Friday, June 29, 2007

ஐந்து அழகும,் ஒரு பேரழகும்

எட்டு விளையாட்டுக்கும் முன்பு ஆரம்பித்த பதிவுத்தொடர் "அழகுப் பதிவுகள்" . ஏப்ரல் மாதமே இம்சையரசி
அழைத்திருந்தும் நேரமின்மையால் பதிவிடாமல் இருந்தது இப்போது…

எது அழகு?
பொதுவாக கண்கள் அழகாக உணர்வதை மட்டுமே அழகு என்ற வார்த்தை மூலம் அர்த்தப்படுத்துகிறோமோ என்று எனக்குத் தோன்றுகிறது. இயற்கைக் காட்சிகள், பூக்கள் என்று கண்ணுக்கு அழகான விசயங்கள் இருக்கின்றன. சில விசயங்கள் கண்களைத் தாண்டி அந்த அழகை இதயத்துக்கு தூக்கி செல்வதுமுண்டு, குழந்தையின் சிரிப்பைப் போல. இவற்றையும் தாண்டி இதயம் மட்டுமே உணர்கிற அழகான விசயங்கள் சில உண்டு. வாழ்க்கையை அழகாய் ரசிக்க கண்கள் பார்க்கும் அழகைவிட இதயம் உணரும் அழகு முக்கியமென நினைப்பவன் நான். அவை இதயத்தைப் பொருத்து மாறுபடலாம். என்னைப் பொருத்தவரை இதயம் உணரும் அழகான விசயங்கள் என்று நான் நினைப்பவை இவை.

1. ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இருக்கிற உணர்வுகளில் மிகவும் அழகானது, அப்பா - மகள் மற்றும் அம்மா - மகன் உறவுகளில் இருப்பவை தான். பெரும்பாலும், பையன்கள் அம்மா செல்லங்களாகவும், பெண்கள் அப்பா செல்லங்களாகவும் இருப்பதற்கு இதுதான் காரணமாக இருக்குமென்பது என் கணிப்பு.

2. அதற்கு கொஞ்சமும் குறைவில்லாத இன்னோர் அழகான உணர்வு, அண்ணன் - தங்கை, அக்கா - தம்பி க்கிடையே இருக்கும் உணர்வு. எனக்கொரு தங்கை இல்லை என்கிற ஏக்கம் இன்னமும் இருந்தாலும் ;), அக்காக்களோடு பிறந்த தம்பிகள் இன்னும் பாக்கியம் பெற்றவர்கள் என்று கண்டிப்பாக சொல்லுவேன்.

( இப்பொழுது இருக்கும் நம்முடையப் பெற்றோருக்கும், உடன்பிறந்தவர்களோடும் பிறந்திருக்காமல் வேறு ஒரு பெற்றோருக்கு மகளாக/மகனாக பிறந்திருந்தாலும் அல்லது வேறு ஒருவருக்கு தங்கையாக/தம்பியாக பிறந்திருந்தாலும் மேலே குறிப்பிட்ட இந்த உணர்வுகள் இப்பொழுது இருப்பது போலவேதான் இருந்திருக்கும் என்றாலும் அவற்றை கண்டிப்பாக வெறுமனே உறவுகளுக்கிடையேயான அன்பு, பாசம் என்று மட்டும் சொல்லி விட முடியாது என்றே நினைக்கிறேன்.)

3. உண்மையான நட்பு. இதனை விக்கிரமன் படக்கண்ணோட்டத்தில பார்க்காமல், எதார்த்தத்தோடு பார்த்தால் இதன் அழகு சொல்லாமலேப் புலப்படும். குடும்பத்தில் இருக்கும் யாரோடும் பகிர்ந்து கொள்ள முடியாத விசயங்களையும் எந்தவித தயக்கமுமில்லாமல் தன்னில் ஒரு பகுதியாக நினைத்து பகிர்ந்துகொள்ளக்கூடிய நட்புக் கிடைத்துவிட்டால் வாழ்க்கையில் அதை விட அழகான விசயம் வேறென்ன இருக்க முடியும்?

