு அதே மாதிரி கைல பைய வச்சிட்டு என் பக்கத்துல ஒதுங்க ஆரம்பிச்சாங்க. அதுல ஒருத்தர் "நீங்க மைக்ரோசாஃப்டா?" னு கேட்கிற தோரணைல "நீங்க கேபின் சீட்டா"னு கேட்டார். ஆமாம்னு சொல்லி கை குலுக்கி அறிமுகமானதுல அந்த ஆறு பேரும் அதே கேபின் சீட்டுக்குதான் வந்திருக்கோம்னு புரிஞ்சது. எல்லாரும் தமிழ் பசங்கதான். அதே சமயம் லக்கேஜ்ங்கற பேர்ல அந்த வண்டிக்கு மேல இன்னொரு வண்டி ஏறிகிட்டு இருந்தது. ஒருவழியா 9 மணிக்கு வண்டி பு..ற..ப்..ப..ட்..டு..து. ரெண்டு பேரு சரியா ஓட்டுனருக்கு பின்னாடி ஒதுங்கிட்டாங்க. நானும் இன்னொருத்தரும் எஞ்சின் மேல கால நீட்டி ஒருவழியா செட்டில் ஆனோம். ஒருத்தர் தனியா இருந்த ஒரு மடக்கு சீட்ல மடங்கி உட்காந்துக்க, இன்னொருத்தர் வண்டி உள்ள கீழ படுத்துக்கறேன்னு போயிட்டார்.

வண்டி ரொம்ப மெதுவாவே போய்கிட்டு இருந்தது. நாங்களும் சிட்டி ட்ராபிக்தான் அதுக்கு காரணம்னு தப்பா நெனச்சுட்டு இருந்தோம்.எஞ்சின் பயங்கர சூடாக ஆரம்பிச்சதால, சென்னை வரைக்கும் தீ மிதிக்க முடியாதுன்னு கால தூக்கி கைல வச்சிக்கட்டோம். அப்பறம் லேசா பொக வர ஆரம்பிச்சது. அதுக்கு போட்டியா ஓட்டுனரும் பொக விட ஆரம்பிச்சார். சன்னல தெறக்கலாம்னு பார்த்தா அத கயிறு போட்டு கட்டி வச்சிருந்தாங்க. அந்த பக்கம் கதவும் மூடியாச்சு. பேருந்து கொஞ்சம் கொஞ்சமா புகைவண்டியா மாறிட்டே வந்தது. ரெண்டர வருசமா எனக்கு பொக ஒத்துக்கறதில்ல ;) சரி, ஓட்டுனரோட டென்சன கொறச்சு சிரிக்க வைக்கலாம்னு நெனச்சு, ‘அண்ணே. ஒரே பொகையா இருக்கு. அந்த கண்ணாடிய கொஞ்சம் தெறந்து விடுங்களேன்’னு அவருக்கு முன்னாடியிருந்த கண்ணாடிய காட்டி கேட்டேன். இன்னும் கடுப்பாகி என்ன பார்த்து மொறைக்க ஆரம்பிச்சாட்டார். அமைதியே ஆனந்தம்ங்கற தத்துவம் அந்த பார்வைல எனக்குப் புரிஞ்சது!

தில்சுக்நகர் தாண்டியும் வண்டி வேகமெடுக்கவே இல்ல. ஓட்டுனர், கியர் மேல கைய வைக்கிறதும் எடுக்கிறதுமாவே இருந்தார். அவர் எதுக்கு கியர தடவிக்கொடுக்குறார்னு ஒன்னும் புரியாம பாத்துட்டு இருந்தோம். பின்னாடி இருந்த இன்னொரு ஓட்டுனர கூப்பிட்டு "என்னண்ணே கியர் மாற மாட்டேங்குது"னு ரொம்ப அப்பாவியா கேட்டார். நாங்க அப்படியே ஷாக்காயிட்டோம்! அவர் வந்து கியர அசச்சு பாத்துட்டு "நீ கிளட்ச அழுத்திப் பிடி"னு சொல்லி இவர் கியர ஆட்ட.. இல்ல கிட்டத்தட்ட ஒடைக்க ஆரம்பிச்சுட்டார். கொஞ்ச நேரத்துல "படக்"னு ஒரு சத்தம் கேட்டுச்சு. "ம்ம்ம் இப்ப விழுந்துடுச்சு பாரு"னு வில்ல ஒடச்ச அர்ச்சுனன் எஃபக்ட்ல ஒரு சிரிப்பு சிரிக்கவும்... கியர் உண்மையிலேயே கீழ விழுந்திருக்குமோனு எனக்கு பயமே வந்துடுச்சு. அப்புறம் அடிக்கடி இந்த ஓட்டுனர் கியர் மாத்துறப்பலாம் அவரக் கூப்பிட அவர் வந்து எஞ்சின் மேலயே உட்காந்து உரல்ல மாவாட்ற மாதிரி கியர் மாத்த, முதல் ஓட்டுனர் ஸ்டியரிங்க பிடிச்சு. கிளட்ச அமுக்கி ஒரு மார்க்கமா ரெண்டு பேரும் சேர்ந்து வண்டி ஓட்ட ஆரம்பிச்சாங்க. பொதுவா ரொம்ப தூரம் போற ட்ராவல்ஸ் வண்டியில ரெண்டு ஓட்டுனருங்க வண்டி ஓட்டுவாங்கனு தெரியும். ஆனா இந்த மாதிரி ரெண்டு ஓட்டுனரும் சேர்ந்து வண்டியோட்டினத பார்க்க கண்கொள்ளா காட்சியா இருந்துது.

