Wednesday, October 31, 2007

கணக்கம்பட்டியாரு கத - 2

நேத்தைக்கு சொன்னது இங்க

"இதோ பாருங்கோ… பொதுவாவே சித்திரை மாசம் அம்பாளுக்கு உகந்த நாள்… கும்பாபிஷேகத்துக்கு உகந்த நட்ஷத்திரம் வெள்ளிக்கிழமையிலயே வர்றதும் ரொம்ப விஷேஷமானது. வளர்பிறையும்கூட" வந்திருந்த ஐயன், கிட்டாஞாகிட்ட சொன்னதையே எல்லாருக்கும் கேக்குறாப்ல திரும்பி ஒருதரம் சத்தமா சொன்னாரு.

"அதில்ல சாமி… எங்க ஊருல சித்திர மாசம் ரெண்டாவது வெள்ளிக்கிழம ஏற்கனவே ஒரு கெட்டது நடந்து போச்சு…அதே நாள சாமி சொல்லவுந்தான்…" – இழுத்தாரு கிட்டாஞா.
அது வரைக்கும் பேசாம இருந்த கணக்கம்பட்டியாரு சித்திரையிலேயே மொத வெள்ளிக்கிழம நல்லாருக்குதான்னு பாக்கலாம்னு யோசனை சொன்னாரு.

சொல்லிக்கிட்டே பைக்குள்ள இருந்து சோழிய எடுத்து கைக்குள்ள வச்சி கண்ண மூடி நடுநெத்தில வச்சி என்னமோ முணுமுணுத்துட்டு, சோழிய கீழ விசுறுனாரு.
பனெண்டு சோழில பதினொன்னு மூடிருந்துது. ஒன்னு மட்டும் தெறந்திருந்தது.

'மொத மாசம் சித்திர தான் தாயே நாங்களும் பாக்குறோம்'னு சொல்லிகிட்டே அஞ்ச கழிச்சுட்டு ஏழு சோழிய மட்டும் கையில எடுத்தாரு.

'மாசத்த சொன்னவ கெழமையும் சொல்லும்மா' னு மறுபடியும் ஏழ விசுறுனாரு. அஞ்சு தெறந்திருந்துது. ரெண்டு மூடிருந்துது.

'அஞ்சாங்கெழமதான் ஆத்தாளும் சொல்றா' னு எல்லாரையும் பாத்து சொல்லிட்டு கடசியா நாலு சோழிய மட்டும் கையில எடுத்துகிட்டு
'எந்த வாரம்னும் ஆத்தாளையே கேட்ருவோம்'னு நாலையும் விசுறுனாரு. எல்லாரும் சோழி போன எடத்தையே எக்கிகிட்டு பாத்தாங்க.

அங்க ஒரு சோழி தெறந்திருந்துது. மூனு மூடிருந்துது. அவரு சொல்லாமயே எல்லாருக்கும் புரிஞ்சிருச்சு. எல்லாரும் ஐயனப் பாத்தாங்க. அவரு பஞ்சாங்கத்த தொறந்தவரு மொத வெள்ளிக்கிழம கரிநாளு அது ஒகந்த நாளு இல்லனு கைய விரிச்சிட்டாரு. பாத்தவங்களுக்கெல்லாம் மொகம் வாடிருச்சு. என்னப் பண்றதுன்னு யாருக்கும் புரியல.

கணக்கம்பட்டியாரே சொன்னாரு 'கரிநாளெல்லாம் சூரியங்கணக்குதான், நாம உதயத்துக்கு முன்னாடியே கும்பாசியேகத்த முடிச்சிரலாம்'னு அவரு சொல்லி வாய மூட்றதுக்குள்ள பழனி மூலையில கவுளி* சத்தம் கேட்டுச்சு. அந்தப் பக்கம் திரும்பி பாத்து கன்னத்துல போட்டுக்கிட்டாரு கிட்டாஞா. நல்ல சகுனம்னு எல்லாருக்கும் தெரியும் ஆனா ஐயன் அந்த தேதிக்கு ஒத்துக்கலயே. ரெண்டாவது வெள்ளின்னா தான் வர்றதாகவும் இல்லன்னா அவங்களயே கும்பாசியேகம் நடத்திக்க சொல்லிட்டுப் போயிட்டாரு. அவரு போனதுக்கப்புறம் கோயில்ல ரெண்டு பக்கமும் பேசறதுக்கு ஆளுங்க இருந்தாங்க.