4. குழந்தைகள். பார்த்தவுடனே நம்மையும் தங்கள் உலகத்துக்குள் இழுத்துக்கொண்டு நம்மையே மறக்க வைக்கிற சக்தி குழந்தைகளுக்குண்டு. ஆயிரம் கவலைகளை சுமந்திருக்கும் மனமும் குழந்தையின் ஒற்றைச் சிரிப்பில் இலேசாகிப் போகும். தானும் மகிழ்ச்சியாக இருந்துகொண்டு தன்னை சுற்றி இருப்பவர்களையும் மிக எளிதாக மகிழ்ச்சிப் படுத்துகிற ஆற்றல் குழந்தைக்கு இருப்பதால்தானே, இன்னமும் குழந்தையாக மாறிவிடவே எல்லாரும் ஆசைப்படுகிறோம். எந்த வசதியும் இல்லாத , ஏழ்மையான ஒரு குடிசையையும் வாழ்வதற்கான ( "வசிப்பதற்கான" அல்ல) அழகான இடமாக மாற்றிவிடுகிறது, ஒரு குழந்தை.

5. புத்தக வாசிப்பு. நட்பைப் போன்றதுதான் புத்தகமும். ஒரு புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்துவிட்டால், எனக்கு உலகமே மறந்துவிடும். சுற்றிலும் என்ன நடந்தாலும், முழுதாய் புத்தகத்துக்குள் மூழ்கி விடுவேன். ஒவ்வொரு புத்தகத்தை வாசித்து முடிக்கும்போதும் வேறோர் உலகத்தில் வாழ்ந்துவிட்டு வந்ததைப் போல தான் இருக்கும். துயரங்கள் அளவில்லாமல் துரத்தும்போது பாதுகாப்பாய் ஒளிந்து கொள்ள அழகான இடமாய் நான் கருதுவது புத்தகங்களைத்தான்.

6. இதுவரை சொன்னது அழகான விசயங்களைப் பற்றி. இதற்கும்மேலே பேரழகான விசயம் ஒன்றுண்டு. அது கிடைக்காவிட்டால் மேலே சொன்ன அழகான விசயங்கள் எல்லாவற்றையும் உணரும் வாய்ப்பைப் பெற்றிருந்தாலும் வாழ்வு நிறைவுபெறாது என்பதும், மேற்சொன்ன அழகான விசயங்கள் எதுவுமே கிடைக்காவிட்டாலும்கூட இது மட்டும் கிடைத்தாலே வாழ்க்கையை அழகாக வாழ முடியும் என்பதும் என் எண்ணம். அது "காதலிப்பதும், காதலிக்கப் படுவதும்". உணர்வுகளை உணரத்தான முடியும். எப்படி எழுத? அதனால் இதோடு நிறுத்திக்கொள்கிறேன்.

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Wednesday, June 27, 2007

யாரோ!

சொற்களைத் தந்தாய்.
கவிதை செய்தேன்.
யாரோ வாசிக்கிறார்!

மொட்டுக்களைத் தந்தாய்.
மலரச் செய்தேன்.
யாரோ சூடிக் கொள்கிறார்!

பனித்துளித் தந்தாய்.
மழை செய்தேன்.
யாரோ நனைகிறார்!

கடைசியாக உன் கல்மனம் தந்தாய்.
காதல் சிலை செய்தேன்.
விலைபேசி யாரோ வாங்கிச் செல்கிறார்…

ம்ம்ம்…
ஆசையாக செதுக்கினாலும்
சிற்பிக்கு சொந்தமாகிடுமா சிலையும் ?

