Friday, December 28, 2007

ஒன்றில் நான்கு ( 4 in 1)

கல்லூரி – பாலாஜி சக்திவேலின் படம் என்பதால் கொஞ்சம் அதிகமான எதிர்பார்ப்போடு போனேன். நாயகியைத் தவிர மற்ற அனைத்து நடிக, நடிகையர்களும் புதுமுகமாம். ஆனால் எல்லோருமே நம்மோடு பழகிய பழைய முகங்கள் போலவே இருப்பது இயல்பு. ஏழ்மைப் பின்னணியில் இருந்து கல்லூரிக்குப் படிக்க வரும் அந்த பள்ளி கால நண்பர்களை, தம் வீட்டுத் துயரங்களை மறந்தும் சிரிக்க வைக்கிறது அவர்களுக்கிடையேயான நட்பு. பயணம், உணவு, துயரம், நெருக்கடி என எல்லா சூழலிலும் இணைபிரியாத அந்த நட்பு வட்டத்துக்குள் இழுக்கப்பட்டு அவர்களுக்குள் ஒருத்தியாக மாறுகிறாள், பணக்கார பின்னணியுடன் வரும் நாயகி. நாயகியாகவும் மற்ற பாத்திரங்களைப் போலவே இயல்பான ஒரு தமிழ்முகத்தையே நடிக்க வைத்திருந்தாலும் இந்தத் திரைப்படம் இப்போதிருக்கும் தரத்திலிருந்து எந்தவிதத்திலும் குறைந்திருக்காது என்பது என் எண்ணம். நட்புக்கும் காதலுக்கும் இடையில் நாயகனும், நாயகியும் தவித்துக்கொண்டிருக்க, படம் கல்லூரி காலநிகழ்வுகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. நாயகி தோழியிடம், நாயகன் மீதான காதலை வெளிப்படுத்துகையில் பொசுக்கென கிளைமேக்ஸ் வந்து கதை முடிகிறது. ‘காதல்’ படத்தின் கிளமேக்ஸ் காட்சியில் அழுகை ஓவர்டோசாக இருந்தது. அதனைத் தவிர்க்க நினைத்தோ என்னவோ இதில் கிளைமேக்ஸில் அந்த காட்சிக்குரிய அழுத்தம் இல்லாமலிருப்பதாக எனக்குப் பட்டது. தனித் தனியாக எல்லாம் சரியாக இருப்பது போலத் தோன்றினாலும் ஏதோ ஒன்று குறைவது போல இருக்கிறதே என்று யோசிக்கும்போது, நண்பன் சொன்னான் – ‘மச்சான்… மொதல்ல கிளைமேக்ச முடிவு பண்ணிட்டு, அப்புறம் கதையெல்லாம் யோசிச்சிருப்பாங்களோ?’ இருக்கலாம். படம் முடிந்த பிறகும் நினைவில் நிற்கும் கதாபாத்திரங்கள் - கயல்விழியும், நாயகனின் தங்கையும்.


*

பில்லா – பூவெல்லாம் கேட்டுப் பார் படத்திற்குப் பிறகு இதுதான் திரையரங்கம் சென்று பார்க்கும் அஜித்தின் படம். பில்லாவாக வரும் அஜித் நடந்தார், சூட்கேஸ் மாற்றினார், சுட்டார், கூலிங் கிளாஸ் கழற்றிப் பேசினார், மீண்டும் நடக்க ஆரம்பித்து விடுகிறார். பில்லாவாக மாறும் வேலு வந்தபிறகுதான் படத்தில் கொஞ்சம் கலகல. அதிலும் பிரபுவை அவர் கலாய்ப்பது கலகலகல. படம் ரிச்சாக வந்திருக்கிறது என்று வலைப்பதிவில் படித்திருந்தது உண்மைதான். பிரம்மாண்டம் என்ற பெயரில் ஒரு செட்டுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து எடுப்பதற்குப் பதில் இப்படி எடுக்கலாம். நயனைப் பற்றி எதுவும் சொல்லப் போவதில்லை; வெள்ளித் திரையில் காண்க :) முக்கியமாக பின்னணி இசையும், ஒளிப்பதிவும் நன்றாக இருந்தன. கடைசி வரை படத்தில் நமீதாவை எதற்கு சேர்த்தார்கள் என்று புரியவில்லை. மொத்தமாகப் பார்த்தால் கொடுத்த காசுக்கு பாதகமில்லை.

*

நீலம் – சுனாமி குறித்து அறிவுமதி அவர்கள் இயக்கிய குறும்படம். இப்போதுதான் பார்த்தேன். பத்து நிமிடங்களுக்கும் குறைவான கால அளவில் அத்தனைப் பெரிய இழப்பின் வலியைச் சொல்லியிருக்கிறார். ஒற்றைப் பனைமரம் நிற்கும், காகம் கரையும் ஒரு கடற்கரை. கடலை நோக்கி நடந்து வரும் சிறுவன் + சிறுவனை நோக்கி வரும் கடலைலகள் என இரண்டு காட்சிகள். சோகம் அப்பிய முகத்துடன் நிற்கும் சிறுவன் கடலையேப் பார்த்துக் கொண்டிருக்கிறான். பிறகு எதனையோ கண்டு கொண்டவனாய் ஓடிப்போய் ஓரிடத்தில் மணலைத் தோண்டி உள்ளிருந்து ஒரு நண்டை எடுக்கிறான். அதனிடம் ‘எங்க அம்மாவப் பாத்தியா? நீ தான் தெனமும் கடலுக்குள்ள போயிட்டு வர்றல்ல. ஒனக்குத் தெரியும். சொல்லு எங்கம்மாவ பாத்தியா?’ என அழுகிறான். பின் மணலிலும் படுத்துக்கொண்டு மணலை அணைத்தபடி புலம்பியழுவதுடன் படம் முடிகிறது.கடலும், சிறுவனும், நண்டும் மட்டுமே நடித்திருக்கிறார்கள். சிறுவனாக அரவிந்த் பச்சானின் நடிப்பு சிறப்பாக இருந்தது. மண்ணுக்குள் புதைந்த நண்டை தோண்டியெடுத்து அதனைப் பார்த்து அவன் புலம்பியழும்போதும், மணலை அணைத்துக் கொண்டு அழும்போதும் நமக்கு துக்கம் தொண்டைக்குள் உருள்கிறது. அதற்கேற்றாற்போல் நிருவின் இசையும் சோகத்தைப் பின்னணியில் இசைக்கிறது. ஒளிப்பதிவு - தங்கர்பச்சான். சுனாமி வந்து மூன்றாண்டுகளுக்குப் பின்னும் அதன் பாதிப்பு இன்னும் இருக்கதான் செய்கிறது :(


*

மறைபொருள் – பொன்.சுதா என்பவர் இயக்கியிருக்கும் குறும்படம். வசனங்கள் ஏதுமில்லை. ஒரு வீட்டின் அறைக்குள் ஓர் இளம்பெண்ணைக் காண்பிக்கிறார்கள். குளித்துவிட்டு வந்து அலமாரியில் இருக்கும் உடைகளில் பிடித்தமான ஒன்றை வெகு நேரம் தேடியெடுக்கிறார். கண்ணாடி முன் நின்று உடையைத் தன்மேல் வைத்துக்கொண்டு நன்றாக இருக்கிறதா என பார்த்துக் கொள்கிறார். பிறகு அந்த உடையை அணிந்துகொண்டபின் கண்ணாடி முன் நின்றபடி தலைவாருகிறார். கண்மையிடுகிறார். நகப்பூச்சு பூசிக்கொள்கிறார். பவுடர் அடித்துக் கொள்கிறார். எல்லா ஒப்பனைகளையும் முடித்துவிட்டு அலமாரியிலிருக்கும் அதனை எடுத்து உடுத்திக் கொள்கிறார். இது வரை விருப்பத்துடன் அணிந்துகொண்ட உடை + ஒப்பனைகளை மறைத்தபடி திரையென விழுகிறது அந்த பர்தா. எல்லாம் மறைக்கப்பட்டு பெண்ணின் கண்கள் மட்டும் கேமராவின் பார்வையில் தெரிகின்றன. அதனுடன் முடிகிறது படம்.