கொஞ்ச தூரம் போனதும் மறுபடியும் "அண்ணே..."னு அந்த ஓட்டுனர் இழுத்தார். இப்ப என்னடா பிரச்சினைங்கற மாதிரி ரெண்டாவது ஆளு பார்த்தார். ‘கிளட்ச மிதிக்க முடியலண்ணே! கல்லு மாதிரி இருக்கு’னு ரொம்ப பாவமா சொன்னார். "சரி ஒரு மணி நேரம் ஆஃப் பண்ணிட்டு எடுப்போமோ?"னு ஒரு அற்புத ஐடியாவ சொன்னதும் அததான் எதிர்பார்த்த மாதிரி முதல் ஓட்டுனருக்கு முகத்துல அப்படி ஒரு சந்தோசம். கொஞ்ச தூரம் போனதும் ஒரு எடத்துல நிறுத்தினாங்க. பின்னாடி எட்டிப்பார்த்த கிளீனர், "வண்டி கால்(?) மணி நேரம் நிக்கும், டின்னர் சாப்பிட்றவங்க சாப்பிட்டுக்கலாம்"னு சத்தம் போட்டார். நடுராத்திரி 12:30 மணிக்கு பேய் கூட டின்னர் சாப்பிடாதேன்னு நெனச்சா, வண்டியில இருந்த மொத்த கூட்டமும் கொலவெறியோட ஹோட்டலுக்குள்ள போச்சு. என்னனு விசாரிச்சா வண்டி 7 மணிக்கு கிளம்பும்னு சொல்லி 6:30 க்கே வண்டியேறினவங்களாம் அவங்க எல்லாம். இருந்தாலும் அதுல ரெண்டு பேரு ஃபுல் மீல்ஸ் வாங்கி சாப்பிட்டதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். நான் வழக்கம்போல ரெண்டு டீய குடிச்சுட்டு நின்னுட்டு இருந்தேன். பக்கத்துல "போனதடவ இந்த எடத்துல 11 மணிக்கு நிறுத்தினான். அப்பவே கோயம்பேட்டுக்கு மத்தியானம் 12 மணிக்கு தான் கொண்டு போய் சேர்த்தான். இன்னைக்கு இங்கயே 12:30 ஆச்சு. எத்தன மணிக்கு நாளைக்கு போகுமோ"னு ஒருத்தர் அலுத்துக்கிட்டார். "தலைவா என்ன சொல்றீங்க?"னு பதட்டத்தோட நான் அந்த க்ரூப்புக்குள்ள நொழஞ்சேன். "ஆமாங்க இந்த வண்டி எப்பவும் 12 மணிக்கு மேலதான் சென்னை போகும்"னு அவர் அசால்ட்டா சொன்னார். "தெரிஞ்சும் இதலயே ஏன் வர்றீங்க"னு கேட்டா "எல்லாம் என் தலையெழுத்து"னு சொல்லி வருத்தப்பட்டார். "சரி விடுங்க பாஸ் இனிமே இது உங்க சோகம் இல்ல. நம்ம சோகம்"னு சொல்லி அவரத்தேத்திட்டு கொஞ்ச நேரம் மொக்கையப் போட்டுட்டு இருந்தோம். மறுபடியும் 1 மணிக்கு வண்டிய எடுத்தாங்க.

இப்போ கியர் ஸ்பெஷலிஸ்ட் வண்டியோட்ட ஆரம்பிச்சார். கொஞ்ச தூரம் போனதும் லாரிகள் அதிகமா ஜாமாகி நிக்கவும் எங்க வண்டியும் நின்னுது. மறுபடியும் ஸ்டார்ட் பண்ணா வண்டி உறுமுதே ஒழிய நகரல. இப்போ இவர் அவர கூப்பிட, அவர் பாத்துட்டு "எதுக்குண்ணே நியூட்ரல் வந்தீங்க? இப்போ ரிவர்ஸ் மாத்தி டைரக்டா செகண்டுக்கு போனாதான் நகரும்"னு அவரோட அனுபவ அறிவ பகிர்ந்துக்கவும் இந்த ஓட்டுனர் ரிவர்ஸ் கியர் போட வண்டி மெதுவா பின்னாடி நகர பின்னாடி இருந்த லாரிகள்ல இருந்து ஹாரன் சத்தம் அலற மறுபடி ப்ரேக்க போட்டு நிறுத்தினார். ரெண்டு ஓட்டுனரும் ஒருத்தர ஒருத்தர் பாத்துகிட்டாங்க. அப்புறம் ரெண்டு பேரும் செர்ந்து க்ளீனர பாத்தாங்க. நெலமைய புரிஞ்சிகிட்ட அவர் அவசர அவசரமா கீழ எறங்கி ஒரு கல்ல எடுத்து டயருக்கு பின்னாடி வைக்க, இப்போ ப்ரேக்ல இருந்து கால எடுத்துட்டு ரிவர்ஸ்ல இருந்து மெதுவா செகண்ட் கியருக்கு மாத்தி ஆக்ஸலேட்டர அமுக்க வண்டி ஒரு குதி குதிச்சுட்டு முன்னாடி போக ஆரம்பிச்சுது. என்னமோ டீசலே இல்லாம வண்டியோடற மாதிரி ரெண்டு ஓட்டுனர்ங்க முகத்துலையும் அப்படி ஒரு வெற்றிப்புன்னகை. நாங்களும் ஒரு ஆர்வத்துல கையெல்லாம் தட்டிட்டோம். அதுக்கப்புறம் வண்டியோட தாலாட்டுல நானும் தூங்கிட்டேன்.