(கொஞ்ச நாள் முன்னாடி தமிழோவியத்தில் வந்த எனது கவிதை.)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

எட்டாக்கனி

எட்டு விளையாட்டுக்கு என்னை அழைத்த சிறிலுக்கு நன்றிகள். என்னைப் பற்றி பெருமையான எட்டு விசயங்கள் எழுத எதுவுமில்லை. அதனால் என்னைப் பற்றிய எட்டு விசயங்களை மட்டும் பகிர்ந்துகொள்கிறேன்.

1. "அருட்பெருங்கோ நல்ல தமிழ்ப் பெயர், ஆனா வாய்லதான் நுழைய மாட்டேங்குது" - என்னோடப் பெயரைக் கேட்டதும் பெரும்பாலானவர்கள் சொல்றது இதுவாத்தான் இருக்கும். அதக் கொஞ்சம் தெளிவாக்க இதை ஒரு வாய்ப்பா எடுத்துக்கறேன். என்னோட இயற்பெயர் சிவசாம்ராஜ். தமிழ் மேல இருந்த பாசத்துல சாம்ராஜ், பெருங்கோ ஆகிட்டான் (சாம்ராஜ் ‍- பேரரசன் - பெருங்கோ). எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால, பேர்ல இருந்த சிவமும் பிடிக்கல, அதையும் மாத்தலாம்னு யோசிச்சப்போதான் அன்பே சிவம்னு கமல் சத்தம் போட்டார். சரி அன்பு னு மாத்தலாம்னு யோசிக்கும்போதுதான் என்னோட சிற்றறிவுக்கு, கொஞ்ச நாள் முன்னாடி நான் எங்கேயோ படிச்ச ஒரு விசயம் ஞாபகத்துக்கு வந்தது. குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் இந்த மாதிரி நமக்குப் பழக்கமானவங்க மேல காட்டறதுக்கு பேர்தான் அன்பு, ஆனா முன்னப்பின்ன பழக்கமில்லாத எல்லார் மேலேயும் காட்டற அன்புக்கு அருள்னு பேர் அப்படினு எங்கேயோ படிச்சிருக்கேன். இப்படிதான் சிவம் அன்பாகி , அன்பு அருளாகி, இறுதியா சிவசாம்ராஜ்- அருள்+பெருங்கோ - அருட்பெருங்கோ ஆகிட்டேன். (அருட்பெருங்கோனு சும்மா பேருக்குதான் வச்சிருக்கேன், இன்னும் கெசட்ல எல்லாம் மாத்தல)

2.இன்னொரு விசயம் சொல்லனும்னா, நான் எப்பவும் தமிழ்ல தான் கையெழுத்துப் போடறேன். ஆரம்பத்துல ம.சிவசாம்ராஜ் னு போட்டுட்டு இருந்தது, அப்புறமா ம.சிவசாம்ராசு ஆகிடுச்சு. நான் எங்க நிறுவனத்துல வேலைக்கு சேர்ந்தப்போ முதல் மூனு மாசத்துக்கு பயிற்சி வகுப்பு நடந்தது. எங்க வகுப்புல மொத்தம் 140 பேர் இருந்தோம். அதுல வருகைப் பதிவேட்டுலப் பார்த்தா 138 பேர் ஆங்கிலத்துல தான் கையெழுத்துப் போட்டிருப்பாங்க. என்னத்தவிர தாய்மொழியில கையெழுத்துப் போட்ட அந்த இன்னொருத்தர் ஒரு ஜப்பானியர் :)