*

ஒரு நினைவூட்டல் – சர்வேசனின் நச்சுனு ஒரு கதை போட்டியில் பங்கு கொண்டவர்களின் எண்ணிக்கை 57. அதற்கான வாக்கெடுப்பு மூன்று கூர்களாகப் பிரித்து சர்வேசன் வலைத்தளத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதுவரை பதிவான மொத்த வாக்குகள் 57 கூட தொடவில்லையாம். கதைகளை எழுதியவர்கள் + வாசித்தவர்கள் அனைவரும், நீங்கள் ரசித்த கதைக்கு மறக்காமல் வாக்களியுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Friday, December 21, 2007

எவனா இருந்தா எனக்கென்ன?

தலைப்ப பார்த்ததும் யாரும் திட்ட வந்துடாதீங்க. பேர் வைக்கிறதுக்காக நம்ம மக்கள் எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்க பாருங்க. காங்கேயம் பக்கத்துல ஒரு டீக்கடையோட பேரு ‘அடேங்கப்பா’ டீஸ்டால். ஒரு தடவை மதுரை போற வழியில ‘திடீர் உணவகம்’னு ஒரு கடை பார்த்தேன். ஹைதரபாத் வந்த பின்னாடி இந்த மாதிரி பேரெல்லாம் சாதாரணம்னு தோண ஆரம்பிச்சுடுச்சு. சென்னைல ஒரு டைடல் பார்க், பெங்களூருல ஒரு எலக்ட்ரானிக்ஸ் சிட்டி மாதிரி இங்க ‘ஹைடெக் சிட்டி’ னு ஒன்னு இருக்கு. அதோட தாக்கம் அதிகமாகி நெறைய இடங்கள் ல பார்த்தா ‘ஹைடெக் சலூன்’, ‘ஹைடெக் ரெஸ்டாரண்ட்’, ‘ஹைடெக் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்’ னு ஹைதராபாத்தே இப்போ ஹைடெக் மயமாகிட்டு வருது :). படத்துக்கு பேரு வைக்கிறதுலையும் இங்க ஒருத்தர் கலக்கறார். ‘இதுதாண்டா போலீஸ்’ புகழ் டாக்டர் ராஜசேகர் தான். ‘எவனா இருந்தா எனக்கென்ன?’ னு ஒரு படம் வந்து பட்டயக்/பயத்த கிளப்புச்சாம். சமீபத்துல கூட ‘உடம்பு எப்படியிருக்கு’னு ஒரு படம் வந்துச்சே! அப்புறம் ஹைதராபாத் பிரியாணிக்கு பேர் போன ஊருங்க… எந்தளவுக்குன்னா, இங்க ஒரு தெலுங்கு பண்பலைல ஒரு இரவு நிகழ்ச்சியோட பேரு – மிட்நைட் பிரியாணி :)

*

முன்னலாம் தெலுங்குப் படம் பார்த்தா நக்கல் பண்ணிட்டே பார்க்கிறதுக்கு நல்லாருக்கும். அதுக்காகவே வாரம் ஒரு படம்னு குறி வச்சு பாத்துட்டு இருந்தோம். ( ஆனா அதுவே பழக்கமாகி இப்போ என்னையே அறியாம தெலுங்குப் படத்த ரசிக்க ஆரம்பிச்சுட்டனோன்னு ஒரு பயம் வந்துடுச்சுங்கறது வேற விசயம் ) போன மாசம் விஜயதசமினு ஒரு படத்துக்கு நண்பன கூப்பிட்டப்போ அவன் வர முடியாதுனு சொல்லவும் சரி சிங்கம் சிங்கிளாதாண்டா போகும்னு நான் மட்டும் போய் அசிங்கமானதுதான் மிச்சம். அந்த போஸ்டர்ல அந்த ஹீரோ(?) பட்டாச சுத்தினப்பவே நான் புரிஞ்சிருக்கனும். அது ‘சிவகாசி’யோட ரீமேக். விஜய் படத்த எல்லாம் போஸ்டர்ல கூட பாக்கக்கூடாதுனு தீர்மானம் பண்ணி வச்சிருந்தவன, அத தெலுங்குல ரீமேக் பண்ணி தியேட்டர்ல வந்து பாக்க வச்சிட்டாங்க. அடுத்தவாரம் ஸ்டேட்ரவுடி னு ஒரு படம் வந்துச்சு. சரி பேர்லையே ஒரு டெரர் இருக்குதே, இது பக்கா தெலுங்குப் படமாதான் இருக்கும்னு நெனச்சு, தூக்கம் வருதுனு சொன்ன நண்பனையும் இழுத்துட்டுப் போனா அது நம்ம ‘எதிரி’யோட ரீமேக் :( விக்ரமாதித்யன் மாதிரி நானும் விடாம அடுத்த வாரமும் போனேனே டக்கரி னு ஒரு படத்துக்கு! படம் பேரே டக்கரா இருக்குதுல்ல? ஆனா பாருங்க அதுவும் நம்ம ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படத்தோட ரீமேக். இவ்வளவு டேமேஜான பின்னாடியும் தெலுங்குப் படம் பாக்க போறதுக்குக் காரணம் ‘கோதாவரி’ புகழ் சேகர் கம்முலாவோட சமீபத்திய ‘ஹேப்பி டேஸ்’, சண்டை, தனி காமெடி ட்ராக் எதுவும் இல்லாம, வந்த சுமாரான திகில் படமான ‘மந்த்ரா’ மாதிரியான படங்கள் தான்!