'ஐயன் சொல்றபடியே அவனக் கூப்ட்டே பண்ணிரலாம்…சாமி சமாசாரமெல்லாம் அவனுக்குத் தெரியாததா நமக்குத் தெரிஞ்சிரப் போவுது?'

'ஏன் ஐயனக் கூப்பிட்டுதான் பண்ணனும்னு எதாவது கணக்கு இருக்குதா? தெக்கியூர் கோயில்ல நம்மாளுங்கதான பண்ணாங்க?'

'நாளு நல்லா இல்லைன்னா நாம என்னைய்யா பண்ண முடியும்? ரெண்டாவது வெள்ளிக்கிழமன்னு முடிவு பண்ணுவோம் அதுக்கு மேல ஆத்தா விட்ட வழி'

'அதே ஆத்தா விட்ட வழியில மொத வெள்ளிக்கிழம நடத்த வேண்டியதுதானா? கும்பாயிசேகம் நம்மூர்க்கோயிலுக்கு! இதுல நம்மூர்க் காரனவிட அசலூர்க்காரன் சொல்றத கேக்கனுமாங்கறேன்'

'யாருப்பா அது? கணக்கம்பட்டியான் நம்மூரா? அவனும் அசலூர்ல இருந்து பொழைக்க வந்தவந்தானப்பா' – பின்னாடி இருந்து எவனோ ஒருத்தன் இப்படி சொன்னதும் அதுக்கப்புறம் யாரும் பேசல.

அதுவரைக்கும் கணக்கம்பட்டியார அசலூர்க்காரனா யாரும் பாத்ததில்ல. அந்த சொல்லு வந்தபின்னாடி யாரும் எதுவும் பேசாம இருக்கவும் எல்லாருமே அப்பிடிதான் இவ்வளவுநாளா நெனைச்சிருக்காங்கன்னு கிட்டாஞாவுக்கு கோவம் வந்துருச்சு.

'எவண்டா அவன் கணக்கம்பட்டியான பொழைக்க வந்தவன்னு சொன்னது? நாளைக்கே ஒங்களுக்கு ஒரு நோக்காடுன்னா அவன் வீட்டுக்குதாண்டா வரணும் மசுராண்டிகளா. நீங்க என்னைக்கு வேணா கும்பாயிசேகம் நடத்திக்கோங்க..எங்கள ஆள விடுங்க' னு கோவமா கத்திட்டு கணக்கம்பட்டியானையும் இழுத்துகிட்டு போயிட்டாரு.

அதுக்கப்புறம் ஐயன் சொன்ன மாதிரியே சித்திர மாசம் ரெண்டாவது வெள்ளியே கும்பாயிசேகம் நடத்தறதுனு முடிவு பண்ணி வேலையெல்லாம் ரொம்ப வெரசா* நடந்துது. நாள் குறிச்சதுல இருந்து ஊரே கவுச்சி* தொடாம சுத்தபத்தமா இருந்துதுன்னுதான் சொல்லனும். வெசாலக்கெழம ராத்திரியே ஐயனுங்க வந்து அவங்க வேலைய செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. கும்பாயிசேகமும் நல்லபடியா முடிஞ்சுது. ஆனா செத்த நேரத்துலையே கோயிலுக்குள்ள ரைட்டுக்கு இழுத்திருந்த ஒயரு அறுந்து வுழுந்து ஈரத்துல நின்னவங்க பதினேழு பேரு கட்டையாப் போயிட்டாங்க. ராமக்கல்லாசுபத்திரிக்கு கொண்டுபோயும் இன்னும் மூனு உசுரு முடிஞ்சிருச்சு. மொத்தமா இருவது பேர காவு வாங்கிட்டா மாரியாயி. அதுக்கப்புறம் ஒரு வருசம் கழிச்சு கணக்கம்பட்டியாரு குறிச்சு கொடுத்த தேதியிலதான் மறுபடியும் கும்பாயிசேகம் நல்ல விதமா நடந்து முடிஞ்சது. அப்போதான் ஊராளுங்களுக்கெல்லாம் கணக்கம்பட்டியான் மகிம புரிஞ்சுதுங்கறது கிட்டாஞாவோட கணக்கு.