3.பள்ளிக்கூடத்துல படிக்கும்போது பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டின்னா ஒரு ஆர்வக்கோளாறுல போய் கலந்துக்குவேன். எப்படியும் பரிசு கிடைச்சுடும். அதுல மறக்க முடியாததுன்னு சொல்லனும்னா ஆறாவது படிக்கும்போது ஆத்தூர் தாலுகாவுல எல்லாப் பள்ளிக்கும் பொதுவா நடந்த போட்டியில முதல் பரிசு வாங்கினதுதான். ஒவ்வொரு பள்ளியில இருந்தும் ஒருத்தர மட்டும்தான் தேர்ந்தெடுத்து அனுப்பனும்னு சொன்னதால முதல்ல எங்க பள்ளி அளவுல ஒரு போட்டி நடந்துச்சு. அதுல எப்படியோ என்னத் தேர்ந்தெடுத்து அனுப்பிட்டாங்க. அந்த தாலுகா அளவுல நடக்கிற போட்டிக்கு என்னோட உடன்பிறப்பு (அண்ணண்)தான் சைக்கிள்ல கூட்டிட்டுப் போனாரு. அங்கப் போய் பார்த்தா ஒரு கூட்டமே வந்து கும்மியடிச்சுட்டு இருக்காங்க. ஒவ்வொரு பள்ளிக்கூடத்துல இருந்தும் ஒருத்தர்தான் வரணும்னு சொன்னா அந்த ஒருத்தருக்கு பக்கபலமா நாலு வாத்தியாருங்க சுத்திலும் இருக்காங்க. அங்கங்க நின்னுகிட்டு பேசப் போறவங்களுக்கு சிப்ஸ்.. ச்சீ.. டிப்ஸ் கொடுத்துட்டு இருக்காங்க. எல்லாம் தனியார் பள்ளிக்கூடமா… ஒரே படோபடமா இருக்கிறதப் பார்த்ததும் எனக்கு காதல் கொண்டேன் தனுசு மாதிரி ஒரே பீலிங்க்சா போச்சு. வெள்ள சட்ட, காக்கி டிராயர்னு நம்ம யூனிபார்மே ஒரு தினுசாதான் இருக்கும். பேச்சுப் போட்டி ஆரம்பிச்சு எல்லாரும் பேச ஆரம்பிச்சாங்க. ஒருத்தன் பேச்சுல ஆக்ரோஷத்தக் காட்டி மைக்க உடைக்கப் போயிட்டான். அவனுக்கு எல்லாரும் கை தட்றத பார்த்தவுடனே அவனுக்குதான் பரிசு கிடைக்கும்னு முடிவே பண்ணிட்டேன். அப்புறம் இன்னொரு பொண்ணு பேசும்போது எனக்கு பரிசு கிடைக்காதுன்னு எனக்கே கன்ஃபார்ம் ஆச்சு. பின்ன என்னங்க தமிழ்லதான் பேச்சுப்போட்டினு சொன்னாங்க, அந்த பொண்ணு நடுவுல அசால்ட்டா இங்கிலீசுல பேச ஆரம்பிச்சுடுச்சு. எதுவும் புரியலன்னாலும் எல்லாரும் கை தட்டுறாங்க எனக்கு கண்ணே கட்ட ஆரம்பிச்சுடுச்சு. (எங்க பள்ளிக்கூடத்துல இங்கிலீசு வாத்தியாரே இங்கிலீசுல பேசி நான் பார்த்ததில்ல.) அப்புறம் நானும் போய் பேசிட்டு வந்து உட்காந்துட்டேன். முடிவ அறிவிக்க வந்தவர் பின்னாடி இருந்துதான் அறிவிப்போம்னு சொல்லி மூனாவது பரிச அந்த ஆக்ரோசப் பையனுக்கு கொடுத்துட்டார். ரெண்டாவது பரிச வாங்கினதுக்கே அந்த பொண்ணு அழ ஆரம்பிச்சிடுச்சு.ஒருவேளை முதல் பரிசு கிடைக்கும்னு எதிர்பார்த்திருக்கும்போல! கடைசியா முதல் பரிசு “அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியைச் சேர்ந்த….” னு அவர் சொல்லி முடிக்கிறதுக்குள்ள நான் மேடைல போய் நின்னுட்டேன் :). போட்டியோட தலைப்பு “காந்தியும் காமராஜரும்”, பரிசா கொடுத்த புத்தகம் “சத்திய சோதனை” :) ( முதல் பரிசு வாங்கினத விட அதிகமா அன்னைக்கு நான் சந்தோசப்பட்டது வேற ரெண்டு விசயத்துக்குதான். இரண்டாவது பரிசு வாங்கின பள்ளியில இருந்து ஒரு டீச்சரம்மா வந்து “தம்பி நல்லாப் பேசினப்பா! உனக்கு யாரு ப்ரிபரெசனெல்லாம்?” னு கேட்டதுக்கு “எங்கக்கா” அப்படின்னு பெருமையா சொன்னதும் + எனக்கு ஒரு மிட்டாய் கொடுக்கிறதுக்கே ரெண்டு தடவை யோசிக்கிற எங்கண்ணன் அன்னைக்கு எனக்கு டீ , பன்னெல்லாம் வாங்கிக்கொடுத்ததும் தான் :) )