*

கொஞ்ச நாள் முன்னாடி பெங்களூர்ல இருந்து சேலத்துக்குப் போறதுக்கு புதுசா விட்டிருக்கிற தமிழ்நாடு பேருந்துல ஏறினேன். காசு அதிகம் தான். சரி சீக்கிரம் கொண்டு போய் சேர்த்துடுவாங்கன்னு அதுல ஏறிட்டேன். ஓசூர் தாண்டறதுக்குள்ள 15 பேருந்து, 23 லாரி, கணக்கு வழக்கு இல்லாம காருங்கனு எங்க பேருந்த முந்திகிட்டு போய்கிட்டு இருக்கு. கண்டக்டர்கிட்ட கேட்டேன் 'அண்ணே 60 ரூவா கூட வாங்குறீங்களே கொஞ்சம் வேகமா போகக்கூடாதா? டவுன் பஸ்செல்லாம் முந்திகிட்டு போகுதே' அப்படின்னு. அவர் என்ன சொன்னார் தெரியுங்களா? 'தம்பி இது சொகுசுப் பேருந்து! விரைவு பேருந்து கிடையாது! நம்ம வண்டி சொகுசாதான் போகும். வேகமா எல்லாம் போகாது' னு சொல்லிட்டார். அதுக்கப்புறம் நான் எதுவும் பேசாம சன்னல்ல வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சுட்டேன் :(

*

அதேமாதிரி தீபாவளிக்கு ஊருக்குப் போகும்போது சேலத்துல இருந்து கரூர் பேருந்துல ஏறி, இடப்பக்கம் இருக்கிற ரெண்டு பேர் இருக்கைல தனியா உட்காந்திருந்தேன். கொஞ்சம் நேரம் கழிச்சு ஏறின ஒரு ஒன்பதாவது/பத்தாவது படிக்கிற பொண்ணும் அவங்க அம்மாவும், உட்கார இடமில்லாம பாத்துட்டே இருந்தாங்க. அந்த பொண்ணு தனியா உட்காந்திருந்த என்ன பார்த்து, பக்கத்து இருக்கைல மாறி உட்கார சொல்லிட்டா. எனக்கு ஒரே வருத்தமா போயிடுச்சு. இடம் மாறி உட்காரனுமேங்கறதுக்காக இல்ல; என்னை அந்த பொண்ணு அப்படி கூப்பிட்டதாலதான். அட ‘அண்ணா’ னு கூப்பிட்டிருந்தா கூட சந்தோசப் பட்டிருக்கலாம். ‘அங்கிள்’ னு கூப்பிட்டுட்டாளே. இந்த கண்ணாடிய கழட்டிட்டு ஆறு மாசத்துக்கு முன்னாடி வாங்கி தொடாமலே வச்சிருக்கிற காண்டெக்ட் லென்சதான் இனிமே போடனும்!

*

இப்போ இந்த மொக்கையெல்லாம் எதுக்குனு நீங்க கேட்க வர்றது புரியுது. கிருஸ்துமஸ் விடுமுறைக்காக இன்னைக்கு சென்னை கிளம்பறேன். (முடிந்தால் சென்னை நண்பர்களைச் சந்திக்கனும். தொடர்புக்கு - 09948645533) ஒரு நாலு நாள் வலைப்பக்கம் வர முடியுமான்னுத் தெரியல. அதான் சர்வேசன் போட்டியையும் அதுக்கு நான் எழுதின கதையையும் நினைவூட்டுவதற்காகதான் இந்த மொக்கைப் பதிவு :-)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Tuesday, December 18, 2007

சென்னைக் காதலும், திருச்சிக் காதலும்

சென்னைக் காதலும், திருச்சிக் காதலும்

“food court போகலாம் வர்றீங்களா?”

பக்கத்து கியூபிக்களிலிருந்து அவன் கேட்டதும் ‘ஓ போலாமே’ என்றவாறு கிளம்பினாள்.ட்ரெயினிங்கில் ஒரே பேட்சில் இருந்தபோது அவர்களுக்குள் ஆரம்பித்த பழக்கம் மூன்றாண்டுகளாக நீடிக்கிறது. கோவையில் ஒரு கல்லூரியில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் முடித்து வந்த அவனுக்கும், மதுரையில் ஒரு மகளிர் கல்லூரியில் MCA முடித்து வந்த அவளுக்கும் எதிர் பால் நட்பு கொள்ள இங்கு வந்துதான் முதல் வாய்ப்பு. இவர்கள் பேட்சில் இருந்த பலரும் வேறு நிறுவனங்கள்/ஆன்சைட் என்று கிளம்பிவிட நிறுவனத்தின் சென்னை கிளையில் இவர்கள் பேட்சில் மிஞ்சியிருந்தது அவர்களிருவரும்தான் என்பதும் அவர்களுக்குள் நெருக்கம் கூடுவதற்கு ஒரு காரணம். ஒன்றாக சாப்பிடப் போவது, தாமதாமானால் அவளைக் கொண்டு போய் விடுதியில் விடுவது என்று ஆரம்பித்து தீபாவளிக்கு துணி தேர்வு செய்யக்கூட அவன் தேவைப்படும் நிலை வரை வந்த பின்னும், பேச்சில் மட்டும் இன்னும் ‘வாங்க போங்க’ தான். நட்பைத் தாண்டி எப்பொழுதோ அவனைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டோம் என்பதை அவள் உணர்ந்தே இருந்தாலும் இன்னும் அதனை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை, அவ்வளவே. அவனே சொல்லட்டும் என்று காத்திருந்தவளை, முதல்நாள் இரவு வீட்டிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பின் திருமணப் பேச்சு, விரைவுபடுத்தியிருந்தது. இப்பொழுதே கேட்டுவிடுவது என்ற முடிவோடு அவனுடன் நடந்தாள்.

‘தப்பா நெனச்சுக்க மாட்டீங்கன்னா நீங்க என்ன காதலிக்கிறீங்களானு நான் தெரிஞ்சக்கலாமா?’
‘ம்ம்ம்…ஆமா காதலிக்கிறேன்’
‘அப்புறம், இவ்ளோ நாளா எதுவுமே சொல்லல’
‘அதிருக்கட்டும். நீங்க என்னக் காதலிக்கிறீங்களா’
‘ம்ம்ம்’
‘நீங்களும் ஏன் எதுவுமே சொல்லல’

நெடுநேரத்திற்கான ஓர் உரையாடல் மிக எளிதாக துவங்கியிருந்தது.

*

திருச்சி நகருக்கு வெளியே இருந்த அந்தக் கல்லூரியில் எந்த அமர்க்களமுமில்லாமல் எளிமையாக நடந்து கொண்டிருந்தது முதலாமாண்டு புதிதாக சேரும் மாணவர்களுக்கு நடத்தப்படும் வரவேற்பு நிகழ்ச்சி. மூத்த மாணவர்களும் குழுமியிருந்த அந்தக் கூட்டத்தில் இரண்டாமாண்டு படிக்கும் அவள் மட்டும் தனியாக சுரத்தில்லாமல் நின்றிருந்தாள். கல்லூரி நிர்வாகிகளின் வழக்கமானப் பேச்சு நடந்து கொண்டிருந்தது. அவளுக்கு தன்னை யாரோ பார்த்துக் கொண்டிருப்பது போலவே ஓர் உணர்வு வர சுற்றும் முற்றும் பார்த்தாள். பக்கத்தில் மேடையைப் பார்த்தபடி அவள் தோழிகள் மட்டுமே நின்றிருந்தனர். மீண்டும் அதே போலொரு உணர்வெழுந்து அவள் வலப்புறம் திரும்பிய போது புதிய மாணவர்கள் பக்கமிருந்த ஒரு தலை தன்னைத் திருப்பிக் கொண்டது. அவள் அவன் முதுகையே பார்த்தபடியிருக்க, கொஞ்ச நேரத்தில் அவன் தன் முகத்தை அவள் பக்கம் மெதுவாக திருப்பியதும் அவளுக்குள் வேகமாக அதிர்ச்சி பரவ ஆரம்பித்தது.