அந்த வருசம் இன்னொன்னும் நடந்துச்சு. கிட்டாஞா மவளுக்கு பொட்டபுள்ள பொறந்து மூனு மாசம் இருக்கும்போது ஓயாம ஒரு ராத்திரி முச்சூடும்* அழுதுகிட்டே இருந்துது. அவரு பொண்டாட்டியும், மவளும் வசம்ப தேச்சுப் பாக்குறாங்க, புள்ள மருந்த சங்குல ஊத்தி ஊத்தி பாக்குறாங்க. அது அழுவறதுக்கேப் பொறந்த மாதிரி அழுதுகிட்டே கெடந்துது. மூச்சு வாங்கி மூச்சு வாங்கி அழுததுல புள்ள பொழைக்குமாங்கறதே சந்தேகமாப்போச்சு. அப்புறம் கணக்கம்பட்டியாரு வந்துதான் துண்ணூறு மந்திரிச்சு அழுகறது நிப்பாட்டுனாரு. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் பொக்க வாய சிரிச்சுக்கிட்டு பால குடிச்சுட்டு ஒன்னுந்தெரியாத புள்ள கணக்கா அது தூங்கிருச்சு. அப்போ கிட்டாஞா பொண்டாட்டியும், மவளும் கணக்கம்பட்டி கால்லையே வுழுந்துட்டாங்க.அன்னைய பொழுதுக்கு அவருதான் அந்த குடும்பத்துக்கு தெய்வம்.

அப்பறம் ஒரு தடவ கிட்டாஞாவுக்கும் மேலுக்கு சொகப்படாமப் போயிருந்துது. கணக்கம்பட்டியாரு, பேத்திக்கு கொடுத்த துண்ணூறுல மீந்து போனத மடிச்சு வச்சிருந்தத எடுத்துப் பூசிப் பார்த்தாரு கிட்டாஞா. ஆனா அது ஒன்னும் கேக்கலயாம். அப்பறம் அவருகிட்டையே போயி அவரு கையால மந்திரிச்சதும் தான் சரியாப் போச்சாம். அப்பறந்தான் இந்தாளுக்கு ஒரு அருளு இருக்குனு கிட்டாஞா அசலூரு போனாலும் கணக்கம்பட்டியாரப் பத்தி பெருசா சொல்ல ஆரம்பிச்சதெல்லாம்.

அந்தக்கதையெல்லாம் டீக்கட ஆறுமுவம் கேட்டூட்டு பெருமூச்சு விட்டுகிட்டான். 'சாமி செல பேருக்கு நாக்குலையே குடியிருக்கும் போல'னு சொல்லிட்டு க்ளாசக் கழுவப் போயிட்டான்.

செம்பட்டையன் மவளுக்கு மாப்ள கெழக்க இருந்துதான் வருவான்னு சோழி போட்டு சொன்னது, காணாமப் போன கங்காணி மவன கண்டுபுடிச்சது, தண்ணியில்லாத மேட்டாங்காட்ல கெணறு தோண்ட எடம்பாத்து சொல்லி, அங்கன மூனு ஊத்து கண்டது னு கணக்கம்பட்டியாரப் பத்தி கிட்டாஞா பேச ஆரம்பிச்சா அன்னைய பொழுதுக்கும் நிப்பாட்ட மாட்டாரு. கணக்கம்பட்டி தன்னோட கூட்டாளிங்கறதுலையும் அவருக்கு ஒரு பெருமை.