4.பத்தாவது வரைக்கும் நானும் நல்லாதான் படிச்சுட்டு இருந்தேன். பத்தாவதுல பள்ளியிலேயே முதல் மதிப்பெண் வாங்கற அளவுக்கு நல்ல பையன்னா பார்த்துக்குங்க. அதுக்கப்புறம்தான் எனக்கு சனி பிடிச்சதா இல்ல சனிக்கு என்னப் பிடிச்சதான்னு தெரியல. அதுவரைக்கும் பங்காளிகளா இருந்த படிப்பும் நானும் பகையாளிகளா மாறிக் கடைசியில, கல்லூரியில “உன் சேவை கல்லூரிக்குத் தேவை”னு சொல்லி, நாலு வருசப் படிப்ப அஞ்சு வருசம் படிக்க வைச்சு அனுப்புற அளவுக்குப் போயிடுச்சு (அந்த சோகக் கதைய ஒரு தொடர் கதையா அப்புறம் எழுதறேன் :) )

5.கரூர்ல 10, +1, +2 படிச்ச மூனு வருசமும் நான் ஒரு படம் கூட பார்த்ததில்ல. வீட்டிலயும் டி.வி கிடையாது. “சூர்யவம்சம்” படம் பார்க்க எங்கம்மாவே கட்டாயப் படுத்தி பார்க்க சொல்லியும் நான் பார்க்கல… பசங்க எல்லாரும் பள்ளிக்கூடத்துக்கு கட் அடிச்சுட்டு படத்துக்குப் போகும்போது நான் கட் அடிச்சுட்டு நூலகத்துக்குப் போய்டுவேன், நாவல் படிக்க. ஆனா அதுக்கெல்லாம் சேர்த்து கோவைல கல்லூரியிலப் படிக்கும்போது படம் படமா பார்த்துத் தள்ளியாச்சு.

6.சின்ன வயசுல இருந்தே ஊர் சுத்துறதும், ஊர் ஊரா சுத்துறதும் எனக்குப் பழக்கமாகிடுச்சு. பிறந்தது ஆத்தூர்ல... 7வது வரைக்கும் படிப்பு அங்கதான்... அப்பவே பசங்களோட ஊர் சுத்துறது ஆரம்பிச்சிடுச்சு, அப்புறம் ரெண்டு வருசம் சேலத்துல...அண்ணா நூலகம், மாவட்ட மைய நூலகம், ராஜாஜி நூலகம்னு சுத்தி(சுத்திப் படிச்சி)ருக்கேன், அப்புறம் +2 வரைக்கும் கரூர்ல...இது நம்ம ஏரியா! சொல்லவே வேண்டாம்… நல்லா ஊர் சுத்தின ஊர்!!! அப்புறம் கல்லூரி படிப்பு 5 வருசம் கோவைல... உண்மையிலேயே ஊர் சுத்துற சுகத்த முழுசா அனுபவிச்சது கோவைலதான். பீளமேட்டுல இருந்து மருதமலை வரைக்குமே சைக்கிள்லையே போயிட்டு வந்துடுவோம்னா பார்த்துக்கோங்க‌. அது முடிஞ்சதும் வேலைல சேர்ந்தது மைசூர்ல, அப்புறம் ஹைதராபாத், பெங்களூர், மும்பை, சென்னைனு பந்தாடி நேத்து காலைலதான் மறுபடியும் ஹைதரபாத் வந்து எறங்கியிருக்கேன்.