*

அவனிடம் காதலைப் பகிர்ந்துவிட்ட மகிழ்ச்சியிருந்தாலும், வீட்டில் எப்படி சொல்லுவது என்கிற குழப்பத்தோடு இருந்தவளை அன்று மாலை மெரினா கடற்கரைக்கு அழைத்துச் சென்றான்.
‘எனக்கு எங்க வீட்ல எப்படி சொல்றதுன்னுதான் பயமா இருக்குங்க. எங்கப்பா வேற சீக்கிரமா என் கல்யாணத்த முடிச்சிடனும்னு தீவிரமா மாப்பிள்ள தேடிட்டு இருக்கார்’

‘இப்போதான மாப்பிள்ள தேட ஆரம்பிச்சிருக்காங்க. ஜாதகமெல்லாம் பொருந்தி நல்ல வரம் அமையறதுக்கு எப்படியும் இன்னும் ஒரு வருசம் ஆகிடும். அதுக்குள்ள சொல்லிடலாம்’

‘ப்ச். புரியாமப் பேசாதீங்க. இந்த மார்ச்சுக்குள்ள எனக்கு கல்யாணம் பண்ணனும்னு ஜாதகத்துல இருக்காம். அதனால இன்னும் ரெண்டு மாசத்துக்குள்ள முடிச்சிடனும்னு எங்கப்பா சொல்லிட்டு இருக்கார். இந்த வாரம் நான் வீட்டுக்குப் போகும்போது சொல்லிடலாம்னு இருக்கேன். ஆனா வேற ஜாதினு தெரிஞ்சதும் எங்கப்பா கோபப்படறதையோ, எங்கம்மா அழறதையோ என்னாலத் தாங்க முடியாது. அதான் உங்களையும் வீட்டுக்கு கூட்டிட்டுப் போகலாமானு யோசிக்கிறேன்’

‘இங்க பாரு. உங்க அப்பா கிட்ட நேர்ல வந்து பேசறதுல எனக்கு எந்தத் தயக்கமுமில்ல. ஆனா அதுக்கு முன்னாடி மொதல்ல எங்க வீட்ல சொல்லி பெர்மிஷன் வாங்கிக்கறது நல்லதுனு நெனைக்கிறேன். எனக்கு இப்போதான் இருபத்தஞ்சு வயசு முடிஞ்சிருக்கு இன்னும் ஒரு வருசம் போனாதான் எங்க வீட்ல இந்தப் பேச்சே எடுக்க முடியும். அதனாலதான் சொல்றேன். நீ எப்படியாவது உங்க வீட்ல கல்யாணத்த மட்டும் இன்னும் ஒரு வருசம் தள்ளிப் போடு. மீதியெல்லாம் நல்லதா நடக்கும்’

அவள் செல்பேசி சிணுங்கியது. அவளுடைய அப்பாதான்.
‘சொல்லுங்கப்பா’
‘நல்லாருக்கியாம்மா?’
‘நல்லாருக்கேன்ப்பா. அம்மா எப்படியிருக்காங்க’
‘ம்ம்ம் நல்லாருக்கா. அப்புறம் இந்த வாரம் ஊருக்கு வந்துட்டுப் போம்மா. ஒரு வரன் வந்திருக்கு. ஞாயித்துக்கிழம பொண்ணு பாக்க வர்றோம்னு சொல்லிட்டாங்க. நானும் சரினு சொல்லியிருக்கேன்’

*

கல்லூரி ஆரம்பித்து மூன்று மாதமாய் அவன், அவளிடம் பேசுவதற்கு முயற்சி செய்வதும் அவனைப் பார்த்தாலே அவள் விலகிப் போவதும் தொடர்ந்தபடியிருந்தது. அவளைக் காலையில் வந்து விடுவதற்கும், மாலையில் வந்து அழைத்துப் போவதற்கும் அவளுடைய அப்பா வந்துவிடுவதால், விடுதியில் தங்கியிருந்த அவனுக்கு அவளைத் தனியாக சந்திக்க கல்லூரி மட்டுமே ஒரே இடமா இருந்தது. ஆனால் அதையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் எல்லா வகுப்புகளும் அசைன்மெண்டிலும், தேர்விலும் பின்னப்பட்டிருந்தன. டீ, லஞ்ச் ப்ரேக் எதற்கும் அவள் கேண்டீன் பக்கம் வருவதில்லை. அவள் விலகலைப் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவன் அன்று லஞ்ச் ப்ரேக்கில் அவள் வகுப்புக்குள் நுழைந்தான். அப்போதுதான் சாப்பிட்டு முடித்திருந்தாள்.
‘ஏன் இப்படி லூசு மாதிரி பண்ணிக்கிட்டு இருக்க? உன் கூட இருக்கனும்னுதான் இந்த காலேஜ்லயே வந்து சேர்ந்தேன். என் கூட ஒரு பத்து நிமிசம் பேசக் கூட உனக்கு விருப்பமில்லையா?’
கண்ணீர் வர வர அதனைத் துடைத்தபடியே அமைதியாக இருந்தாள். அவள் தோழிகள் எல்லோரும் அவர்களையேப் பார்த்துக் கொண்டிருக்கவும்,
அவள் அழுவதைக் காணச்சகியாதவனாய் ‘ஈவினிங் கேண்டீன்ல வெயிட் பண்றேன். ஒரு பத்து நிமிசம் வந்துட்டுப் போ. ப்ளீஸ்’
மாலை கேண்டினில் அவளுக்காக காத்திருந்தான். ஆனால் அவள் வரவில்லை. அவள் தந்ததாய்ச் சொல்லி ஒரு கடிதத்தைக் கொடுத்துவிட்டுப் போனாள் அவள் தோழியொருத்தி.