பழைய கதையெல்லாம் பேசிட்டு டீக்கடைய வுட்டு எந்திரிச்சு சைக்கிள எடுக்கவும், அரச மர முக்குல ஒம்பதர மணி வண்டி வாரதுக்கும் சரியா இருந்துச்சு. யாராவது ஊர்க்காரங்க வர்றாங்களான்னு பாக்க சைக்கிளப் புடிச்சிக்கிட்டே நின்னுட்டாரு கிட்டாஞா. வந்த வண்டியில இருந்து எறங்குனது கணக்கம்பட்டியாரு மவதான். கையில பத்து மாச புள்ள.

(நாளைக்கு கதய முடிச்சிட்றேன்...)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Tuesday, October 30, 2007

கணக்கம்பட்டியாரு கத...

கொஞ்சங்கூட விடியாத நல்ல இருட்டு. இன்னும் கோழி கூட கூப்புட்ல. வெங்காயத் தோட்டத்துல தண்ணியடைக்கறதுக்காவ தெக்கியூர் ரோட்ல சைக்கிள்ல பறந்துகிட்டு இருந்தாரு கிட்டாஞா.சாமியாடித் தோட்டத்துக்கிட்ட மேக்கத் திரும்பும்போதுதான் - அந்நேரத்துல தெக்க இருந்து யாரோ வெக்கு வெக்குனு ஓடியார மாதிரி இருந்துது. வர்றவங்க என்னமோ கத்திகிட்டே வாராப்ல இருந்துது. காதோட சேத்து துண்ட உருமா கட்டிருந்ததால கிட்டாஞாவுக்கு ஒரு சத்தமும் கேக்கல. ஏதாவது கெட்டது நடந்து போச்சோனு வெசனப்பட்டவரு துண்ட அவுத்துக்கிட்டே மேக்கத் திரும்பாம தெக்கையே விட்டாரு சைக்கிள.

'அது யாரு கிட்டாஞாவா? ஆஞா*… கணக்கம்பட்டியாரு ஊர்ல இருக்காரா?' ஓட்டத்துலையே சத்தம் போட்டுகிட்டு வந்தது வேற யாருமில்ல. நம்ம வடவத்தூர் பால்காரன் பொண்டாட்டிதான். அவளும் ஓடியார இவரும் சைக்கிள மிதிக்க ரெண்டு பேரும் கிட்டத்துல வந்துட்டாங்க.

'இருக்காப்ல… இருக்காப்ல… என்ன சமாசாரம்… நீ இந்நேரத்துல ஒத்தைல வர்றவ? வூட்ல ஆம்பளையாளு இல்லியா'

'அதையேன் ஆஞா கேக்குற… அந்தாளுக்கு ராத்திரில இருந்து வவுத்துநோவு… அனத்திகிட்டே இருக்குது… சுக்குத்தண்ணி கொடுத்தும் ஒன்னும் கேக்கல.. இன்னும் பால்கறக்கவும் கெளம்பாம வவுத்தப் புடிச்சுக்கிட்டு படுத்துருக்கு… அதான் கணக்கம்பட்டியாருகிட்ட துண்ணூறு* வாங்கியார சொன்னுச்சு… குறுக்கால ஓடியாரேன்… என்ன செத்த அவர் வூட்ல எறக்கி வுட்றீயா' - மூச்சுவுடாம பொலம்புறா அவ.

'ஏறு ஏறு இதுக்குதான் இந்தக் கோலத்துல ஓடி வந்தவளா.. நான் என்னமோ ஏதோனு தவுதாயப்* பட்டுட்டேன்' அவள ஏத்திகிட்டு கணக்கம்ப்பட்டியாரு வூட்டுக்கு சைக்கிள மிதிச்சாரு கிட்டாஞா.