கண்முழிச்சுப்பார்த்தப்ப மணி 6. வண்டி ஒரு டீக்கடை முன்னாடி நிறுத்தியிருந்தது. வாய் கொப்பளிச்சுட்டு மறுபடியும் ஒரு டீய குடிச்சுட்டு அங்க இருந்த ஒரு பலகைய பார்த்தா chennai - 220 KM னு போட்டிருந்தது. அடப்பாவிகளா விடிய விடிய ஓட்டி இன்னும் இவ்வளவு தூரம் போகனுமானு அலுப்போட ஏறினேன். அந்த ஓட்டுனர் டிவி சீரியல் இயக்குனரா இருந்திருப்பார் போல. 20 கிலோமீட்டர ஒரு மணி நேரமா ஓட்றார். ஒரு 9:30 மணிவாக்குல மறுபடியும் ஒரு எடத்துல வண்டி நின்னுது. ‘வண்டி கால் மணி நேரம் நிக்கும் டிபன் சாப்பிட்றவங்க சாப்ட்டுக்கலாம்’னு சத்தம் போட்டுட்டு க்ளீனர் எறங்கிட்டார். நானும் உண்மையிலேயே சாப்பிட்றதுக்காகதான் நிறுத்தியிருக்காங்கனு நம்பி எறங்கினேன். ரெண்டு ஓட்டுனர்களும் ஒரு ஸ்ப்ளண்டர்ல ஏறி எங்கேயோ போறத பார்த்ததும் மைல்டா ஒரு சந்தேகம் வந்தது. க்ளீனர கூப்பிட்டு அவங்க எங்க போறாங்கனு கேட்டா ‘அந்த க்ளட்சு ராடு ஒடஞ்சிடுச்சு. பத்த வைக்க போயிருக்காங்க’னு சொல்லி எங்களுக்கு பத்த வச்சார். ‘என்னண்ணே இதையெல்லாம் கெளம்பும்போதே பாக்கறதில்லையா’னு கேட்டா, ‘வரும்போதே ஒரு தடவ பத்த வச்சுட்டுதான் வந்தோம். மறுபடி எப்படி ஒடஞ்சுதுன்னுதான் தெரியல’னு ரொம்ப சீரியசா வருத்தப்பட்டார்.

பத்த வைக்க போன ஓட்டுனருங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரத்துல இன்னொரு மெக்கானிக்கோட திரும்பி வந்தாங்க. வந்த மெக்கானிக் அவரோட ஆயுதங்கள எடுத்துட்டு, ஒரு சாக்க விரிச்சு போட்டு வண்டிக்கடியில போனவருதான், வெளிய வர்றதுக்கான அறிகுறியே தெரியல. வண்டிக்கடியில ரெண்டு டீ, இன்னும் சில பல ஆயுதங்கள்லாம் போனதும், ஒரு முக்கால் மணிநேரம் கழிச்சு சிரிச்சுட்டே வெளிய வந்தார். ‘பத்த வச்சுட்டியே பரட்ட’ னு அவர வாழ்த்திட்டு எல்லாரும் வண்டிக்குள்ள ஏறினாங்க. இப்போ ஓட்டுனர் புது தெம்போட வண்டிய ஸ்டார்ட் பண்ணி கியர் போட்டார். ஒரு 150 மில்லி மீட்டர் நாங்க பயணம் பண்ணதும், மறுபடியும் வண்டி நின்னுடுச்சு. கெளம்பிப்போன மெக்கானிக்க மறுபடி இழுத்து சாக்க விரிச்சுப்போட்டு வண்டிக்கடியில தள்ளிவிட்டாங்க. இதுக்கு மேல இந்த வண்டி ஒரு அங்குலம் கூட நகராதுனு கேபின் மேட்ஸ்(;)) எல்லாம் முடிவு பண்ணி, லாரி புடிச்சாவது போய்டலாம்னு, லக்கேஜ எடுத்துட்டு மெயின் ரோட்டுக்கு வந்தோம். நல்லவேளையா நெல்லூர்ல இருந்து சென்னைக்கு போற ஒரு தமிழ்நாடு அரசுப்பேருந்து வரவும், அதுல ஏறி ஒருவழியா சென்னை போய் சேர்ந்தாச்சு. அண்ணன் வீட்டுக்கு போகும்போது மணி மதியம் 3:30!

திரும்பி ஐதராபாத் வர்றதுக்காக, ஞாயிற்றுக்கிழமை சாயங்காலமா கோயம்பேடு போயிருந்தேன். அங்கேயும் டிக்கட்டே கிடைக்கல. ஒருத்தர் வந்து ஐதராபாத்தா? கேபின் சீட் இருக்கு ஓக்கே வா? னு கேட்டார். என்ன ட்ராவல்ஸ்னு போர்ட பார்த்தா, ஷாமா சர்தார் ட்ராவல்ஸ்னு போட்டிருந்தது. ஆனா இப்போ எனக்கு அது ‘சுந்தரா ட்ராவல்ஸ்’னு தெளிவா தெரிஞ்சதால நான் சிக்கல. கூட வந்திருந்த நண்பர் ப்ரேம் ‘யோவ், ஏன்யா டிக்கட்ட வேணாங்கற’னு புரியாம கேட்டார். ‘தலைவா, இதுதான் நான் சொன்ன சுந்தரா ட்ராவல்ஸ், கம்முனு வாங்க’னு சொல்லி அப்பறம் வேற ட்ராவல்ஸ் ல டிக்கட் கிடைச்சு ஒருவழியா ஐதராபாத் திரும்பியாச்சு!