*

அந்த வெள்ளிக்கிழமை அவளை வைகை எக்ஸ்பிரசில் மதுரைக்கு அனுப்பி வைக்க எக்மோர் சென்றான். கவலையுடன் இருந்தவளை ‘எதுக்கிப்போ இவ்ளோ சோகமா இருக்க? இப்போ என்ன பொண்ணு பாக்கதான வர்றாங்க. வரட்டும். நீ மாப்பிள்ளயப் பிடிக்கலன்னு சொல்லிடு. அட்லீஸ்ட் இன்னும் ஒரு ஆறு மாசமாவது வெயிட் பண்ணு. அதுக்குள்ள எங்க வீட்ல பெர்மிஷன் வாங்கிட்றேன்’
‘நானா வெயிட் பண்ண மாட்டேன்னு சொல்றேன்?’
அவள் கஷ்டமெல்லாம் கோபமாக வந்தது.
‘சரி சரி இந்த டைம் போயிட்டு வா. நான் அடுத்த தடவை ஊருக்குப் போகும்போது எங்க வீட்ல சொல்லிட்றேன்’
தைரியம் சொல்லி அவளை அனுப்பி வைத்தான். ரயில் நிலையம் விட்டு வெளியே வருவதற்குள் அவன் செல்பேசிக்கு அழைப்பு வந்தது, அவன் அக்காவிடமிருந்து.
சாதாரணமாய்ப் பேசிக் கொண்டிருந்தவன் ‘உங்க கம்பனில கங்கானு புதுசா ஒரு பொண்ணு ஜாயின் பண்ணியிருக்காம். முடிஞ்சா விசாரிச்சு வச்சுக்கோ’ என்று அவன் அக்கா சொன்னதும் குழம்பினான்.
‘எதுக்கு?’
‘நீ தான் லவ் பண்றதுக்கு பொண்ணு கெடைக்கலன்னு சொல்லிட்டு இருந்தியே அதுக்குதான்’
‘கொஞ்சம் தெளிவா சொல்றியா?’
‘இல்லடா நம்ம சித்தப்பா அவருக்குத் தெரிஞ்ச வக்கீல் ஒருத்தர் பொண்ணுக்கு உன்னக் கேட்கிறாங்கனு சொல்லி அப்பாகிட்ட பேச வந்தாங்களாம். அப்பா இன்னும் ரெண்டு வருசம் போகட்டும்னு சொல்லிட்டாங்க போல. ஆனா பொண்ணு வீட்லையும் இன்னும் ரெண்டு வருசம் கழிச்சே வச்சிக்கலாம், ஜாதகப் பொருத்தம் மட்டும் பாத்துக்கலாம்னு கேட்ருக்காங்க. கடசில ஜாதகமெல்லாம் பொருந்தியிருக்காம். பொண்ணும் உங்க கம்பனிலதான் ஜாய்ன் பண்ணியிருக்காளாம். அதான் ஒரு இன்ஃபர்மேஷன் கொடுக்கலாமேனு கால் பண்ணினேன். விளக்கம் போதுமா?’
அவனுக்கு தலை சுற்றுவது போலிருந்தது. கோயம்பேட்டுக்குக் கிளம்பினான் கோவை பேருந்தைப் பிடிக்க.

*

அந்தக் கடிதத்தைப் படித்து முடித்ததும் அவனுக்கு அவள் மேல் கோபம் கோபமாய் வந்தது. இந்தக் காரணத்துக்காக தான் அவள் அவனை தொடர்பு கொள்ளாமல் விலகி விலகிப் போகிறாள் என்பது புரிந்துதான் அவளோடு நெருங்கியிருக்க இந்தக் கல்லூரியில் வந்து சேர்ந்தான். ஆனால் அவனுக்கு அது புரியாதது போலவும், அதனைப் புரிய வைப்பதாகவும் நினைத்துக் கொண்டு ஏழு பக்கத்துக்குக் கடிதம் எழுதியிருக்கிறாள். லூசு லூசு என்று மனதுக்குள் திட்டிக் கொண்டான். அடுத்த நாள் காலையில் அவளை கல்லூரியில் வந்து விட்டுப் போனதும் அவளுடைய அப்பாவை பைக்கில் தொடர்ந்தான். அந்த ஏரியாவில் குறுக்கும் நெடுக்குமாக பிரிந்த சாலைகளில் ஏதோ ஒன்றின் மத்தியில் ஒரு வீட்டுக்குள் நுழைந்தார் அவர். கொஞ்சம் நேரம் கழித்து அதே வீட்டுக்குள் அவனும் நுழைந்தான்.

*

கோவையில் தன் வீட்டிற்குப் போனதும் அவனுடைய சித்தப்பா வந்து போன விசயத்தை அவனுடைய அம்மா ஆர்வமாய்ச் சொல்ல ஆரம்பித்தார். கோனியம்மன் கோவிலில் வைத்து அந்தப் பெண்ணையும் ஒருமுறைப் பார்த்துவிட்டதாகவும் அவனுக்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறாளென்றும் பெருமையாக அவன் அம்மா சொல்லிக் கொண்டேபோக, தன்னுடையக் காதலைத் தன்னைப் பெற்றவர்களிடம் சொல்லுவது சினிமாவிலோ, கதைகளிலோ உள்ளபடி அத்தனை எளிதானதில்லை என்று உணரத் துவங்கினான். அவனுடைய அப்பாவும் அவனும் மட்டும் தனித்திருந்த மாலை நேரத்தில் எங்கேயோப் பார்த்தபடி ஒழுங்கில்லாத, இடைவெளிகள் நிறைந்த பேச்சில் தன் காதலைப் பற்றி சொல்லிவிட்டு அவர் பதிலுக்காகக் காத்திருந்தான். அவரோ அமைதியாக இருந்தார். அவருடையக் கோபங்களைப் பலமுறை எதிர்கொண்டு பழகிவிட்ட அவன், அதைப் போலொன்றையே எதிர்பார்த்திருந்தான். ஆனால் அவருடைய புரிந்துகொள்ள முடியாத மௌனம் வேதனையைக் கூட்டுவதாக இருந்தது.’வேற சாதியில பொண்ணெடுத்தா நாளைக்கு நம்ம சாதி சனத்துல யாராச்சும் மதிப்பாங்களா?’ அவர் கொடுத்த மௌனத்தையே அவருக்கும் பதிலாகக் கொடுத்தான். அவனைப் போலவே அவருக்கும் இந்த மௌனம் வேதனையைக் கொடுத்திருக்கலாம். ‘மொதல்ல அவங்க வீட்ல சொல்ல சொல்லு. அவங்க வீட்ல என்ன சொல்றாங்கன்னுப் பாப்போம்’ என்று மட்டும் சொல்லி வைத்தார். அதுவே அவனுக்கு பாதி சம்மதம் கிடைத்த மாதிரியிருந்தது. சந்தோசமாய் இந்த விசயத்தை அவளுக்கு சொல்ல நினைத்தவன் அங்கே அவளை பெண் பார்க்க வருகிற அவஸ்தையில் இருப்பாளென்பதால் அவளே அழைக்கட்டும் என்று காத்திருந்தான்.

*
அவளுடைய அப்பாவைத் தொடர்ந்து உள்ளே நுழைந்தவன், தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு, வந்த விசயத்தை பொறுமையாக விளக்கிக் கொண்டிருந்தான்.
“தம்பி நீங்க சொல்றது எல்லாம் சரிதான். எனக்கும் சந்தோசம்தான். மொதல்ல ரெண்டு பேருக்கும் படிப்பு முடியட்டும். ஆனா உங்களுக்கு மட்டும் இதுல சம்மதம் இருந்தாப் போதாது. உங்க வீட்ல இருக்கிறவங்களும் முழுமனசோட சம்மதிச்சு இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாதான் எங்களுக்கும் நிம்மதியா இருக்கும். மொதல்ல உங்க வீட்ல சம்மதம் வாங்குங்க. அதுக்கப்புறம் நானே உங்க வீட்டுக்கு வந்து உங்க அப்பா அம்மா கிட்டப் பேசறேன்.”
“சரிங்க. நான் எங்க வீட்ல சம்மதம் வாங்கிட்டு மறுபடி வர்றேன்”
ஒரு தீர்மானத்திற்கு வந்தவனாய் அவன் வீட்டிற்குப் போக சத்திரம் பேருந்து நிலையம் வந்தான்.

