Thursday, August 31, 2006

உன் வெட்கத்துக்கு வெட்கமில்லையா? [ 50 வது பதிவு :) ]

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உன் முக்கால் வாசி அழகு
ஆடைக்குப் பின்னே மறைந்து கிடக்கிறது.
மீதியும் இப்படி வெட்கத்துக்குப்
பின்னால் ஒளிந்து கொண்டால்
நான் என்ன செய்வது?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நீ ராட்சசி என்றேன் – சிரித்தாய்.
நீ கோபக்காரி என்றேன் – சிரித்தாய்.
நீ அழகி என்றேன் – வெட்கப்பட்டாய்.
உண்மையைச் சொன்னால்தான்
வெட்கம் வருமோ?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உன்னைப் பார்த்ததும்,
தலை குனிந்து, மெல்ல சிரித்து,
ஓடி ஒளிந்து கொள்கிறது என் காதல்!
அதுவும் அழகாய்த்தான் வெட்கப்படுகிறது…
உன்னைப்போல!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எதேச்சையாய்
உன் காதில் என் உதடு படும்போது
உன் கன்னத்தில் பூக்குமே ஒரு வெட்கப்பூ…
அப்போது தானடி புரிகிறது
“எதுவாய் இருந்தாலும் ரகசியமாய் சொல்”
என நீ சொல்வதின் ரகசியம்!!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உன் அண்ணனிடம்
என்னை அறிமுகப் படுத்துகையில்,
என் பெயரைச் சொல்லும்போது
கொஞ்சமாய் வெட்கப்பட்டாயே,
அதுவரை எனக்குத் தெரியாதடி
நீயும் என்னைக் காதலிப்பது!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நாம் தனிமையில் இருக்கும்போது
இப்படி இடையில் வந்தமர்கிறதே…
உன் வெட்கத்துக்கு வெட்கமே இல்லையா?

Tuesday, August 22, 2006

கொலுசே...கொலுசே... - 3

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கொலுசே... கொலுசே... - 1

கொலுசே... கொலுசே... - 2

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வாசலில் பாண்டியாடும்போது கொலுசின்
திருகாணி தொலைந்ததால் அழுதுவிட்டாய் நீ!
தேடித் தேடித் தெருவையே உழுதுவிட்டேன் நான்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வெள்ளிக்கொலுசுக்கும், தங்கக்கொலுசுக்கும்,
என்ன வித்தியாசம்? என்றாய்.
உன் கலகல சிரிப்புக்கும், அமைதியானப் புன்னகைக்கும்,
என்ன வித்தியாசம்? என்றேன்!
அமைதியாகப் புன்னகைத்து விட்டுப் போனாய்!
நீ தங்கக் கொலுசுக்கு மாறவிருப்பதை சொல்லாமல் சொல்லி…

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

என் பழையக் கொலுசு உனக்கெதற்கு? என்கிறாய்.
நான் கலைப் பொருட்கள் சேகரிப்பது உனக்குத் தெரியாதா?
‘தேவதை அணிந்த கொலுசு’ என்று பத்திரப் படுத்தத்தான்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நீ ஜீன்ஸ் அணியும்போது கொலுசைக் கழற்றி வைத்துவிடுவாயோ?
உன் புடவையிடம் புலம்பிக் கொண்டிருக்கிறது உன் கொலுசு!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நீ நடந்து வரும்போது உன் கொலுசின் இசையைக் கேட்க
என் இதயத்தின் ‘லப் டப்’ ஓசை இடையூறாய் இருக்கிறதாம்…
துடிப்பதை நிறுத்த சொல்லி சண்டையிடுகிறது என் செவி!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சத்தம் போட்டபடி உன் காலடியில் துள்ளுகிறது உன் கொலுசு!
சத்தமில்லாமல் என் மனசடியில் கொல்லுகிறது என் காதல்!

Monday, August 21, 2006

கொலுசே...கொலுசே... - 2

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கொலுசு அணியாத உன் கால்…
கவிதை சூடாத காதல் போல!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஊடல் நேரங்களில்
என்னிடம் பேசுவதைத் தடுக்கும் உன் கோபம்.
ஆனாலும் கொலுசொலி மூலமாகத் தூது விடும் உன் காதல்!
கொலுசைக் கண்டு பிடித்தவளு/னுக்குக் கோவில் தான் கட்ட வேண்டும்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பள்ளி விடுமுறையில்
எந்த இசைப்பயிற்சிக்கு போகலாம்?
என்று கேட்கும் என் தங்கையிடம்,
உன்னைப்போல கொலுசில்
இசைக்கக் கற்றுக்கொள்
என்று எப்படி சொல்வது?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தெத்துப்பல் தெரிய சிரிக்கிறாய் நீ!
முத்துக்கள் அதிர சிரிக்கிறது உன் கொலுசு!
என்னைக்கொல்ல எதற்கிந்த இருமுனைத் தாக்குதல்?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வெள்ளிக்கொலுசு கறுத்துப் போகுமாம்.
உன் கொலுசு பொன்னிறமாகத்தான் மாறும்!
அணிந்திருக்கும் கால் அப்படி!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குளிக்கும்போது கொலுசைக் கழற்றிவைத்து விட்டுக் குளி!
நீ குளித்த நீர் பட்டு உன்னைவிட அழகாகிவிடப் போகிறது உன் கொலுசு!