பின்குறிப்பு 1 : நாங்க ஏறின அரசுப்பேருந்து பாதி தூரம் போனதும், சாப்பிடறதுக்காக ஒரு எடத்துல ஒரு மணி நேரம் நிறுத்தினதையும், அப்போ நம்ம சுந்தரா ட்ராவல்ஸ் எங்களக்கடந்து போனதையும் நான் சொல்லாம விட்டதுக்கு சிறப்புக்காரணம் எதுவும் இல்லை :)

பின்குறிப்பு 2 : வர்ற திங்கட்கிழமையும் விடுமுறைங்கறதால, நாளைக்கு கிளம்பி திருப்பூர் போலாம்னு ஒரு எண்ணம் இருக்கு. இன்னும் டிக்கட் எதுவும் முன்பதிவு பண்ணாததால இந்த சுந்தரா ட்ராவல்ஸ் வண்டிகள நெனச்சாதான் பயமா இருக்கு :(

சுந்தரா ட்ராவல்ஸ்ல பயணம் பண்ணியிருக்கீங்களா?

சுந்தரா ட்ராவல்ஸ் படத்துல காமெடியெல்லாம் பாத்திருப்பீங்க. அந்த சுந்தரா ட்ராவல்ஸ் வண்டியில பயணம் பண்ணியிருக்கீங்களா? போன வெள்ளிக்கிழமை நான் அதுலதான் ஹைதராபாத்ல இருந்து சென்னைக்கு போனேன். எப்பவும் தொடர்வண்டியில, இல்லனா அரசு பேருந்துல போற நான், இந்த பயணத்த திடீர்னு முடிவு பண்ணினதுனால முன்பதிவு பண்ணாம வெள்ளிக்கிழமை இரவு வீட்ல இருந்து கிளம்பி நேரா நாம்ப்பள்ளி (தனியார் ட்ராவல்ஸ் நிறுவனங்கள் இருக்கிற இடம்) போய்ட்டேன். மூனு நாள் விடுமுறைங்கறதால எந்த ட்ராவல்ஸ்லையும் இடம் இல்ல. இருக்குதுன்னு சொல்றவங்க 1500 ரூபாய் கேட்டாங்க. மறுபேச்சு பேசாம அடுத்த வண்டிய தேடினேன். கடைசில ஒரு ட்ராவல்ஸ்ல கேபின் சீட் தான் இருக்குனு சொல்லி 450 ரூபாய்க்கு ஒரு டிக்கட் கொடுத்தாங்க. டிக்கட்ட பாத்தேன். சுந்தரா ட்ராவல்ஸ்னு போட்டிருந்தது என் கண்ணுக்கு ஷாமா சர்தார் ட்ராவல்ஸ்னு எப்படி தெரிஞ்சதுனு புரியல. 8:30 மணிக்கு வண்டி கிளம்பும்னு சொன்னாங்க. வண்டியில ஏறி உட்காந்துக்கலாம்னு போனப்ப "கேபின் சீட்டா? அப்படின்னா கடைசில ஏறு"ன்னு ஓட்டுனர் என்ன கொஞ்சம் ஓட்டுனதும், ‘கேபின் முன்னாடிதான இருக்கும். அப்புறம் எதுக்கு கடைசியில போய் ஏற சொல்றாரு?’ன்னு புரியாம பைய கைல வச்சிட்டே வண்டி பக்கத்துலையே நிக்க ஆரம்பிச்சேன்.

கொஞ்ச நேரத்துல என்ன மாதிரியே ஒரு அஞ்சாறு பேரு அதே மாதிரி கைல பைய வச்சிட்டு என் பக்கத்துல ஒதுங்க ஆரம்பிச்சாங்க. அதுல ஒருத்தர் "நீங்க மைக்ரோசாஃப்டா?" னு கேட்கிற தோரணைல "நீங்க கேபின் சீட்டா"னு கேட்டார். ஆமாம்னு சொல்லி கை குலுக்கி அறிமுகமானதுல அந்த ஆறு பேரும் அதே கேபின் சீட்டுக்குதான் வந்திருக்கோம்னு புரிஞ்சது. எல்லாரும் தமிழ் பசங்கதான். அதே சமயம் லக்கேஜ்ங்கற பேர்ல அந்த வண்டிக்கு மேல இன்னொரு வண்டி ஏறிகிட்டு இருந்தது. ஒருவழியா 9 மணிக்கு வண்டி பு..ற..ப்..ப..ட்..டு..து. ரெண்டு பேரு சரியா ஓட்டுனருக்கு பின்னாடி ஒதுங்கிட்டாங்க. நானும் இன்னொருத்தரும் எஞ்சின் மேல கால நீட்டி ஒருவழியா செட்டில் ஆனோம். ஒருத்தர் தனியா இருந்த ஒரு மடக்கு சீட்ல மடங்கி உட்காந்துக்க, இன்னொருத்தர் வண்டி உள்ள கீழ படுத்துக்கறேன்னு போயிட்டார்.

வண்டி ரொம்ப மெதுவாவே போய்கிட்டு இருந்தது. நாங்களும் சிட்டி ட்ராபிக்தான் அதுக்கு காரணம்னு தப்பா நெனச்சுட்டு இருந்தோம்.எஞ்சின் பயங்கர சூடாக ஆரம்பிச்சதால, சென்னை வரைக்கும் தீ மிதிக்க முடியாதுன்னு கால தூக்கி கைல வச்சிக்கட்டோம். அப்பறம் லேசா பொக வர ஆரம்பிச்சது. அதுக்கு போட்டியா ஓட்டுனரும் பொக விட ஆரம்பிச்சார். சன்னல தெறக்கலாம்னு பார்த்தா அத கயிறு போட்டு கட்டி வச்சிருந்தாங்க. அந்த பக்கம் கதவும் மூடியாச்சு. பேருந்து கொஞ்சம் கொஞ்சமா புகைவண்டியா மாறிட்டே வந்தது. ரெண்டர வருசமா எனக்கு பொக ஒத்துக்கறதில்ல ;) சரி, ஓட்டுனரோட டென்சன கொறச்சு சிரிக்க வைக்கலாம்னு நெனச்சு, ‘அண்ணே. ஒரே பொகையா இருக்கு. அந்த கண்ணாடிய கொஞ்சம் தெறந்து விடுங்களேன்’னு அவருக்கு முன்னாடியிருந்த கண்ணாடிய காட்டி கேட்டேன். இன்னும் கடுப்பாகி என்ன பார்த்து மொறைக்க ஆரம்பிச்சாட்டார். அமைதியே ஆனந்தம்ங்கற தத்துவம் அந்த பார்வைல எனக்குப் புரிஞ்சது!