*
அடுத்த நாள் மதியம் அவளிடமிருந்து அழைப்பு வந்தது. எடுத்ததும் அவசரமாய்க் கேட்டான்
‘ஏ…என்னாச்சு?’
‘ம்ம்ம் கல்யாணம் நிச்சமாயிடுச்சு’
‘…’
‘என்ன சார் பயந்துட்டீங்களா? ஒன்னும் ஆகல. அவங்க வரும்போது யாரோ தெருவுல வெறகு எடுத்துட்டுப் போனாங்களாம். சகுனம் சரியில்லனு கடமைக்கு வந்து பாத்துட்டுப் போயிட்டாங்க’
‘அப்பாடா… ஏ இன்னொரு விசயம். நான் இப்போ கோயம்புத்தூர்ல இருக்கேன் தெரியுமா?’
‘என்ன விசேசம். சொல்லாமக் கூட போயிருக்கீங்க?’
‘சென்னை வா ஒரு குட் நியூஸ் சொல்றேன்’

அடுத்த நாள் அலுவலகத்தில் மீண்டும் அவர்கள் சந்தித்தபோது எல்லாக் கதையையும் சொல்லிவிட்டு அவளிடம் கேட்டான்
‘இப்போ சொல்லுங்க மேடம். நான் எப்போ மதுரை வந்து உங்கப்பாவ மீட் பண்ணனும்?’
‘எங்க வீட்ல இப்படி பொண்ணுப் பாக்கறதுக்கு எல்லாம் போயிட்டு வந்துட்டு இப்போ திடீர்னு நான் இந்த விசயத்த சொன்னா நான் காதலிக்கிறேன்ங்கற கோபத்த விட அவர்கிட்ட கடைசி நேரத்துல சொல்றேனேங்கற கோபம் அதிகமா இருக்குமோனு பயமா இருக்கு’
‘சரி நானே உங்கப்பாகிட்ட பேசவா?’
‘இல்லங்க. நேர்ல சொல்றதுக்கு எனக்கே ரொம்ப தயக்கமா இருக்கு. இதுல நீங்க அங்க வந்து…எங்க ஊரப் பத்தி உங்களுக்குத் தெரியாது’
‘அப்போ எப்படிதான் சொல்றது?’
‘ம்ம்ம் எல்லாத்தையும் லெட்டரா எழுதியனுப்பலாம்னு இருக்கேன்’
‘அது அவ்வளவு மரியாதையா இருக்காது. உனக்கு நேர்ல பேசறதுக்கு தயக்கமா இருந்தா எல்லாத்தையும் லெட்டரா எழுதி அடுத்த தடவ ஊருக்குப் போகும்போது நேர்லயே உங்கப்பாகிட்ட கொடுத்துடு’
‘ம்ம்ம் அப்படிதாங்க பண்ணனும்’
‘இன்னும் என்ன வாங்க போங்க் னே சொல்லிட்டு இருக்க?’
‘ம்ம்ம் மாத்திக்கறேன்’

*

பேருந்து திருச்சியை விட்டு வெகு தொலைவு வந்திருந்தது. திருச்சியில் அவளுடைய அப்பா சொன்னதை மீண்டும் ஒருமுறை நினைத்துக்கொண்டான். “உங்களுக்கு மட்டும் இதுல சம்மதம் இருந்தாப் போதாது. உங்க வீட்ல இருக்கிறவங்களும் முழுமனசோட சம்மதிச்சு இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாதான் எங்களுக்கும் நிம்மதியா இருக்கும்”. உண்மைதான். வீட்டில் முழுமனதோடு சம்மதிப்பார்களா? அப்பா சம்மதித்தாலும் அம்மா ஒத்துக் கொள்வது சாத்தியமா? என்று யோசித்தபடியே உறங்கிப் போனான். ஊருக்கு வந்து சேரும்போது மாலையாகியிருந்தது. சோர்ந்து போனவனாய் வீட்டுக்குப் போனதும் அவன் அம்மாவின் மடியில் சாய்ந்தான். ‘என்னப்பா சொல்லாம கூட வந்திருக்க? காலேஜ் லீவா? ஒடம்பெதுவும் சரியில்லையா?’ பரிவாய்க் கேட்டார். வெகு நாட்களுக்குப் பிறகு அவனுக்கு அழ வேண்டும் போலிருந்தது. உடைந்து போனவனாய் ஆரம்பம் முதல் எல்லாவற்றையும் சொல்லத் துவங்கினான்.முழுவதும் சொல்லி முடித்ததும் ‘அவளுக்கு என்ன விட்டா வேற யாரும் இல்லனு நான் இத கேட்கலம்மா. எனக்கும் அவள விட்டா வேற யாரும் இல்ல. அவ கூட இருக்கிற மாதிரி வேற எந்தப் பொண்ணுகூடவும் என்னால வாழ முடியாது. நீதான் அப்பாகிட்ட எப்படியாவது சொல்லனும்’ மீண்டும் அவள் மடியில் முகம் புதைந்தான். அன்று வீட்டில் நடந்த மிக உருக்கமானப் பேச்சுக்களுக்களின் கடைசியில் அவன் அப்பாவிடம் அவன் அம்மா சொன்னார் ‘கல்யாணத்துல வந்து மொய் வச்சிட்டு போறதோட சொந்தக்காரங்க வேல முடிஞ்சு போயிடும்ங்க. கல்யாணத்துக்கப்புறமும் நம்ம பையன் சந்தோசமா இருக்கானான்னு யாரும் வந்து பாத்துகிட்டு இருக்கப் போறதில்ல. அதுக்கப்புறம் அவனுக்கொன்னுன்னா அத நாமதான் பாக்கனும். சொந்த பந்தம் என்ன சொல்லுதுன்னு பாக்காம பையன நெனச்சுப் பாப்போம். நாமளே திருச்சிக்கு ஒரு எட்டு போயிட்டு வந்துடுவோம்’ புயலுக்குப் பின் அமைதி மாதிரி எல்லாம் தெளிந்து ஒரு தீர்வு வந்தது.

*

மதியம் சாப்பிடும்போது கேட்டான் ‘என்ன அப்பாவுக்கு எழுத வேண்டிய லெட்டர் எழுதி முடிச்சுட்டியா? எப்போ ஊருக்குப் போறதா இருக்க?’
‘ம்ம்ம் பாதி எழுதிட்டேன். இன்னும் பாதி எழுதனும்’
‘சரி போறதுக்கு முன்னாடி எங்கிட்ட காட்டிட்டுப் போ’
‘அதெல்லாம் முடியாது. நான் போயிட்டு வந்துட்டு அந்த டைரிய உங்கிட்டவே கொடுத்துட்றேன் அப்புறம் அத நீயே வச்சிக்க’
‘டைரியா?’
‘ஆமா லெட்டர் எல்லாம் பத்தல. அதான் டைரி’
சிரித்துக் கொண்டான்.
அந்த வெள்ளிக்கிழமை இரவு அவளிடம் இருந்து வந்த மெசேஜ் : ‘டைரிய அப்பாகிட்ட கொடுக்கிறதுக்கு நான் மதுரைக்குப் போயிட்டு இருக்கேன். எனக்கு ரொம்ப டென்சனா இருக்கு. நீ கால் எதுவும் பண்ண வேணாம். நான் திங்கட்கிழம வந்து எல்லாத்தையும் சொல்றேன்’
அந்த வெள்ளி இரவிலிருந்து திங்கள் காலை வரை அவனுக்கு எதுவுமே ஓடவில்லை. மொத்தம் மூன்று முறை கூட சாப்பிட்டிருக்க மாட்டான். ஞாயிறு இரவே அவளை அழைத்தான். அவளுடைய செல்பேசி ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. காலை எழுந்ததும் மீண்டும் அழைத்தான். ஸ்விட்ச் ஆஃப். அவசரமாக அலுவலகத்துக்கு சென்றான். அவள் வரவில்லை. மீண்டும் அழைத்தான். ஸ்விட்ச் ஆஃப். மாலை வரை அவளும் வரவில்லை. மறுநாள் முழுக்க, ஸ்விட்ச் ஆஃப். அதற்கு மறுநாளும், ஸ்விட்ச் ஆஃப். அலுவலகத்துக்கும் அவள் வரவில்லை. நேரடியாக ஹெச் ஆரிடமே கேட்டான். ‘அவங்க மேரேஜ் ஃபிக்ஸ் ஆயிடுச்சுனு ரிசைன் பண்றதா போன்ல சொன்னாங்களே’
அவனுக்கு உடல் முழுக்க ரத்தம் வற்றியது போலானது.