ருமப்பட்டிக்கு தெக்க இருந்து வலையப்பட்டிக்கு வடக்க வரைக்கும் கணக்கம்பட்டியாருன்னா தெரியாதவங்க இருக்க மாட்டாங்க. அவரு பேரு அங்கமுத்துப்புள்ள னு ஊர்ல கொஞ்சம் பெருசுங்களுக்குதான் தெரியும். கணக்கம்பட்டியில இருந்து இங்க பொழைக்க வந்ததால கணக்கம்பட்டியாருனு பேராகிப்போச்சு. அந்தக்காலத்துல அவரு, கிட்டாஞா, கங்காணியெல்லாம் ஒரு சோட்டு. கணக்கம்பட்டியாருக்கு கொலதெய்வமெல்லாம் அவங்கூரு அங்காயிதான்னாலும் முருகனதான் மொதல்ல கும்புடுவாரு. காலங்காத்தால குளிச்சி முடிச்சு வந்தாருன்னா குறி கேக்க, நல்ல நாள் குறிச்சுட்டு போவ, துண்ணூறு மந்திரிச்சு வாங்கிட்டுப் போறதுக்குன்னு ஒரு கூட்டம் நிக்கும். அவருக்கும் சோசியம் கீசியமெல்லாம் எதுவும் தெரியாது. பஞ்சாங்கத்துல நல்ல நாளு பாத்து சொல்லுவாரு. சோழி போட்டு முடிவு சொல்லுவாரு. முருகனக் கும்புட்டு கொஞ்சம் துண்ணூறு அள்ளிக் கொடுப்பாரு. அவ்வளவுதான். ஆனா அவரு சொல்ற நாளு கெழமையெல்லாம் நல்லதாதான் நடந்திருக்கு. சோழி போட்டு முடிவு சொன்னாருன்னா பத்துக்கு எட்டு பெசகாம நடந்திரும். அவரு மந்திரிச்சத் துண்ணூற பூசிக்கிட்டு கொஞ்சம் வாயில போட்டுகிட்டா எல்லா நோவும் போன எடந்தெரியாம ஓடீரும். அப்பிடி ஒரு ராசி.

எப்பவாது மவளப் பாக்கனும்னு இருந்தா பொனாசிப்பட்டிக்கு சொல்லாம கொள்ளாம ஓடிருவாரு. நல்ல வேள அன்னைக்கு கணக்கம்பட்டியாரு ஊர்லதான் இருந்தாரு.
வாசல்லயே கட்டுல்ல குறுக்கிகிட்டுப் படுத்திருந்தவரு சைக்கிளு சத்தம் கேட்டு நாய் கொலைக்கவும் எந்திரிச்சுக்கிட்டாரு. துண்ணூறுக்கு இந்தமாதிரி நேரங்கெட்ட நேரத்துல அடிக்கொருதரம் ஆளுங்க வர்றதுதான். பால்காரன் பொண்டாட்டிய பாத்ததும் 'யாரு பால்காரன் பொண்டாட்டியா? ஓம்புருசனுக்குன்னுதான் வவுத்துநோவு வரம் வாங்கிட்டு வந்திருக்குமே' ன்னு சிரிச்சுகிட்டே கேணி மோட்டுக்குப் போயிட்டாரு. எந்நேரமா இருந்தாலும் அவரு குளிச்சிட்டு வந்துதான் துண்ணூறு மந்திரிக்கிறது. இந்நேரத்துல தொட்டித்தண்ணி சிலீர்னு இருக்குந்தான். ஆனா அவரு குளிக்காம துண்ணூறு அள்ளித் தர்றதில்ல. வேட்டிய அவுத்துட்டு துண்ட கட்டிகிட்டு தொட்டித்தண்ணிய மூனு வாளி மொண்டு தலையோட ஊத்திக்கிட்டு நிமுசத்துல வந்து சேந்துட்டாரு. மொதல்ல துண்ட அவுத்து இடுக்குல இறுக்கி துண்ணூற அள்ளி அவரு பூசிக்கிட்டதும், அவரப் பாக்க கோயில் பூசாரி கணக்காதான் இருந்துச்சு. சாயம்போன முருகன் படத்துக்கு முன்னாடி கையெடுத்து கும்பிட்டவரு 'இந்தப் பூசத்துக்கு பழனி போவும்போது புது படம் வாங்கியாரனும்'னு நெனச்சுக்கிட்டே ஒரு முருகன் பாட்ட மனசுக்குள்ள பாடுனாரு. பயபத்தியோட கொஞ்சம் துண்ணூற அள்ளி அவகிட்ட நீட்டுனதும், அத வாங்கி முந்தியில முடிஞ்சுகிட்டு பால்காரன் பொண்டாட்டியும் கெளம்பிட்டா. கிட்டாஞாவும் வெங்காயத்தோட்டத்துக்கு கிளம்பறதையும் பாத்துகிட்டே மனசுக்குள்ள, 'முருகா பால்காரனுக்கு நோவு கொணமாவனும்'னு வேண்டிகிட்டு கணக்கம்பட்டியாரும் டீத்தண்ணி வைக்க போயிட்டாரு. இன்னும் கோழி கூப்புட்லன்னாலும் அன்னைக்குப் பொழுது கணக்கம்ப்பட்டியாருக்கு விடிஞ்சிடுச்சுனுதான் சொல்லனும். முருகனக் கும்பிட்டு துண்ணூறு பூசிட்டா அவருக்கு பொழுது விடிஞ்சிருச்சுன்னு அர்த்தம்.