தில்சுக்நகர் தாண்டியும் வண்டி வேகமெடுக்கவே இல்ல. ஓட்டுனர், கியர் மேல கைய வைக்கிறதும் எடுக்கிறதுமாவே இருந்தார். அவர் எதுக்கு கியர தடவிக்கொடுக்குறார்னு ஒன்னும் புரியாம பாத்துட்டு இருந்தோம். பின்னாடி இருந்த இன்னொரு ஓட்டுனர கூப்பிட்டு "என்னண்ணே கியர் மாற மாட்டேங்குது"னு ரொம்ப அப்பாவியா கேட்டார். நாங்க அப்படியே ஷாக்காயிட்டோம்! அவர் வந்து கியர அசச்சு பாத்துட்டு "நீ கிளட்ச அழுத்திப் பிடி"னு சொல்லி இவர் கியர ஆட்ட.. இல்ல கிட்டத்தட்ட ஒடைக்க ஆரம்பிச்சுட்டார். கொஞ்ச நேரத்துல "படக்"னு ஒரு சத்தம் கேட்டுச்சு. "ம்ம்ம் இப்ப விழுந்துடுச்சு பாரு"னு வில்ல ஒடச்ச அர்ச்சுனன் எஃபக்ட்ல ஒரு சிரிப்பு சிரிக்கவும்... கியர் உண்மையிலேயே கீழ விழுந்திருக்குமோனு எனக்கு பயமே வந்துடுச்சு. அப்புறம் அடிக்கடி இந்த ஓட்டுனர் கியர் மாத்துறப்பலாம் அவரக் கூப்பிட அவர் வந்து எஞ்சின் மேலயே உட்காந்து உரல்ல மாவாட்ற மாதிரி கியர் மாத்த, முதல் ஓட்டுனர் ஸ்டியரிங்க பிடிச்சு. கிளட்ச அமுக்கி ஒரு மார்க்கமா ரெண்டு பேரும் சேர்ந்து வண்டி ஓட்ட ஆரம்பிச்சாங்க. பொதுவா ரொம்ப தூரம் போற ட்ராவல்ஸ் வண்டியில ரெண்டு ஓட்டுனருங்க வண்டி ஓட்டுவாங்கனு தெரியும். ஆனா இந்த மாதிரி ரெண்டு ஓட்டுனரும் சேர்ந்து வண்டியோட்டினத பார்க்க கண்கொள்ளா காட்சியா இருந்துது.

கொஞ்ச தூரம் போனதும் மறுபடியும் "அண்ணே..."னு அந்த ஓட்டுனர் இழுத்தார். இப்ப என்னடா பிரச்சினைங்கற மாதிரி ரெண்டாவது ஆளு பார்த்தார். ‘கிளட்ச மிதிக்க முடியலண்ணே! கல்லு மாதிரி இருக்கு’னு ரொம்ப பாவமா சொன்னார். "சரி ஒரு மணி நேரம் ஆஃப் பண்ணிட்டு எடுப்போமோ?"னு ஒரு அற்புத ஐடியாவ சொன்னதும் அததான் எதிர்பார்த்த மாதிரி முதல் ஓட்டுனருக்கு முகத்துல அப்படி ஒரு சந்தோசம். கொஞ்ச தூரம் போனதும் ஒரு எடத்துல நிறுத்தினாங்க. பின்னாடி எட்டிப்பார்த்த கிளீனர், "வண்டி கால்(?) மணி நேரம் நிக்கும், டின்னர் சாப்பிட்றவங்க சாப்பிட்டுக்கலாம்"னு சத்தம் போட்டார். நடுராத்திரி 12:30 மணிக்கு பேய் கூட டின்னர் சாப்பிடாதேன்னு நெனச்சா, வண்டியில இருந்த மொத்த கூட்டமும் கொலவெறியோட ஹோட்டலுக்குள்ள போச்சு. என்னனு விசாரிச்சா வண்டி 7 மணிக்கு கிளம்பும்னு சொல்லி 6:30 க்கே வண்டியேறினவங்களாம் அவங்க எல்லாம். இருந்தாலும் அதுல ரெண்டு பேரு ஃபுல் மீல்ஸ் வாங்கி சாப்பிட்டதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். நான் வழக்கம்போல ரெண்டு டீய குடிச்சுட்டு நின்னுட்டு இருந்தேன். பக்கத்துல "போனதடவ இந்த எடத்துல 11 மணிக்கு நிறுத்தினான். அப்பவே கோயம்பேட்டுக்கு மத்தியானம் 12 மணிக்கு தான் கொண்டு போய் சேர்த்தான். இன்னைக்கு இங்கயே 12:30 ஆச்சு. எத்தன மணிக்கு நாளைக்கு போகுமோ"னு ஒருத்தர் அலுத்துக்கிட்டார். "தலைவா என்ன சொல்றீங்க?"னு பதட்டத்தோட நான் அந்த க்ரூப்புக்குள்ள நொழஞ்சேன். "ஆமாங்க இந்த வண்டி எப்பவும் 12 மணிக்கு மேலதான் சென்னை போகும்"னு அவர் அசால்ட்டா சொன்னார். "தெரிஞ்சும் இதலயே ஏன் வர்றீங்க"னு கேட்டா "எல்லாம் என் தலையெழுத்து"னு சொல்லி வருத்தப்பட்டார். "சரி விடுங்க பாஸ் இனிமே இது உங்க சோகம் இல்ல. நம்ம சோகம்"னு சொல்லி அவரத்தேத்திட்டு கொஞ்ச நேரம் மொக்கையப் போட்டுட்டு இருந்தோம். மறுபடியும் 1 மணிக்கு வண்டிய எடுத்தாங்க.