*
அடுத்த நாள் மாலை திருச்சியில் தன்னுடைய பெற்றோருடன் அவள் வீட்டில் இருந்தான். மகனின் விருப்பம் தான் தங்களின் விருப்பம் என்றும் இந்தத் திருமணத்துக்கு முழுமனதோடு சம்மதிப்பதாகவும், அவளை தங்களின் மகளாகவேப் பார்த்துக் கொள்வதாகவும் அவன் அம்மா சொல்ல, அவன் அப்பாவும் அதையே மீண்டும் சொன்னார். இதெல்லாம் முன்னாடியே நடந்திருக்கலாமென அவளுடைய அப்பா வருத்தப்பட்டுக் கொண்டார். அவளும் அங்கே ஓரமாய் நின்று கொண்டிருந்தாள். இருவருக்கும் படிப்பு முடிந்த பிறகு திருமணத்தை வைத்துக் கொள்ளலாமென்று உறுதி செய்யப்பட்டது. தன்னுடைய பெற்றோரை ஊருக்கு அனுப்பி வைத்து விட்டு அடுத்த நாள் காலை அவளைக் கல்லூரியில் சந்தித்தான்.
‘thanks’
‘போடி லூசு’
எல்லாம் கனவு போல இருந்தது அவளுக்கு.

*
ஹெச் ஆரிடமிருந்து அப்படியொரு செய்தியைக் கேட்டதும் அலுவலகம் போவதற்கே அவனுக்கு வெறுப்பாய் இருந்தது. அவளோடு அமர்ந்து பேசிய இடங்கள் எல்லாம் கேலி பேசுவது போல இருந்தன. அடுத்த வாரம் அவளுடைய ஜிமெயிலிலிருந்து ஒரு மடல் வந்திருந்தது. ஆர்வமாய்ப் படித்தான். அவனிடம் பேசுவதற்கே அவளுக்குத் தகுதியில்லையென்றும் அதனால்தான் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டதாகவும் எழுதியிருந்தாள். டைரியோடு அவள் வீட்டுக்குப் போனபோது அன்றைக்கும் அவளைப் பெண் பார்க்க ஒரு குடும்பம் வந்திருந்ததாகவும், அவளுக்கு அது முன்பே தெரியாதென்றும், வந்தவர்களுக்கு அவளைப் பிடித்துப் போக இரண்டு குடும்பங்களிலும் சம்மதம் சொல்லி கடைசியாக இவளிடம் கேட்ட போது அந்த சூழ்நிலையில் இந்த விசயத்தை சொல்ல அவளுக்கு தைரியமில்லையென்றும், தன்னை மன்னித்து விடும்படியும் இன்னும் பல அறிவுரைகளும் சொல்லப்பட்டு பெரிதாய் நீண்டிருந்தது அந்த மடல்.

*
‘என்னக் கல்யாணம் பண்ணிக்கிறியே நீ தான்டா லூசு’
‘ஆமா. லூச லூசுதான் கல்யாணம் பண்ணிக்க முடியும்’
‘நான் சீரியசா கேட்கறேன், முழு சம்மதத்தோடதான் என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா?’
‘உண்மைய சொன்னா இதுகூட என்னோட சுயநலம் தான். உன்னத் தவிர வேற யார்கூடவும் என்னால சந்தோசமா வாழ முடியாது தெரியுமா?’
அவனை அணைத்துக்கொண்டாள்.

*
அவளுக்குத் திருமணம் முடிந்த இரண்டாவது மாதத்தில் அவனுக்கு அலுவல் நிமித்தம் ஓராண்டு அமெரிக்கா செல்ல வேண்டி வந்தது. அவளைப் பிரிந்த மன உளைச்சலில் இருந்து விடைபெற அவனும் அதனை ஒப்புக்கொண்டான். அமெரிக்கா சென்ற ஒரு மாதத்தில் கங்கா என்ற பெண்ணிடமிருந்து அவனுக்கு ஒரு மடல் வந்திருக்கவும் ஆர்வமில்லாமல் திறந்து பார்த்தான்.
‘நான் **வோட ப்ரெண்ட். மதுரையிலிருந்து இந்த மெயில் அனுப்புறேன். அவளப் பெண் பார்க்க வந்தப்பவே உங்க விசயம் எல்லாம் எங்கிட்டதான் சொல்லி அழுதா. உங்க மெயில் ஐடி கொடுத்து என்னதான் உங்களுக்கு அந்த விசயத்த மெயில் அனுப்ப சொல்லியிருந்தா. நான் அவளையே உங்களுக்கு கால் பண்ணி எல்லாத்தையும் சொல்லிட சொன்னேன். அவ அப்போ உங்ககிட்ட பேசினாளா இல்லையானு எனக்குத் தெரியாது. நானும் மெயில் அனுப்பல. ஆனா இப்போ நான் இந்த மெயில் அனுப்புறதுக்கு ஒரு காரணம், அவ இப்போ ஒரு விதவை. அவளோட ஹஸ்பெண்ட் ஒரு ஆக்சிடெண்ட்ல போன வாரம் எறந்துட்டார். இத உங்களுக்கு சொல்லனும்னு தோணுச்சு. அதனால சொல்லிட்டேன்’

அதன் பிறகு அந்த கங்கா மூலம் அவளுடைய செல்பேசியெண்ணை வாங்கி அவளிடம் பேசினான். இவன் குரலைக் கேட்டதும் துண்டித்தாள். மீண்டும் மீண்டும் இவன் அழைக்க ஓரிரு நாட்களில் இந்த செல்பேசியெண் உபயோகத்தில் இல்லை என்று குரல் வந்தது. ஏற்கனவே அவள் துயரத்தில் இருப்பாள் அவளைத் தொல்லைபடுத்த வேண்டாமென அவளைத் தொடர்புகொள்வதை நிறுத்தினான். ஓரிரு மாதங்கள் கழித்து அந்த கங்காவுக்கே மீண்டும் மடலனுப்பி அவளைப் பற்றி விசாரித்த போது அவள் திருச்சி BIM –இல் MBA படிக்கப் போய்விட்டதாகவும் அவர்கள் குடும்பமே திருச்சிக்கு குடிபெயர்ந்து விட்டதாகவும் தெரியவந்தது. அமெரிக்காவில் அந்த ஒரு வருடத்தை மிக வேகமாகக் கடத்தி விட்டு சென்னை திரும்பியவன் வேலையிலிருந்தும் விலகிவிட்டு அடுத்த ஆண்டு அவனும் BIM –இல் MBA சேர்ந்தான். முதல் நாள். அவளைப் பார்க்கும் ஆர்வத்தில் கல்லூரிக்கு செல்ல,
அங்கு எந்த அமர்க்களமுமில்லாமல் எளிமையாக நடந்து கொண்டிருந்தது முதலாமாண்டு புதிதாக சேரும் மாணவர்களுக்கு நடத்தப்படும் வரவேற்பு நிகழ்ச்சி...