அன்னைக்குக் காத்தால ஆறுமுவம் டீக்கடையில பெருசுங்க எல்லாம் நாயம் பேசிக்கிட்டு இருக்கும்போது ரெண்டாவது வட்டம் பால் ஊத்த வந்தான் வடவத்தூர்க்காரன்.

'ஏய் என்னப்பா மொத சாமந்தான் ஒனக்கு வவுத்துநோவுன்னு ஒம்பொண்டாட்டி கணக்கம்பட்டியாருகிட்ட துண்ணூறு வாங்கிட்டுப் போனா… நீ என்னடான்னா 'எனக்கென்னா நோவு எனக்கேது சாவு'ங்கற கணக்கா பாலத்தூக்கிகிட்டு சைக்கிள்ல சுத்துறவன்' - கேட்டது கிட்டாஞாதான்.

'கிட்டாஞா…. கணக்கம்பட்டியாரு துண்ணூறு உள்ள போனதுக்கப்புறமும் வவுத்து நோவு வவுத்துல தங்குமா? நோவுக்கே நோவு கண்டிருக்குமில்ல?' சிரிச்சுக்கிட்டே போயிட்டான் பால்காரன்.

கணக்கம்பட்டியார இப்படி யாராவது ஒசத்தியா* சொல்லிட்டா ஒடனே கிட்டாஞாவுக்கு உச்சி குளுந்துரும். பால்காரன் போனதும் கிட்டாஞா ஆறுமுவத்துகிட்ட சொன்னாரு - 'கணக்கம்பட்டியான்கிட்ட துண்ணூறு வாங்கிப் பூசுனா பழனி மல முருகங்கையால பூசிக்கிட்ட மாதிரிடா'

கணக்கம்பட்டியார் மேல எல்லாருக்கும் எப்பிடி இப்படி ஒரு நம்பிக்கனு ஆறுமுவத்துக்கு ஆச்சர்யமா இருக்கும். அவன் இந்தூருக்கு வந்து கட போட்டு ஏழு வருசந்தான் ஆச்சு.
'ஏன் ஆஞா கணக்கம்பட்டியாருக்கு நெசமாலுமே அருளிருக்கா?' அவன் அப்படி கேட்டதும் கிட்டாஞா பழைய கதைய எடுத்து விட்டாரு. அது பத்து வருசத்துக்கு முந்தி நடந்தது.