இப்போ கியர் ஸ்பெஷலிஸ்ட் வண்டியோட்ட ஆரம்பிச்சார். கொஞ்ச தூரம் போனதும் லாரிகள் அதிகமா ஜாமாகி நிக்கவும் எங்க வண்டியும் நின்னுது. மறுபடியும் ஸ்டார்ட் பண்ணா வண்டி உறுமுதே ஒழிய நகரல. இப்போ இவர் அவர கூப்பிட, அவர் பாத்துட்டு "எதுக்குண்ணே நியூட்ரல் வந்தீங்க? இப்போ ரிவர்ஸ் மாத்தி டைரக்டா செகண்டுக்கு போனாதான் நகரும்"னு அவரோட அனுபவ அறிவ பகிர்ந்துக்கவும் இந்த ஓட்டுனர் ரிவர்ஸ் கியர் போட வண்டி மெதுவா பின்னாடி நகர பின்னாடி இருந்த லாரிகள்ல இருந்து ஹாரன் சத்தம் அலற மறுபடி ப்ரேக்க போட்டு நிறுத்தினார். ரெண்டு ஓட்டுனரும் ஒருத்தர ஒருத்தர் பாத்துகிட்டாங்க. அப்புறம் ரெண்டு பேரும் செர்ந்து க்ளீனர பாத்தாங்க. நெலமைய புரிஞ்சிகிட்ட அவர் அவசர அவசரமா கீழ எறங்கி ஒரு கல்ல எடுத்து டயருக்கு பின்னாடி வைக்க, இப்போ ப்ரேக்ல இருந்து கால எடுத்துட்டு ரிவர்ஸ்ல இருந்து மெதுவா செகண்ட் கியருக்கு மாத்தி ஆக்ஸலேட்டர அமுக்க வண்டி ஒரு குதி குதிச்சுட்டு முன்னாடி போக ஆரம்பிச்சுது. என்னமோ டீசலே இல்லாம வண்டியோடற மாதிரி ரெண்டு ஓட்டுனர்ங்க முகத்துலையும் அப்படி ஒரு வெற்றிப்புன்னகை. நாங்களும் ஒரு ஆர்வத்துல கையெல்லாம் தட்டிட்டோம். அதுக்கப்புறம் வண்டியோட தாலாட்டுல நானும் தூங்கிட்டேன்.

கண்முழிச்சுப்பார்த்தப்ப மணி 6. வண்டி ஒரு டீக்கடை முன்னாடி நிறுத்தியிருந்தது. வாய் கொப்பளிச்சுட்டு மறுபடியும் ஒரு டீய குடிச்சுட்டு அங்க இருந்த ஒரு பலகைய பார்த்தா chennai - 220 KM னு போட்டிருந்தது. அடப்பாவிகளா விடிய விடிய ஓட்டி இன்னும் இவ்வளவு தூரம் போகனுமானு அலுப்போட ஏறினேன். அந்த ஓட்டுனர் டிவி சீரியல் இயக்குனரா இருந்திருப்பார் போல. 20 கிலோமீட்டர ஒரு மணி நேரமா ஓட்றார். ஒரு 9:30 மணிவாக்குல மறுபடியும் ஒரு எடத்துல வண்டி நின்னுது. ‘வண்டி கால் மணி நேரம் நிக்கும் டிபன் சாப்பிட்றவங்க சாப்ட்டுக்கலாம்’னு சத்தம் போட்டுட்டு க்ளீனர் எறங்கிட்டார். நானும் உண்மையிலேயே சாப்பிட்றதுக்காகதான் நிறுத்தியிருக்காங்கனு நம்பி எறங்கினேன். ரெண்டு ஓட்டுனர்களும் ஒரு ஸ்ப்ளண்டர்ல ஏறி எங்கேயோ போறத பார்த்ததும் மைல்டா ஒரு சந்தேகம் வந்தது. க்ளீனர கூப்பிட்டு அவங்க எங்க போறாங்கனு கேட்டா ‘அந்த க்ளட்சு ராடு ஒடஞ்சிடுச்சு. பத்த வைக்க போயிருக்காங்க’னு சொல்லி எங்களுக்கு பத்த வச்சார். ‘என்னண்ணே இதையெல்லாம் கெளம்பும்போதே பாக்கறதில்லையா’னு கேட்டா, ‘வரும்போதே ஒரு தடவ பத்த வச்சுட்டுதான் வந்தோம். மறுபடி எப்படி ஒடஞ்சுதுன்னுதான் தெரியல’னு ரொம்ப சீரியசா வருத்தப்பட்டார்.