(சர்வேசன் போட்டிக்கு அனுப்புற மாதிரி ‘நச்’ இருக்கானு சொல்லிட்டுப் போங்க :-))

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

Thursday, December 06, 2007

ஊடல்

ஊடலும் காமத்துக்கின்பம்னு வள்ளுவர் சொல்றாராம். அவருக்கென்னங்க சொல்றது ஈசியா சொல்லிட்டுப் போயிட்டார். அனுபவிக்கிறவனுக்குதான் அதோட கஷ்டம் தெரியுது. ஒருவேளை ஊடல் முடிஞ்ச பின்னாடி அது இன்பமா தெரியறத அவர் சொல்லியிருக்கலாம்.ஆனா ஊடல் நடக்கும்போது அது இன்பமாவா இருக்கு? நரக வேதனைங்க. ஆளையேக் கொல்ற அவஸ்தைதான். அதுவும் பேசாம இருந்து, ஆண்கள அலைய விடுறதுல இந்த பெண்களுக்கு அப்படியென்னதான் சுகமோ தெரியல. இப்படியெல்லாம் பொதுவா எல்லாப் பெண்களையும் தப்பாப் பேசக்கூடாதுதான். நானும் எல்லாப் பெண்களையும் சொல்லலைங்க. காதலிக்கிற, காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்ட பெண்கள மட்டும் தான் சொல்றேன்.

இப்ப மணி ஆறு ஆகுது. அவ என் கூடப் பேசி முழுசா ரெண்டு நாள் முடியப் போகுது. காதலிச்ச காலத்துலயும் சரி கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும் சரி இந்த மாதிரி நெறைய தடவ கோவிச்சுக்கிட்டு பேசாம இருந்திருக்கா. ஆனா எப்பவும் தொடர்ந்து ஒரு நாளைக்கு மேல பேசாம இருந்ததில்ல. இந்த தடவதான் இப்படி ரெண்டு நாளா என்னக் கொன்னுகிட்டு இருக்கா. இத்தனைக்கும் கோவிச்சுட்டுப் பேசாம இருக்கிற அளவுக்கு நான் பெரிய தப்பு எதுவும் பண்ணல. அன்னைக்கு சாதாரணமாதான் பேசிட்டு இருந்தோம். ஏதோ பேச்சு வாக்குல தெரியாத் தனமா அந்தப் பழமொழிய சொல்லிட்டேன். தேன் விக்கறவன் புறங்கைய நக்காமலா இருப்பான் அப்படின்னு. இதுல என்ன பிரச்சினைன்னா அவங்க அப்பாவும் பெரிய அளவுல தேன் வியாபாரம் தான் பண்றார். நான் வேணும்னே அவங்கப்பாவ கிண்டல் பண்றதுக்காக தான் அப்படி சொன்னேன்னு நெனச்சுக் கோவிச்சுக்கிட்டுப் பேச மாட்டேங்கறா. இந்தப் பொண்ணுங்க கிட்ட மட்டும் அவங்க பிறந்த வீட்டப் பத்தி தெரிஞ்சோ தெரியாமலோ சின்னதா கிண்டல் பண்ற மாதிரி ஏதாவது சொல்லிட்டாப் போதும்; கோபம் சுள்ளுனு வந்துடுது. அதுக்கப்புறம் நாம தலகீழா நின்னாலும் ஒன்னும் நடக்காது.

நான் அவளக் காதலிச்சது, கல்யாணம் பண்ணிக்கிட்டது எதுவுமே அப்போ எங்க வீட்ல யாருக்கும் தெரியாது. நாங்களும் அவங்களும் வெவ்வேற சாதியாப் போயிட்டோம். அதுவுமில்லாம என்னோட அண்ணனுக்கே அப்போ கல்யாணம் ஆகாம இருந்தது. ( இன்னும் ஆகலங்கறது வேற விசயம் ). சூழ்நிலை இப்படி இருக்கும்போது அன்னைக்கு எங்க வீட்ல இந்த விசயத்த சொல்ற நிலமைல நான் இல்ல. அதனால அவங்க வீட்ல மட்டும் சம்மதம் வாங்கிட்டு திருத்தணில ரொம்ப சிம்பிளா கல்யாணத்த முடிச்சுக்கிட்டோம். அதுக்கே நான் அவங்கப்பாவுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கேன். இப்படியிருக்கும்போது நானே அவங்கப்பாவ கிண்டல் பண்ணேன்னு அவ நெனச்சுக்கிட்டதுதான் எனக்கு ஆச்சர்யமா இருக்கு

அவளுக்கு நல்ல குரல் வளம்ங்க. பாடினா நாள் பூரா கேட்டுகிட்டே இருக்கலாம். ம்ஹும்… இன்னைக்குப் பேசுறதுக்கே வழியக் காணோம். பாட்டெல்லாம் டூ மச் தான். இன்னைக்குனு பாத்து நானும் வடபழனி ஆபிசுக்கு வரவேண்டியதாப் போச்சு. இங்க கஸ்டமர் சைட்ல இருந்து இஸ்யூஸ் அடுத்தடுத்து வந்துகிட்டே இருக்கு. அவங்க எதுவுமே பண்ணாம எந்தப் பிரச்சினைனாலும் எல்லாத்துக்கும் நம்மகிட்டவே வர்றாங்க. நானும் முடிஞ்ச வரைக்கும் சால்வ் பண்ணிகிட்டுதான் இருக்கேன். ஆனா இவங்களுக்கு இதுவே பழக்கமாப் போச்சு. கொஞ்ச நேரம் கூட நம்ம பெர்சனல் மேட்டர பாக்க விட மாட்டேங்கறாங்க. இருங்க. ஏதோ சத்தம் கேட்குது. அடுத்த கஸ்டமர் கால் னு நெனைக்கிறேன்.


“முருகா… நேத்துல இருந்து என்னோட இளா என்கூட பேச மாட்டேங்கறா! நீ தான் அவ கோபத்த
தீர்த்து என்கூட பேச வைக்கனும். உன்ன தான் மல போல நம்பியிருக்கேன்”

நானே ரெண்டு நாளா வள்ளி என் கூட பேச மாட்டேங்கறான்னு உங்ககிட்ட பொலம்பிகிட்டு இருக்கேன். இவரு எங்கிட்ட வந்து பொலம்புறாரு. காதலிச்சா ஆண்டவனுக்கே இந்த நிலமதான்னு இவருக்கு கொஞ்சம் சொல்லுங்களேன்.

---------

இந்தக் கதையை சர்வேசனின் நச்சுனு ஒரு கதை போட்டிக்கு அனுப்பலாமானு சொல்லுங்க நண்பர்களே!!!

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