7.காதக் கிட்ட கொண்டு வாங்க ஒரு ரகசியம் சொல்றேன்… “முதல் முதலா முழுசா ஒரு சிகரெட் பிடிச்சப்போ எனக்கு வயசு 10. கடைசி சிகரெட் பிடிச்சப்போ வயசு 22”. ( இப்போ எனக்கு வயசு 24 :) )

8.நான் வ‌லைப்ப‌திய‌ற‌தோ, க‌விதை(?) எழுத‌ற‌தோ எங்க‌ வீட்ல‌ யாருக்குமேத் தெரியாது. வீட்ல‌ சொல்லாம‌ இருக்கிற‌துக்கு ஒரே கார‌ண‌ம் நான் எழுதியிருக்கிற‌து எல்லாமே காத‌ல‌ப் ப‌த்தி ம‌ட்டுமே இருக்கிற‌தால‌தான். அப்ப‌டியென்ன‌ காத‌ல‌ப் ப‌த்தி எழுத‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம்னு கேட்கிற‌வ‌ங்க‌ளுக்கு : எட்டாக்கனி , கிட்டாக்கனி மேல‌தான எல்லோருக்குமே ஆசை அதிக‌மா இருக்கும்?

நான் அழைக்க விரும்பும் எட்டு பேர் :

1. ப்ரியன்
2. சத்தியா
3. கோவி.கண்ணன்
4. சுதர்சன்.கோபால்
5. ப்ரேம்குமார்
6. தேவ்
7. இம்சை அரசி
8. பொட்"டீ"க்கடை சத்யா

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Tuesday, June 12, 2007

என் கனவு...

அது ஓர் அழகிய நிலாக்காலம்.
கவலை வெயில் சுடாத இனிய இரவைப்போன்றது.
இரவின் மடியில் இனிய உறக்கத்தில் நான்.

என்னைத் தேடி மெல்ல வருகிறது ஒரு கனவு.
ஆனால், கலைகிற கனவுகள் எனக்குப் பிடிப்பதில்லை.
கனவைத் துரத்தி விடுகிறேன் நான்.

அதன் வருகையும் என் துரத்தலும் தொடர்கதை.
கனவைத் துரத்தி துரத்தி கடைசியில் கனவின் பின்னே நான்.
அதனை விரட்டும் முயற்சியில் தொடங்கிய என் துரத்தல்
எப்படியாகினும் அதனை பிடித்து விடுகிற முயற்சியில் முடிகிறது.

ஓர் பௌர்ணமி இரவில் அந்தக் கனவும் கை (கண்?) கூடுகிற‌து.
கனவுக்கே உண்டான இயல்போடு
அது கலைந்து விட முயலும்போதெல்லாம்
நனவாகும் ஆசைகாட்டி அதனை என்னோடு இருத்திக் கொள்கிறேன்.

இறுதியில், தான் நனவாகப் பிறக்கவில்லை
தான் கலைவதற்காக தான் பிறந்ததாக
எனக்கந்த கனவு சொல்கிற‌போது
நான் மரணிக்கிறேன்.

கலைகிற கனவுகள் எனக்குப் பிடிப்பதில்லை.
இப்போதும் என் கனவு கலையவில்லை.
கனவு காண்கையிலேயே,
எனக்கு தான் நிகழ்ந்துவிட்டது...
மரணம்!

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