Thursday, August 17, 2006

கொலுசே...கொலுசே... - 1

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

திருவிழாவின் அத்தனைக் கொலுசு சத்தத்திலும்
எனக்கு மட்டும் தனியாகக் கேட்கும்
உன் கொலுசின் இசை!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வெள்ளிக்கிழமை இரவானால் எங்கள் வீட்டுக்கு வருவாய்!
உனக்கான ஒலியும் ஒளியும் தொலைக்காட்சியில் ஓட
எனக்கான ஒலியும், ஒளியும் உன் கொலுசிலும் விழியிலும்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கல்லூரியின் கடைசி நாளில்,
“நீ பேசுவதைக் கேட்காமல் இனி எப்படி இருப்பேன்” என்றேன்.
உன் கொலுசைக் கழற்றிக் கொடுத்து விட்டுப்போனாய் நீ!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மொட்டை மாடியில் ப(ந)டித்துக்கொண்டிருப்பேன்.
மெதுவாய்ப் படியேறி வரும் உன் கொலுசு சத்தம்
என் மனசோ சலங்கை கட்டியாடும்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கொலுசின் திருகாணிப் பூட்டிவிடுகையில்
தெரியாமல்(!) உன் காலுக்கு முத்தமிடும் என் விரல்.
தெரிந்துகொண்டு சத்தமிடும் உன் கொலுசு!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கொலுசை உங்கள் வீட்டுப் பூனையின் கழுத்தில் கட்டி விட்டு
அதன் சேட்டையைப் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பாய்.
சத்தம்போட்டு அழுது கொண்டிருக்கும் உன் கொலுசு.

கொலுசே...கொலுசே... - 2

Monday, August 14, 2006

இதயத்தின் எடை 50300 கிராம்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உன்னால் தானடி நேர்முகத்தேர்வில்
நான் தோற்றுப் போனேன்!
அவன் உலக அழகி பெயர் கேட்டான்,
நான் உன் பெயரை சொல்லித் தொலைத்தேன்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மௌனத்தோடு மட்டுமேப்
பேசிக்கொண்டிருந்த என்னை
மரத்தோடு கூடப் பேச வைத்தவள் நீ!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

புத்தகத்தில்,கடிதத்தில்,
மின்மடலில் தான்
கவிதைகள் வரும்!
இப்படி சுடிதாரில் கூட
வருமா என்ன?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நான் எழுதியனுப்பியக்
கவிதையெல்லாம் அழகு என்றாய்!
அழகி, உன்னைப் பற்றி
எழுதியவை பின் எப்படியிருக்குமாம்?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நிலா, பூமியைச் சுற்றுகிறதா?
அடிப்பாவி, பூமியில் இருக்கும் உன்னைத் தானே
அது ஓயாமல் சுற்றுகிறது!
என்னைப் போல..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பொதுவாய்
இதயத்தின் எடை
300 கிராமாம்.
என்னுடையது
ஒரு 50000 கிராம்
அதிகமாக இருக்கும்!

Thursday, August 10, 2006

அதெப்படி உன்னால் மட்டும்?


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

என் ஈர விழிப் பார்வை
உன்னை அசைப்பது கூட இல்லை!
உன் ஓர விழிப் பார்வையோ
என்னை ஆட்டி வைக்கிறது!
அப்படிப் பார்ப்பதற்கு எனக்கும் சொல்லிக்கொடேன்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அதெப்படி உன்னால் மட்டும்
ஒரே சிரிப்பால்
என்னைக் கொல்லவும் முடிகிறது,
என் காதலை வளர்க்கவும் முடிகிறது?


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

Tuesday, August 08, 2006

என்னப் பார்வையடி அது?


உன்னைச் சந்தித்தால் பேசுவதற்கு
லட்சம் வார்த்தைகளைக்

கோர்த்து வைத்திருந்தேன்!
நீ பார்த்த ஒற்றைப் பார்வையில்
ஒவ்வொன்றாய் நழுவி

எஞ்சியிருந்த ஒரே வார்த்தை –“மௌனம்”
என்னப் பார்வையடி அது?


அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Tuesday, August 01, 2006

என் காதல் எந்த நிறம்?

நம் இருசாதிக் குடும்பத்துக்கும் இடையே
ஒரு சமாதானக் கொடியாய்ப் பறக்கும் என்று நினைத்திருந்தேனே!
வெள்ளை நிறத்தில் இருந்ததோ என் காதல்?

உன்னிடம் சொல்லிவிடத் துடித்த போதெல்லாம்
ஓடி ஒடி ஒளிந்து கொண்டதே!
அப்படி வெட்கப் பட்டு வெட்கப்பட்டு சிவந்து கிடந்ததோ என் காதல்?

எப்போதும் உன்னுடைய நினைவுகளை மட்டுமேப்
பசுமையாய் சுமந்து திரிந்ததே!
ஒரு வேளை பச்சை நிறமாய் இருந்ததோ என் காதல்?

உன் காதல் எவ்வளவு பெரியது என்று கேட்டவர்களிடமெல்லாம்
வானைப் போலப் பரந்தது என்பேனே!
நீல நிறமாயிருந்ததோ என் காதல்?

உன்னைப் பார்த்துப் பிறந்ததுதானே என் காதலும்?
ஒருவேளை உன்னைப் போல அதுவும் பொன்னிறமோ?

உன்னிடம் என் காதலைச் சொல்லும் வரை
அது எந்த நிறமென எனக்கும் சந்தேகம்தான்…

ஆனால் உன்னிடம் சொல்லியபின்தான்
நீ மறுத்துவிட்ட துக்கத்தை சுமந்து
எப்போதும் கருப்பாய்த் திரிகிறதடி என் காதல்!
என்னைப் போல…


அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.