பத்த வைக்க போன ஓட்டுனருங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரத்துல இன்னொரு மெக்கானிக்கோட திரும்பி வந்தாங்க. வந்த மெக்கானிக் அவரோட ஆயுதங்கள எடுத்துட்டு, ஒரு சாக்க விரிச்சு போட்டு வண்டிக்கடியில போனவருதான், வெளிய வர்றதுக்கான அறிகுறியே தெரியல. வண்டிக்கடியில ரெண்டு டீ, இன்னும் சில பல ஆயுதங்கள்லாம் போனதும், ஒரு முக்கால் மணிநேரம் கழிச்சு சிரிச்சுட்டே வெளிய வந்தார். ‘பத்த வச்சுட்டியே பரட்ட’ னு அவர வாழ்த்திட்டு எல்லாரும் வண்டிக்குள்ள ஏறினாங்க. இப்போ ஓட்டுனர் புது தெம்போட வண்டிய ஸ்டார்ட் பண்ணி கியர் போட்டார். ஒரு 150 மில்லி மீட்டர் நாங்க பயணம் பண்ணதும், மறுபடியும் வண்டி நின்னுடுச்சு. கெளம்பிப்போன மெக்கானிக்க மறுபடி இழுத்து சாக்க விரிச்சுப்போட்டு வண்டிக்கடியில தள்ளிவிட்டாங்க. இதுக்கு மேல இந்த வண்டி ஒரு அங்குலம் கூட நகராதுனு கேபின் மேட்ஸ்(;)) எல்லாம் முடிவு பண்ணி, லாரி புடிச்சாவது போய்டலாம்னு, லக்கேஜ எடுத்துட்டு மெயின் ரோட்டுக்கு வந்தோம். நல்லவேளையா நெல்லூர்ல இருந்து சென்னைக்கு போற ஒரு தமிழ்நாடு அரசுப்பேருந்து வரவும், அதுல ஏறி ஒருவழியா சென்னை போய் சேர்ந்தாச்சு. அண்ணன் வீட்டுக்கு போகும்போது மணி மதியம் 3:30!

திரும்பி ஐதராபாத் வர்றதுக்காக, ஞாயிற்றுக்கிழமை சாயங்காலமா கோயம்பேடு போயிருந்தேன். அங்கேயும் டிக்கட்டே கிடைக்கல. ஒருத்தர் வந்து ஐதராபாத்தா? கேபின் சீட் இருக்கு ஓக்கே வா? னு கேட்டார். என்ன ட்ராவல்ஸ்னு போர்ட பார்த்தா, ஷாமா சர்தார் ட்ராவல்ஸ்னு போட்டிருந்தது. ஆனா இப்போ எனக்கு அது ‘சுந்தரா ட்ராவல்ஸ்’னு தெளிவா தெரிஞ்சதால நான் சிக்கல. கூட வந்திருந்த நண்பர் ப்ரேம் ‘யோவ், ஏன்யா டிக்கட்ட வேணாங்கற’னு புரியாம கேட்டார். ‘தலைவா, இதுதான் நான் சொன்ன சுந்தரா ட்ராவல்ஸ், கம்முனு வாங்க’னு சொல்லி அப்பறம் வேற ட்ராவல்ஸ் ல டிக்கட் கிடைச்சு ஒருவழியா ஐதராபாத் திரும்பியாச்சு!

பின்குறிப்பு 1 : நாங்க ஏறின அரசுப்பேருந்து பாதி தூரம் போனதும், சாப்பிடறதுக்காக ஒரு எடத்துல ஒரு மணி நேரம் நிறுத்தினதையும், அப்போ நம்ம சுந்தரா ட்ராவல்ஸ் எங்களக்கடந்து போனதையும் நான் சொல்லாம விட்டதுக்கு சிறப்புக்காரணம் எதுவும் இல்லை :)

பின்குறிப்பு 2 : வர்ற திங்கட்கிழமையும் விடுமுறைங்கறதால, நாளைக்கு கிளம்பி திருப்பூர் போலாம்னு ஒரு எண்ணம் இருக்கு. இன்னும் டிக்கட் எதுவும் முன்பதிவு பண்ணாததால இந்த சுந்தரா ட்ராவல்ஸ் வண்டிகள நெனச்சாதான் பயமா இருக்கு :(

Tuesday, April 08, 2008

மழ வருது மழ வருது நெல்லு வாருங்க

மழ வருது மழ வருது நெல்லு வாருங்க
முக்காப்படி அரிசி போட்டு முறுக்கு சுடுங்க
ஏரு ஓட்ற மாமனுக்கு எண்ணி வையுங்க
சும்மா இருக்கிற மாமனுக்கு சூடு வையுங்க

போன மாதம் முத்துலெட்சுமியக்காவோட பதிவ படிச்சதும் நினைவுக்கு வந்தது இந்த பாட்டுதான். இது பள்ளிக்கூடத்துல படிச்ச மாதிரி நினைவில்ல. மழை வரும்போது வீட்ல அம்மா சொல்லிக்கொடுத்ததுன்னு நினைக்கிறேன். பள்ளிக்கூடத்துல படிச்சதுனு எடுத்துகிட்டா இந்த பாட்டெல்லாந்தான் நினைவுக்கு வருது :

அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
இலையில் சோறு போட்டு
ஈயைத் தூர ஓட்டு
உன்னைப்போல நல்லார்
ஊரில் யார் உள்ளார்?
என்னால் உனக்குத் தொல்லை
ஏதும் இங்கே இல்லை
ஐயம் இன்றி சொல்வேன்
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஒளவை சொன்ன மொழியாம்
அஃதே நமக்கு வழியாம்

o0o

நிலா நிலா ஓடிவா
நில்லாமல் ஓடிவா
மலைமீது ஏறிவா
மல்லிகைப்பூ கொண்டுவா
நடுவீட்டில் வை
நல்லதுதி செய்

o0o

அணிலே அணிலே ஓடி வா
அழகிய அணிலே ஓடி வா
கொய்யா மரம் ஏறி வா
குண்டுப் பழம் கொண்டு வா
பாதிப் பழம் என்னிடம்
பாதிப் பழம் உன்னிடம்
கூடிக் கூடி இருவரும்
கொறித்துக் கொறித்துத் தின்னலாம்

o0o

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
போகாத இடந்தனில் போக வேண்டாம்
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
சேராத இடந்தனில் சேர வேண்டாம்
செய் நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்
….அதுக்கப்பறம் மறந்து போச்சு 