த்து வருசத்துக்கு முந்தி ஒரு நாளு மாரியாயிக் கோயிலுக்கு கும்பாயிசேகம் பண்ணீட்றதுன்னு கோயில்ல வச்சு ஊர் பெருசுங்க முடிவு செஞ்சாங்க.ஆளாளுக்கு இன்னின்ன வேலைனு போனமாசம் செத்துப்போன கந்தசாமிதான் சொல்லிக்கிட்டு வந்தாரு. கிட்டாஞாவுக்கு ராமக்கல் ஐயனப் பாத்து பேசியாரப் பொறுப்பக் கொடுத்திருந்தாங்க. கணக்கம்பட்டியார வரவு செலவ பாத்துக்க சொல்லிருந்துது.மக்யா நாளே*, ராமக்கல்லுக்கு ஐயனப் பாக்கப் போன கிட்டாஞா சித்திர மாசம் பத்தாந்தேதினு நாள் குறிச்சுகிட்டு வந்துட்டாரு. வளர்பெறையில வெள்ளிக்கிழமையா அமஞ்சது நல்ல அம்சமுன்னு ஊராளுங்களுக்கெல்லாம் சந்தோசம்.ஆனா கணக்கம்பட்டியாருக்கு அந்த நாள சொன்னதும் சுருக்குனு ஆகிப்போச்சு. ஏன்னா அதுக்கும் ஆறு வருசத்துக்கு முந்தி சித்திர மாசம் இதே ரெண்டாவது வெள்ளிக்கிழம தான் பிடாரியம்மங் கோயில் திருநாள்ல ஒரு கெட்டது நடந்துது. பங்காளிங்களுக்குள்ள இருந்த வாப்பேச்சு சண்ட முத்தி வெட்டுக் குத்துனு ஏழு உசுர இந்த ஊரு காவு கொடுத்துது அன்னைக்குதான். அதனாலயே கணக்கம்பட்டியாரு அந்த நாள கேட்டதும் கிட்டாஞாகிட்ட மெல்ல விசயத்த சொல்லிட்டாரு. அன்னைக்கு சாய்ங்காலமே கிட்டாஞா ராமக்கல்லுக்குப் போய் அந்த ஐயனையே ஊருக்கு இழுத்துட்டு வந்துட்டாரு. கோயில் திண்ணையிலயே இந்த சமாசாரத்தப் பேசி முடிவு பண்ணீர்றதுன்னு கூட்டம் போட்டிருந்தாங்க.

(மீதிக்கதய நாளைக்கு சொல்றேன்...)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Monday, October 29, 2007

பதிவு எண் - 143 :)

நூறாவது பதிவு, இருநூறாவது பதிவு எல்லாம் சிறப்புப் பதிவா? நமக்கு 143 தான் சிறப்பு :) அதனால் 143 கவிதைகள் பதிக்கலாமென ஆசைப்பட்டு முயன்றதில் தேறியவை இவை மட்டுமே!




முதலில் 1 :







அப்புறம் ஒரு 4 :













அப்புறம் ஒரு 3 :











அப்படியே இலவச இணைப்பாக இன்னொன்னும் -> ஏற்கனவே ஒரு தெலுங்கு மெட்டுக்கு தமிழ் வரி எழுதின மாதிரி இப்போ ஒரு மலையாளப் பாட்டுக்கு நான் எழுதிய தமிழ் வரிகள்.



அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Wednesday, October 03, 2007

எதனை பரிசென தருவது?

புதிதாய் வாங்கிய கேமராவில்
முதல் படம் உன்னைத்தான் எடுக்கவேண்டுமென
நீ கேட்டுக்கொண்ட போதும்,
நான் படமெடுத்தது
உன் நிழலை.

என் பிறந்தநாளுக்கு,
கடையில் நீ வாங்கித்தரும் பரிசுகளை மறுத்து
உன்னிடம் நான் கேட்டுப் பெற்றது
உன் கைக்குட்டையை.

இயற்கை பின்புலங்களில் எடுத்த
உன் வண்ணப்படங்களை நீ நீட்டியபோதும்
எல்லாம் ஒதுக்கி, நான் விரும்பி வாங்கியது
கிராமத்தில் பாட்டிகளோடு நீ நிற்கும்
அந்த பழைய படத்தை.

‘நான்’ எனும் தலைப்போடு
என்னறைச் சுவரில்
தொங்கும் உன் நிழல் (படம்)…

என் கவிதைகளில்
உனக்கு மிகப் பிடித்ததொன்றை
பூத்தையலில் இழைத்து வைத்த
அந்த வெள்ளை கைக்குட்டை…

உன்னை வரைவதற்காகவே ஓவியம் பழகி
பென்சிலில் வரைந்த, பாட்டிகள் இல்லாத
உன் கருப்புவெள்ளைச் சித்திரம்…

இவற்றில் எதனை பரிசென தருவது?
நாளைய உன் திருமணத்திற்கு.

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.