மறக்காம இருக்கிற இன்னும் சில பாட்டுகள் :

கொல கொலயா முந்திரிக்கா
நரிய நரிய சுத்தி வா
கொள்ளயடிச்சவன் எங்க இருக்கான்?
கூட்டத்துல இருக்கான் கண்டுபுடி.

o0o

கண்ணாமூச்சி ரே ரே
கண்டுபுடி ரே ரே
ஊளமுட்டையெல்லாம் நீ தின்னுட்டு
நல்ல முட்டையெல்லாம் கொண்டு வா

o0o

டிக் டிக்
யார் அது?
திருடன்
என்ன வேண்டும்?
நகை வேண்டும்.
என்ன நகை?
கலர் நகை.
என்ன கலர்?
பச்ச கலர்.
…அப்பறம் எல்லாரும் பச்சக்கலர தேடி ஓடனும்!

o0o

for ( int i = 1 ; i <= no. of players ; i++)
{
Player.sing( i +“ குடம் தண்ணி ஊத்தி” + i + “பூ பூத்துது”);
}

கி கி கி இதுவும் சின்ன வயசில பாடினதுதான் ;)

நானும் மூனு பேரக்கூப்பிடனும்ல?
அண்மையில் அரைசதமடித்த
1. ஸ்ரீ மற்றும்
2. மெய் புங்காடன்
கண்ணாடி மழையில் நனைய வைக்கும்
3. எழில் பாரதி

மழ வருது மழ வருது நெல்லு வாருங்க

மழ வருது மழ வருது நெல்லு வாருங்க
முக்காப்படி அரிசி போட்டு முறுக்கு சுடுங்க
ஏரு ஓட்ற மாமனுக்கு எண்ணி வையுங்க
சும்மா இருக்கிற மாமனுக்கு சூடு வையுங்க

போன மாதம் முத்துலெட்சுமியக்காவோட பதிவ படிச்சதும் நினைவுக்கு வந்தது இந்த பாட்டுதான். இது பள்ளிக்கூடத்துல படிச்ச மாதிரி நினைவில்ல. மழை வரும்போது வீட்ல அம்மா சொல்லிக்கொடுத்ததுன்னு நினைக்கிறேன். பள்ளிக்கூடத்துல படிச்சதுனு எடுத்துகிட்டா இந்த பாட்டெல்லாந்தான் நினைவுக்கு வருது :

அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
இலையில் சோறு போட்டு
ஈயைத் தூர ஓட்டு
உன்னைப்போல நல்லார்
ஊரில் யார் உள்ளார்?
என்னால் உனக்குத் தொல்லை
ஏதும் இங்கே இல்லை
ஐயம் இன்றி சொல்வேன்
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஒளவை சொன்ன மொழியாம்
அஃதே நமக்கு வழியாம்

o0o

நிலா நிலா ஓடிவா
நில்லாமல் ஓடிவா
மலைமீது ஏறிவா
மல்லிகைப்பூ கொண்டுவா
நடுவீட்டில் வை
நல்லதுதி செய்

o0o

அணிலே அணிலே ஓடி வா
அழகிய அணிலே ஓடி வா
கொய்யா மரம் ஏறி வா
குண்டுப் பழம் கொண்டு வா
பாதிப் பழம் என்னிடம்
பாதிப் பழம் உன்னிடம்
கூடிக் கூடி இருவரும்
கொறித்துக் கொறித்துத் தின்னலாம்

o0o

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
போகாத இடந்தனில் போக வேண்டாம்
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
சேராத இடந்தனில் சேர வேண்டாம்
செய் நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்
….அதுக்கப்பறம் மறந்து போச்சு 

மறக்காம இருக்கிற இன்னும் சில பாட்டுகள் :

கொல கொலயா முந்திரிக்கா
நரிய நரிய சுத்தி வா
கொள்ளயடிச்சவன் எங்க இருக்கான்?
கூட்டத்துல இருக்கான் கண்டுபுடி.

o0o

கண்ணாமூச்சி ரே ரே
கண்டுபுடி ரே ரே
ஊளமுட்டையெல்லாம் நீ தின்னுட்டு
நல்ல முட்டையெல்லாம் கொண்டு வா

o0o

டிக் டிக்
யார் அது?
திருடன்
என்ன வேண்டும்?
நகை வேண்டும்.
என்ன நகை?
கலர் நகை.
என்ன கலர்?
பச்ச கலர்.
…அப்பறம் எல்லாரும் பச்சக்கலர தேடி ஓடனும்!

o0o

for ( int i = 1 ; i <= no. of players ; i++)
{
Player.sing( i +“ குடம் தண்ணி ஊத்தி” + i + “பூ பூத்துது”);
}

கி கி கி இதுவும் சின்ன வயசில பாடினதுதான் ;)

நானும் மூனு பேரக்கூப்பிடனும்ல?
அண்மையில் அரைசதமடித்த
1. ஸ்ரீ மற்றும்
2. மெய் புங்காடன்
கண்ணாடி மழையில் நனைய வைக்கும்
3. எழில் பாரதி